Thursday, March 5, 2009

அறத்தையும் அரசியலையும் பேசுதல்: நிகழோடு/நிகழ்வோடு இடதுசாரி ஈடுபாடு

காத்ரி இஸ்மாயில் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர். இலங்கை பற்றிய அவருடைய புத்தகம் ஒன்று, “Abiding by Sri Lanka: On Peace, Place, and Postcoloniality,” மினசோட்டா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. தன் புத்தகத்தில் அவர், சிறுபான்மையினரின் ”எண்ணிக்கை குறைந்த” தன்னிலைக்கு இடம்தருவதாகமட்டும் ஜனநாயகம் என்பதைக் கருதாமல், ஆதிக்கமின்றி ஆனால் அதே நேரத்தில் வேறுபாடுகளையும் அமைதியையும் தக்கவைக்கக்கூடிய இடமாக அதை மறுவாசிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகிறார்.

அரசியலோடு அறத்தை இணைக்கும் தேவையைப் பேசும் அவரது இந்தக் கட்டுரை “Transcurrents”-இல் பெப்ரவரி 28, 2009 அன்று வெளியானது. இதன் தமிழாக்கம் இரு பகுதிகளில் வெளிவரும். முதல் பகுதி இதோ. (கட்டுரையைக் கடிதத்தில் சுட்டிய நண்பர் கவிஞர் வாசுதேவனுக்கு நன்றி)

இலங்கையின் இடதுசாரிகளை மனதில் வைத்து இக்கட்டுரையை காத்ரி இஸ்மாயில் எழுதியிருக்கிறார். அவர் எழுப்புகிற கேள்விகளும் எடுத்துவைக்கிற வாதங்களும் இலங்கையைப் பொறுத்து இன்றைய தமிழகச்சூழலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு சிக்கல் இருப்பதைத் தொடர்ந்து உணர்கிறேன். யாரை யார் எப்படி பிரதிநிதித்துவம் செய்து பேச முடியும் என்பது ஒரு அடிப்படையான கேள்வி. கூடவே நான் எனக்காக மட்டுமே பேச முடியும், பேசுவேன் என்றால் சுயபிரதிநிதித்துவம் என்பதைத் தாண்டிய அறம் என்று எதுவும் கிடையாதா என்பது கூடவே வரும் இன்னொரு கேள்வி. பிரதிநிதித்துவம் என்பதை கொஞ்சம் இடம்நகர்த்தி அறம்சார் சிந்தனை ஒன்றைப் பகிர்ந்துகொள்ள முடியும் என நினைப்பது ஒரு அபார நம்பிக்கைதான், இல்லையா?

பிரதிநிதித்துவத்தோடு கூடவே வரும் மற்றொரு பிரச்சினை: பேச அர்த்தம்தோய்ந்த மொழியை இழந்துவிட்டோம் என்று தோன்றுவதும்தான். இரண்டு பக்கமும் தொடர்ந்து அடிவாங்கும் ஈழத்தமிழ் மக்களைப் பற்றிய எந்த மொழிதலும், அர்த்தத்தளத்தில் வழுக்குத்தரையில் வைத்த கால் போல இலக்காக நாம் கொள்ளாத இடம் நோக்கி ஓடிவிடுகிறது. நாமே அறியாத நம் ஓட்டம் அதுவாகவே தேங்கி நிற்பது துரதிர்ஷ்டவசமாக இரண்டு இடங்களில்தாம்: ஒன்று அடிவாங்கும் தமிழர்களைப் பற்றி எதைப்பேசினாலும் அது விடுதலைப்புலிகளுக்குப் பரிந்து பேசுவதாகக் கருதப்படுவது அல்லது அவர்களின் ஆதரவாக போய்முடிவது. மற்றொன்று, விடுதலைப்புலிகளைப் பற்றிய நியாயமான விமரிசனங்கள் ஈழத்தமிழர்களை நசுக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் சுவீகரித்துக்கொள்ளப்படுவது. நோம் சோம்ஸ்கி-யின் ”லங்கா கார்டியன்” நேர்காணலுக்கு எதிர்வினையாக நண்பர்கள் கூட்டாக வரைந்த அறிக்கைக்கு சோம்ஸ்கி அளித்திருக்கிற பதில் இந்த வழுக்குதலை இன்னும் பொருண்மையாக எடுத்துக்காட்டியது.

மொழிதலில் இந்த வழுக்கு விளையாட்டை புரிந்துகொண்டு மௌனமாக இருக்கும் என் நண்பர்கள் சிலரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையில், இந்தக்கட்டுரை கூட இப்படியான ஒரு விளையாட்டில் வழுக்கிக்கொண்டு போகும். என்ன செய்ய முடியும்? கைவிரித்தல் போல, எழுதுதலும் இன்னொரு செயல் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்று சொல்லும்படியாகத் தானே இருக்கிறது சூழ்நிலை?

அறத்தையும் அரசியலையும் பேசுதல்: நிகழோடு/நிகழ்வோடு இடதுசாரி ஈடுபாடு

தமிழீழ விடுதலைப் புலிகளை முடிந்துவிட்டதாகக் கருதுவது உண்மைபோல் வேஷமிட்டுவரும் அதிகற்பனையே.”


காத்ரி இஸ்மாயில்


சே குவெரா ஒரு முறை சொன்னார்: “ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ நடுங்குவாயானால், நீ என் தோழர்.”

போராட்டமும் குறுக்கீடு செய்தலும் சுயபரிசோதனையும் நிரம்பிய வாழ்க்கையை வடித்தெடுத்துத் தரும், அதிரடி மொழிதலுக்கு நேர் எதிரான, இந்தக் கூற்று அறத்தை அரசியலோடு பொருள் பொதிந்து எடுத்துரைக்கிறது. அறமும் அரசியலும் பிரிக்கமுடியாது பிணைந்திருப்பவை, ஆனால் வெவ்வேறானவை என்று அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்தாவது நமக்குத் தெரியும்.

ஒரு முன்மாதிரியாகக் கொள்ளத் தகுந்த இடதுசாரிப் பாணியில் சே இவ்விரண்டையும் இணைக்கிறார். அறம் என்பதை லெவினாஸ் சொல்வதைச் சற்றே தளர்த்தி அடுத்தவருக்கான மரியாதை என்றும், அதேபோல தெர்ரிதா சொல்வதைச் சற்றே தளர்த்தி (நம்மால்) இயன்றதைப் பற்றியதான நுண்கணிதம் என்றும் புரிந்துகொள்வோம். அப்போது சே-யின் கருத்தாக்கம் வலியுறுத்துவது என்னவென்றால், ஒரு இடதுசாரி ஒவ்வொரு அநீதியின் நிமித்தமும் செயல்படாது, அல்லது அவளால் செயல்பட முடியாது போனாலும், அநீதியால் அவள் அசைக்கப்பட வேண்டும் என்பதே. சுயமோகத்தோடு கூடிய அறச்சீற்றம் அடையாள அரசியலாகவே அழைக்கப்படும்.

ஒரு இடதுசாரி செயல்படும்போது, கடினம் என்றும் இயலும்/இயலாது என்றும் கருதப்படும் எதனாலும் அவளைக் கட்டுப்படுத்த முடியாது. இவை எல்லாவற்றையும், அநீதியை, அடுத்தவர் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற அறத்தின் ஏவல், ஒரு சப்பையான தேவை, அதி-நிர்ணயம் (overdetermine) செய்துவிடும். தடுத்து நிற்பது பலனளிக்குமா என்கிற அரசியல் கணக்குக்கு இடமில்லை. தேர்வு என்பதைவிட தேவை என்பதே இடதுசாரி செயல்பாட்டின் குணாம்சம்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், இடதுசாரி என்பவள் யதார்த்தவாதி இல்லை, அப்படி இருக்கவும் முடியாது. புரட்சிகளோ, தேசிய விடுதலைப் போராட்டங்களோ, ஆணாதிக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களோ சந்தர்ப்பவாதிகளால் உந்தப்பட்டவை அல்ல. இலங்கையில் அநீதிக்கு எதிரான தமிழர்களின் போராட்டமும் அப்படியானது அல்ல. அந்தப் போராட்டத்தின் நியாயதருமம் என்பது தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் செயல்பதிவுகளால்-- தீயவை, அதலபாதாளத்தைத் தொடுபவை அவை-- நிற்பதில்லை அல்லது விழுவதில்லை.

ஆனாலும், இதை ஒருவர் எழுதும்போது, இடதுசாரிகளில் பலர், புலிகளை இறந்தகாலத்தினராகக் கொண்டு, தமிழர்களை ஒரு “யதார்த்த” நிலைப்பாட்டை எடுக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்: அதாவது, ராஜபக்சே அரசிடம் பிச்சை எடுக்கச் சொல்லுகிறார்கள்: திணற அடிக்கும் அதிகாரத்தின் நிஜத்தோடு சமாதானமாகப் போகச் சொல்லுகிறார்கள். எது கிடைக்குமோ அதைப் பெற்றுக்கொள், மொத்தத்தில் சரணடை.

இதை ஒருவர் எழுதும்போது, அதே ஆட்சி ஆகாயத்திலிருந்தும் தரையிலிருந்தும் தொடர்ந்து குண்டுபோடுகிறது, விடுதலைப் புலிகளின் கையில் சின்னதொரு நிலப்பகுதி இருக்கிறது. சாதாரணத் தமிழ்க் குடிமக்கள் பத்திலிருந்து இருபது வரை தினம்தினம் கொன்றுபோடுகிறது. இன்னும் பலரை ஊனமாக்குகிறது. பல சின்னஞ்சிறு குழந்தைகள் கைகால் இழந்து நிற்கிறார்கள். அவர்கள் பத்திரமாக இருக்கலாம், விடுதலைப்புலிகள் மனசாட்சியின்றி அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தாதிருந்தால்; அல்லது, இன்னும் மோசமாக, தப்பிக்க முயற்சிப்பவர்களை அவர்கள் சுடாதிருந்தால். ஆனால், அதை இந்த அரசின் கொடுமைக்குச் சாக்குப்போக்காகக் கொள்ள முடியாது.

ஆனாலும், இதை ஒருவர் வாசிக்கும்போது, இடதுசாரிகளின் பிரிவினரிடமிருந்து அறச்சீற்றத்தையோ, கொந்தளிப்பையோ பார்க்கமுடிவதில்லை. சாதாரண மக்களின் சாவைக்குறித்து விதிக்குட்பட்ட, மேற்கோட்குறிகளுக்குள்—அவலமான—அக்கறையின் சைகை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், குறிப்பிடத் தகுந்த அளவுக்கு, இந்த அரசின் கொடுமை அதற்கான நம் எதிர்வினையை வடிவமைக்கக்கூடாது, இந்த அரசு கருதிக்கொண்டிருக்கும் வெற்றியின் ”நிஜமே” வடிவமைக்க வேண்டும் என்பதாகத் தோன்றுகிறது.

உதாரணத்துக்கு இப்படியொரு கூறு காணப்படும் சுமனசிரி லியநாகேயின் கட்டுரையை எடுத்துக்கொள்வோம். ”தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்குப் பிறகான சகாப்தம்” பற்றிப் பலரும் கொண்டிருக்கும் நிலைப்பாடு ஒன்றை அது தெளிவுடன் வெளிக்காட்டுகிறது. ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை முடிந்துவிட்டதெனக் கருதுவது உண்மைபோல் வலம்வரும் ஒரு அதி-கற்பனையே (fantasy). அதன் வரலாறு மறதியை அல்ல, வளைந்துகொடுக்கும் தன்மையையே காட்டுகிறது. வலுவிழக்கச் செய்யப்பட்ட, உடைந்துபோன கொரில்லாக்கள்—இப்போதைப்போல எப்போதுமே அவர்கள் தங்களிடையே கூட புகழைத் தொலைத்ததில்லை— என்றபோதிலும், அரசியல்-ராணுவப் பரப்பிலிருந்து அவர்களின் மறைவு தவிர்க்க இயலாதது என்று சொல்லமுடியாது. இதைத் தவிர்த்துப் பார்த்தாலும், தமிழர் போராட்டத்தின் நீதி குறித்ததான இடதுசாரிகளின் கடப்பாடு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவிதியோடு இணைந்திருப்பது அல்ல.

நீதியோடு கூடிய அமைதிக்கான தன் கடப்பாட்டை லியநாகே பல ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைத்திருக்கிறார். குறிப்பாக சென்ற இரண்டு வருடங்களில் அவரது பல சிந்தனாபூர்வமான குறுக்கீடுகளை நான் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவர் இப்போது இந்த ஆட்சிக்கு வெள்ளை அடிக்கும் வேலையைச் செய்கிறார். இதை நான் இழப்புற்ற உணர்வோடு சொல்லுகிறேன், கோபத்தில் அல்ல. ”புரட்சிகரமான” அரசியல் சட்ட மாற்றம் ”சாத்தியமில்லை” (unlikely)---இந்த வார்த்தை அவர் கட்டுரை முழுதும் குப்பையாக இறைகிறது—-என்று வாதிடும் அவர் யதார்த்தமான ”சீரமைப்பு” ஒன்றை நாம் எல்லோரும் ஏற்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறார். பதிலுக்கு ஒருவர் கேட்கலாம்: அமெரிக்க நாட்டின் அடிமைகள் தங்கள் அடிமைத்தனம் முடிவுக்கு வரும் சாத்தியம் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருந்தால், தங்களை மூழ்கடிக்கும் வெள்ளை ஸ்தாபனங்களின் அதிகாரத்துக்கு எதிரான வாய்ப்புகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்திருந்தால், அவர்கள் கலகம் செய்திருப்பார்களா? செய்திருக்க வாய்ப்பில்லை.

நம்மால் நம்ப இயலாதபடி, இலங்கையின் மிகமோசமான இன்றைய நிலைமையின் ஒரு பகுதிக்குக் கூட பொறுப்பானதாக ராஜபக்சே-யின் ஆட்சியை ஒரு முறைகூட அடையாளப்படுத்துவதில்லை லியநாகே. மற்றவரை ஒறுத்துக் கட்டப்படும் தேசியத்தின் “முக்கிய ஆதரவாளர்கள் JVP-யும் ஹேலா உருமயா-வுமே.” SLFP இந்தக் கருத்தியலைப் பகிரவில்லை, எந்தப் பழிபாவமும் அது அறியாதது என்பதுபோல.
இதை ஒருவர் எழுதும்போது, ராஜபக்சே-யின் ஆட்சி வன்னித்தமிழர்களை மூன்று வருடம்வரை தங்கவைக்கக்கூடிய தடுப்பு முகாம்களைக் கட்டுவதைப் பற்றி அறிவித்திருக்கிறது. பள்ளிகளும் மருத்துவமனைகளும் வங்கிகளும் இந்த தடுப்பு முகாம்களுக்குள் உண்டு. சித்திரவதை முகாம்களை ஒத்த இந்த முகாம்களுக்காக நிதி உதவி கேட்டு ராஜபக்சே-க்கள் துணிச்சலோடு ஐ.நாவையும் அரசுசாரா நிறுவனங்களையும் (இதே நிறுவனங்கள்தாம் இவர்களின் பேச்சாளர்களால் களங்கப்படுத்தப்படுபவை) அணுகியிருக்கிறார்கள்.

இந்த அரசின் குறுகிய, ஆனால் மாறாது மற்றவர்களைத் தொடர்ந்து ஒறுக்கும், ஜீவனத்தை மனதில் கொண்டால், திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பதை முன்கூட்டியே காண ஒருவர் ஜோசியராகவோ சமூக அறிவியலாளராகவோ இருக்கத் தேவையில்லை. இந்த ஆட்சி, கடந்த இரு வருடங்களாக, JHU-(ஜதிக ஹேல உருமய)-வின் சம்பிக ரணவக, பசில் ராஜபக்சே ஆகியோரின் தலைமையில் கிழக்கின் முஸ்லீம்களின் நிலங்களை திட்டம்போட்டு அபகரித்துவருகிறது. சிங்களக் குடியேற்றமும் தொலைவில் இல்லை.

தமிழர்கள் அகற்றப்பட்ட வன்னி நிலத்திலும் பின்னர் சிங்களர்களின் குடியேற்றம் நிகழும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. இதுதான் தேசியக் கேள்விக்கு முன் ராஜபக்சே-க்கள் வைக்கும் “கடைசித் தீர்வு:” அரசியல் ரீதியாக, தமிழர்களை முக்கியமில்லாதவர்களாக ஆக்கிவிடு, எந்தத் தடையையும், அது அஹிம்சை வடிவத்தில் இருந்தாலும், உடல்ரீதியாக அப்புறப்படுத்தி விடு, எஞ்சியிருப்பவர்களை முகாம்களில் அடைத்துவிடு.

இதில் விவாதிக்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்: 1940-களின் பின்பகுதிகளின் டி.எஸ். சேனநாயகே முதற்கொண்டு இப்படியான தந்திரங்களை முறையாகக் கையாண்டுவரும் சிங்களத் தேசியம் இதை ஜியோனிஸத்திடமிருந்து (Zionism, யூதர் தாய்நாடு இயக்கம்) கற்றுக்கொண்டதா, அல்லது இஸ்ரேலியர்கள் இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டார்களா? 1980-களின் மத்தியிலிருந்து இந்த இரண்டு அரசுகளும் வெளிப்படையாகக் கூட்டாகச் செயல்படுகின்றன என்பது தற்செயல் அல்ல. 1980-களின் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்சே, பாலஸ்தீனியரின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த முற்போக்குவாதியாக இருந்திருக்கலாம்; ஆனால், அவர் ஆட்சி இஸ்ரேலிய அரசோடு ஒப்புநோக்கும் வகையில் இருக்கிறது.

இப்படியொரு சூழலில், சீரமைப்பு என்று ஒன்றை முன்வைப்பது, வடக்கில் எத்தனை சிங்களர்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கலாம் என்பதற்கான விவாதமாகவே இருக்கும். அன்றி, இப்படியான குடியேற்ற ஆதிக்கம் முதலில் நடக்கலாமா என்பதைப் பற்றியதாக இருக்காது.

ஆனால், ”சீரமைப்பு,” “புரட்சிகர மாற்றம்” போன்றவை மட்டுமே மாற்றுவழிகள் அல்ல. எதிர்ப்பு—நீதியோடு கூடிய அமைதிக்கான தளராத கோரிக்கை—மற்றொரு வழி. என்றபோதிலும், லியநாகே தன் நிலைப்பாட்டை தந்திரமான இத்தகைய பேச்சுப்பாணிக்குள்ளேயே வைக்கிறார். என்ன, சீரமைப்பு யதார்த்தமாகவும் இயலக்கூடியதாகவும் காரணம் சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கு மாற்றான புரட்சிகர மாற்றம் நியாயமானதல்ல. ஏனென்றால், லியநாகே ஒருவேளை அறியாமலேயே மறு உற்பத்தி செய்யும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் புனைந்து உருவாக்கிய உலகநோக்கில், புரட்சியாளர் என்பதன் அர்த்தம் பயங்கரவாதி தான்.

ஆம், விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டமுடியும், அந்தச் சொல்லை ஒருவர் பயனுள்ளதாக எண்ணினால். தேசிய விடுதலை இயக்கங்களிலேயே அதன் கொடுமையை வேறு எந்த இயக்கத்தோடும் ஒப்பிடமுடியாது. மிக நன்றாகவே அறியப்பட்ட அதன் வரலாற்றை இங்கே திருப்பிச்சொல்ல தேவையில்லை. விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும் போர்க்குற்றங்களுக்கான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை பலமாகவே வைக்கமுடியும். ஆனால், நிச்சயமாக, அதே அளவுக்கு, சமமான, பலமான வாதத்தை இந்த அரசை நடத்திச் செல்லுபவர்கள் பற்றியும் வைக்கமுடியும்.

அதே நேரத்தில், ஆட்சியோடு உரையாடல் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒருவர் வாதிடும்போது, ஏன் அவர் அதை விடுதலைப்புலிகளோடும் செய்யவேண்டும் என்று வாதிடக்கூடாது? கருத்தியல்ரீதியாக இரண்டுமே அடுத்தவரை விலக்கும், ”வரம்பற்ற” என்று சொல்லமுடியாவிட்டாலும், தீவிர தேசியத்தை தம் உருவமாகக் கொண்டிருக்கின்றன. இரண்டுமே மாற்றுக்கருத்தைத் துரோகமாகப் பார்க்கின்றன. லசந்த விக்ரமதுங்கே-யின் கொலைக்குப்பின் கோதபாய ராஜபக்சே உண்மையிலேயே இதை BBC தொலைக்காட்சிக்குச் சொல்லியிருக்கிறார். கே.பத்மநாபா, ரஜினி திரநகாமா உட்பட எதிர்ப்பை முன்வைத்தவர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு திட்டமிட்டுக் கொலைசெய்து வந்திருக்கிறது. என்ன வித்தியாசம், விடுதலைப்புலிகளின் கொடுமை பத்தாண்டுகள் கணக்காகத் தொடர்ந்து நீண்டுகொண்டிருக்கிறது என்பதுதான். எளிமையாகச் சொன்னால், இன்னும் அதிகமானோரை அது கொன்றிருக்கிறது, மிரட்டியிருக்கிறது, அழித்திருக்கிறது. ஆனால் எண்களின் கணிப்பு இடதுசாரி அறத்தைத் தீர்மானிக்கக்கூடாது.

லியநாகே-வுக்கு இது தெரியும். அவர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் “சிறுபான்மையினர்” என்று அழைக்க விரும்பாமல் “எண்ணிக்கையில் குறைந்த தேசத்தினர்” என்று குறிப்பிடுகிறார். ஆனாலும் அவரால் தன் நிலைப்பாட்டை எண்களின் தர்க்கத்துக்கு வெளியே வைக்க முடியவில்லை. தெர்ரிதாவுக்குப் பிறகு ஒருவர் கேட்க முடியும்: எந்த எண்ணிக்கையில் ஒரு தேசம் சிறியதாகிறது அல்லது பெரியதாகிறது? இடைப்பட்ட அளவுக்கும் நமக்கொரு கூண்டு தேவையா? சீனர்கள் என்பது மிக-அதிக அளவா? சமூக அறிவியலாளர்களுக்கே கிடைக்கிறமாதிரி இவற்றுக்கான சரியான விதிகளையும் பதில்களையும் கொண்ட ரகசியப் புத்தகம் ஏதும் இருக்கிறதா?

மிக முக்கியமாக, இது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றா? தமிழர்களின் (ஏன் அதேபோல பாலஸ்தீனியர்களின்) ஒடுக்குமுறையால் நாம் அசைக்கப்படுகிறோம், கோபப்படுகிறோம், மலைக்கிறோம் என்கிற உண்மைக்கு இந்த எண்ணிக்கையோடு என்ன தொடர்பு இருக்கிறது? அறச்சீற்றம் என்பது நம் எதிர்வினைக்கான ஏவுகளமாக இருக்கக்கூடாதா?
(இரண்டாம் பகுதி பின்னர் வெளிவரும். தவிர்க்கமுடியாத வேலைப்பளுவால் மொழிபெயர்ப்பை இப்போதைக்குத் தொடர முடியவில்லை.)

Monday, March 2, 2009

நோம் சோம்ஸ்கியின் பதில், உங்கள் தகவலுக்கு

Dear friends,

We sent our response to Professor Noam Chomsky on Tuesday, 02/24/09, incorporating your signatures that we received in our online petition and in the response2chomsky@gmail.com account as on Tuesday evening. The number of signatories is 193. Professor Chomsky replied to us immediately 02/24/09. This was our covering letter:


Dear Professor Chomsky,

Greetings. We have come across your recent interview on “Sri Lanka And American Affairs” with the Sri Lanka Guardian's Washington correspondent Eric Bailey (Sri Lanka Guardian, 11 February 2009). The interview surprised as well as disappointed us, precisely because we are quite aware of your sustained involvement in anti-war activism and commitment to oppressed peoples. We think that the interview sidesteps the crucial issue of the suffering and casualties of Tamil civilians during the on-going war in Wanni, Sri Lanka. Please find below and in the attachment our joint letter in response to the interview. We are sending this response after a thorough discussion on this issue and after circulating it among those who are concerned with the suffering of Tamil civilians in Sri Lanka. We believe that our response would urge you to revisit the views that you expressed at the interview.
Thanks for your time.

Sincerely

A group of artists, writers, and intellectuals concerned with the suffering of Tamil civilians in Sri Lanka


Professor Chomsky's response is as below:


"Thanks for your letter. You are correct that I did not discuss the topics you mention, nor did I discuss atrocities committed by the Tamil Tigers. The reasons are those I stated. I do not discuss topics unless I know enough about them to voice a confident opinion.

Noam Chomsky"

This is for your information. We thank Professor Chomsky for his quick response. We also thank you for your support in this issue.

Regards

For response2chomsky@gmail.com

Sunday, March 1, 2009

கிருத்திகா: ஒரு கடிதமும் பதிலும்

”கிருத்திகா: அஞ்சலி” என்கிற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை ஒன்றை தன் வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். கட்டுரையில் சில விஷயங்களைச் சுட்டி நான் எழுதிய கடிதத்தையும் அவர் பதிலையும் இங்கே காணலாம். ஜெயமோகனைப் பொறுத்தவரை அவரது நல்ல குணம் ஒன்றைச் சொல்ல வேண்டும். அவர் தான் மேற்கொண்டிருக்கும் பல்வேறு எழுத்துவேலைகளுக்கு நடுவிலும் கடிதங்களுக்கு உடனே பதில்போடக்கூடியவர். இக்கடிதத்துக்கும் பதில் உடனே வந்தது.

பெண்ணியர்கள் நிறைய எழுத வேண்டும், பெண்ணிய வாசிப்பை பரவலாக்க வேண்டும் என்ற கருத்தோடு எனக்கு உடன்பாடே. பெண்ணிய வாசிப்பைத் தவிர்த்துப்பார்த்தாலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் பொதுவாகவே தமிழில் காத்திரமான கட்டுரைகளை எழுதும் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. இதைக்குறித்த வருத்தம் எனக்கும் உண்டு.

ஆனால், என் கேள்வி என்னவென்றால், கிருத்திகா போன்ற எழுத்தாளர்களைப் பற்றி ஏன் பெண்கள் அல்லது பெண்ணியர்கள் மட்டுமே எழுதவேண்டும்? கிருத்திகாவின் எழுத்து “பெண்” என்கிற பிரதிநிதித்துவ தொகுதியைத் (representative constituency) தாண்டியது என்றே நினைக்கிறேன். தி. ஜானகிராமனையும், மௌனியையும், சுந்தரராமசாமியையும், நகுலனையும் பற்றி கட்டுரைகள் எழுதப்படும்போது கிருத்திகா ஏன் விவாதிக்காமல் விடப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. இதற்கான காரணமாகத்தான் இலக்கிய ஆண்மையச் சூழலை நான் குறிப்பிட்டேன். அடிப்படையில், ஆண்குழுக்களின் வலைப்பின்னல்களும் அவற்றுக்கிடையேயான தொடர்புறவுமே “சிறந்தது” என்று ஒரு படைப்பை நிறுவி அதை canonize செய்து இலக்கிய அங்கீகாரத்தைப் ”பெற்றுத்” தருகின்றன. மேலும் Canonization நடக்காதவரை ஒரு படைப்பை எழுத்தாளரின் குடும்பத்தினரே எடுத்து மீள்-பதிப்பித்தாலும்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது? இலக்கியத்தை தொடர்ந்து பிரசுரித்துவரும் ஒரு நிறுவனமோ அமைப்போ மீள்-பிரசுரம் செய்வதற்கும் எழுத்தாளரின் குடும்பத்தினர் அதைச் செய்வதற்கும் எத்தனை வேறுபாடு? இரண்டும் ஒன்றா என்ன?

பெண்கள் தமக்கான வலைப்பின்னல்களை நிறுவி பெண் எழுத்தாளர்களை முன்னெடுத்துச் செய்யலாமே என்று ஒருவேளை ஜெயமோகன் கேட்கலாம். அதற்கு என் பதில் இதுதான்: அதற்கு காத்திரமான எழுத்துகளில் தொடர்ந்து ஈடுபடும் உற்சாகமும் முனைப்பும் பயிற்சியும் கொண்ட நிறைய பெண் எழுத்தாளர்கள்/கட்டுரையாளர்கள் தேவை. மேலும் அவர்கள் இந்த ஆண்-வலைப்பின்னல்களூடே செயல்படும் காரிய, காரணார்த்த அரசியல்களை விளையாட்டாகத் தாண்டிச்செல்லும் பக்குவமும் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது.

அதேநேரத்தில் எழுத்தாளர்கள் பெண்களாக இருக்கும்போது அவர்களின் எழுத்துகளைப்பற்றி மற்ற பெண் எழுத்தாளர்களோ பெண்ணியம் பேசுபவர்களோதான் எழுத வேண்டும், அவற்றைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதில்லை என்றே கருதுகிறேன். அதேபோல, இலக்கியத்தைப் பொறுத்தவரை பெண்ணிய வாசிப்பு என்பது மார்க்ஸிய வாசிப்பு, அமைப்பியல் வாசிப்பு, பிறகான/பின் நவீனத்துவ வாசிப்பு போன்ற ஒரு சிந்தனைப்போக்கு. இலக்கிய எழுத்தை பலவிதங்களில்--பெண்ணியத்தை சுவீகரித்தோ அல்லது அதைக் கொஞ்சம் தள்ளிவைத்தோ-- பெண்களும் சரி, ஆண்களும் சரி வாசிக்கலாம், எழுதலாம். அந்தவகையில் கிருத்திகாவின் எழுத்தும் பிற பெண் முன்னோடிகளின் எழுத்தோ இருபாலினரின் பல்வகைப்பட்ட பார்வைக்கும் ஆய்வுக்கும் உகந்தவையே.

என் கடிதமும் ஜெயமோகனின் பதிலும் இதோ:

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் "கிருத்திகா: அஞ்சலி" கட்டுரையை வாசித்து ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தேன். அந்தக்கட்டுரையில் இருக்கும் தகவல் பிழைகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன். "பெண்ணியம் வந்தபின் கிருத்திகா மறுவாசிப்புக்கு ஆளாகியிருக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறீர்கள். "வாசிக்கும் பழக்கம் கொண்ட பெண்ணியர்கள் நானறிந்தவரை தமிழில் யாருமில்லை" என்றும் நிதானமின்றிக் கூறியிருக்கிறீர்கள். கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலில் இயல்மொழி செயல்படும் விதம்பற்றி பத்துவருடங்களுக்கு முன்பே காலக்குறி (மார்ச் 1999) இதழில் வெளிவந்த "கதையுலகில் தமிழின் இயல்மொழி" என்கிற கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். எனினும் கிருத்திகாவின் நாவல் தமிழில் பரவலாக விவாதிக்கப்படாததாலும் பெண்ணிய வாசிப்பை முன்வைக்க வேண்டும் என்று கருதியதாலும் இந்நாவலைப் பற்றி மீண்டும் ஒரு விரிவான கட்டுரையை எழுதினேன். வாஸவேச்வரம் நாவலில் மூன்றாம் பதிப்பின் (காலச்சுவடு, செவ்விய நாவல்கள் வரிசை, 2007) முன்னுரையாக அக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. என் பதிவிலும் www.innapira.blogspot.com நவில்தொறும் நூல்நயம் பகுதியில் சென்ற ஆண்டில் அது பதிக்கப்பட்டிருக்கிறது. பொதுப்படையாக ஒரு காட்டமான விமரிசனத்தை வைக்கும்போது தகவல்களை உறுதிசெய்துகொண்டு நீங்கள் எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும், "கிருத்திகாவின் மகளுக்கும் அவர்களின் மாபெரும் அமைப்புக்கும் தமிழின்மீது பெரிய மதிப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் கிருத்திகாவை ஒரு தமிழ் எழுத்தாளராக முன்னிறுத்தவில்லை. ஆகவே அவரது நூல்கள் இன்று கிடைக்கவே இல்லை. எவராவது ஆர்வம் எடுத்து அவற்றை வெளியிடலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் அறிந்தவரை, கிருத்திகாவின் மகள் மீனா அவர்கள் தமிழில், நவீன இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். பணிகளுக்கு இடையிலும் புதிய கவிதைநூல்களை, புதினங்களை வாங்கி வாசிக்கக்கூடியவர். வெண்ணிலா மற்றும் சுகிர்தராணியின் கவிதைகளை, கோணங்கியின் எழுத்துகளை அவர் என்னோடு விவாதித்தது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. அதேபோல, காலச்சுவடு பதிப்பகம் வாஸவேச்வரம் நாவலை பிரசுரிக்க நினைத்து மீனாவை அணுகியபோது உடனே தன் தாயிடம் பேசி--அப்போது கிருத்திகா நினைவையும் மறதியையும் மாறிமாறிக் கொண்டிருந்த நேரம்--நாவல் பதிப்பு பெற உதவி செய்தார். இது உங்கள் தகவலுக்கு.

கிருத்திகா முன்னணித் தமிழ் எழுத்தாளராக இதுவரை அறியப்படவில்லை என்றால், அவரது புத்தகங்களின் பதிப்புகள் வெளிவரவில்லை என்றால், அதற்கான பழியை தமிழ் நவீன இலக்கியச் சூழலில் நின்று நிலைபெற்றிருக்கும் ஆண்மையச் சூழல் தான் ஏற்கவேண்டுமே தவிர அவர் குடும்பமல்ல. இது கிருத்திகாவுக்காக மட்டும் நான் சொல்லவில்லை. எந்த எழுத்துமே இலக்கியச் சூழலால்தான், அதில் தீவிரமாக இயங்குபவர்களால்தான் அவர்களிடையே நேரும் விவாதங்கள், உரையாடல்களின் வாயிலாகத்தான் canonize செய்யப்படுகிறது, நல்ல எழுத்தாக வகைமைப்படுத்தப்படுகிறது, வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது, வாசகர்கள் விரும்பினால் பதிப்புகள் காண்கிறது. கிருத்திகாவின் எழுத்து ஏன் இத்தகைய கவனம் பெறவில்லை என்ற கேள்வியை இலக்கியத்தில் இயங்குபவர்கள், இயங்கியவர்கள் தங்களிடமேதான் கேட்டுக்கொள்ளவேண்டும், இந்தக்கேள்வியின் பதில் எழுத்துலகின் அரசியலை நாம் விரும்பாவண்ணம் நமக்கே காட்டித்தந்தாலும்.
அன்புடன்
பெருந்தேவி

*****

அன்புள்ள பெருந்தேவி,

மன்னிக்கவும். உங்கள் கட்டுரைகள் என் கவனத்துக்கு வரவில்லை. என்னுடைய கூற்று சற்று பொத்தாம்பொதுவாக அமைந்துவிட்டது குறித்து வருத்தமே. அது ஒரு பொதுவான மனப்பதிவே. நான் பழகிய பெரும்பாலான பெண்ணியர்கள் முன்னோடிகளின் நூல்களை போதுமான அளவுக்கு வாசித்தது இல்லை என்பதுடன் சிலர் அவ்வாறு வாசிக்கதேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று நமக்கு எப்படிபபர்த்தாலும் ஒரு ஆயிரம் பக்க பென்ணிய எழுத்துக்கள் கிடைக்கின்றன. அவற்றில் மேலைநாட்டுப்பெண்ணிய எழுத்தாளர்கள் - எடித் வார்ட்டன், வெர்ஜீனியா உல்ப், சீமோங் த பூவா முதல் இன்றுள்ளவர்கள் வரை-- பற்றிய எத்தனை பக்கங்கள் உள்ளன என்று எவரும் பார்க்கலாம். வை.மு.கோதைநாயகி ஆர்.சூடாமணி முதல் இன்றுவரையிலான எழுத்தாளர்களைப்பற்றி புதிய கோணத்தில் தமிழ்ப்பெண்ணியர் எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்? அந்த ஏமாற்றத்தின் பதிவே அது.

நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்-- மேலும்எழுதுவீர்கள் என்றால் அது மகிழ்ச்சிகரமானதே. ஆனால் அப்படி பெண்ணியர்கள் ஏதும் எழுதாதற்கும் ஆணியவாதிகள்தான் காரணம் என்றால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஆணியவாதிகள் ஆணியவாதிகளாக இருப்பதனால் பெண்ணெழுத்துக்களைப் பற்றி எழுதவில்லை. சரி, ஏன் பெண்கள் அவர்களைப்பற்றி விரிவாக எழுதி ஒரு மாற்றத்தை உருவாக்கக் கூடாது என்பதே என் கேள்வி. அதுதானே இயல்பானது?

மீனா சாமிநாதனைப்பற்றிய உங்கள் தகவல் புதிய செய்தி எனக்கு. அவரது இடத்தில் இருந்திருந்தால் நான் கிருத்திகாவின் படைப்புகளை அனைத்தையும் சிறந்த பதிப்புகளாகக் கொண்டு வந்திருப்பேன். அதுவே எனக்கு தமிழ் மீதான பற்றின் மதிப்பின் ஆதாரமாக இருந்திருக்கும்

ஜெ