Monday, November 7, 2011

நினைவுகூரத்தக்க புன்னகை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (17)

எங்களிடம் தங்கமீன்கள் இருந்தன
ஒற்றை விரிகண்ணாடிச் சன்னலை மூடிய
கனத்த சீலைகளுக்கருகே
மேசைமேல் கண்ணாடிக் கிண்ணத்தில்
சுற்றிச்சுற்றி வந்தன அவை.
என் அம்மா, எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருப்பவள்,
நாங்களனைவரும் மகிழ்ச்சியோடிருக்க விரும்பி
என்னிடம் சொன்னாள்: ஹென்றி, மகிழ்ச்சியாயிரு.
அவள் சொன்னது சரிதான்: இருக்கவேண்டியதுதான்
மகிழ்ச்சியாய் உன்னால்
முடியுமானால்.
ஆனால் என் அப்பா அவரது ஆறடி இரண்டங்குலச் சட்டகத்துள்
பொங்கியெழுந்து அவரைத் தாக்குவது
எதுவென்று புரியாமல்
என் அம்மாவையும் என்னையும்
அடிப்பதைத் தொடர்ந்தார்
வாரத்தில் பலமுறை.

என் அம்மா, ஒரு பாவப்பட்ட மீன்,
மகிழ்ச்சியாயிருக்கவேண்டி, வாரத்தில்
இரண்டுமூன்றுமுறை அடிபடுபவள்,
மகிழ்ச்சியாயிருக்கச் சொல்லிக்கொண்டிருந்தாள் என்னிடம்:
ஹென்றி, புன்னகைசெய், ஏன் எப்போதும்
புன்னகையே இல்லை உன்னிடம்?

அப்புறம் அவள் புன்னகைப்பாள், எப்படி என்று காட்ட.
நான் பார்த்ததிலேயே ஆகவருத்தமான புன்னகை அதுதான்.

ஒரு நாள் தங்கமீன் இறந்தது, எல்லா ஐந்துமீன்களும்,
அவை நீரில் மிதந்தன, பக்கவாட்டாக,
கண்கள் இன்னமும் திறந்தபடிக்கு.
என் அப்பா வீடு திரும்பியவுடன் அவற்றைப்
பூனைக்குமுன் எறிந்தார்
அங்கே சமையலறைத்தரையில்.
என் அம்மா புன்னகை செய்ய
நாங்கள் பார்த்தோம்.

No comments: