Saturday, December 25, 2010

உலோகருசி



"உலோகருசி” கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அட்டை வடிவமைப்பு: ஸ்ரீதரன் (பயணி), பின்னுரை: ஜமாலன். இது எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு.

Saturday, December 4, 2010

வையத்துள்

இந்தப் படிகளில் ஏறித்தான்
வாழ்க்கைக்குச் செல்லவேண்டும்.
குறுகின படிகள்
வழுக்குப்பாசி
உதிர்கிற பக்கச்சுவர்
கைப்பிடியில் பாம்புகள்
ஆனாலும் இவ்வழியில்தான்
சென்றிருக்கிறார்கள் வாழ்க்கையை அடைந்தவர்கள்
பல காலைகள், மதியங்கள், இரவுகள்
இன்னும் பொழுதற்ற பொழுதுகள்
விபத்து, சந்தேகம், அவநம்பிக்கை
இன்னும் பெயரில்லா உணர்வுகள்
இப்படித்தான் செல்லவேண்டும்
வியர்க்கும் இரைக்கும் நுரை தள்ளும்
இன்னும் தெரியாதன செய்யும்
ஆனாலும் ஏறவேண்டும்
ஏனெனில் இப்படித்தான்
வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்
ஏனெனில் வாழ்க்கையின் வா
நம்மை விட வலுவானது
ஏனெனில் முதற்படியில்
கால்வைத்து விட்டோம் ஏற்கெனவே.