Saturday, October 2, 2010

ஒன்று முப்பத்தாறு காலை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (10)

சிலசமயம் சிரித்துக்கொள்வேன் நினைக்கும்போது
உதாரணமாக
தட்டச்சுப்பொறியின் முன்னால் செலின்
அல்லது தஸ்தேய்வ்ஸ்கி
அல்லது ஹேம்சன்
கண்கள், காதுகள், பாதங்களோடு சாதாரண ஆண்கள்
தலையில் முடியிருக்கும் சாதாரண ஆண்கள்
அங்கே உட்கார்ந்து தட்டச்சுகிறார்கள்
வாழ்க்கையோடு சிக்கல்கள் இருக்கையில்
குழம்பி கிட்டத்தட்ட கிறுக்குத்தனமான நிலையில்.

தஸ்தேய்வ்ஸ்கி எழுந்திருக்கிறார்
பொறியிலிருந்து நகர்ந்து செல்கிறார் ஒன்னுக்கடிக்க.
திரும்பி வருகிறார்
ஒரு கோப்பை பாலைக் குடிக்கிறார்
சூதாட்ட விடுதியையும்
ரூலெட் சக்கரத்தையும் பற்றி நினைக்கிறார்.

செலின் நிறுத்துகிறார், எழுந்திருக்கிறார், நடக்கிறார்
சன்னலை நோக்கி, வெளியே பார்க்கிறார், நினைக்கிறார்
என் கடைசி நோயாளி இறந்துவிட்டான், இனி நான் அங்கே
ஒருதரமும் பார்க்கப் போகவேண்டியதில்லை என்று.
அவரைக் கடைசியாக நான் பார்த்தபோது
டாக்டரிடம் கட்டணம் கட்டிக்கொண்டிருந்தார்.
கட்டணங்களைக் கட்டாதவர்களே
வாழ்ந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
செலின் திரும்பி நடக்கிறார், அமர்கிறார்
பொறியின் முன்னால், ஒரு இரு நிமிடங்களுக்குச்
சிலையாகிறார்
பிறகு தட்டச்சத் துவங்குகிறார்.

ஹேம்சன் தட்டச்சுப்பொறிக்கருகே நின்றபடி நினைக்கிறார்,
நான் எழுதுபவற்றையெல்லாம் அவர்கள்
நம்புவார்களா என்ன?
அமர்கிறார், தட்டச்சத் துவங்குகிறார்,
எழுத்தாளரின் தடை என்றால் என்னவென்றே தெரியாது அவருக்கு
பிரவாகம் சும்மா பெட்டை-நாயின்-மகன்
சே! பிரம்மாண்டம்
சூரியனுக்குக் கிட்டே
அடித்துத் தள்ளுகிறார்.

நானும் சிரிக்கிறேன்
சப்தமின்றி
இச்சுவர்களுக்குள் முன்னும் பின்னும் நடந்து
இந்த மஞ்சளும் நீலமுமான அழுக்கான சுவர்கள்
என் வெள்ளைப்பூனை
வெளிச்சத்திலிருந்து தன் கண்களை மறைத்துக்கொண்டு
உறங்குகிறது மேசைமீது.

இன்றிரவு அவன் தனியாக இல்லை.
நானும்தான்.

No comments: