Monday, December 1, 2008

மும்பைத் தாக்குதல்: இஸ்லாமிய மதத்தலைவர் கருத்து

சோகம் கனக்கும் இத்தருணத்தில் பொதுநீரோட்டக் கருத்தாக்கங்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் மனிதர்கள் பற்றி வைக்கும் கருத்துகளுக்கு மாற்றான கருத்துகளை முன்வைக்கும் முயற்சியில் இப்பகிர்தல். அடையாளங்களின் படிவு இறுகி நெஞ்சில் கெட்டித்துக் கிடக்கும் ”இஸ்லாமியர்களுக்கும்” “இந்துக்களுக்கும்” இச்செய்தி வேறொரு கோணத்திலான பார்வையைத் தரும் என்று நம்புகிறேன்.


We should not go soft on terror, it has no religion: Muslim cleric
Lucknow (IANS): Going soft on terror will not make Muslims happy as the perpetrators of such acts do not segregate their targets by religion, the cleric who heads Lucknow's oldest Islamic seminary has said after the daring Mumbai attack.

"If the politicians of this country think that by shying away from taking on terrorists directly and by going soft on terror they will get kudos from Muslims, they are sadly mistaken," said Lucknow's Naib Imam Maulana Khalid Rasheed, who also heads the Firangi Mahal seminary.

"It is quite clear now that Indian politicians of all shades were somehow living under an illusion that if they were to turn harsh against acts of terror, they would alienate the Muslims of this country," Maulana Rasheed told IANS in an interview.

"They ought to realise that the perpetrators of terror do not segregate their targets in terms of religion, and the victims of terror too cut across religious lines. When you count dead bodies, the first thing that hits you is the horror, not the religion of those killed."

Over 180 lives were lost in the Mumbai attack in which terrorists struck at 10 prominent locations in the city Nov 26 night and carried on for nearly 60 hours.

Maulana Rasheed, who wondered "when will these politicians change their mindset, said: "I could see fear and apprehension in the utterances and eyes of each of the leaders - cutting across party lines - as they appeared on various TV channels throughout the three-day-long ordeal in Mumbai".

He is surprised that some parties thought Muslims in India did not appreciate any criticism of Pakistan.

"What is worse is that leaders of some parties have even begun to think that any criticism of Pakistan would not be relished by this country's Muslims," he lamented.

(நன்றி: The Hindu, Top Stories Monday, December 1, 2008)

இங்கே என்னோடு அறையைப் பகிர்ந்துகொள்ளும் தோழி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவள். தரி மொழி பேசுபவள். ஐந்து முறை தினம் தொழுகை செய்பவள். அவளுடைய தோழிகள் இருவர் முகத்தில் அவர்கள் கல்லூரிக்குப் போவதைத் தடுப்பதற்காக தீவிரவாதிகள் அமிலத்தை எறிந்திருக்கிறார்கள். என்னோடும் மற்ற தோழிகளோடும் பேசும்போது தொடர்ந்து அவள் வைக்கும் கருத்தும் இந்த இஸ்லாமியத் தலைவரின் கருத்தோடு ஒன்றியதாகவே இருக்கிறது.

Monday, September 22, 2008

க்ராஸ் டாக்

(அல்லது குறுக்குச்சால்)

இப்படித்தான்
அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா
சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு
பர்ஸ்ட் க்ளாஸ் பாட்டு போட்டான்யா
ஓரம்போவில கருமத்தைப் பேசாதே
சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்
ஆஹஹா
பொம்பளை சிரிச்சாப்போச்சு
சிரிப்பா சிரிச்சிரும் கதை அப்புறம்
கதைக்கு காலு கை முளைச்சி
ஆண்குறியும் பெண் அதிகாரமும்
வெவ்வேற வீடுகளுக்குப் போவது தான்
கலசம், அரசி, கோலங்கள்
ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவோம்
வா மானாடி மயிலாடி
அய்யா ஏற்கெனவே திட்டிப்புட்டாரு
கையை காலை வச்சுக்கிட்டு சும்மா
இருக்கமாட்டீங்களா
பட்டாணி சுண்டல் சுக்குக்காப்பி
சரி சரிச் சும்மா டைம்பாஸ¤க்கு
சனியனே மேட்ச் பாக்கிறப்ப
உயிரை வாங்காதே
பிடிக்குங்களா
காலிப்ளவர் பக்கோடா
பக்கார்டி ரம்மோடு
பொறந்தா தமிழ் எழுத்தாளரா
பொறக்கணும்
பொரவலர் கிடைக்க
என்னுயிரே என்னுயிரே
மகளின் போனில் ரிங்டோன்
டிங் மெசேஜா வருதே
எந்தப் பொறுக்கி அது
ஏன் மூட்டுவலி இப்பல்லாம் வருது
கோப்பையிலே என் குடியிருக்கும்
அவன் யாரு சார் மகா கவிஞன்
இப்பல்லாம்
இன்னாத்த எழுதிக்கிழிக்கிறாங்க
மூத்திரம் முலை பத்தாததுக்கு
உடல் அரசியல்
கோஷ்டி அலையுது அவுங்களும்
கல்கி படிச்சி கவுந்தவங்க தான்
சார்
வந்தியத்தேவனை குந்தவை
மல்லாக்கவா யாருக்குத்
தெரியும் ஷகீலாவின் கண்ணீர்
மிகப்பெரிய பெரிசு தான்
ஆமாமாம் மிகப்பெரிய
கோப்பைகளையே நிரப்பப்
பற்றாது அஸிஸ்டெண்ட் டைரக்டரு
பேசினா என்ன துப்பினாகூட
மார்க்வெஸ் தான்
நடிகைகளின் வாழ்க்கைகள்
துயரப்பொதிமூட்டைகள் என்கிற
மானுடவியல் ஆய்வைச்
செய்த அமெரிக்க மாணவி
படுபேஜார்டி
கண்ணீரால் ஆய்வறிக்கையை
எண்ணூறு பக்கம் நிரப்பினாள்
தி ஹிந்து இலக்கியத் துணையிதழ்
படிச்சிட்டு இன்னிக்கு
வாழ்வாங்கு வாழ்ந்தப்புறம்
அதான்ப்பா அதேதான்
குப்புறப்படுத்துட்டு
நாளைக்காலையில்
சுனாமி வருமா
என மாற்றத்தை எதிர்நோக்கும்
உங்கள் அன்பன்.

Friday, September 19, 2008

E.E. Cummings (5) எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்

எப்பொதும் அப்படி இல்லாதிருக்கலாம் அது; மேலும் சொல்கிறேன்,
உன் உதடுகள், நான் நேசித்திருப்பவை, இன்னொருவருடையதைத்
தொடுமானால், உன் அரும் வலிய விரல்கள் அவர் இதயத்தைப்
பற்றுமானால், நேரத்தில் வெகுதொலைவில் இல்லாத என்னுடையதைப்போலவே;
இன்னொருவரின் முகத்தின்மேல் நான் அறிந்ததுபோல் மௌனத்தில்
இனிய முடியுனது படியுமானால், அல்லது அதேபோல் மேன்மையாய்
சுருளும் வார்த்தைகள், அதீதமாய்ப் பேசிக்கொண்டு
மடக்கப்பட்ட ஆன்மாவின்முன் கையறுநிலையில் நிற்குமானால்;

இப்படி நேரவேண்டுமென்றால், சொல்கிறேன் இப்படி நேரவேண்டுமென்றால்--
என் இதயத்தின் நீ எனக்கொரு சிறுவார்த்தை அனுப்பு,
அவரிடம் நான் சென்று அவர் கரங்களைப் பற்றி
என்னிடமிருந்து எல்லா சந்தோஷத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல.
பிறகு என்முகத்தை நான் திருப்பிக்கொள்வேன், தொலைந்த நிலங்களில்
தூரத்தே பறவையொன்று பயங்கரமாய்ப் பாடுவதைக் கேட்பேன்.


(குறிப்பு: கவிதையில் ஆண்பால் படர்க்கைகளை பொதுப்பாலாக மாற்றியிருக்கிறேன்.)

Tuesday, September 16, 2008

இருட்டில் பிள்ளைபெறுபவன்

(எரிகா யுங்-ன் கவிதை)

இருட்டில் பிள்ளைபெறும் மனிதன்
இறந்துபடுகிறான்
மீண்டும்
வாழ்வுக்குத் திரும்புகிறான்

தன் கரங்களை விரிக்கிறான்
இருட்டில்
உகப்பான பிசாசுகளை
அணைப்பதுபோல

அவன் இருதயம் நிற்கிறது
துவங்குகிறது
மீண்டும்
அவன் மன்னிக்கப்படுகிறான்

எதற்காகவும் இல்லாமல்.
என் தந்தை
யவன்
இருட்டைப் பெண்பிள்ளைகளாகச்
செய்பவன்.

ஏன் புதுப்பதிவுகள் இல்லை?

ஏன் புதுப்பதிவுகள் இல்லை என்று நண்பர்கள் சிலர் எழுதிக்கேட்டிருக்கிறார்கள். உண்மையில், எழுத நிறைய இருக்கின்றன. ஹெலன் சிக்ஸுஸ் கட்டுரை ஒன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். சில கவிதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால், இன்னும் சிலபல நாட்களுக்கு பதிவில் கவனம் செலுத்தமுடியாது போலிருக்கிறது. இப்போது என் ஆய்வின் இறுதிப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கிறேன். டிசம்பருக்குள் முதல்பிரதியை முடித்தாக வேண்டும். என்னுடைய பிரச்சினை என்னவென்றால் தமிழில் எழுதும்போது ஆங்கிலத்திலும் எழுதநேர்ந்தால் தமிழாக ஆங்கிலத்தை எழுதுவது போலாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், இருமொழிகளிலுமே நன்றாக மொழிதல், வெளிப்படுத்தல் போன்றவை குறித்த பயமும் வந்துவிடுகிறது. அதனால், என் பதிவை வாசிக்கும் நண்பர்கள் சில மாதங்களுக்கு பொறுத்து அருளுங்கள். திரும்பவும் சீக்கிரம் வருவேன். நன்றி.

சிறுநடைகள் பயில்வோம்

நடக்கிறோம்.
விழாநிலம் வாயில்கள் வாயில்கள் ப்ராண்டட் உள்ளாடைகளுக்காக
முளைத்தவை ஓதம் தோய்ந்த கால்களின் அடுக்கு டிஸ்கவுண்ட்
உருப்பொட்டலங்கள் வாகனம் நிரம்பிய அச்
சாலையில் முகம்திருப்பிக் கிடந்த ஒற்றைச்செருப்பு யாரது
நடக்கிறோம்.
சாக்லேட் திரவம் விற்கும் கலன்களுடன் இந்த யுவதிக்கு என்ன
பேச்சு சுருளாத அவள் விரிகூந்தலின் ஒருபுறமாக ஜ்வலித்தது
கண் ஒளிர்ந்த இன்னொன்று பனிச்சதுரமா ஜெல்லியா
நடக்கிறோம்.
உயர்த்துகிறது ஊடுகாண் கூண்டு நகரும்படிகளிலிருந்த சிறுமிகள் ஏன்
கையசைத்தனர் ரேப்பர் இனிப்பு நழுவி நழுவி கீழே நிறுத்தப்
பூங்காவின் கார்க்கூரை மேலே நகர்ந்து நகர்ந்து உயரே
உயரே உச்சிச்சூரியனோடு சம்பாஷிக்கலாம் பின்னால்
நடக்கிறோம்.
க்ரீம்கள் கெட்டித்த உடல் அச்சுகள் ஹென்னா பெண் அலங்காரம்
உதிரிமுடிகள் வரவேற்பில் நெருங்கிய வாசனைகளுடன் அடைய
முடியாதென்று அறிவிக்கிற அவள் மொபைல்
நடக்கிறோம்.
கேளிக்கையின் விதவித துண்டுகளின் கண்ணாடி மேடை
ஆடியுடைக்காத கணேசர்வகைக்கு பேரமில்லை தம்புராவோடு
ஒட்டிப்பாடி வெளுத்தவை பளிங்கு மீராக்கள் நிற்க நகர
இயலாதவர் அகர்பத்திக் குழாத்தோடு அமர்ந்திருக்கட்டும்
நடக்கிறோம்.
இளைஞர் முதியர் சிறார் எப்பாலாரும் உகந்த
டாய்லெட்டுகள் உன்னத மூளைப்பக்கங்களுக்கு ஒரே புத்தகச்
சந்தை பின்னர் கடைசி வார்த்தைக்குத் தட்டத் துவங்கிய கைகளால்
ஆசிரிய வாசகர் நிழற்படம் முறைக்கிறார் கவனம் சதுக்கத்தின்
ஊற்றுகள் நெளியும் மின்சாரம் நிரம்பிக் களிக்கின்றன
தூண்டுதல் உயர்தரக் குஷன்களில் காத்துக்கிடக்கும் மூட்டைகள்
பேரம் தொடுதல் புத்திர வுணர்ச்சிக்கு போலோ வளையம்
பொருந்தும் சுண்டுவிரலென்றால் பரிசுமழை அறுத்துத் தரலாம்
நடக்கிறோம்.
இங்கில்லை விளம்பரப்பலகை-மனைவியை மட்டும் நேசி எய்ட்ஸ்
வருமா யோசி-சரசர சம் சிரி சரசர யாரோடும் நடக்கலாம்
நடக்கிறோம்.


(இக்கடல் இச்சுவை தொகுதியிலிருந்து)

Wednesday, August 20, 2008

ஒரு முத்தம் ஒரு பரம்

மிகமிக நேசிப்பவன் முத்தம் கொடுக்கப்போவது அவளுக்குத் தெரிந்திருந்தால் முந்தைய நாள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை ஏன் முழுங்கியிருக்கப்போகிறாள்?/ முத்தத்தின் முடிவில் நாக்கின் வெள்ளைப்படிவு நினைவுப்பரிசாகஅவனிதழில் ஒட்டிக்கொண்டுவிட்டது/ கசப்பின் அவ்வசீகரத்தை செருகிய அவன் விழியின் அந்திமாலைச் சிகப்பு காட்டிக்கொடுக்காதிருக்கட்டும் பிறகு/ பேராபத்து, யாரும் நுழைந்துவிடக்கூடும் எந்நேரமும் என்ற அறையில் சாகசத்தின் நிறங்கொண்டுவிட்டது ஏக்கம்/ஓட்டையடைக்க வேண்டிய தன் பற்களுக்குள்ளே துழாவும் அவன் நாக்கை வழிகாட்டி நிரப்புகிறாள் அவளும்/ திரைச்சீலைகள் வினவுகின்றன, தம் அசைவுகளின் மீது வைத்திருந்த கண்களை அவர்கள் மூடிக்கொண்டது எப்போது எப்போது/ வீட்டிற்குள்ளே அவள் நுழைய அவன் களிப்பின் ஜொலிப்பால் அவை கூசியதே அப்போது அப்போது/ ஏதோ மூங்கில்கள் நெஞ்சில் நின்று எழும்புகின்றன அவர்களின் பிந்நேரம் கடந்த புல்லாங்குழல் கச்சேரிக்கு/இசையாக மாறியிருக்கும் அவள் நோய் அந்நேரம்.

Monday, August 18, 2008

பர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நப##############

சமீபத்தில் நான் வாசித்ததில் பிடித்த சிறுகதை எஸ். செந்தில்குமாரின் "என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்." கதையின் சுட்டி:
http://www.kalachuvadu.com/issue-104/page18.asp

"சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை" என்று தொடங்குகிறது கதை. யார் சிகாமணி? தேனியில் வாரச்சந்தையில் கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த்தாள்களையும் தேடி எடுப்பவன். அவனோடு கூட இன்னொருவனும் இவற்றைத் தேடி எடுக்கிறான். கார்க்கோடன் என்ற பெயரால் அழைக்கப்படும் வேறொரு பெயர் கொண்டவன் அவன். சிகாமணிக்கு எதிரிணை கார்க்கோடன். சிகாமணி போலன்றி நம்பகத்தன்மை இல்லாதவன். (திருநள்ளாறு தலபுராணத்தின்படி, கார்க்கோடகன் என்கிற பாம்பு, சனியின் தூண்டுதலால் நளனைக் கடித்தபின் விஷமேறிய நளன் உடல்வண்ணம் மாறியதாக வரலாறு. நளனோடு சேர்ந்த எதிர்மறையான விஷம் போல சிகாமணியோடு சேர்ந்த கார்க்கோடன் இக்கதையில்.) கார்க்கோடன் பிக்பாக்கட். அதனால் போலிஸால் பிடிக்கப்படுகிறான். அப்போதும்கூட எப்போதும்போல சிகாமணிக்கு அவன் இல்லாமல் அவனோடு இல்லாமல் இருப்பது பிடிக்கவில்லை. லட்சுமி தியேட்டரில் படம்பார்த்துக்கொண்டிருந்தபோது சிகாமணி கார்க்கோடனிடம் சொல்கிறான்: "நான் இறந்ததும் நீயும் இறந்திடனும், நான் இல்லாத ஊரில் நீ உயிரோடு இருக்கக்கூடாது" (நிச்சயமாக அப்போது உயிரையும் கொடுக்கும் நட்பை அல்லது உறவை விதந்தோதும் படம் திரையில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என நினைக்கிறேன்)

சிகாமணியின் தாயையும் தந்தையையும் பற்றிய குறிப்பு கதையில் வருகிறது. ஆனால் கார்க்கோடன்? அவன் யாரோ, அவன் நிஜப்பெயர் என்னவோ. யாராயிருந்தால் தானென்ன? சிகாமணியை தேனியிலேயே விட்டுவிட்டு, மூணாறு செல்லும் கார்க்கோடனுக்கும் சிகாமணியின் வாழ்க்கையில் நடப்பவையே நடக்கின்றன. தேனியில் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட ஹக்கீம் என்கிற மரக்கடை முதலாளிக்கு இடுப்பில் போட்ட கட்டுக்கு எண்ணெய் ஊற்றவும் மூத்திரம் மலம் எடுத்துப்போடவும் நியமிக்கப்பட்டிருக்கிறான் சிகாமணி. "அவராக வெளிக்குப் போக ஒரு வருஷமாவது ஆகும். அதுவரைக்குக் கூட இருக்கச் சொல்லியிருக்காங்க." சிகாமணியைப்போலவே கார்க்கோடனும் மூணாறில் கீழே விழுந்து தொடையை முறித்துக்கொண்ட தேயிலைத் தோட்ட முதலாளிக்கு சரீரக்கழிவுகளை எடுத்துப்போடுகிறான். மரக்கடை முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின் மேல் சிகாமணிக்கு ஈர்ப்பு ஏற்படுவதைப்போலவே, கார்க்கோடனுக்கும் அவன் முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின்மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. நிஷாவை திருமணம் செய்வது போல சிகாமணி இரவின் கனவொன்றைக் காண்கிறான்; அதே கனவை கார்க்கோடனும். இரண்டு நிஷாக்களும் அழகாக, இடது கால்களில் தலா ஆறு விரல்களோடு இருக்கின்றனர். இரண்டு நிஷாக்களும் இவர்கள் இருவரையும் ஒறுக்கின்றனர்.

கண்ணாடி பிம்பங்களாக இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இயக்கம் கொள்கின்றன. ஆனால் வலது இடதாக மாறும் உத்தியை கவனமாக விலக்கும் கண்ணாடி இந்தக்கதை. சிகாமணி, கார்க்கோடன்: இருவரும் ஒருவரே போன்ற இருவரா, இல்லை ஒருவர் தானா?

"கார்க்கோடன் கடைசியாக "டேய் சிகா எப்படிறா மூத்திரம் பீ எடுத்துப்போட்ட நீ! எங்க முதலாளிக்கு எடுத்துப்போட்டபோது உன்னைதாண்டா நினைச்சுப் பார்த்தேன். உவ்வே வாந்தி வருதுடா" என்றான்.
சிகாமணி 'அடப்பாவி' என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டான். அடுத்து ஏதும் பதில் பேசமுடியவில்லை. கார்க்கோடனும் போனை வைத்துவிட்டான். சிகாமணின்னு பேர் வைச்சவங்களுக்கு எல்லாம் அப்படித்தான் வரும் என்று அவன் நினைத்துக்கொண்டான். கார்க்கோடனைத் தான் அப்போதுவரை அவனது உண்மையான பெயரைச்சொல்லி அழைத்திருக்கவில்லை என்பதும் கூடவே நி னைவில் வந்தது. தனது பெயரும் கார்க்கோடனின் பெயரும் ஒன்றுதானே என்று நினைத்துக்கொண்டான் சிகாமணி."

தேனியில் இருந்தால் என்ன, அல்லது தேனியை விட்டுவிட்டு மூணாறுக்குச் சென்றான் என்ன? மேலும் பெயர் தான் சிகாமணியாக இருந்தால் என்ன? கார்க்கோடனாக இருந்தால் என்ன? சந்தையில் ரூபாய் பொறுக்குதலும் மலமும் மூத்திரமும் அள்ளிப்போடுதலும் வாழ வழியாக இருக்கும்போது பெயர் என்பதின் மதிப்பு என்ன? எந்த வித்தியாசமும் இல்லாத(அ)வர்களின் விளிம்புவாழ்க்கைக்களங்களில் பெயர் என்கிற இடுகுறி கொள்ளும் பொருள் (அல்லது அந்த இடுகுறியின் பொருளற்ற தன்மை) கேள்வியாக நம்முன் விரிகிறது.

பெயர் என்பது arbitrary ஆக இடப்படுவது. ஆனால் நடைமுறையில் ஒரு பெயருக்கும் அந்தப் பெயர் சுட்டும் நபரின் பிம்பத்துக்குமான ஒரு பிணைப்பு, ஒரு தொடர்பு பார்ப்பவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் இக்கதையிலோ இந்த பெயர்-பிம்பம் பிணைப்பும் தொடர்பும்கூடத் தீர்மானமாக இல்லை. ஒரே பெயர் கொண்ட இரு நபர்களா, அல்லது ஒரே பெயர் கொண்ட ஒருவரே தானா என்கிற ரகசியத்தைப் பிரதி தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது.

"சிகாமணி இறப்பதற்குமுன் யாரிடமோ சொல்வதுபோல 'நான் இறந்ததும் சிகாமணியும் இறந்துபோவான்' எனச் சொன்னான்."

இறந்தது சிகாமணியா, சிகாமணிகளா, தெரிவதில்லை நமக்கு. யார் யாருக்கு, எத்தனை பேருக்கு இழவுத்துக்கம் காக்கவேண்டும் என்பதை அறியாமலேயே வாசித்த கதையிலிருந்து விடைபெறுகிற துயரத்தை இக்கதை வாசகருக்குத் தன் வெகுமதியாக அளிக்கிறது.

(எஸ். செந்தில்குமாரின் இக்கதை ஆகஸ்ட் 2008 காலச்சுவடு இதழ் 104-ல் வெளியாகியிருக்கிறது. இந்த என் பதிவு பின்னர் விரித்து எழுதப்படும்)

Sunday, August 17, 2008

ஆடியற்ற ஆடியில்

தூரத்தே
கோக்காகோலா பாட்டில்
தன் விளம்பரப்பலகை
க்குள்ளேயே ஆடிக்
கொட்டிவிட்டது.
மோனித்த வெளியில்
ஆளற்ற
ஒற்றைக்கட்டில்
காற்றைக்
கேட்கிறது.

பிறகு இல்லை நேற்று

--கவிதை நீக்கப்படுகிறது--

Sunday, August 10, 2008

இப்படி பலரும்

அலைச்சலாகவே ஆனவன்
தன் அறையில் நடக்கும்போதும்
உலகத்தைச் சுற்றிவிடுகிறான் பலமுறை.
அமர்ந்து அவன் கணினியின் திரையில்
ஒரு சுட்டியைச் சொடுக்கும்போதும்
ஓராயிரம் சுட்டிகளாய் நிரம்பி
மேசைமீது வழிந்துவிடுகின்றன.
அவசரமாய் அவற்றை அள்ளிவைக்கும்
அவன் கைகளிலும் சக்கரங்கள்.
துயிலறியாத அவன் விழிகளின்
கங்கிலிருந்து
நேற்று ஒருத்தி
தன் சிகரெட்டுக்காக
நெருப்பு எடுத்துக்கொண்டாள்
என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

Friday, August 8, 2008

ஜீவனோ அற்ப உபாயம்

கவிதை நீக்கப்படுகிறது.

சில ஆலோசனைகள்

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

நீ அவ்வப்போது பொய் சொல்லவேண்டும்
அந்தப் பொய்களுக்காக அவனிடம் (மட்டுமே)
கண்ணீர் விடவேண்டும்
ஒருபோதும் உண்மையை (அப்படி ஒன்று இருந்தால்) நேசிப்பவளாகக்
காட்டிக்கொள்ள வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

ஒரு கண்ணில் அமிர்தத்துடனும்
இன்னொன்றில் விஷத்துடனும்
பார்வையில் ஒன்றுசேர விழுங்கவேண்டும் அவனை
ஒருபோதும் அமிர்தத்துக்கும் விஷத்துக்குமான வேறுபாட்டை
அவன் உணரச்செய்ய வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

திரும்பவும் உன் சிறுபிராயத்தை நோக்கிச் செல்.
சிறுபிராயத்தையும் அவன் ரசிக்கத் தரவேண்டும்
அவன் இல்லாத உனக்கேயான பிராயமென்று
உன் முதுமை அமையலாம் ஒருவேளை.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

திரைப்படக் காமக்காட்சியில் வீணையைப்போல்
அறிவுஜீவிகள் மத்தியில் பிரதியைப்போல்
வாசிக்கப்படுபவளாகக் உன்னைக் காட்டித்தர வேண்டும்
(ஆற்றைவிடவும் ஆழமாக)
வீணைகள் பிரதிகள் பெண்களை வாசிக்க
ஆண்களுக்கு விருப்பமென்பதை மனதில்கொள்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

அறிவில் அவனில் நீ பாதிக்குக் கீழ் எனவும்
அன்பு தருவதில் நிரம்பித்ததும்பியும்
உன்னை அறிவித்துவிடவேண்டும்.
அன்பு கொஞ்சம் குறையும்பட்சத்தில்
கார்ப்பரேஷன் தண்ணீரை இட்டு நிரப்பு பாதகமில்லை.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

மழையை குழந்தைகளை நேசிப்பதாக
அவன் முத்தம்கொடுக்கும்முன் சொல்லப்பழகு
அப்போது உன் கூரிய பற்களை
உதடுகளுக்குள்ளே அடக்கிவைத்துக்கொள்
அவன் நெஞ்சில் படரும்போது
கனவுகளைக் காண்பவளாக உன்னைக்காட்டிக்கொள்
அல்லது அச்சமயம் கண்ணையாவது மூடிக்கொள்

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

லக்கானோ புரந்தரதாசரோ பெரியாரோ
இந்திய அரசியல் சட்டமோ, விளக்குபவனிடம்
குளிர்இமைகளை சற்றே உயர்த்திக்கேள் "அப்படி..
யா?" அதற்குமுன் உன் புருவங்களைச் செம்மை செய்ய
மறக்காதே எழுத்தாள நண்பனுக்கும் திருத்தப்பட்ட பெண்புருவம்
பிடிக்கும்
என்றாலும் அழகுநிலையத்தில் அவ்வப்போது
வண்டியில் விட அவனை அழைக்க வேண்டாம்.

பலஸ்ருதி

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

ஆலோசனைகளை வாசித்ததாகத்
தெரியப்படுத்த வேண்டாம் அல்லது இவற்றை
நிராகரித்ததாகச் சொல்லிக் கண்ணடித்துவிடு
அல்லது (மிகப்பணிந்து) ஏதோ ஒன்றை.
விரும்பப்படாவிட்டாலும் அவனோடு
ஆகப்பெருவாழ்வு வாழ உதவும் இவை.

Thursday, August 7, 2008

பகல்போல் இல்லை இரவு

--கவிதை நீக்கப்படுகிறது--

Saturday, August 2, 2008

"தாமரை இலைமீது ததும்பும் சொற்களை" முன்வைத்து கொஞ்சம் ஜெயகாந்தன்

(ஜனவரி 2006 சென்னை புத்தக விழாவில் அரவிந்தனின் "தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்" நூலை வெளியிட்டுப் பேசியது.)

தாமரை இலை மீது ததும்பும் சொற்கள்--நண்பர் அரவிந்தன் அவர்களின் நான்காவது நூல் இது. அவரது இரண்டு சிறுகதை தொகுப்புகளுக்குப் பிறகு, சிறாருக்கான மகாபாரதம் நூலுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது. தொகுப்பில் பதினான்கு கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 90-களின் இறுதிகளிலிருந்து சென்றவருடம் வரை காலச்சுவடு, இந்தியா டுடே, தமிழ்க்கொடி 2006 இலக்கியத் தொகுப்பு நூல், திண்ணை.com போன்றவற்றில் பிரசுரமாகியிருக்கும் அரவிந்தனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், க.நா.சுவின் பொய்த்தேவு, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே, ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம், நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, போன்ற குறிப்பிட்ட நாவல்பரப்புகளில் மையம் கொள்ளூம் கட்டுரைகள், விழி. பா. இதயவேந்தனின் வதைபடும் வாழ்வு, அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி, கதா-காலச்சுவடு நிகழ்த்திய போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு ஆகியன பற்றி மூன்று கட்டுரைகள், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரது சிறுகதைகளின் உலகத்தை எட்டிப்பார்க்கும் நான்கு கட்டுரைகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள் குறித்த அரவிந்தனின் எழுத்துக்கு வந்த எதிர்வினைகள் பற்றிய விவாதம், இளம்படைப்பாளிகள் என்று அரவிந்தன் வகைமைப்படுத்துகிற படைப்பாளிகளுக்கு முன்நிற்கும் சவால்கள், அவர்களின் பலங்கள் பலவீனங்கள் குறித்த அவதானிப்பு என்பதாகத் தன்னை விரிக்கிறது இந்நூல்.

சிலநாட்களுக்கு முன் என் கையில் கிடைத்த இத்தொகுப்பில் சில கட்டுரைகளை என்னால் கவனத்தோடு வாசிக்கமுடிந்தது. சிலவற்றைப் புரட்டிப்பார்க்க மாத்திரமே எனக்கு நேரம் கிடைத்தது என்று சொல்லவேண்டும். என்றாலும் வாசித்தவரையில் என் கவனத்தை ஈர்த்தது அரவிந்தனின் உரைநடையின் தெளிவு. ambiguity இல்லாமல் முன்வைக்கப்படுகிற கருத்துகள். கட்டுரைக்கு இது முக்கியம் என்றும் ambiguity இருந்தால் கூட அது உத்தேசித்த நோக்கத்தோடு அமையப்பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். தன்னுடைய கருத்துகளை தன் அபிப்பிராயம் என்று அரவிந்தன் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார் தன் முன்னுரையில். தான் எந்தத் தளத்தில் இயங்குகிறோம் என்பதையும் அதன் போதாமைகளையும் அறிந்திருப்பது, போதாமைகளை நியாயப்படுத்தாமல் அறிவிக்கவும் செய்வது, இவை தன் செயல்பாட்டை தானே அலசக்கூடிய மனத்தின் அடையாளங்கள். இந்த மனப்பாங்கு பெற்றிருப்பதற்காக அரவிந்தனுக்கு என் வாழ்த்துகள்.

அரவிந்தனின் கருத்துகள் பலவற்றிலிருந்து என் வாசிப்பு வேறுபடுகிறது. உதாரணத்துக்கு, ஜெயகாந்தன் எழுத்துகளில் காணக்கிடைக்கும் 'மிகை வெளிப்பாடுகள்' பற்றி அரவிந்தனின் விமரிசனம். ஜெயகாந்தன் எழுத்துகளில் மிகையுணர்ச்சியுடைய பங்கை நான் வேறுவிதமாக, அவர் எழுத்துக்கு அது வலிமை சேர்ப்பதாக நான் பார்க்கிறேன். ஜெயகாந்தனின் பல கதைகளில் இந்த மிகையுணர்ச்சி வெளிப்பாடு நாடகீயமாக மாறுகிறது. கதைகளில் வரும் உரையாடல்களுக்கு stylized பாணி ஒன்றை இந்த நாடகீயம் தருகிறது. ஜெயகாந்தன் கதைகளில்--குறிப்பாக, குருபீடம், எங்கே யாரோ யாருக்காகவோ, போன்ற கதைகள்-- நிறைய இடங்களில் உரையாடல்கள் வலிமை பெற்றிருப்பதற்கு மிகை சேர்ந்திருப்பதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

புதுமைப்பித்தனின் 'சாப விமோசனத்தையும்' ஜெயகாந்தனின் 'அக்னிப்பிரவேசத்தையும்' அரவிந்தன் ஒப்பிட்டு ஆராய்வது முக்கியமானது. (94). ராவணன் இடத்திலிருந்து வந்த சீதையின் தூய்மையைச் சந்தேகித்த ராமன் சீதையைத் தீக்குளிக்கச் செய்ததை அறிந்து, கல்லாகிப் போன அகலிகை புதுமைப்பித்தனில். ஜெயகாந்தனிலோ, கற்பு என்று காலங்காலமாக கட்டப்பட்டிருக்குமொன்று கலைந்துவிட்டதால் தன் மகளை நீரில் குளிப்பாட்டி உள்ளே சேர்த்த தாய். அரவிந்தன் புதுமைப்பித்தன் எழுப்பும் கேள்விகள் சலனங்கள் ஆழமானவை என்றும் ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் கதை எழுப்பும் சலனமோ புரட்சித்தாயின் கையிலிருக்கும் குடத்தின் அடிமட்டத்தைத் தாண்டாதவை என்று வாதிடுகிறார் (94). அரவிந்தனுடைய இந்த விமரிசனம் யோசிக்கச் செய்தது. இந்த இரு கதையாடல்களையும் பார்க்கலாம்: புதுமைப்பித்தனின் கதையில், கல்லாவதற்கு முன் அகலிகை சீதையிடம் தீக்குளிக்கச்சொல்லி ராமன் கேட்டானா என்று வினவுகிறாள். அதற்கு சீதை "உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?" என்று சொல்லிச் சிரிக்கிறாள். "நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப்போகிறதா? உள்ளத்தைத் தொடவில்லையென்றால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்று பதில் தருகிறாள் அகலிகை. ஆனால், புதுமைப்பித்தனின் இக்கதைமாந்தரைப் போலன்றி ஜெயகாந்தன் கதைமாந்தருக்கு சுற்றியிருக்கும் உலகம், அதன் மதிப்பீடுகள் எல்லாமே முக்கியமாகப் படுகின்றன. ஆனால், கூடவே அந்த மதிப்பீடுகளுடைய உள்ளீடற்ற தன்மை கூடவே சுட்டப்படுகிறது. உடலுக்கும் உள்ளத்துக்குமான, உள்ளத்தூய்மைக்கும் உடல் தூய்மைக்குமான வித்தியாசப்புள்ளிகள் காட்டப்பட்டு, 'கெட்டுப்போனது உடல் தானே, குளிச்சாச் சரியாகிப் போயிடும்,' என்று வேறொரு சொல்லாடலாகக் கற்பெனும் சுத்தம் விரிகிறது. புனித நீரில் குளிப்பது, அல்லது சில விசேஷ காலங்களில் நம் வீட்டிலிருக்கும் நீரையே புனித நீராகப் பாவித்துக் குளிப்பது போன்றவை நிலவும் நம் கலாச்சாரச் சூழலில், ஜெயகாந்தனின் கதையாடலில் மீள்புனையப்படுகிற 'நீரில் குளிக்கும் சடங்கு' கற்பெனும் கலாச்சார விகாரத்தை எடுத்துப்பார்த்து 'இவ்வளவுதானே இது' என்று விசிறி அடிக்கிறது. இதன்மூலமாகக் கதையாடல் கற்பை ஸ்தூலமான உடலுக்கு மட்டுமானதாக மாற்றிவிடுகிறது. அந்த விதத்தில் ஜெயகாந்தனின் இக்கதையின் நவீனம் தனித்து நிற்கிறது.

நிறைய உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இந்தக் களம் புத்தக அறிமுகத்துக்கானது. விமரிசனத்துக்கானது அல்ல. காலை மாலை போன்ற பொழுதுகளுடைய அழகெல்லாம் நாம் அப்பொழுதுகளை அவ்வாறு உணர்வதே. இந்த மாலையை நான் ரம்மியமாக உணர்கிறேன். புத்தகத்தை வெளியிட என்னை அழைத்த அரவிந்தனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் என் நன்றி.

Friday, August 1, 2008

பூமி போலும் வலிய

கவிதை நீக்கப்படுகிறது.

Thursday, July 24, 2008

Wednesday, July 23, 2008

பெரும்பாலும்

நாற்பது வயதுப்
பெண்கள்
தூங்குபவர் மேல்
போட்ட கால் தனதை
கட்டிலுக்கும் தெரியாது
எடுக்கும்
பெருந்தன்மையோடு
முறித்துக்கொள்கிறார்கள்
உறவை.

Tuesday, July 22, 2008

மிச்சம்

இத்தனை எஸ்எம்எஸ்களை
மிக நிதானமாக
ஒன்றன் பின் ஒன்றாக
ஆடைகள் அவிழ்ப்பதைப்போல
அழிக்கிறாள்
மறைகின்றன அவை
போதைகளால் நடனமாகவே
உருவானவள்
நிறங்களோடியபடியிருக்கின்ற
வண்ணமேடையோரமாய்
நகர்ந்துமறைந்ததைப் போல.
ஒரு கோப்பை காபுசினோவையோ
சிறிய மிராண்டாவையோ
நீட்டிய ஒருவனின் அந்நிய விழிகளில்
அவள் அகம்
வெட்டுப்பட்ட குட்டியுடலின்
காத்திருந்த
ரத்தம் சோர்கிறது
துடித்து வாரியணைக்க
தன்னுரிமையை யோசிக்கும் முன்னமே
அவன்முன்
வேறு நிர்வாணத்துக்கான ஒப்பனைகளோடு
நிற்கிறாள் அவள்
பாடலாய் செவிகள்கொள்கின்றன
அலறுதல்கள்.
'ஸிம் கார்டுகளை கழிவறைக்கிண்ணத்துக்குள்
தொலையவிடுங்கள்.
செல்போனை யோனிக்குள்
அலையவிடுங்கள்'
கரகோஷங்களுக்கிடையில்
சிக்குப்பிடித்தது அவள்
அகம் என்று
வேறொருவன் கத்துகிறான்.
கண்டறிந்தது அவன் மனமா கரமா
தன் முடிக்கற்றையை அவன் மூக்குத்துளைக்குள்
நுழைக்கிறாள் அவள்.
அவன் தும்மலை
ஆதிக்கக் கருத்தியல் என்று
நகையாடுகிறாள்.
கூட்டமும் சிரித்தலறுகிறது.

தொலையாத உன் செல்போனுடன்
எத்தனை தொலைவுதான் செல்வாய்
துடித்தல் மேலும் அவனதாய் கேட்கிறான்
கொஞ்சம் முன் அவளுக்கு
மிராண்டா கொடுத்தவன்
அல்லது காபுசினோ கொடுத்தவன்.
வெறுத்து அவன் கேள்வியை
ஒறுக்கிறாள்
ஒரு சீமாட்டியைப்போல
நூறு ரூபாயொன்றை நீட்டி
அவனை ஓடிப்போகச்சொல்கிறாள்.
உன்னை நீயே புணர்ந்துகொள்
என்பது ஏன்
அவள் சொல்ல கெட்டவார்த்தைகளாகக்
கேட்கவில்லை?
பின்னும் வினவுகிறான்.
வேறென்ன,
அவளை அவன் காதலித்திருக்க வேண்டும்.
பௌர்ணமி
அறைகளுக்கு வெளியே
இன்னமும் மிச்சமிருக்கிறது.
வராத வந்துவிட்டிருந்த
எஸ்எம்எஸ்களுக்காக
அவள் தன்னை
மன்னித்துத்தான் தீர வேண்டும்.
வராத வந்துவிட்டிராத
அவள் கண்
நீர்த்துளிகளுக்காக
அவனும் காத்துக்கொண்டுதான்.
வரப்போகுமா?
தளத்தின் வேறொரு மூலையில்
வெயிட்டர்கள்
காத்திருக்கும் வேளையில் அணிந்துபார்க்கும்
கோமாளிக்குல்லாவின் குஞ்சலம்
ஒருவேளை ஒருவேளை
என்றே ஆடியசைகிறது.

(இக்கடல் இச்சுவை தொகுதியிலிருந்து)

காத்திருந்தவள்

இச்செடி துளிர்க்கும்போது
வந்தாள் அவள் மொட்டரும்பி
அவிழ்ந்து
பூக்கள் கண்ணை நிறைத்து
உதிரவும்
தொடங்கிவிட்டன
காத்திருந்ததன் அடையாளமாக
இனி இங்கேயே நிற்கும் செடி.
துரோகத்தின் அடையாளமாக
ஒரு பூச்சருகை மட்டும்
எடுத்தவள்
தன் பெட்டிக்குள்ளே
போகிறாள்.

Monday, July 21, 2008

E.E. Cummings (4) மேகியும் மில்லியும் மோலியும் மேயும்

மேகியும் மில்லியும் மோலியும் மேயும்
கடற்கரைக்குச் சென்றார்கள் (ஒருநாள் விளையாட)

தொல்லைகளையே நினைக்க இயலாமல் செய்த
அத்தனை இனிதாகப் பாடும் கிளிஞ்சல் ஒன்றை மேகியும் கண்டாள்

சோம்பலுற்ற ஐந்து விரல்கள் கதிர்களாக இருந்த
வழிதட்டிப் போன நட்சத்திரம் ஒன்றை நட்பாக மில்லியும் கொண்டாள்

குமிழிகளை ஊதியபடி பக்கவாட்டில் விரைந்தோடிவந்த
பயங்கரம் ஒன்றால் மோலியும் துரத்தப்பட்டாள்

வீட்டுக்கு வந்தாள் மேயும்
இந்த உலகத்தைப் போல அத்தனை சிறிதான
தனிமையைப் போல அத்தனை பெரிதான
வழவழத்த உருண்டைக் கல் ஒன்றோடு

ஏனென்றால் எதை நாம் இழந்தாலும் (ஒரு உன்னை அல்லது ஒரு என்னைப்போல)
எப்போதும் நம்மையே நாம் கண்டுபிடிக்கிறோம் கடலில்.

Saturday, July 19, 2008

சுருட்டை முடிக்கற்றைகளோடான

அந்தக் குழந்தைக்கு
இருவயது இருக்கலாம்
முதல் மொட்டை அடிக்கவில்லையாம்
மடியில் வைத்துக்கொண்டு
முடிவளையங்களில்
விரலை
விட்டுவிட்டு அலைந்தவர்
அசப்பில் சிவன் வேஷம் போட்ட
சிவகுமார் மாதிரியே இருந்தார்
ஏனோ எனக்கு
யானைமுடி மோதிரம்
நினைவில் வந்தது
எல்லாமறிந்த குழந்தையின் தாய்
ஓடோடி வந்து
குழந்தையை
வாரி எடுத்துச் சென்றுவிட்டாள்.

கடிதங்கள்

நண்பர் கார்த்திக் எழுதியது:

July 7, 2008

"பெயர் தரும் தேவி". நல்ல அங்கதம் :)
உங்கள் இரு கவிதைகளை (என்ன பருவம் இது, அவா) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். "என்ன பருவம் இது" invocative ஆகவுள்ளது. (பிரபு என்ன கொடுமை சரவணா என்பது போல சொல்லிப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை). "கேசவா" யாரோலோ ஏற்கெனவே எழுதப்பட்ட மாதிரி படித்துவிட்ட மாதிரி உள்ளது.

E.E. Cummings மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது. குறிப்பாக அந்தக் கடைசி வரி கம்பீரமாக. ("மன்னியுங்கள் எங்களை, வாழ்வே, மரணத்தின் பாவமே.")
"அண்டசராசரம்" மிக அடர்த்தியாகவும் கச்சிதமாகவும். திரும்பத் திரும்ப அதைப் படித்தேன். எந்தக்காரணத்தினாலோ பிரமிளை நினைவுபடுத்தியது.

"அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது."
இதை அப்படியே உணர்ந்தேன்.....சமீபத்தில். நம்பிக்கையின்மை, ஏமாற்றம் குறித்த பயம், சந்தேகம். இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று பிணைந்து வேரூன்றியிருப்பது தன்னை உள்குவித்த சுயத்தில் அல்லவா?
Kate Chopin-ன் "The Awakening" வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு இருக்கும் வேலைகளுக்கும் நடுவில் நிறைய எழுதுகிறீர்கள். நல்லது.

June 26, 2008

உங்கள் சமீபத்திய கவிதைகள் intense ஆக இருக்கின்றன. சொற்கள் புடைத்து உடைபட்டு எப்படி பருத்தி வெடிக்கிறதோ அதைப்போல.

"மெகாசீரியல் காட்சியில்
வருத்தம் தோய்ந்த
ஒரு கணவன்
உருண்டுபடுக்கக்
கற்றுத்தந்தான்
இப்படி இப்படி"
Could not stop smiling after reading this. It is a kind of teasingly funny.

கார்த்திக்

*****

அன்பின் கார்த்திக்,

முதலில் ஒரு விஷயம்: நண்பர்களைக் கலாய்த்த பதிவை நீக்கி விட்டேன். என்னுடைய "Statcounter" தந்த விவரப்படி, குறிப்பிட்ட அந்தப்பதிவுக்கு நிறைய வருகைகள் இருந்தன. பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் சட்டென்று கூடியிருந்தது. கொஞ்சம் வருத்தம் கொள்ளச்செய்த தனி உரையாடலும் நிகழ்ந்தது. என் பதிவை இலக்கிய, தத்துவப் பிரதிகளின் வாசிப்புக்காகவும் விசாரணைகளுக்காகவும் கவிதைகளைப் பகிரவுமே தொடங்கினேன். இந்த நோக்கத்திலிருந்து என்னைப் பிறழவைக்கும் அபாயம் அந்தப் பதிவின் பிரதியில் இருந்தது என்று உணர்ந்து விலக்கிக்கொண்டேன்.

"என்ன பருவம் இது": பிரபுவைப் போலத்தான் சொல்ல வேண்டும். சரிதான். "அவா"-வை கவிஞர் ரிஷி ஏற்கெனவே மொழிபெயர்த்திருக்கிறார். "கேசவா" எளிமையான கவிதை. ஏற்கெனவே படித்ததுபோல் தோன்றியதில் அதிசயமில்லை.

"அண்டசராசரம்" எனக்கும் பிடித்த கவிதை. ஆனால், பிரமிள் ஏன் உங்கள் நினைவுக்கு வந்தார் என்று புரியவில்லை. என் கவிதைமொழி பிரமிளிடமிருந்து மிகவும் மாறுபட்டது என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி. என்னையும் பிரமிள் பெரிய அளவில் பாதித்ததில்லை. ஏன் என்று பின்னர் ஒரு பதிவில் எழுதுகிறேன்.

"அவநம்பிக்கையின் கல்" பற்றி இன்னொரு நண்பரும் பேசிக்கொண்டிருந்தார். கல் வெளியிலிருந்தும் எறியப்படலாம், நமக்குள்ளிருந்துதான் என்றில்லை. மேலும் சுயமும் தன்னிலையும் பிறரால் பிறவற்றால் கட்டப்படுவதும் சுட்டப்படுவதும் தானே. நாம் கழிவிரக்கப்படத் தேவையில்லை சில சமயங்களில் என்றே சொல்லுவேன்.

கேட் சோபின் அமெரிக்கப் பெண்ணிய எழுத்தாளர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இனிமேல்தான் வாசிக்கவேண்டும். நீங்கள் வாசித்துவிட்டு எழுதுங்கள்.
பெருந்தேவி

டெஸ்க்டாப்பில் பொரியுண்ணும் மீன்

--கவிதை நீக்கப்படுகிறது--

Friday, July 18, 2008

எளிய சமையல் குறிப்பு

வெள்ளிக்கிழமையின் காற்பகுதியையும்
திங்கட்கிழமையின் தலைப்பகுதியையும்
அலுவலகத்திலிருந்து வெட்டி
ஒரு வாரவிடுமுறைச் சாற்றில் இட்டு
(உன் துணைவர் நச்சரிக்காதவர் என்றால் மட்டுமே)
தொடர்ப் பகற்கனாவில்
அதை அடுப்பில் வைத்து
(கடிகாரம் பார்க்காதிருப்பது முக்கியம்)
விண்மீன்கள்
ஒன்றிரண்டையும்
(நீ தனித்துக் காணப்போகிறவை)
ஒரு நாவலின் சில பக்கங்களையும்
(ரமணிசந்திரனுடையது அல்ல)
பொடித்துத் தூவி
கொதிக்கையில்
(இப்படியும் அப்படியும்
அறையில் உலாவும் நீ
இதை அதை
ஒழுங்குபடுத்தாதே
இந்நேரம்)
கொஞ்சம்
தாளிப்பைச் சேர்த்து
(இது உன் இஷ்டம்,
ஒன்று மட்டும்,
கவிதை பகுதிநேரமாய்
எழுதிச்சேர்த்தல்
ஆரோக்கியக்கேடு)
பதனமாய்
இறக்கி வைக்கும்வரை
(கவனம் இணையத்தைப்
பார்த்தால் சுவை மாறிவிடும்)
உன் மேல்
தயவுசெய்து
சற்றே தள்ளியிருக்கும்
பிள்ளைகள்
(சுறுசுறுப்பானவார்களா?
ஆம் என்றால்)
சிரிப்புக் கொத்துமல்லிகளை
கிள்ளிப் போட்டதும், அதை
வரும் மாதங்களுக்காக
குளிர்ச்சாதனப்பெட்டியில்
(இப்போது கருவளையங்கள்
நீங்கிவிட்ட உன்
கண்களாகவும் இருக்கலாம்)
பத்திரப்படுத்தியபின்
பகிர்ந்து கொள்
மீதியை யாருடனும்.

கடலும் கைப்பை அளவும்

உன் விழிகள்
காண்புலனின் வெறும் கொள்கலமல்ல
முத்துக்களின் பொக்கிஷமே
என்றறிவேன்.
என்னிடம் உருண்டோடி வந்த
இரண்டு முத்துக்களை
வேறு பெண்களுக்குச்
செய்த துரோகங்கள்
என மறுத்து
மீட்டெடுத்துக்கொண்டாய்.
துரதிர்ஷ்டக் காற்றின் இரவென்றால்
திறம்பெற்ற மூழ்குபவருக்கும்
முத்து கிடைப்பதில்லை.
கடல் அதற்குப்
பொறுப்பெடுப்பதில்லை ஒருபோதும்.
தங்கள்
கைப்பைகளில்
கடல்களையே அள்ளிவந்துவிடுகிறார்கள்
சில பெண்கள்.(அவர்கள் கைப்பைகளில்
மணல்திவலைகள் வேறெப்படி வந்ததாம்)
கடல் அதற்கும்
கோபப்படுவதில்லை ஒருபோதும்.
கடலிடமிருந்து நீ கற்க இருக்கின்றன
ஓராயிரம்
பொறுப்பின்மையும் பொறுமையும்.
இப்பெண்களிடமிருந்து
நான் பெற்றுக்கொள்ள இருக்கின்றன
ஓராயிரம் பேராசைகள்.

Thursday, July 17, 2008

கவிஞன்

அரங்கத்தின் மேடைக்கு
அழைக்கப்படுமுன்
தன்னைக் கேட்டுக்கொள்கிறான்
இன்று எப்படி எழுதப் போகிறேன்
இங்கிருந்து வெளிசெல்லும் வழி எங்கே
கேள்விகளை
யோசிக்கும்போதே
கையில் பிடித்த
பாம்பாகிறது
ஒலிபெருக்கி.

இளவெயிலில்
அலையும் முடிக்கற்றைகள்
கவிதைகளின் மகுடியை இசைக்கின்றன.
அவனைக்
காப்பாற்றப்போகும் கருணை
விரல்களுக்குத்
திரும்பத்தரப்படுகிறது
அவனுக்குப் புலப்படாமலே.

Wednesday, July 16, 2008

முன்னேற்பாடு

வா ழ் க்
செங்கல்களை
அடுக்கிவைத்து
கட்டிக்கொண்டிருக்கும்போது
கை குறைந்தால்
என்ன செய்வீர்?
உத்திரவாதம் ஏதும்
தரப்படவில்லை இன்னும்
ஒரு செங்கலால்
வீடு வீழாதென்றாலும்.

பறவை பாம்பான கதை

அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது.

Tuesday, July 15, 2008

E.E. Cummings (3): யாருக்குத் தெரியும், நிலாவோ

வானத்தில் அழகிய மாந்தர் நிரம்பிய
ஆர்வமிக்க தொரு நகரத்திலிருந்து
வெளியேவரும் பலூன்
நிலாவோ,
யாருக்குத் தெரியும்?
(மேலும்
நீயும் நானும் அதில் நுழைந்தால்,
அவர்கள் உன்னையும் என்னையும்
அந்தப் பலூனில் ஏற்றிக்கொண்டால்,
அழகிய மாந்தரோடெல்லாம் நாம்
வீடுகள் சிகரங்கள் மேகங்களுக்கும்
உயரே
ஏன் செல்லமாட்டோம்:
மிதந்தபடி தொலைவில் தொலைவில்
மிதந்தபடி
ஒருவரும் வருகைதந்திராத
ஆர்வமிக்க நகரத்துக்குள்,
எப்போதும்
அங்கே
வசந்தம்) மேலும் அங்கே
ஒவ்வொருவரும் காதலில்,
தாமே பறித்துக்கொள்ளும் பூக்களும்.

(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

Monday, July 14, 2008

கேசவா

மூன்றாம் முறையாக
விபத்தை எதிர்த்து
வீடு மீண்ட என்னிடம்
அத்தையொருத்தி
கேசவா கேசவா என்று
இனியாவது சொல்லென்றாள்.
கேசவனைக் கூப்பிட்டால்
வாசல் வரும் விபத்து
வராந்தாவில் நின்றுவிடுமாம்.
அன்றிலிருந்து
ஆகாயம் முதல் நிலம் வரை
எதில் வேகஞ் சென்றாலும்
சொல்ல மறப்பதில்லை.
ஒருமுறை
தூக்கத்தில்
கேசவா என்றேன் போல.
கனவில்
என்னோடு
இயக்கத்திலிருந்த
சிநேகிதன்
கோபித்துப்போனவன்தான்.
இதுவரை
கண்ணுக்குத் திரும்பவில்லை.

சில கவிதைகள் (1997)

அண்டசராசரம்

மடிப்புள் மாம்ச
வெயில் விரித்தெனைக்
கொத்தும் தனிமையோர்
காகம்.


*******

ஒரு செந்நிறப் பள்ளத்தாக்கு அழுகை
ஒளிபுகா
பனி சுமந்து இறுகிக்கிடப்பன
வெட்கம் ஒரு மருங்கு
நிந்தை மற்றொன்று
கடந்தும் ஏதோவொன்றின்
ஆவியாகித் தொலைய வான்நோக்கி
நீலம் மறைக்கும் வெட்டுக்கிளி மந்தை.
அப்போது காற்று புகா
மண்டிக்கிடப்போம் தழைகளின் ஈரவாடையோடு
சுடுமூச்சுகளின் நாசி சிகப்புப்புதர்
கெக்கலிக்கும் விளையாட்டுச்சிறுமிகள் போலும்
அலைந்து செல்லும்
அந்நியரின் கரு ஆறு உடல்கள் மேலே
திரும்ப அவர் குரல் திரும்ப
சுட்டும் அதன் முனை அநாதி காலம்
மிகப்பழையன சுவைமொட்டுகள்
இறைத்த யாரோ ஏக்கங்களின்
அசையொலி நாம் பாறைகளூடே
கசியும் பிளவுகள்

எதிரே ஆழத்தின் சிகப்பருவி வெகு உறவு
எப்போதைக்குமாய் வீழ எண்ணி கடந்தவண்ணம்.


*****

சப்தம்
குளம்புகள் மழலைகளின்
யார்
வெகுதூரம் புவிகடக்க
சுற்றமும் உற்றாரும்
சாரதிக்க
யாழினித்து மரிக்கும்
தேயும் அடிகளின்
செம்மையுறும்.

வளர்ந்தோம்.

******

("தீயுறைத்தூக்கம்" விருட்சம்-ஸஹானா வெளியீடு, 1997)

Sunday, July 13, 2008

இன்பம்: ஓரம் போ திரைப்படம் அல்லது பிரியாணியா, குஸ்காவா? (2)

(இது விமரிசனம் அல்ல)

7. படம் இனவரைவியலாக மட்டுமே காட்சிப்படுத்தப்படாமல் இருப்பதும் நவீனத்தின் பிம்பங்களோடு தன்னைத் தொடர்ந்து இணைத்தபடியிருப்பதும் குறிப்பிடப்படவேண்டியவை. சிலபல தமிழ் எழுத்தாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பருத்திவீரன் எனக்குப் பிடிக்கவில்லை. காரணம், இனவரைவியல் எனும் காட்சிப்பரப்பில் அது கட்டியெழுப்பும் லிங்கமைய (phallocentric) மதிப்பீடுகள். பருத்திவீரன் என்கிற பெயரே லிங்கமையச்சார்போடு நிலப்பிரபுத்துவ வாசனை வீசுகிறது. படத்தின் கடைசியில், லிங்கமையங்கள் கதைப்பரப்பிலிருந்து எழும்பி நிஜலிங்கங்களாகி பெண் புண்டையை வன்புணர்த்தி ரத்தம் தெறிப்பது கொடுமை. அந்தக் கொடுமையை மறந்துவிட்டு நம் படத்துக்கு வரலாம். பாட்டொன்றில் கல்லூரியில் தோற்றுப்போகும் வாலிபனாக, ஆட்டோ நிறுத்தத்தில் பங்க்சர் ஒட்டுபவராக வரும் தொந்தி கணபதி நடிகர் ஊர்வலத்தில் நீரில் மூழ்குகிறார். பங்க்சர் கணபதி மூழ்கும்போது நீருக்கு மேல் குவிகிற அவரது கரங்கள்மூலம் வலதுசாரி கணபதி ஊர்வலங்களுக்கு ஜாலியாக உரையெழுதப்படுகிறது. இன்னும் சில காட்சிகளில் சாராயக்கடைக்கு மேல் அமர்ந்து சிவன் நிஜமாகவே அருளாசி வழங்குகிறார். அனுமான் வேடமிட்டவர் குளிர்கண்ணாடியோடு நீலவண்ணத்தில் காட்சியில் இயைகிறார் (என் குட்டிச்சீதை கவிதைவரிகள் நினைவுக்கு வருகின்றன: http://innapira.blogspot.com/2008/06/blog-post_29.html)

8. Life is fart. படத்தின் தொடக்கத்தில் வாழ்க்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையான நான்கு குசு என்று விவரிக்கப்படுகிறது. படமுடிவில், (ஜெயகாந்தனின்?) வாழைப்பழச்சாமி அனுமான் வேடத்தில் நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று பாடி வருகிறார். மண் வனைத்த பானையாக காற்றுகொண்ட வெற்றிடமாக நம் உடல்கள் சுட்டப்படுகின்றன. உடல் பற்றிய தொடர்ந்த வலியுறுத்தல் செய்கிற கதையாடலில் இந்த வெற்றிடத்துக்கு அர்த்தம் தருவது வேகம் வேகம் வேகம் மட்டுமே. (நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளில், ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையில், வாழ்க்கையெனும் போட்டியின் வேகம் அருமையாக இணைகிறது பாடல்களில்.)

8 (ஆ). என் தலைப்பின் பிரகாரம் எட்டுக்கு மேல் எழுதக்கூடாது. என்றாலும் தொடர்கிறேன். சிலகுறைகள் இல்லாமல் இல்லை. ராணியின் கதாபாத்திரத்துக்கு டப்பிங் குரல் பொருந்தவேயில்லை. கேட்டுப் புளித்துபோன elite வகைமாதிரிக் குரல் அது. தொந்தரவு செய்தது. இரண்டாவது, சேட்களையும் அய்யங்கார்களையும் காட்டியிருக்கிறவிதம். வடசென்னையில் எனக்குத் தெரிந்த எல்லா சேட்களும் இட்லி சாப்பிட்டுக்கொண்டு தமிழ் நன்றாகப் பேசுகிறார்கள். பிராமணர்களைப் பொறுத்தவரை--பிராமண உடலை எல்லாம்வல்ல இறை உடலாக அல்லது வல்லமை மிக்க சத்திரிய உடலாக விதந்தோதும் ஷங்கர், கமல் தருவது அருவெறுப்பு என்றால், இப்படத்தில் வருவது போல வேகம் பிடிக்காத தயிர்சாதமாக பிராமணர்கள் காட்டப்படுவது அவர்களைப்பற்றிய சமகாலப் புரிதல் அற்ற போக்கு. ஓரிரு சண்டை, ஒன்றிரண்டு குத்தாட்டம் போல, சூப்பில் ஆங்காங்கே மிளகையும் உப்பையும் தெறிப்பதுபோல இப்படியான 'சரித்தன்மையோடான' அடையாள அரசியலும் இறைக்கப்படவேண்டும் போல.

கருத்தரங்கு ஒன்றுக்காக சென்ற வாரம் மான்செஸ்டர் சென்று திரும்புகையில் ஏர் கத்தார் புண்ணியத்தில் ஓரம் போ- வைப் பார்த்தேன். என் அருகே அமர்ந்திருந்த, இதே படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இரண்டு பதின்மவயதுக் குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். தீம் பாடலில் ப்ளேஸ்-ன் குரல் கேட்டவுடனேயே எங்கள் கால்கள் தாளம்போட ஆரம்பித்தன. எப்பேர்ப்பட்ட பாடகர் அவர். ஊருக்கு வந்தவுடன் இப்படத்தைப் பற்றிச் சிலநண்பர்களிடம் கேட்டேன். யாருமே இதைப் பார்த்திருக்கவில்லை என்று தெரிந்ததும் ஆச்சரியமும் விசனமும் ஒருங்கே வந்தன. மீண்டும் இப்படத்தைப் பார்க்கவேண்டும். படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்.

Saturday, July 12, 2008

இன்பம்: ஓரம் போ திரைப்படம் அல்லது பிரியாணியா, குஸ்காவா?

(இது விமரிசனம் அல்ல)

ஓரம் போ என்கிற நகர உதிரிகள் பற்றிய திரைப்படம் எனக்குப் பிடித்ததற்கான ஏழெட்டு காரணங்கள்:

0. நமக்கு இதுவரை தமிழ்த்திரைப்படங்களில் காணக்கிடைத்திருக்கிற பல விஷயங்கள் பகடி செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 'போட்டி' என்பதை எடுத்துக்கொள்வோம். ஆட்டோ ஓட்டுகிற கதாநாயகன் சந்துருவுக்கும் அவன் போட்டியாளனுக்கும் நடைபெறுகிற ஆட்டோ 'இரவு ரேஸ்' உறுதிசெய்யப்படுகிற இடம். குத்துவெறி கொலைவெறி பாவனைகளில் முகத்தை வைத்துக்கொள்கிற இருவரிடமும் (படத்தில், படத்தைப்) பார்ப்பவர்கள் வேறெதையோ எதிர்பார்க்க, அவர்களோ பொதுவாக இப்படியான காட்சிகளில் காட்டப்படும் சண்டை உறுமலைப் பகடிசெய்கிற விதத்தில் போட்டிபோட்டுக்கொண்டு இட்லிகளையும் தோசைகளையும் ஆர்டர் செய்துசாப்பிட்டுவிட்டு ரேஸ் செய்யப்புறப்படுவது. இன்னொரு இடத்தில் “அறியாப்பெண்” என்கிற புனைவு பகடிசெய்யப்படுகிறது. "ஒன்றும் தெரியாத சின்னப்பொண்ணு" என்று அப்பாக்காரர் மகளைப்பற்றி தன் மச்சானிடம் பேசிக்கொண்டிருக்கையில், ஆட்டோவில் அந்தப் பொண்ணு தன் காதலனிடம் "நான் சொல்வதை நீ செய்" என்று அவள் விரும்புகிற உடலுறவு மஜாவுக்கு உத்தரவு பிறப்பிக்கிறாள். ("பிரியாணியா, குஸ்காவா?")

1. ஆண் தொடங்குகிற உறவை இன்புற்று வலியத் தொடர்கிற பெண்ணாக கதாநாயகி ராணி. பின்னால் வாழ்க்கை போகிறபோக்கில் திருமணத்தை அவள் கேட்கிறாளே தவிர, இன்பத்துக்கு ஆண் தருகிற விலையாக திருமணத்தை அவள் முன்வைப்பதில்லை. அதேபோல, திருமணத்தை ஆண் மறுக்கிற போது, கோபத்தில் சாபம் கொடுத்தாலும் அவள் தற்கொலையை நோக்கியோ ஏன் அழுதுகொண்டோகூட இருப்பதில்லை. எப்போதும்போல பிரியாணி விற்கிறாள். இன்பம் துய்த்ததற்காக கண்ணீர் வார்க்காத பெண் எத்தனை புதிது நமக்கு.

2. திரைப்பட வளாகத்தில் இடுப்பைத்தொடுகிற ஆணை எத்தி உதைக்கிறாள் ராணி. ஆனால், காதலன் டிக்கெட் வாங்கிக்கொண்டு திரும்பிவந்து "என்ன நடந்தது?" என்று கேட்கும்போது ஒன்றும் இல்லை என்று சொல்கிறாள். தன் பலத்தை அறிந்துகொண்டால் ஆண் பயந்து ஒதுங்கி விடுவான் என்பதை அறிந்து வைத்துக்கொண்டிருக்கிற புத்திசாலிப்பெண். அவனிடம் அவள் "பெண்ணாக" நடப்பது கூட ஒரு பாவனை தான் போல.

3. உடல் கொண்டாடப்படுகிற படத்தில் காதலின் ஞாபகங்களாகவும் பாலுறவுத் தருணங்களே இருக்கின்றன. ஆட்டோ ரேஸ்களில் வென்று கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வரும் சந்துருவை, அவனும் ராணியும் அதே ஆட்டோவில் கொண்ட உறவு ஞாபகபிம்பங்களாக தொடர்ந்து அலைக்கழிக்கிறது, கவனம் சிதறடிக்கப்பட்ட அவனின் ஆட்டோ போலீஸ் வண்டியோடு மோதி விபத்துக்குள்ளாகிறது.

4. படத்தில் கதாநாயகனும் சரி 'வில்லனும்' சரி இருவருமே வெற்றி பெறுகிறார்கள். இதில் முக்கியமான விஷயம், 'வில்லனின்' வெற்றி அவன் ஆளுக்கும் கதாநாயகனுக்கும் நடக்கும் போட்டியில். முதல் முறை ரேஸில் ஜெயிக்கும் கதாநாயகன் அடுத்து நடக்கும் ரேஸில் பங்குபெறுவதில்லை. மூன்றாவதில் தோற்றுவிடுகிறான். பால் விற்றும் தரிசுநிலங்களைத் தோண்டியும் சட்டென்று கோடீஸ்வரராகும் முயற்சி திருவினையாக்கும் கதாநாயகன்கள் நிரம்பிய தமிழ் சினிமாவில் தொடர்ந்து முயற்சியில் தோற்கும் கதாநாயகனை இதில் காண்கிறோம். கடைசியில் அவன் பணக்காரனாவது யதேச்சையால் தானே தவிர உழைப்பால் அல்ல. ("விதி யதேச்சையென்னும் வடிவெடுத்து வரும்" என்று சொன்னது மிலன் குந்தேரா என்று நினைக்கிறேன்.).

5. நல்லவன்/கெட்டவன் வித்தியாசங்களும் குழம்பியபடிதான் இருக்கின்றன படத்தில். சந்துருவும் ராணியும் இன்பம் துய்க்கும்போது இடர் தராதவன் 'வில்லன் - காமெடியன்' சன் ஆப் கன். கதாநாயகியின் மீது கண்வைக்காதவனும் கூட.

6. ரேஸின் வேகத்துக்கு தம்மை, தம் வாழ்க்கையை தந்துவிடுபவர்கள் கதாபாத்திரங்கள். சந்துருவின் தோஸ்து பிகிலிடம் எல்லாவற்றையும் பந்தயத்தில் பறித்துவிட்டு, டிவி (ரோஜா போல ஒரு மெகாசீரியலின் வசனங்கள் பின்னணியில்) பார்த்துக்கொண்டிருக்கும் 'வில்லன்,' மிகவேகமாகச் செல்ல கட்டமைக்கப்பட்ட "சீட்டா" எனப்படும் பிகிலின் ஆட்டோவைப்பார்த்துவிட்டு ("நம்ம ஆத்தா சிலுக்கு ஸ்மித்தா மாதிரியில்ல இருக்கு"), மீண்டும் பந்தயத்துக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். பிகிலையும் சந்துருவையும் தோற்கடிப்பதைவிட வேகம்செல்லும் ஆட்டோவின் மீதான அவன் காதல் படத்தைப் பின்னர் வழிநடத்துகிறது.
(தொடரும்)

Monday, June 30, 2008

8.10

அதிகாலை எழும் சுசித்ரா
ஒவ்வொரு மணி நேரத்தையும்
மூச்சுவாங்க ஏறுவாள்
8.10
ஹேப்பி மணமஹால்
பேருந்து நிறுத்தத்தில் நின்றால்
அலுவலகம் தொடங்கும்போது
அங்கிருக்கலாம்
ஓர் இரவு
தட்டில் கூட கொஞ்சம் சப்ஜி
வைக்கச்சொன்ன
கணவனை ரெண்டு
கெட்டவார்த்தையில் திட்டினாள்
அப்போது
8.10
எண்களின் பரப்பில்
எட்டுக்கும் இரண்டுக்குமிடையே
மூன்றில் நான்கில்
ஐந்தில்
ஆறில் ஏழில்
அவள் கழுத்தை
நெருங்குகிற
இருகரங்களில்
ஒன்றையாவது உடைக்க
ஆசைப்படுகிறாள் தினம்தினம்.

அவநம்பிக்கையின் பிரதி

பொங்கியது கடல்
கண்ணகியை எடுத்ததால்
என்றான் நண்பன் ஸ்டெல்லா
ப்ரூஸ்
உருகிய
வெல்லப்பாகு நிலத்தில்
ஆற்றாமையின் கரும்பாம்புகள்
எழும்புகின்றன
ஊழி முதல்வன்
உருவம்போல் மெய்கருத்த
ஆழிப்பேரலை
என்றவனும் ப்ரூஸ்
தொங்கும் முன்
ஆழி போல் மின்னி
வலமும் புறமும்
நினைத்திருப்பானா
ஒவ்வொரு
நில
நடுக்கமும்
இப்போது
நெஞ்சில் தெறிக்க
அன்றும்
ப்ரூஸ்
மகிழ்ந்தேலோவை
மறந்தே போனான்.

Sunday, June 29, 2008

மூன்று கவிதைகள்

கடைத்தெருவில் குட்டிச்சீதை

குரங்குப்படைகளும்
சீதையும் லட்சுமணனும்
இல்லாமல்
தகர வில்லோடு
ராமன் வேஷமிட்ட குழந்தையைப்
பார்த்தேன் ஒருநாள்
கடைத்தெருவில்.
நீலநிறத்துக்கும்
அட்டைக் கங்கணத்துக்குமிடையே
சொறிந்துகொண்டிருந்தவனுக்கு
காசு கொடுத்துவிட்டு
சீதையைப் பற்றிக் கேட்டேன்.
அம்மாவோடு முறுக்கு சுற்றிக்கொண்டிருப்பதாகச்
சொன்னான் அவன்.
அதே வழியில் அடுத்த நாள்
சீதை வேஷமும்
அனுமானும் எதிரே.
மட்கிய பாவாடை கமகமத்தவளிடம்
ராமன் எங்கே என்றேன்.
இஸ்கூலுக்குப் போய்விட்டானாம்.
ராவணனை விசாரித்ததும்
தெரியலை
என்றுவிட்டு நகர்ந்தாள்.
குச்சிமிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தது
அனுமான் அப்போது.
சீதை இலங்கையை மறந்தே விட்டாளா
அல்லது
ராவணன் அவர்கள் கதைக்குள்
இன்னும் நுழையவே யில்லையா
என்றெல்லாம் விசாரித்தறிய
வாடா உறுதியோடிருந்தும்
ராவணக் குழந்தையை
இன்றுவரை நான்
பார்க்கவேயில்லை.


********


ஒரு கொள்ளை அன்புக்கும்
சின்னச்சின்ன அன்புகளுக்கும்
வித்தியாசம்
ஒரு மலைமுகட்டிலிருந்தும்
சிலபல உரையாடல்களிலிருந்தும்
குதிப்பதுதான்.

*******


அவா


ஒவ்வொரு கோபத்தையும்
கழற்றி
சலவை செய்து
அலமாரியில் வைத்துவிட வேண்டும்
உடனுக்குடன்.

பிணக்குகளின் மூட்டுகளில்
கால்களாய் பொருந்துபவற்றை
விபத்துகளின் நல்லெண்ணம்
பார்த்துக்கொள்ளட்டும்.


*******

(இந்த மூன்று கவிதைகளும் ”இக்கடல் இச்சுவை” தொகுதியிலிருந்து. காலச்சுவடு வெளியீடு, 2006)

Saturday, June 28, 2008

என்ன பருவம் இது

பூப்பே யில்லாது
போனது வசந்தம்
என்று நீ வருந்தாதே
மனிதர்களுக்காக
என்றுமே இல்லை
பொல்லாத காலம்.
பனிப்பொழுதில் அறிந்தேன் இதை.
பொம்மை
செய்யக் குவித்திட்ட பனியை
அறிவிக்காத சூரியன்
குதித்து உருக்கிவிட்டான்.
வழிப்போக்கர்களுக்கு மட்டும்
பாதியாவது கருணை காட்டுகிறது
பருவம்
வாழ்வைப்போலவே
என்பதால்
குதூகலத்தின் நிரந்திர மாளிகை
எதையும் எழுப்பாதே.
பருவமற்ற பருவத்தில்
வலி தராது
உயிரை வாங்கும்
விபத்து ஒரு மிடறு அருந்த
உன் தண்ணீர் பாட்டில்
எப்போதும் நிரம்பியிருக்கட்டும்.
உனக்குமுன் ஓடட்டும்
உன் கால்சராய்.

ஏன் ஏன்

ஒன்றும் வேண்டாம்
ஊர் அடங்கிவிட்டது
கூண்டில் நின்றுகொண்டே
உறங்குகிறது கிளி.
திரும்பிப் படுக்காத அவளது
படுக்கையின்
இந்தப்பக்கம்
அவள் கடந்துவந்த
பாதை போலும்.
அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளி
கண்ணீரை
நாளை அவளுக்குத் தாரும்.

E.E. Cummings (2)

மனிதனாய் இருப்பதன் பரிமாணங்கள் (9)

சாவது நல்லது ஆனால் சாவு,
கண்ணே,
எனக்குப் பிடிக்காது சாவு
ஒருவேளை சாவு
நல்லதாயிருந்தால்,
ஏனெனில்
எப்போது நீ (யோசிப்பதை நிறுத்திவிட்டு)
அதை உணரத்தொடங்குகிறாயோ,
சாவு அற்புதமாகிறது
ஏன்? ஏனெ
னில் சாதல்
சரியான இயற்கை; சரியாக
அதை உயிர்ப்பில்
வைக்கும்போது (ஆனால்
சாவு நிச்சயமாக
அறிவியல்பூர்வமானது
செயற்கையானது
தீது
சட்டபூர்வமானது)
நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்
சாதலுக்காக
எல்லாம்வல்ல கடவுளே

(மன்னியுங்கள் எங்களை, வாழ்வே, மரணத்தின் பாவமே)

Thursday, June 26, 2008

புஷ்பா சேலையணிந்த முதல்நாள்

கவிதை நீக்கப்படுகிறது.

இதுவும் அது

மறதி சிறு பறவை
(படபடக்கிறது)
அது எடுத்துவந்த
மயிலிறகு
தொலைத்ததல்ல.

மறதி நல்ல ஒப்பனை
(அழகன்களின்)
கண்ணுக்கு அடியில்
அவலத்தின்
ஆரங்களைக்
காண முடியாது.

மறதி அறைக்குள் அறை
காரணமில்லாமல்
பூத்துக்குலங்கும்
(அதற்குள்)
அற்ப ஆயுள்.

மறதி இன்னொரு பெயர்.

Wednesday, June 25, 2008

நடுச்சாமத்தில்

காற்று சிலசமயம்
சூனியக்காரி
..........................சேகரித்த
கபாலங்களிலிருந்து
அவள் எறிவது
வளைந்த நகைப்பை.
இருள் சிலசமயம்
பிச்சியின்
..........................விழிகள்
அவற்றில்
சுரப்பிக்கின்றன
கேளாத சுவைகளை.
படுக்கை சிலசமயம்
..........................வரையப்படாத கடலின்
எழுச்சி இன்னும்
இரைக்குக் காத்திருக்கும்
பளிங்குச்சுறா
ஒரு அரைவட்டம்.
மாத்திரைகள் சிலசமயம்
..........................முளைவிக்கும்
பொறுப்பான மறுநாளில்
யாரும்
பதிலற்ற சூரியனோடு
உரையாடத் தேவையில்லை.

Sunday, June 22, 2008

தோன்றிய போக்கில்

(இது கட்டுரை அல்ல)

முதல்

மொழி ஒழுங்குக்கும் கலாச்சார ஒழுங்குக்கும் இடையே பிரதிபலிப்புத் தொடர்பு இருப்பது தெரிந்ததே. சில சமயம் கலாச்சார ஒழுங்கைக் கலைக்கும் பிரதிகளில் கூட சொற்களின் அதிகாரப் படிவரிசை (hierarchy) செயல்படுகிற விதம் குறித்து யோசித்தேன். குறிப்பாக, நான் விரும்பிப்படிக்கும் நாகார்ஜுனனின் வலைப்பதிவு (www.nagarjunan.blogspot.com) யூரேக்காவின் மொழிபெயர்ப்பில் பதிவிடப்பட்டிருக்கும் ழார் பத்தேயின் "விழியின் கதை." பகுதி ஒன்றிலிருந்து இங்கே:


"முட்டிமறைக்க கறுப்புநிற பட்டு ஸாக்ஸ் அணிந்திருந்தாள். ஆனால் அவள் #?*# வரை என்னால் பார்க்க முடியவில்லை (அல்குல்-யோனி என்பதற்கெல்லாம் மிக அழகான பெயர் இதுதான் என்பதால் ஸிமோனுக்கென இதையே பிரயோகித்தேன்).

...

என்மீது வைத்த விழி வாங்காமல் அவள் ஸ்கர்ட்டுக்கடியில் எரியும் தன் பிருஷ்டங்களை நான் பார்க்க முடியாதபடி, குளிர்ந்த பாலில் அமிழ்த்தியவாறு அமர்ந்தாள்."


அல்குல்-யோனி போன்ற "அழகான" பெயர்களை கதையே விட்டதில் சந்தோஷம். ஆனால் அது என்ன புxx என்று யோசித்தேன். (இப்போது அவரது பதிவில் புxx வேறு புரியாத குறியீடுகளோடு தென்படுகிறது) ஒருவேளை இணையத்திலும் எதிர்கொள்ளக்கூடிய எழுத்துத்தணிக்கை காரணமாக இந்த xx பதிவிடப்பட்டிருக்குமோ என்று நினைக்கிறேன்.

ஆனால், நெருடுவது இன்னொரு வார்த்தை--"பிருஷ்டம்." (என்னவோ, இதைக்கேட்கையில் "கஷ்டம்" என்ற சொல் முந்திக்கொண்டு மனதில் வருகிறது. :) குண்டி என்கிற வார்த்தைக்கும் "பிருஷ்டம்" என்கிற வார்த்தைக்கும்தான் சொற்களின் படிவரிசையில் எத்தனை தூரம்? இலக்கியத்துக்கும் போர்னோவுக்கும் இருக்கும் தூரம் என்று அது தோன்றவில்லை. "பிருஷ்டம்" என்கிற சொல் பேசுபொருளை செவ்வியதாக மாற்றி விடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. குண்டி என்கிற சொல் தந்திருக்கக் கூடிய "கவித்துவம்" அற்ற tangible ஆன உணர்வு ஏன் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்? எனக்கு ப்ரென்ச் தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் நான் பத்தேயைப் படித்தவரை, செவ்வியலுக்கு எதிர்ப்புள்ளியில் அவர் எழுத்து செயல்படுவதாக நான் பார்க்கிறேன்.

நிச்சயமாக நாகார்ஜுனன் இதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார். தெரிந்துகொள்ள ஆவல்.


இரண்டு


போர்னோவுக்கும் போர்னோ இல்லாத இலக்கியத்துக்கும் ஆன வித்தியாசம் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் என் முதல் கேள்வி, போர்னோ இலக்கியமாக, இலக்கியத்தின் ஒரு வகைமாதிரியாக (genre) ஆக இருக்க முடியாதா என்ன? போர்னோ vs. இலக்கியம் என்று எதிர்ப்புள்ளிகளில் கட்டமைப்பதே நவீனத்தின் குரலாக இருக்குமோ? கோயில்களில் பார்க்கும் சிற்பங்களைக் கலையாகவும், அசைபடத்துடனான இன்றைய கதைகளை குப்பையாகவும் ஏன் பார்க்கிறோம்? இக்கேள்வியை மதம்/நிறுவனம்/நம்பிக்கை/அங்கீகாரம் சார்ந்தோ, கொச்சைப்படுத்தியோ நான் கேட்கவில்லை.

எனக்குப் புரிந்தவரை: இந்த வித்தியாசத்தை நிறைய சமயங்களில் நாம் படைப்பாளியின்/எழுதுபவரின் "நோக்கத்தோடு" குழப்பிக்கொண்டு விடுகிறோமோ என்று தோன்றுகிறது. பணம்/வியாபாரத்தை முன்வைத்தால் போர்னோ, அறிவு/கலையுணர்வு ஊட்டுவதாக இருந்தால் கலை என்பதுபோல. இல்லாவிட்டால் வாசிப்பவரின் நோக்கத்தோடு சம்பந்தப்படுத்தியும் குழப்பிக்கொள்கிறோம். நேரம் போக்குவதாக இருந்தால் போர்னோ, நுட்பமான உணர்வைப் பெறுவதற்காக வாசித்தால் கலை, இலக்கியம் என்பதுபோல.

இங்கே பிரதியின் செயல்பாடு என்று ஒன்றை எடுத்துக்கொள்ளலாம். வாசிக்கும்போது கட்டமைக்கப்படுவது பிரதி என்று கொள்வோமானால், இத்தகைய வாசிப்பு "நோக்கம்" என்பதைக் கருத்தில்கொள்ளாமல் செயல்படவேண்டும் என்பது என் எண்ணம். செயல்படமுடியுமா?


மூன்று

மூன்றாவது "ஆணாதிக்கம்" பாலியலைப் பேசும் பிரதியில் செயல்படும் முறை. (என் கவிதையொன்றில், தந்தைமை என்ற சொல்லின் பிரயோகத்தைப் பற்றி, அதற்கும் ஆணாதிக்கத்துக்குமான வேறுபாடு பற்றி என் நண்பர்-வாசகர் ஒருவரோடு நான் விவாதித்திருக்கிறேன், அது பின்னொரு பதிவில்)

ஒரு செய்முறைப் பரிசோதனை. இணையத்தில் ஜ்யோவ்ராம்சுந்தருடைய பதிவின் "காமக்கதைகள் 45(6)" அதன் பின்னூட்டங்களும் படிக்கக்கிடைத்தன. http://jyovramsundar.blogspot.com/

சுவாரசியமான கதை. செறிவான பின்னூட்டங்களில் வைக்கப்பட்ட கருத்துகள் கதையில் "ஆணாதிக்ககக்கூறுகள்," "காமத்தின் அதிகாரம்," "சமூகம் அனுமதிக்கும் போர்னோ/சமூகம் விலக்கிய இலக்கியம்" போன்றவற்றைப் பேசுகின்றன. அந்தக்கதையை வாசிக்கும்போது, பாலியல் அதிகாரம் செயல்படுகிறது என்றே எனக்கும் தோன்றியது. ஆனால் எப்படி? என் வாசிப்போடு ஜ்யோவ்ராம்சுந்தரோ மற்றவர்களோ உடன்பட வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிக்கொண்டு விளையாட்டாக இதை முன்வைக்கிறேன்.

கதையில் முக்கியமான கட்டம் "தெய்வீகக்காதலை" முற்றாக expose செய்யும் "உனக்குத் தங்கத்துலயா செஞ்சிருக்கு, அவ்வளவு கொடுக்க" என்று அதீதன் (என்ன பெயர் இது?) வனஜாவிடம் கூறுமிடம். (பின்னூட்டமிட்டிருக்கும் லக்கிலுக் கூட இந்த இடத்தைக்குறிப்பிட்டிருக்கிறார்.) வனஜா இதைக்கேட்டு அடித்துவிரட்டி விடுகிறாள். ஒருவேளை, கேள்விகேட்கப்பட்ட வனஜா முந்திக்கொண்டு அதீதனைக் கேட்டிருந்தால்: "உனக்குத் தங்கத்துலயா செஞ்சிருக்கு, இந்தப் பணம் கூட வாங்காம நான் உன்கூடப் படுக்க." கதையில் வனஜா தன் ஆட்டத்தை அடித்து ஆடியிருந்தால், கதையின் வாசிப்பு எப்படி மாறியிருக்கும் என்று யோசிக்கிறேன். தங்கத்தில் செய்யப்பட்ட பாலியல் உறுப்புகளின் பொருண்மை சந்தைப்பொருளாதாரத்தோடு அருமையாகப் பொருந்துகிறது.

ஒருவேளை, அதீதன் தங்கம் என்பதற்கு பதிலாக செவ்விலக்கிய கதாபாத்திரம் ஒன்றை வைத்து, உதாரணமாக, வனஜாவிடம் "சத்யவதி மாதிரி உனக்கும் அங்கேயுமா மணக்குது?" என்று கேட்டிருந்தால்?

இது இலக்கியமா, வெறும் "அனுபவ எழுத்தா," கொஞ்சம் பிசகியிருந்தால் போர்னோவகையாக "குறைந்துவிடும்" எழுத்தா.....இக்கேள்விகளுக்கு புறத்தே, வாசித்தபின்னும் விளையாட்டில் ஈடுபடவைத்திருக்கிறது பிரதி என்றுமட்டும் சொல்லுவேன்.

****

Saturday, June 21, 2008

குட்டிப்பன்றியே

புலனுக்குத் தெரியா வெறிநாய்களால்
வேட்டையாடப்பட்டு
குட்டிப்பன்றியாகக் குதறப்படுகிறாய்
என்று சொன்னது பொய்தானே?
நானோ
ஒவ்வொரு நடுஇரவும்
உனக்காகவே ஒரு ஆப்பிளை
கவனக்குறைவாக
உனக்காகவே
கத்தியால் கீறி
சில சொட்டுகளைச்
சிந்துவது தவறாது
கடற்கரை நெடுஞ்சாலையில்
தம்மைப் பிணித்தபடி
செல்லும் காதல்பிணி கொள்ளா
காதலர்கள்
சிரிப்பை அறைகிறார்கள்
முகத்தில்
அந் நேரமும்
ஏன் ஏன்
எதிரே அலங்காரக்கடையின்
வண்ணவிளக்குகளில்
ஒன்றாகத்
தன்னை மாட்டித்திரிகிறது நிலா
அதில் தெரியக்கூடாது
உன் முகம் ஒருபோதும்
என்று
என் விழிப்புலனை
பிய்த்
தனுப்பினால்
நீ
கவனமாகப் பிரித்து
தாயத்தாக
உன் பல்
களில் இடுக்கிக்கொள்
என் குட்டிப்பன்றியே

Monday, June 16, 2008

தூக்கம் விடுபட்ட நாட்குறிப்பில்

மயக்கம் தராத மாலை
இன்றும் வந்தது.
விடியலின் கிரணத்தை
ஸன்ரைஸ் காப்பி விளம்பரத்தில்
அருமையாய் எடுத்திருந்தான்.
இருளின் மின்மினி
எதுவும் சொல்லாமல்
நேற்று பூச்சி கடித்தது.
மடிக்கப்பட்ட
வாசனைமிக்க விரிப்பு
மெத்துமெத்தென்று
தொடைமேல்.
ஸ்வீட்டி
என்னில்
யாரைக்காண்கிறாள்?
நான் காண்கிறேன்
ஸ்வீட்டியின் இமைகளுக்குள்
எல்லோரையும்.
மென்பழமாய் எரிகிற
விடிவிளக்கு
எண்ணூற்றிச் சொச்சத்தை
தின்றுவிட்டது.
மெகாசீரியல் காட்சியில்
வருத்தம்தோய்ந்த
ஒரு கணவன்
உருண்டு படுக்கக்
கற்றுத்தந்தான்
இப்படி இப்படி.

Thursday, June 12, 2008

நல்ல

குருதிகாய்ந்த தம் குதத்தை
இரவுபகல் பாராது
கழுவிவரும் வேசிகளின்
தொழில் அது அல்ல.
காலைமாலை கணக்கின்றி
ஆசைகளின் வியர்வை
ஆறோடி நனைக்கிறது
யாஹ¤ அரட்டை அறைகளை.
நல்ல கணவர்கள்
வெப்காம் பயன்படுத்தமாட்டார்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில பெண்கள்.
நல்ல பெண்மணிகள்
குழந்தையைப் பேணுபவர்கள்
என்று
நம்பிக்கொண்டிருக்கிறார்கள்
இன்னும் சில ஆண்கள்.
நல்ல குழந்தைகள்
கைகளால் எழுதமட்டுமே செய்வார்கள்
என்று
பல ஆண்களும் பெண்களும்.
தொலைக்காட்சித்திரை
அத்தாட்சி வழங்கிய
நல்ல குடும்பத்தின்
ஒரு உறுப்பினர்
கடன்வாங்கப்பட்டவர்
என்று
எய்யப்பட்டு விட்டது
பொறாமைக் கடிதாசி.
எது எப்படியோ
உன் என் மனச்சுவர்களில்
ஒட்டி நகராத பல்லியை
யாரும் இன்னும் நேர்காணவில்லை.

Wednesday, June 11, 2008

வேண்டுதல்

விண்மீன்கள்
அல்லிகளாய் போதவிழும்
இரவில்
எம் தேவமாதாவே
உன் ஒளிர்க்
கன்னமதாய்
அமைதி சிறிதே
காட்டித்தாரும்.
விம்மிவிம்மி நெஞ்சம்
உறைகிற
தன்னுணர்வை
மெழுகுவர்த்திக்கு
இணையாக்கி
உருக்கித்தாரும்.
சுகங்களின் கிளிஞ்சல்கள்
கனவில்
எம் பாதங்களைக்
கிழிக்காதிருக்கட்டும்.
துயரங்களை ஆண்டடக்கிய தாயே
மகனுக்கு உண்டானதை
மகளுக்குத் தாராதேயும்.
இதயமுனதில்
ஏந்திய அம்புகளை
வாரத்தின் நாட்களாக்கிக்கொண்டோம்.
இரவுக்கும் விசனத்தை ஊட்டாதேயும்.
அல்லது
இப்போது
கதவெமதைத் தட்டுவது
ஊழ்வினையல்ல
என்ற உத்திரவாதத்தையாவது தாரும்.

நலம்

முத்தாய்ப்புகள் நிரப்பி வழிகின்றன.
இழப்புக்குத் தயார்செய்யும் விவேகம்
காந்தாரியின் வயிற்றில்
கல்லெனக் கிடக்கும் குழந்தை.
இன்னும் பிறக்கவேயில்லை.
கண்ணாடிகளே சுவரான
காபி ஷாப்பில்
வெகுநேரம் காத்திருந்த
தலைநரைத்துவிட்ட
நட்புக்கு
ஆயுள் இனி அவசியமில்லை
என்று
கோலோடு வந்த குறிக்காரி
சொல்லிவிட்டாள்.
சாமானாக
வாழ்த்து அட்டை
சேர்ந்துவிடுகிறது.
ரோஸ் நிறங்கள்
வடியும் தொண்டையில்
கசப்பு சுவைக்கவில்லை.
நீண்டதொரு
காரிடாரைப் போல
செல்கிறது
ஆரோக்கிய மாலை.

உன்மத்தமே

,
உன் கால் கொலுசாக
என்னை அணியும் முன்
சில வார்த்தை,
ரோஜா நிறத்தின் என் வாந்தியை
முதலில்
நீ நிறுத்துக.
உன் சன்னிதியில்
என் கணனியின் கடவுச்சொல்
யாரையும் காட்டிக்
கொடுக்காதிருக்கட்டும்.
ஒருபோதும்
நினைவூட்டல்களுக்கு
ஆளாகாத
பெயர்களில் ஒன்றாக
சாம்பலின் அடிவாரத்தில்
நான்
உறங்கும் வரமும் கொடு
நீ ஆடி முடித்தபின்.

எதிர்

செல்போன்
ஒளித்திரையில்
உருண்டோடுகிற
நாளைகளின்
அடுத்த வாரங்களின்
மாதங்களின்
அழைப்புகளை
எடுத்துப் பேசிவிட்டேன்.
இனித்து அலுக்கிறது நாவில்
இருவருடங்கள்
கழித்து நடக்கப்போகும்
காதணிவிழா ஒன்றின்
பூந்தித்துகள்.
ஒரு நரைமுடி நீண்டு
இறுகக் கட்டுகிறது
என்
நெஞ்சு நின்றுபோகிறது
நேற்று.

Monday, June 9, 2008

கிளி பத்து: கிறுக்கன்

கவிதை நீக்கப்படுகிறது.

வேறு இனங்கள்

தடுக்கி விழுந்தாயிற்று
தரையானால்தான் என்ன?
ஆயிரம் வேலைகளுக்கு
நடுவிலும்
உன் தாய்
சொட்டுக் கண்ணீராவது
சிந்திக்கொண்டு வரவேண்டும்.
வெகுதூரத்தின்
விண்மீன்களின்
கூட்டம்
கலைந்துவிட்டது
சத்தம்கேட்டு.
கடமைபேணும்
உன் தாயை
ஏன் காணவில்லை இன்னமும்?
என் முலைகள் சொரிகிற
பாலினின்று
பீறிட்டெழுகின்றன
பெரும்புற்றுகள்.
அழுதுகொண்டோடி நீ
வந்தாலும்
விலகியே நடப்பேன்.

விழைகிறேன்

கவிதை நீக்கப்படுகிறது.

Thursday, June 5, 2008

கொஞ்சம் பெரிது

இப்போது செய்துகொண்டிருப்பது: சலிக்காமல் Ph.D ஆய்வேடு எழுதுதல், ஆய்வேடு எழுதுதல், ஆய்வேடு எழுதுதல். உடல்-தன்னிலை தொடர்பு, அம்மை, காலனீய நவீனத்துவம், மாரியம்மன் திருவிழாக்கள்-சரித்திரங்கள், மானுடவியல் மற்றும் மருத்துவ வரலாற்றுப் பிரச்சினைப்பாடுகள் சம்பந்தப்பட்டது ஆய்வு. இருவருடங்களாக கவிதை எழுதும் தருணங்களின் பெரும்பானவற்றை இந்த வேலை சாப்பிட்டுவிடுகிறது. பொதுவாக, எழுதாத நேரத்தில் எல்லாவகையான தமிழ்ப்பாடல்கள் கேட்டல், சமைத்தல், வேலை தேடுதல் (இது பற்றி தனியாக எழுத வேண்டும். American academia-ல் adjunct ஆக இருப்பது கொத்தடிமைக் கொடுமை, அமெரிக்காவின் தலைநகரத்தில் 600 டாலர்கள் மாத வருமானத்தில் சுய இரக்கமின்றி வாழ்வது குறித்து வழிவகைகளை இன்னும் சில காலம் கழித்து என்னால் பகிர்ந்துகொள்ள முடியும்), வாசித்தல்,வகுப்பறையில் கற்பித்தல்-கற்றுக்கொள்ளல் ("ஹிந்து நவீனம்", "உலகின் பெண்தெய்வங்கள்", "சிலப்பதிகாரம்," "பக்தி இலக்கிய மரபுகள்," "பிரபஞ்சம்சார் மதக்கற்பனைகள்"), இன்ன பிற. தேவி மகாத்மியம் தந்த வகுப்பறை அனுபவம் பற்றியும் தனியாக எழுதவேண்டும்.
இதுவரை கடந்து வந்திருப்பவை: வாழ்க்கையில் பதினாறு வருடங்களை அழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கிய அரசு அலுவலகப்பணி அனுபவம் (சாரு நிவேதிதாவும் ஜெயமோகனும் இதுபற்றி எழுதியவை சத்தியமானவை), ஆழமான பல நட்புத்தருணங்கள்-உரையாடல்கள், மறக்கமுடியாத, ஏன் 'பகுத்தறிவால்' விளங்கிக்கொள்ள முடியாத ஆய்வுக் களப்பணி அனுபவங்கள், மகளிர் சுயசேமிப்புக்குழுக்களில் கிடைத்த பட்டறிவுப் பாடங்கள், தமிழ் கூத்து, நாடக நடிகர்களோடான நெகிழ்ச்சியான சிநேகிதங்கள், இன்னமும் நினைத்து மகிழும் நவீன நாடக ஒத்திகை நாட்கள் மற்றும் நிகழ்த்துதல்கள், சிலபல அபத்தப் பொழுதுகள், மற்றும் பலரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய துரோகங்கள், அவமானங்கள், பெருமிதங்கள், காதல்கள், உணர்ச்சிப்பெருக்குகள், முட்டாள்தனங்கள் எல்லாமும்.

Monday, May 12, 2008

பகிர்தல்: காத்திருத்தல் எனும்...

காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்


ஏற்கெனவே வெளிவந்த ஒரு கட்டுரை.

வாசிக்காத நண்பர்களுக்காக இந்தச் சுட்டி:

http://www.kalachuvadu.com/issue-83/special06.asp

Saturday, May 10, 2008

கிளி எட்டு: அன்பிலார் எல்லாம்


அன்பிலார் எல்லாம்


இன்னமும் நீ மறக்கவில்லை
இவ்விரவு
தீக்கங்கின்
கரங்களிலிருந்து நழுவவில்லை
சின்னக் கனியொன்றை
பசித்த
என் கிளிக்கு
தின்னத் தா
அது
கொல்லும்முன்.

கிளி ஏழு: படையல்

படையல்


வருஷம் இருநூறு இரவுகள்
திரௌபதி வேஷம் கட்டுவதால்
பெண்ணாகவும்
தான் ஆனதாக
ஆட்டம் தொடங்குமுன்
அல்லிப்பூ சொல்லிக்கொண்டிருந்தான்.
அவளின்
விரிகூந்தலென
நீண்டதொரு கோலை
துச்சன் இழுத்துவந்த
நடுயாமத்தில்
செங்கண் வரிகள்
ஆயிரமாயிரம் ஆகின
அவள் விழிகள்.
பிரளயச் சுழலுற்றன
ஆயிரமாயிரம் அவள் கால்கள்.
சாபங்களில் புடைத்தன
ஆயிரமாயிரம் அவள் வாய்கள்.
பதறிய கிளியின் ஆட்டம்
பாழ்மணி சிதறியது.
சாவுகளை அறிவித்துச்
சமைந்த தெய்வத்தின்
களைப்பு தீர
முன்வைக்கப்பட்டது
ஒரு க்ளாஸ் டீ.
அவள் வியர்வையின் வண்ணப்
பொடி துளி சொட்டியது.
நான் பார்த்ததை
பார்த்த
அல்லிப்பூ
கலைந்து சிரித்தான்
ஆணைப் போலவே
கூச்சத்தோடு.

Tuesday, May 6, 2008

கிளி ஆறு

தடயம்


தளிர்ப்பச்சை நிறத்தில் முகம்
எலுமிச்சை நிறத்தில் வயிறு
கண்ணாடியொளிரும் முதுகு
சிறகுகள் கடல் நீலவண்ணம்
கூர்மூக்கோ பழுத்த மாலைச்சூரியனின் கீற்று
நான்
கொலைகள் செய்ய அஞ்சாத
ஊர்மேயும் ஒருவனின்
ஆசைநாயகியின் வளர்ப்பு.
அவளது உயிர்.
அடிமை.
அவன் இல்லாத போது
அவனைப் போல
அவள் இல்லாத போது
அவளைப் போல
பேச அவர்கள் கேட்பார்கள்.
என் வெகுநீள வாலின் நுனியின் மஞ்சள்
வேறொரு நகரத்தில்
ஒளியும் அன்பும் மேன்மையுற்ற
அறையொன்றில்
அலைபாய்ந்து திரும்புகிறது இப்போதெல்லாம்.
குரலெழுப்புவதை
மறக்கச் சொல்லும்
என் எசமானிக்கு
நான் விசுவாசமாக இருக்கவேண்டும்.
இந்த என் ஆசை
பச்சோந்தியாக
நிறம் கொள்ளாதபடிக்கும்.

Sunday, May 4, 2008

அறிவிப்பு

பதிவுகளை வாசித்து எழுதும் நண்பர்களுக்கு நன்றி. மின் அஞ்சல் அனுப்பும் நண்பர்கள் பின்னூட்டங்களாக அக்கடிதங்களை நான் பதிவு செய்யலாமா என்பதைத் தெரிவியுங்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் என் Phd dissertation தொடர்பான தேர்வுகள் இருப்பதால் புதிய பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

மே மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் இந்தியா-சென்னை வருகிறேன். இந்த விடுமுறையிலாவது மூன்று வருடங்களாக நான் நினைத்து ஆனால் செய்ய இயலாதுபோன ஒன்றைச் செய்யலாம் என்று இருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு பேராசிரியர் டேவிட் ஷ¤ல்மன் அவர்களை மேடிஸனின் ஒரு கருத்தரங்கில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தேன். (The hungry god : Hindu tales of filicide and devotion, The king and the clown in South Indian myth and poetry, Tamil temple myths : sacrifice and divine marriage in the South Indian Saiva tradition புத்தகங்களை எழுதியவர்). சங்க இலக்கியம், பிரபந்தம், திருவாசகம், தமிழ் நவீன இலக்கியம் என்றெல்லாம் விரவிய நீண்ட உரையாடலின் ஒரு கட்டத்தில் கம்பராமாயணம் பற்றிப் பேச்சு வந்தது. கம்பராமாயணச் செய்யுளிலிருந்து இரு வரிகளைச் சொன்னவர் என்னிடம் கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். படிக்கவில்லை என்று வெட்கிச் சொன்னேன். எப்படி பெருந்தேவி, கம்பராமாயணம் படிக்காமல் இருக்கிறீர்கள் என்று உரிமையோடு கோபித்துக்கொண்டார். கம்பராமாயணத்தின் அருமை பெருமைகளை விரிவாக எடுத்துச்சொல்லவும் செய்தார்.

அந்தவருட விடுமுறையில் சென்னைக்கு வந்தபோதும் கம்பராமாயணம் என்னைத்தொடர்ந்தது. என் நண்பன் கம்பராமாயணத் தொகுதிகளை என் வீட்டுக்கு அனுப்பியிருந்தான். ஆனால், படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. (அல்லது முனைப்பு போதவில்லையோ?)

இந்த மூன்று மாத (ஜூன் - ஆகஸ்ட்) அவகாசத்தில், ஆய்வேடு எழுதுகிற வேலைக்கு நடுவிலும் கம்பராமாயண வாசிப்பைத் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நண்பர்கள் யாராவது என்னோடு கம்பராமாயணம் வாசிக்கத் தயாராக இருந்தால் என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். முதல் இரண்டு தொகுதிகளோடாவது அறிமுகம் ஆகிவிடவேண்டும் என்பது என் அவா. மின் அஞ்சல் முகவரி: sperundevi@gmail.com

Saturday, May 3, 2008

ஆண்டாள்

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி கவிதை:

உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே.


சிலப்பதிகாரத்தின் பரிச்சயம் இல்லாமல் ஆண்டாள் இதை எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். மாதவியோடு சென்றபோது கண்ணகி உளளோ இலளோ என்ற நினைப்பில்லாமல் இருந்தவன் கோவலன். திரும்ப வந்தவுடன் "ஊழ்வினை உருத்தி" கண்ணகியோடு மதுரை சென்று கொலையுறுகிறான். பிய்த்தெறிந்த முலையிலிருந்து எழும்பிய தீ மதுரையை எரிக்கிறது.

கோவர்த்தனின் பிரிவில் தாபமுறும் ஆண்டாளின் கவிதைசொல்லியும் முலையைப் பிய்த்தெறியப்போவதாகச் சொல்கிறாள். கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கியது கோகுலத்தில். அவனைப்பிரிந்த கோபியரின் தாபமும் கவிதைசொல்லியின் தாபமும் ஒன்றே போல.

கோவலனின் பிரிவு தந்த துயரத்தின் கண்ணீர் கண்ணகியின் முலையை வெந்தழலாக மாற்றுகிறது. ஆண்டாளின் கவிதையிலோ, கோவர்த்தனின் நெஞ்சோடு முலை சேர, அது தாபத்தின் அழலை அணைக்கக்கூடிய நீராக மாறுகிறது.

சிலப்பதிகாரத்தில் பொது வெளியில் (public space) அறமெனும் தீ அழலாகக் காட்சியாகிறது. ஆண்டாளின் கவிதையில், பிரத்யேக வெளியில் (private space) சேரக்கிடைக்க, கொழுந்துவிட்ட காதலின் அழல் அமைதிபடுகிறது.

கோவர்த்தனனுக்கும் கோவலன் என்றொரு பெயர் உண்டு என்று நினைக்கிறேன்: "கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயனை, என் உள்ளம் கவர்ந்தானை" என்ற பாசுரம் நினைவில் வருகிறது.

வாசிக்க வாசிக்க இன்பம் தருகிறது ஆண்டாள் கவிதை.

Friday, May 2, 2008

கிளி ஐந்து

அபாயம்


கண்ணாடிச் சிதறல்கள்.
பிம்பத்தைக்
கொத்திப் பறந்தது கிளி.
வெள்ளை நிர்மலம்
பரவும்
பேரமைதி முகம்.
இரைபட்ட விழிகளில்
துடிக்கிறது
ஒன்று மட்டும்.
காலில் கீறிக்கொள்ளாது
கவனமாய் வா.

Wednesday, April 30, 2008

வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி மூன்று)

(பகுதி இரண்டு பகுதி ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கிறது.)

பால்விழைவு கதையில் தனித்து வருவதில்லை. வாஸவேச்வரத் தலத்தின் புராணம் பால்விழைவை செழுமைப்படுத்தும் நீரோட்டமாக கூடவே வருகிறது. நாவலுடைய அங்கங்களின் தலைப்பைப் பாருங்கள்: பிரம்மதேவன் விளையாட்டு, இந்திரன் தாபம், மாண்டவர் சாபம். புராணத்தால் வார்க்கப்பட்ட, வளம்பெற்ற பால்விழைவு ஆர்ப்பரிக்கும் நாவலில், சமுதாயக்கனவுகள் தேநீர்க்கோப்பைப்புயலாகவும் கேலிச்சித்திரமாகவும் அன்றி வேறெப்படி இடம்பெறமுடியும்? புராண உரை கிளர்த்திய பால் விழைவில் தொடங்கும் கதைமொழி, அதே கிளர்ச்சியில் முடியவும் செய்கிறது. பார்க்கப்போனால், இக்கனவுகளின் விவரணைகளெனும் திரைக்குப்பின்னே கதையாடல் பால்விழைவு சார்ந்த ஊடாட்டங்களை, அலைக்குறுதல்களை நிகழ்த்துவதாகவே தெரிகிறது. கிருத்திகா என்கிற மனித ஜீவி பெண்ணாக இருப்பதாலும் 1960-களில் எழுதப்பட்ட நாவல் என்பதாலும், வாஸவேச்வரத்தாரின் "முறைகளைப்" போல, சிலபல இலக்கிய அல்லது ஜீவித "முறைகளுக்கு" உட்பட்டு இப்படியொரு எழுத்துப்பாணியை அவர் கையாண்டிருக்கலாம்.


ஆனால் இங்கே என் அக்கறைகள் திரைக்குப் பின் நடக்கும் பால்விழைவின் நுணுக்கமான சாகசங்களைப் பற்றியவை. நாவலில் ரோகிணி மாத்திரமல்ல, வேறு பெண்களும் ஆண்களை வசப்படுத்தியவர்களாக உலவுகிறார்கள். தன் கணவனை வக்கில்லாதவன் என்று தன் உடல் இறுக்கத்தினால் அறிவிக்கமுடிகிறது விச்சுவால். சமூக உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் பங்கேற்காத அவனுள் குற்ற உணர்வையும் கொலைவெறியையும் தூண்டமுடிகிறது. அதேபோல, பால்விழைவில் சின்னதொரு பொறாமையை, சந்தேகத்தை தூண்டிவிட்டு, திருமணத்துக்கான உத்தரவாதத்தை பப்புவிடமிருந்து பெறமுடிகிறது கோமுவால். மனைவி தங்கத்தின் வனப்பின் ஆட்படும் சுந்தாவின் மயக்கத்திளைப்பு அவன் மருத்துவக்கடமையை மறக்கடிக்கிறது. நாவல் முழுதும் விரவிக்கிடக்கும் இத்தகைய பால்விழைவு விளையாட்டுகளின் வழியாக, பெண்பால் தன்னிலையின் (feminine sexed-gendered subjectivity) உச்சாடனமாய் ரோகிணியின் பாத்திரம் நிறுவப்படுகிறது.


நாவலின் மற்ற பெண்களைப்போலன்றி, பால்விழைவை விளையாட்டாக மட்டுமோ உடனடியான தாயங்களுக்கோ ரோகிணி உபயோகிப்பதில்லை. தன்னழகை முன்நிறுத்தி, குடும்பக்களத்தை ஆளக்கூடிய பெண்பால் தன்னிலையாகத் தன்னை அவள் அங்கீகரிக்கக்கோருகிறாள். "உன் ஆக்ஞை என் விருப்பம்" என்று முழுக்க கணவன் தன்னை அவளிடம் "ஒப்படைத்துவிட" வேண்டும் என்று விரும்புகிறாள். ரோகிணிக்கும் அவள் கணவனுக்குமிடையே நடக்கும் பாலியல் "துவந்த யுத்தத்தில்" "அவளை அடைக்கலமென்று அடைந்தால் தான் பூரண மனச்சாந்தியுண்டு" என்று அவனுக்கும் தெரிகிறது. ஆனால், அந்த அறிவைப் புறந்தள்ளுகிறது உறவில் ஆணாக இருக்கும் அவன் இடம். சமூகத்தில் அவன் பெற்றிருக்கும் கௌரவமான இடத்தை அச்சுறுத்தி, அவன் இறுமாப்பை தகர்த்து அவள் வெற்றிகொண்ட பிறகு, அவனது பாத்திரம் கதாயாடலுக்கு தேவைப்படுவதில்லை, உடனேயே அவன் கொல்லப்படுகிறான். பெண்பால் தன்னிலையின் அதிகார மறுப்பு கதையாடலில் இவ்வாறு களையப்படுகிறது.


ரோகிணியின் கணவனின் கொலையில், பெண்பால் தன்னிலையின் ஏகபோக ஸ்தாபிதம் கதையாடலின் நாடகீய உச்சத்தோடு இயைகிறது. இந்த இயைதல் நிகழ்த்தப்படுமுன் பொதுவுடைமை உள்ளிட்ட கனவுகள் திரையாகக்காட்டப்பெற்று, பின்னர் விலக்கப்படுகின்றன. பெண்ணுடல்சார் பால்விழைவை மையப்படுத்துகிற புராணத்திலிருந்து உயிர்ச்சத்தைப்பெறுகிற நாவல், சம்பிரதாய குடும்ப-அரசியல் களத்தைச் சதுரங்கப்பலகையாக மாற்றிவிடுகிறது. பெண்பால் தன்னிலையே இந்தச் சதுரங்க ஆட்டத்தின் மையம். இப்படியொரு வாசிப்பின் அடிப்படையில், வாஸவேச்வரம் நாவல் நவீன இலக்கியமாக அடையாளம் பெற்றிருப்பதற்கு ஒரு புது அர்த்தத்தை நாம் கொடுக்கமுடியும். பால்விழைவைப் பிடிமானமாகப் பற்றி, மாற்று அதிகாரத்துக்கான உரிமைகோரும் பெண்பால் தன்னிலை தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும் மொழிப்பரப்பாக நாவலை இவ்வாறு வாசிக்கும்போது, நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை பெண்ணியப் பிரதியாக நம்மால் மாற்றி எழுதமுடியும். தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை பெண்தன்னிலைகளின் வரலாறாக மீட்டுருவாக்கம் செய்யவும் இவ்வாசிப்பு பயன்படும். சில சந்தேகங்கள் வரலாம். நாவலில் மாற்றுப்பாலியலுக்கு (heterosexuality) தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், குடும்பச் சதுரங்கத்தில் மாத்திரமே கவனம் குவிக்கும் பெண்கள் போன்றவை பெண்ணிய வாசிப்புக்குத் தடைகள்போலத் தோன்றலாம். ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த நாவல் இது என்பதை மனதில் கொள்ளும்போது குறைபாடுகளை ஒதுக்கிவைக்க முடியும். முதல் புள்ளிகளிலேயே முழுக்கோலம் உருவாக முடியாதுதானே?


*****

Tuesday, April 29, 2008

E.E. Cummings in Tamil (poem 1)

உணரட்டுமா என்றான் அவன்


(உணரட்டுமா என்றான் அவன்
எவ்வளவு என்றாள் அவள்
நிறைய என்றான் அவன்)
ஏன் கூடாது என்றாள் அவள்

(வாயேன் என்றான் அவன்
ரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்
எது ரொம்ப என்றான் அவன்
நீ இருக்குமிடம் என்றாள் அவள்)

இருக்கட்டுமா என்றான் அவன்
(எப்படி என்றாள் அவள்
இதைப்போலத்தான் என்றான் அவன்
நீ முத்தமிட்டால் என்றாள் அவள்

நகரட்டுமா என்றான் அவன்
இது காதலேதான் என்றாள் அவள்)
நீ விரும்பினால்தான் என்றான் அவன்
(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்

என்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்
ஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்
இப்போதே என்றான் அவன்)
ஒ..ஓ என்றாள் அவள்

(டிப்...டாப்...இது அவன்
நின்றுவிடாதே இது அவள்
இல்லை இது அவன்)
மெதுவாக இது அவள்

(வர...வா? என்றான் அவன்
உம்...ம் என்றாள் அவள்
அருமையடி நீ என்றான் அவன்
என்னுடையவன் நீ என்றாள் அவள்)

Monday, April 28, 2008

கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி ஒன்று), (பகுதி இரண்டு)

(காலச்சுவடு செவ்விய நாவல்கள் வரிசையில் வெளிவந்திருக்கும் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலுக்கு எழுதிய முன்னுரை)

வாஸவேச்வரம்: பெண்பால் தன்னிலையின் முதல் புள்ளிகள்

கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலின் முதல்பதிப்பு 1966-ல் டால்டன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் இரண்டாம் பதிப்பு 1991-ல் நூல் அகம் வெளியீடாக வந்தது. காலச்சுவடு கொண்டு வரும் 2007 வருடத்தின் க்ளாசிக் வரிசையின் நாவலின் இந்தப் பதிப்பு மூன்றாவது. முதல் பதிப்புக்கும் மூன்றாம் பதிப்புக்குமான இடைபட்ட நாற்பது வருடங்களின் நவீனத் தமிழின் விவாதக்களம் மார்க்ஸியம், அமைப்பியல், பின்-நவீனத்துவம், பெண்ணியம் போன்ற பல்வேறு இலக்கியப்போக்குகளின், கோட்பாடுகளின், பயிற்சிகளின் தூண்டுதல்களாலும் மோதல்களாலும் இடையறாது உருவாகியவண்ணம் இருந்திருக்கிறது. இந்த விவாதக்களத்தில் கிருத்திகாவின் நாவல், பின்வந்த நாட்களின் மறதியால் அல்லது கருத்தியல்களின் மோதலால் அழிபட்டிருக்கக்கூடிய ஒரு கோடாகக் கூட இடம்பெறவில்லை. ஆச்சரியம் தரும் இப்பின்னணியில் நவீன இலக்கிய விவாதக்களத்தில் வாஸவேச்வரம் குறித்த சிறு கீறலொன்றை இந்த முன்னுரையின் நகம்பற்றித் தீட்ட நினைக்கிறேன்.


வாஸவேச்வரம் ஒரு கற்பனைப்புவியியல். கிருத்திகாவின் வார்த்தைகளில், "இந்தியாவின் தென்கோடியில்" அவர் "சென்றுகண்ட கிராமங்கள் பற்றிய நினைவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கிராமம்." அவர் கண்ட மூன்று கிராமங்கள் நாவலின் கச்சாப்பொருள். நாவலின் காலகட்டம் 1930-கள். இக்கிராமங்களில் சுதந்திரப்போராட்டம், பொதுவுடைமைப் புரட்சிக் கருத்தியல் போன்றவற்றின் வீச்சு கிருத்திகா சுட்டிச்செல்வதுபோல திண்ணைப்பேச்சுகளில் ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடுவன. நாவல் கிராமங்கள் தந்த ஞாபகங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டிருப்பதால், திண்ணைப்பேச்சுகளின் பிரதிபலிப்பே போல நாவலின் கதையாடலும் காலட்சேப உரைப்புள்ளியில் தொடங்கி காலட்சேப உரைப்புள்ளியில் முடிகிறது. பிராமணக் குழுமம் பற்றி கவனம் குவிக்கத் தோதான துவக்கமும் முத்தாய்ப்பும் கொண்ட வட்டவடிவம் இது. ஆனாலும் கதையாடலில் பிராமணக்குழுமம் தனக்கு முற்றூட்டாகக் கருதிக்கொள்கிற இவ்வட்டத்தைக் கலைப்பதற்கான சிலபல முயற்சிகளும் நடைபெறுகின்றன. கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நிலவுடைமைச் சமூகமுறைகளுக்கு எதிரான சில கேள்விகளும் மறுப்புகளூம் கோஷங்களும் தூண்டப்படுகின்றன, அடங்குகின்றன.


நாவல் இம்முயற்சிகளை கைகொள்ளத்துடிக்கும் கனவுகளின் நிறங்களோடு தன்னை வரைகிறது. "தூங்குமூஞ்சி ஊரை" எழுப்பி, சம்பிரதாய முறைகள் என்கிற பெயரில் நடக்கும் "புளுகுகளை" புரட்டிப்போட்டு, பொதுவுடைமைச்சமூகம் மற்றும் வாழ்க்கை நவீனத்தைக் சுவீகரிக்க விரும்பும் கனவுகள் அவை. கெட்டித்துப்போன கலாச்சார முறைகளுக்கு எதிரான திசைவேகமும் ஆற்றலும் கொண்டவை. இந்த திசைவேகத்தையும் ஆற்றலையும் கனவுகள் கதையாடலில் எப்படி பெறுகின்றன? கதையில் கனவுகள் உத்வேகத்தோடு பேசப்பட்டாலும், அவற்றிலிருந்து எழும்பும், உருக்கொள்ளூம் கேள்விகளும் மறுப்புகளும் கோஷங்களும் எழும்பியகணமே கதைப்போக்கில் அடங்கிவிடுவதை எப்படி புரிந்துகொள்ளலாம்? வாஸவேச்வரக் கோயில் தேர் இழுப்பில் சாதீய மேலாண்மைக்கு எதிராகச் சாத்தியப்பட்டிருக்கும் கலகம் கூட ஏன் ஒரு மந்தித்த தேநீர்க்கோப்பைப் புயலாக, கலகத்தின் கேலிச்சித்திரமாக, சிறு சண்டையாக மட்டுமே வடிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது? சமூகக்கனவுகளின் வண்ணங்கள் நிதரிசன ஓவியங்களாக உருப்பெறாது நின்றுபோவது எதனால்?


கனவுகளைப்பற்றிப் பேசும் போது நாவலின் இரண்டாம் பதிப்பில் நாகார்ஜுனனின் உயிரோட்டமான பின்னுரை பற்றிச் சொல்லவேண்டும். "கனவைக் கதைசொல்லி கட்டவிழ்க்கும்" நாவலின் பாணியைச் சுட்டும் அவர் பின்னுரை, கட்டவிழ்த்தலை "விழிப்புடன்" தொழிற்படுத்தும் சூத்ரதாரியின் குரலை அடையாளம் காட்டுகிறது. நாவலின் சூத்ரதாரிக் குரலுக்கும் கிருத்திகா என்கிற மனிதஜீவிக்குமான உறவை, "கலாச்சார ரீதியாகவும்" "அரசியல் ரீதியாகவும்" அலசுகின்ற அவர் எழுத்து, "கனவுகளைப் பாதுகாத்துக்கொண்டே" வட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் சூத்ரதாரி பேசியாக வேண்டிய கட்டாயத்தை முன்நிறுத்துகிறது, கேள்விக்குட்படுத்துகிறது.

இதற்கு மாறாக நாவலின் பரப்புள்ளேயே கனவுகளை வைத்து, முன்னர் நான் எழுப்பிய கேள்விகளின் சரடுகளைத் தொடர நான் நினைக்கிறேன். இவ்வாறு செய்வதால், வாஸவேச்வரத்தில் கனவுகளுக்கு இணையாக பங்கெடுக்கும் இன்னொன்று நமக்குப் புலப்படுகிறது. அது ஈசன் கோயிலை மையமாகவும் மாண்டவர் சாபத்தை புராண வேராகவும் கொண்டு இயங்கும் பால்விழைவு (sexual desire). நாவலின் சொல்லாடலில் பால்விழைவின் பரிமாணங்களும் பாய்ச்சலும் வலிமையானவை. வாஸவேச்வரத்தின் வாழ்வியல் சம்பிரதாயங்களை, "முறைகளை" எளிதாகக் கவிழ்த்துவிடுவனவாக, பொதுவுடைமை மற்றும் சமத்துவ சமுதாய நவீனத்தை இலக்காகக் கொண்ட கனவுகளை புரட்டிப்போடக் கூடியனவாக, கனவுகாண்பவரையும் அடக்கிவைப்பனவாக காட்டப்படுகின்றன அவை. மிக முக்கியமாக, வாஸவேச்வரக் கதைவிளையாட்டின் போக்குகளை தீர்மானிக்கக்கூடிய பெண்-பாலியல்களை வாசகர்முன் நிறுத்தவும் செய்கின்றன. பால்விழைவின் த்வனி இந்நாவலின் சிறப்பு. அதுவே இங்கு என் எழுத்தின் பொருளாகவும் அமைகிறது.

நாவலின் சிலகட்டங்களைப் பார்ப்போம். சமூகமாற்றத்தைக் கனாக்காணும் முக்கிய நாயகன் பிச்சாண்டி. டாக்டர் சுந்தாவின் பாரம்பரிய நலவாழ்வுப் பிரச்சாரத்தை எள்ளி அக்காலகட்டத்தில் புரட்சியாக அர்த்தப்படுத்தப்பட்ட புதிய குடும்பக்கட்டுப்பாட்டு முறையை முன்வைப்பவன். கண்ணியமிக்க சமதர்ம சமவாழ்வை யாவரும் பெற துடிப்பவன். சம்பிரதாய முறைகளை குலுக்கிப்போட்டுவிட பஞ்சாயத்துத் தேர்தலில் குதிப்பவன். ஆனால், கதாநாயகி ரோகிணியின் முகத்தைக் கண்டவுடன், அவன் கனவுகள் அவனுக்கே பொருட்டாவதில்லை. "உன் மனசு நோக ஒண்ணும் செய்யமாட்டேன். வேண்டாமுன்னு சொல்லு. தேர்தல் சீட்டை இப்பொவே வாபீஸ் பண்ணிப்பிட்டு எங்கேயாவது மறைஞ்சு போயிடறேன்" என்றுதான் கூறமுடிகிறது. பிடித்த பெண்ணின் ஒரு முகக்குறிப்பில் அல்லது கண்ணசைப்பில் மறைந்துபோகிறதாக நாவலின் சமுதாயக்கனவு கோடிகாட்டப்படும்போது, அக்கனவின் ஆற்றுப்போக்குகளையும் (orientations) அக்கறைகளையும் என்னவென்று நாம் மனதில்கொள்வது? பிச்சாண்டிக்கு நேரெதிர்ப்புள்ளியில், ரோகிணியின் அழகைக் கண்டு அஞ்சி, தற்காக்கும் முயற்சியில் தொடர்ந்து அவளைச் சொற்துன்புறுத்துகிறார் அவள் கணவர் சந்திரசேகரய்யர். ரோகிணியின் ஆணவம் என அவர் அர்த்தப்படுத்தும் அவள் அழகுதான், தேர்தலில் போட்டியிடுதல் உட்பட பிடிவாதங்களுக்குச் சொந்தக்காரராக, அவளோடு இணங்க மறுப்பவராக அவரை ஆக்குகிறது. கடைசியில், சந்திரசேகரய்யர் கொலைபட பிச்சாண்டி கொலைகாரனாக புரிந்துகொள்ளப்படுவதும் பெரியபாட்டா போன்ற பெரியமனிதர்களின் 'பெருந்தன்மை,' 'தீரம்', 'சமூகக்கடமை' போன்றவை கதையில் மொழியப்படுவதும்கூட, ரோகிணியின் ஆகர்ஷணத்தில் ஊரைவிட்டுப்போகுமுன் அவளைச் சந்திக்கப் பிச்சாண்டி வருவதால் நேர்பவை. கதைப்போக்கைத் தீர்மானிப்பது கனவுகளைக் காட்டிலும் பெண்ணுடல்சார் பால்விழைவு என்பதற்கு இக்காட்சிகள் சான்று.

Sunday, April 27, 2008

கொஞ்சம் பொறு

கொஞ்சம் பொறு


சுருதிகூட்டி விடுகிறேன்.
வாசிப்பு தொடங்க
குறைபொழுதுதான்.
அதற்குமுன்
அறுத்த விரல்களை
எண்ணிவைக்க வேண்டும்
ஓரம்.
இசைக்கருவி எனது
பிரத்யேகமானது.
விரல்மூட்டுகளால்
இயக்கப்படுவதும்.

Saturday, April 26, 2008

தனி-யின் பாலை

தனி-யின் பாலை


நேற்றைய நானுக்கும்
இன்றைய நானுக்குமாக
அரவுப்பாதை.
கால்கள் தப்ப
எண்ணம் கிறுகிறுக்க
இப்பக்கம் அப்பக்கம்
பரிதவித்து
நினைவு நழுவையிலே
ஆத்மாநாமின் கவிதையின்
சாதம் உண்டு
கொழுத்த பித்ருகாகம்
"இல்லை இல்லை
நான் என்ற நீ"
என்றுகதறிக் கரைந்து
அரவுப்பாதையைக்
கொத்திச்சென்றது.
மிச்சமில்லாத
இடத்தில்
நின்ற ஒரு நான்
நாளை.

கிளிக்கவிதைகள்: கிளி ஒன்று

புனைவு

கிளியொன்று மேல்நெற்றியானபோது
பச்சைவண்ணம்
என் முகம் கொண்டது.

கிளியின் மூக்கு எனதானபோது
சுவைக்காமலேயே கனிருசி அறிய
நான் கற்றேன்.

கிளியுடல் மென்மை கிட்டி
பட்டுகளின் அடுக்கானதில்
என்னில் நானே மையலுற்றேன்.

கிளியின் இறக்கைகள்
கொண்ட என் காதுகள்
காற்றுவசத்தில்
வேண்டிய திசையெல்லாம்
வரைந்து தீர்த்தன.

கிளியோடான என் பேச்சில்
நீ நீ
அல்லது
நான் நான்
தான்.
பேதமே நேராத
முதல் உரையாடலில் அகமகிழ்ந்தேன்.

கிளி நடை பயின்றபின்
ஆண் நடையை நான் மறந்தேவிட்டதாக
குற்றஞ்சாட்டினவர் பலர்.

பகுதிபகுதியாய் உடல்கள் மாறி
பின் கிளியில் என்னுயிர் தங்க
என்னுடலைத் துவேஷித்த கிளி
கிணற்றில் விழுந்து
உடல்துறந்ததாகக் கேள்வி.

கிணற்றைச் சுற்றிச் சுற்றி
"ஆயுசு உனக்கு எண்பத்தாறு"
என்று கீச்சிடுகிறது கிளி தினமும்.
சோசியக்காரன் சிறகை வெட்ட மறந்தானென்று
சொல்லிவருகின்றனர்
எங்கள் ஊரார்.