Wednesday, February 24, 2010

ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை

--கவிதை நீக்கப்படுகிறது--

தோன்றிய போக்கில்: இன்ன பிற, கவிதை என்பது வரியல்ல

என் பதிவை வாசித்துவரும் நண்பர்களுக்கு,

இணையத்தில் எழுத ஆரம்பித்தவுடன் தான் என் கவிதைகளுக்கான ஒரு வாசிப்புத்தளம் இருக்கிறது, ஊக்கப்படுத்தும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவந்தது. நான் 90-களிலிருந்து கவிதை எழுதிவருகிறேன். முதல் கவிதை விருட்சம் இதழில் 92-93-ல் வெளியானது என்று நினைக்கிறேன். நிகழ் இதழிலும் ஒன்று வந்தது. (சிறுகதைகள், கட்டுரைகள் பற்றி எழுதப்போவதில்லை இங்கே). பின்னர் பல. தீயுறைத்தூக்கம் 1997-98-ல் விருட்சம்-ஸஹானா வெளியீடாக வந்தது. பின்னர் 2006-ல் இக்கடல் இச்சுவை (காலச்சுவடு). நிறைய சிறு, இடைநிலைப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன் – முன்றில், கல்குதிரை, விருட்சம், உன்னதம், புனைகளம், புது எழுத்து, உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, திண்ணை இணையதளம் உட்பட பல. கவிதையைப் பற்றிப் பேசுகிற சிலபல எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன கவிதைகள்.

என்றாலும் நேரடியாக வாசிப்பவர்களோடு--ஏனோ வாசகர் என்கிற சொல் எனக்கு உவப்பாக இல்லை, அதில் எழுத்தாளர் என்கிற இருமையின் மேலாண்மை உள்ளீடாகக் கட்டப்பட்டு விட்டதாக உணர்கிறேன்--தொடர்புறவோடு இருத்தல் தருகிற நிச்சயமும், பாதுகாப்பும் வேறுதான். அது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. நன்றி.

சில பின்னூட்டங்களுக்கு பதில் எழுதியிருப்பேன். சிலவற்றுக்கு எழுதமுடியாததற்குக் காரணம் ஒன்று எனக்கு திரும்பக்கூற எதுவுமில்லை, அல்லது நேரமில்லை என்பதே. (வேலைதேடிக் கொண்டிருக்கிறேன், மேலும் பொழுதன்றைக்கும் முடிவுத்தேதிகளோடு ஏதோ எழுத்துவேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைப் பிரசுரத்துக்காக சில லிட்டரேச்சர் ரிவ்யூ வேலைகள், இப்போது வேறொரு பல்கலைகழகத்தின் மானுடவியல் சார்ந்த கட்டுரைத்தொகுப்புக்காக ஒரு கட்டுரை, தவிர என் வகுப்பு, செமினார் என்று என்நேரம் என் போக்கில் இல்லை, வருத்தம்தான்.) அடுத்த கவிதைத்தொகுப்பு. தமிழ்ப்புதுக்கவிதை வரலாற்றை மீள்எழுதிப்பார்க்க ஆசை..….தவிர மானசரோவர், பசித்த மானுடம், ஜீரோ டிகிரி, ஈராறு கால்கொண்டெழும் புரவி, பாபுஜியின் மரணம் போன்றவை..……இவைகளுக்கு குறிப்பெழுதிவைத்துக்கூட கட்டுரை எழுத நேரமில்லாத அவலம்….. அப்புறம் என் ஆய்வேடு (அதன் தலைப்பு: “சதையின் கதைகள்: மாரியம்மன் பற்றிய மானுடவியல், காலனீயச் சொல்லாடல்கள்”), அதைப் புத்தகமாக மாற்றவேண்டும். என் ஆசிரியரும் பேராசிரியருமான ஆல்ப் ஹில்டெபெய்டல் அவர்களோடு எழுத உத்தேசித்திருக்கிற ”திரௌபதி வழிபாட்டில் பெண்கள்” புத்தகம், கூத்து மற்றும் நாடக நடிகர்களோடு நடத்திய பலவருட உரையாடல்கள், களப்பணியை வைத்து பாதி எழுதியிருக்கும் இன்னொன்று…….

என் வேலைகளை எனக்கு ஞாபகப்படுத்திக்கொள்ள, என் பாதையிலிருந்து நான் விலகி கவனம் சிதறாமலிருக்க, என் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னைத் தொலைத்துவிடாமலிருக்க…….. இவ்வேலைகளை தொகுத்துக்கொள்ளும் முகமாகவே இங்கே இவற்றைச் சொல்லுகிறேன்…..மேலும் என்னை வாசிப்பவர்கள், சிலவருடங்கள் கழித்தும் இந்த வேலைகளை நான் செய்யாமலிருந்தால் எனக்கு நினைவூட்டவும் வற்புறுத்தவுமே இங்கே பதிவு செய்கிறேன்….தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மனவருத்தம் தருகிற விஷயம்….ஒருவரை இன்னொருவர் எழுத ஊக்கப்படுத்துகிற தருணங்கள் மிகவும் குறைவே. (அதுவும் பெண் எழுத்தாளராக இருந்தால் இவை அமைவது இன்னும் கடினம், என் சக பெண் எழுத்தாளத் தோழிகள் சில சமயங்களில் ’எழுதாமலேயோ,’ அல்லது எழுத்துக்கு அப்பால் ‘அழும்பு’ செய்து கவனிக்கவைப்பதாகத் தோன்றினாலும், இங்கே இலக்கியத்தளத்தில் செயல்படுகிற ஆண்சகோதரக் குழுமங்களின், வலைப்பின்னல்களின் அரசியலுக்கு முன்னால் அவற்றை விமரிசிக்க எனக்குத் தேவை இருப்பதாக தோன்றியதில்லை)

இது நம் போதாமை, துரதிர்ஷ்டம். எந்தக் சகோதரக்குழுவிலும் சேராமல், எந்த எழுத்தாளருக்கும் அடிப்பொடி ஆகாமல், எந்த அறிவுஜீவியையும் அண்ணாரப் பார்த்து வியக்காமல் எழுத்துவாழ்வைக் கொள்ளும்போது, அயராத ஊக்கத்தை, நல்ல எழுத்துகள், தனிப்பட்ட நட்புகள், முகம்தெரியாத அல்லது எந்த அஜெண்டாவும் இல்லாத வாசிக்கிறவர்கள் மூலமாக மட்டுமே பெறமுடியும்…… (சில அபூர்வமான சந்தர்ப்பங்களும் இங்கே உண்டு, தீயுறைத்தூக்கம் வந்த புதிதில், திடீரென ஒரு அதிகாலையில், முன்னே பின்னே நான் பேசியே இல்லாத, என் மதிப்புக்கும் பிரியத்துக்கும் உரிய கவிஞர் பிரம்மராஜன் வீட்டுக்கு வந்தது போன்றவை…ஆனால், தினம் பூத்தால் அது குறிஞ்சி இல்லையே….) இணையம் மூலமாக என்னைப் பார்த்தறியாமலேயே உத்சாகம் கொடுப்பவர்கள் நிறைய. நண்பர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை இன்னும் சில நடப்புகளையும் சொல்லவேண்டும். குறிப்பாக, எழுத்தாளர்களை லிஸ்ட் போடுகிற தன்மை. இந்த லிஸ்டில் அந்தந்த பிராந்தியம் அல்லது சகோதரக்குழுமம் சார்ந்தவர்களுக்கே பெரிதும் இடம்கிடைக்கும், பிரதிநிதித்துவ அரசியல் சரித்தன்மையோடிருக்க, பிராந்தியம்சார் அல்லது சகோதரக்குழுமத்தோடு தொடர்பில் இருக்கிற ஓரிரண்டு பெண் எழுத்தாளர்கள் பெயரைச் சொல்லுவது உண்டு. பாராட்டில் பரஸ்பர மொய் எழுதுபவர்களைப் பார்க்கலாம். பரந்த, தற்போதைய புத்தகவாசிப்பு இல்லாமல் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டியபடி தனக்குத் தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் பெயர்களை உதிர்ப்பதையும் பார்க்கலாம். அதைவிட மோசம், தனிப்பட்டமுறையில் பேசும்போது ஒருவருடைய எழுத்தைக் குறைசொல்லுவது, மேடையில் அவருடைய எழுத்தையே சில காரண,காரியங்களுக்காகப் புகழ்வது (’புறத்தே இன்சொல்வது’ என்று சொல்லலாமா இதை….?). இப்படியான சூழலில்தான் எழுதுகிறோம். ஆனால் இது மாறும். எழுத்தாளரைப் பேசாமல், பெயரைக்கூட ரொம்ப உரத்துச்சொல்லாமல் எழுத்தைப் பேச, விவாதிக்க நம்மால் முடியவேண்டும். முடியும்.

கவிதைகள் பொறுத்து இன்னொரு அபாயமும் உண்டு. கவிதை என்றால் குறைந்த அளவு வரிகள் என்று நினைப்பவர்கள் வாசிப்பவர்களில், ஏன் கவிஞர்களிலே கூட உண்டு. ”என்ன, ஏதோ நாலு வரி எழுதிட்டா….” போன்ற வாசகங்களை அடிக்கடி கேட்கலாம். கவிதை ஏதோ கே.ஜி. வகுப்புகள் போலவும், அப்புறம் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று ஏணிப்படி நாம் ஏறுவதற்காகக் காத்துக்கிடப்பதைப் போலவும். ரெண்டு தொகுப்பு வந்திடுச்சி, இனிமே சிறுகதைத்தொகுதி கொண்டுவரலாம்னு இருக்கேன் என்கிற கவிஞர்கள் உண்டு. ஏங்க, கவிதை எழுதீட்டீங்க, எப்ப நாவல் எழுதப்போறீங்க என்று என்னைக் கேட்பவர்களுக்கும் பஞ்சம் இல்லை. (எனக்கென்னவோ உளவியல் ரீதியாக தமிழருக்கு, ஆண் பெண் எல்லாருக்குமே குண்டுத்தன்மையிடம் ஒரு விழைவு இருப்பதாகவே தோன்றுகிறது. குஷ்பு இட்லியில் ஆரம்பித்து குண்டுப் புத்தகங்கள் வரை….இதனால், குண்டுப்புத்தகங்களை எழுதியிருப்பவர்களைக் குறைகூறுவதல்ல இங்கே என் நோக்கம். எழுத்துவகைமைகளை பற்றி நிலவும் கண்ணோட்டம், அனுமானம், விழைவு பற்றியே என் அவதானிப்பு,), ”என்னங்க பதிவில் கவிதையே போடறீங்க, கட்டுரை எழுதுங்க,” ”கவிதை ஏமாத்திரும் பெருந்தேவி, உரைநடையில்தான் வலிமை தெரியும்” இப்படி கூறிய பெயர்பெற்ற அல்லது வளரும் எழுத்தாளர்கள் உண்டு…….இந்த கவிதை, கதை, நாவல் ஏணிப்படியின் உச்சாணிப்படியில் கட்டுரைகள், விமரிசனங்கள் (அவை எதைப்பற்றியதாகவும் இருக்கலாம்). தமிழ் இலக்கியம் கட்டமைக்கும் அறிவுப்புலத்தில் ஏன் கவிதை இப்படிக் கடைசிப்படியில்?

எல்லோரும் கவிதை எழுதிடறாங்க அதனால் கவிதைக்கு இந்த நிலை என்பது பதிலாக இருக்கமுடியாது. எத்தனை கதைப்போலிகள், எத்தனை டவுன்லோடுக்கட்டுரைகள் உலாவுகின்றன இங்கே, இதனால் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இலக்கிய உலகில் மவுசு குறைந்தா போனது? என் கேள்வி: தமிழ்ச்சூழலில் எழுத்தை பண்டிதத்தன்மையிலிருந்து ஜனரஞ்சகப்படுத்திய வழிகளில், விதங்களில் எந்த இடத்தில் கவிதை இந்த ஏணிப்படி வகைப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்தது? வானம்பாடி, திராவிட இயக்கம் என்றெல்லாம் காரணம் சொல்வது வேலைக்கு ஆகாது. இக்கேள்வியின் புலம், இலக்கியவகைமைகள் குறித்த நம் மதிப்பீடுகளை உருவாக்கியபடி இயங்கும் இலக்கியச்சூழலைப் பரிசீலனை, சுயபரிசோதனை செய்வதில்தான் அமைகிறது.

இங்கே கவிதைகளைப் பிரசுரிப்பது குறித்தும் சொல்லவேண்டும். பக்கநிரப்பிகளாக கவிதைகள் சில பத்திரிகைகளில் உபயோகப்படுகின்றன. வாசிக்கும் நண்பர்கள் சிலராவது இதை அறிந்திருப்பார்கள். அதாவது கட்டுரைகள், கதைகள் வராதபோது, ’கவிதை பைலை’ எடுத்து தேறுவதைப் பிரசுரிப்பது. வேறுசில பத்திரிகைகளில், கவிஞர்களே, எழுத்தாளர்களே அவற்றை நடத்தினாலும், லே அவுட்களில் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆறு கவிதைகளை இரு பக்கங்களில் அடைத்து போடுவது. கவிதை என்ன வரிக்கணக்கா என்ன? வாசிப்புக்கான இடத்தை விஷுவலாகத் தரவேண்டாமா? நானூறுபக்க நாவல் கொடுக்கமுடியாத ஒரு கேள்வியை, நிறையுணர்வை, மனபூகம்பத்தை கவிதையின் மூன்றுவரிகள் உங்களுக்குத் தந்துவிடும். ஆனால், மூன்று வரிகள்தானே என இன்னும் முப்பது வரிகளோடு, அல்லது சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு விளம்பரத்தோடு பந்தி இலையை நிறைப்பது போல பக்கத்தை நிரப்ப முடியுமா, வேண்டுமா? (விதிவிலக்கான பத்திரிகைகள் உண்டு, நான் ஒரு பொதுப்போக்கைச் சொல்லுகிறேன்.)

இது ஒரு பகிர்தல் மட்டுமே. ’கட்டுரைத்தன்மையோடு’ நூல்குறிப்புகள் போட்டு எழுதப்பட்ட கட்டுரை அல்ல. இதனால் இதன் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இங்கே பெயர் எதையும் குறிப்பிடாமல் நான் எழுதியிருப்பதற்குக் காரணம், அவர்களில் பலர் நான் அறிந்தவர்கள் அல்லது நண்பர்கள் என்பதால் மட்டுமே. மேலும் நான் எழுப்பியிருக்கிற கேள்விகளின் உண்மை உறுத்தினால் போதும்.

அன்புடன்
பெருந்தேவி

Tuesday, February 23, 2010

ஆகாயத்தின் எட்டாவரி

--கவிதை நீக்கப்படுகிறது--

Monday, February 22, 2010

ஈயென

--கவிதை நீக்கப்படுகிறது--

Saturday, February 20, 2010

68வது பிரிவு

கந்தசாமிக்கும் லதாவுக்கும் இது
68வது பிரிவு.
முதல் 2 தடவை
இருவரும் தற்கொலைக்கு
முயல நினைத்தார்கள்
தனித்தனியாக;
அடுத்த 8 தடவை
வாழ்த்துகளோடு குட்பை சொல்லிக்கொண்டார்கள்.
1 முறை தன் உள்ளங்கையில்
அவன் பார்க்க பிளேடால் கீறிச்சென்றாள் லதா.
இருவருக்கும் சங்கேதமான
பாடல்காட்சி வந்த டிவியை
குத்தி உடைத்தான் கந்தசாமி 1 முறை.
கண்ணீர் நனைத்த கண்ணாடி
பிரிவின் தடயச் செல்வத்தை
லதா துடைக்கவில்லை 1 தரம்.
முதல்முத்தம் கொடுத்தபோது
அவள் ஈஷிய சட்டையை
எரித்துப்போட்டான் கந்தசாமி 1 தரம்.
4 தடவை லதாவும் 1 தடவை கந்தசாமியும்
தொலையுறவில் கதறியழுது அவரவர் முன்பிருந்த
லேப்டாப்களை நனைத்துக் கெடுத்ததும் உண்டு.
கந்தசாமி அவளைப் பார்க்காமல்
ஈமெயில் மட்டும் போட்டுக்கொண்டிருந்தான்
அது 1/2.
லதா அவனைப் பார்த்தபடியே
அவனைப் பார்க்கவேயில்லை, அது இன்னொரு 1/2.
3 முறை லதா கந்தசாமியையும்
3 முறை கந்தசாமி லதாவையும்
பரஸ்பர அன்பில் சந்தேகித்துப் பிரிந்தார்கள்.
(அவன் கனவில் அனுஷ்கா அரைகுறையாய் வந்ததும்
இவள் தன் கனவில் அதை முழுசாய்க் கண்டதும்
இதில் அடக்கம்)
சந்தேகத்தை மனதில் வைக்காமல்
லதா சொல்லித்தொலைத்ததால்
கந்தசாமிக்கு பிரிய 1 வாய்ப்பு.
அப்படி அவன் பிரிந்ததால்
லதாவுக்கும் சண்டைபோட 1 வாய்ப்பு.
சேர்ந்திருந்தபோதே லதாவோடு
7 தடவை
பிரிந்துதான் இருந்தான் கந்தசாமி.
அவ்வளவு மோசமில்லை லதா.
1 தடவை இன்னொருவன்
தன்னைக்கொஞ்சியதற்காய்
2 முறை தானாகவே பிரிந்து
கந்தசாமியைத் தண்டித்தாள் மாதர் சிரோமணி.
லதா ஒரு கவிதை எழுதியதற்காக
1,
கந்தசாமி அவள் கவிதைகளைப் படிக்காததற்காக
8,
மனதில் பிரிந்திருக்கிறார்கள்.
ஒரேவழியாக அவள் தொல்லை ஒழிய
சாமியிடம் நின்று புலம்பினான் கந்தசாமி 1 நாள்,
அன்றிரவே சாமியாடி
லதா அவனை மீட்டுக்கொண்டாள்.
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமமாய் உறவு பயணிக்க
யாஹூ கணக்கை (அவளுக்கென தொடங்கியது)
7 முறை கந்தசாமி மூடிப்போட்டான்
போட்டிக்கு லதாவும் 6 முறை லிஸ்டில்
அவனை டெலீட் செய்து முறித்துக்கொண்டாள்.
இன்னும் சில பிரிவுகள்
அவர்களுக்கே நினைவில்லை.
68 பிரிவுக்கு ராசியான இலக்கம்,
நவக்கிரக ராசிக்கல் சோசியர்
சொல் மட்டுமே நினைவில் இருத்தப்
பிரயத்தனப்படுகிறான் கந்தசாமி.
தூதுசெல்ல புழுபூச்சியைக்கூடத்
தேடுவதாக இல்லை லதா.

69, 77, 88
அவர்களுக்காகப்
பொறுமையாகக் காத்திருக்கின்றன.
90-ல்
நிற்கும் மரணம் மட்டும்
வரிசையில்
முந்தத்துடிக்காமல் இருக்கட்டும்.

Friday, February 19, 2010

Thursday, February 18, 2010

சுவைக்காத இன்றோ
தெரியாத நாளையோ
எது விழுந்தால் என்ன
என்னுடையது
எண்ணற்ற பகடை.

காலம் இக் காலம்

--கவிதை நீக்கப்படுகிறது--