Monday, May 12, 2008

பகிர்தல்: காத்திருத்தல் எனும்...

காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்


ஏற்கெனவே வெளிவந்த ஒரு கட்டுரை.

வாசிக்காத நண்பர்களுக்காக இந்தச் சுட்டி:

http://www.kalachuvadu.com/issue-83/special06.asp

Saturday, May 10, 2008

கிளி எட்டு: அன்பிலார் எல்லாம்


அன்பிலார் எல்லாம்


இன்னமும் நீ மறக்கவில்லை
இவ்விரவு
தீக்கங்கின்
கரங்களிலிருந்து நழுவவில்லை
சின்னக் கனியொன்றை
பசித்த
என் கிளிக்கு
தின்னத் தா
அது
கொல்லும்முன்.

கிளி ஏழு: படையல்

படையல்


வருஷம் இருநூறு இரவுகள்
திரௌபதி வேஷம் கட்டுவதால்
பெண்ணாகவும்
தான் ஆனதாக
ஆட்டம் தொடங்குமுன்
அல்லிப்பூ சொல்லிக்கொண்டிருந்தான்.
அவளின்
விரிகூந்தலென
நீண்டதொரு கோலை
துச்சன் இழுத்துவந்த
நடுயாமத்தில்
செங்கண் வரிகள்
ஆயிரமாயிரம் ஆகின
அவள் விழிகள்.
பிரளயச் சுழலுற்றன
ஆயிரமாயிரம் அவள் கால்கள்.
சாபங்களில் புடைத்தன
ஆயிரமாயிரம் அவள் வாய்கள்.
பதறிய கிளியின் ஆட்டம்
பாழ்மணி சிதறியது.
சாவுகளை அறிவித்துச்
சமைந்த தெய்வத்தின்
களைப்பு தீர
முன்வைக்கப்பட்டது
ஒரு க்ளாஸ் டீ.
அவள் வியர்வையின் வண்ணப்
பொடி துளி சொட்டியது.
நான் பார்த்ததை
பார்த்த
அல்லிப்பூ
கலைந்து சிரித்தான்
ஆணைப் போலவே
கூச்சத்தோடு.

Tuesday, May 6, 2008

கிளி ஆறு

தடயம்


தளிர்ப்பச்சை நிறத்தில் முகம்
எலுமிச்சை நிறத்தில் வயிறு
கண்ணாடியொளிரும் முதுகு
சிறகுகள் கடல் நீலவண்ணம்
கூர்மூக்கோ பழுத்த மாலைச்சூரியனின் கீற்று
நான்
கொலைகள் செய்ய அஞ்சாத
ஊர்மேயும் ஒருவனின்
ஆசைநாயகியின் வளர்ப்பு.
அவளது உயிர்.
அடிமை.
அவன் இல்லாத போது
அவனைப் போல
அவள் இல்லாத போது
அவளைப் போல
பேச அவர்கள் கேட்பார்கள்.
என் வெகுநீள வாலின் நுனியின் மஞ்சள்
வேறொரு நகரத்தில்
ஒளியும் அன்பும் மேன்மையுற்ற
அறையொன்றில்
அலைபாய்ந்து திரும்புகிறது இப்போதெல்லாம்.
குரலெழுப்புவதை
மறக்கச் சொல்லும்
என் எசமானிக்கு
நான் விசுவாசமாக இருக்கவேண்டும்.
இந்த என் ஆசை
பச்சோந்தியாக
நிறம் கொள்ளாதபடிக்கும்.

Sunday, May 4, 2008

அறிவிப்பு

பதிவுகளை வாசித்து எழுதும் நண்பர்களுக்கு நன்றி. மின் அஞ்சல் அனுப்பும் நண்பர்கள் பின்னூட்டங்களாக அக்கடிதங்களை நான் பதிவு செய்யலாமா என்பதைத் தெரிவியுங்கள்.

இன்னும் ஒரு வாரத்தில் என் Phd dissertation தொடர்பான தேர்வுகள் இருப்பதால் புதிய பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.

மே மூன்றாம் அல்லது நான்காம் வாரத்தில் இந்தியா-சென்னை வருகிறேன். இந்த விடுமுறையிலாவது மூன்று வருடங்களாக நான் நினைத்து ஆனால் செய்ய இயலாதுபோன ஒன்றைச் செய்யலாம் என்று இருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு பேராசிரியர் டேவிட் ஷ¤ல்மன் அவர்களை மேடிஸனின் ஒரு கருத்தரங்கில் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தேன். (The hungry god : Hindu tales of filicide and devotion, The king and the clown in South Indian myth and poetry, Tamil temple myths : sacrifice and divine marriage in the South Indian Saiva tradition புத்தகங்களை எழுதியவர்). சங்க இலக்கியம், பிரபந்தம், திருவாசகம், தமிழ் நவீன இலக்கியம் என்றெல்லாம் விரவிய நீண்ட உரையாடலின் ஒரு கட்டத்தில் கம்பராமாயணம் பற்றிப் பேச்சு வந்தது. கம்பராமாயணச் செய்யுளிலிருந்து இரு வரிகளைச் சொன்னவர் என்னிடம் கம்பராமாயணம் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார். படிக்கவில்லை என்று வெட்கிச் சொன்னேன். எப்படி பெருந்தேவி, கம்பராமாயணம் படிக்காமல் இருக்கிறீர்கள் என்று உரிமையோடு கோபித்துக்கொண்டார். கம்பராமாயணத்தின் அருமை பெருமைகளை விரிவாக எடுத்துச்சொல்லவும் செய்தார்.

அந்தவருட விடுமுறையில் சென்னைக்கு வந்தபோதும் கம்பராமாயணம் என்னைத்தொடர்ந்தது. என் நண்பன் கம்பராமாயணத் தொகுதிகளை என் வீட்டுக்கு அனுப்பியிருந்தான். ஆனால், படிக்க நேரம்தான் கிடைக்கவில்லை. (அல்லது முனைப்பு போதவில்லையோ?)

இந்த மூன்று மாத (ஜூன் - ஆகஸ்ட்) அவகாசத்தில், ஆய்வேடு எழுதுகிற வேலைக்கு நடுவிலும் கம்பராமாயண வாசிப்பைத் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நண்பர்கள் யாராவது என்னோடு கம்பராமாயணம் வாசிக்கத் தயாராக இருந்தால் என்னை மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும். முதல் இரண்டு தொகுதிகளோடாவது அறிமுகம் ஆகிவிடவேண்டும் என்பது என் அவா. மின் அஞ்சல் முகவரி: sperundevi@gmail.com

Saturday, May 3, 2008

ஆண்டாள்

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி கவிதை:

உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத,
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்,
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே.


சிலப்பதிகாரத்தின் பரிச்சயம் இல்லாமல் ஆண்டாள் இதை எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். மாதவியோடு சென்றபோது கண்ணகி உளளோ இலளோ என்ற நினைப்பில்லாமல் இருந்தவன் கோவலன். திரும்ப வந்தவுடன் "ஊழ்வினை உருத்தி" கண்ணகியோடு மதுரை சென்று கொலையுறுகிறான். பிய்த்தெறிந்த முலையிலிருந்து எழும்பிய தீ மதுரையை எரிக்கிறது.

கோவர்த்தனின் பிரிவில் தாபமுறும் ஆண்டாளின் கவிதைசொல்லியும் முலையைப் பிய்த்தெறியப்போவதாகச் சொல்கிறாள். கோவர்த்தன மலையைக் கண்ணன் தூக்கியது கோகுலத்தில். அவனைப்பிரிந்த கோபியரின் தாபமும் கவிதைசொல்லியின் தாபமும் ஒன்றே போல.

கோவலனின் பிரிவு தந்த துயரத்தின் கண்ணீர் கண்ணகியின் முலையை வெந்தழலாக மாற்றுகிறது. ஆண்டாளின் கவிதையிலோ, கோவர்த்தனின் நெஞ்சோடு முலை சேர, அது தாபத்தின் அழலை அணைக்கக்கூடிய நீராக மாறுகிறது.

சிலப்பதிகாரத்தில் பொது வெளியில் (public space) அறமெனும் தீ அழலாகக் காட்சியாகிறது. ஆண்டாளின் கவிதையில், பிரத்யேக வெளியில் (private space) சேரக்கிடைக்க, கொழுந்துவிட்ட காதலின் அழல் அமைதிபடுகிறது.

கோவர்த்தனனுக்கும் கோவலன் என்றொரு பெயர் உண்டு என்று நினைக்கிறேன்: "கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயனை, என் உள்ளம் கவர்ந்தானை" என்ற பாசுரம் நினைவில் வருகிறது.

வாசிக்க வாசிக்க இன்பம் தருகிறது ஆண்டாள் கவிதை.

Friday, May 2, 2008

கிளி ஐந்து

அபாயம்


கண்ணாடிச் சிதறல்கள்.
பிம்பத்தைக்
கொத்திப் பறந்தது கிளி.
வெள்ளை நிர்மலம்
பரவும்
பேரமைதி முகம்.
இரைபட்ட விழிகளில்
துடிக்கிறது
ஒன்று மட்டும்.
காலில் கீறிக்கொள்ளாது
கவனமாய் வா.