Wednesday, December 9, 2009

Wednesday, December 2, 2009

சொல்பொருள் நியதி

வேண்டாத சொல்லின் கருநிழல்
பொருளின்மேல் படிவது இப்படித்தான்:
பொருளைச் சொல் துரத்திச் செல்லும்போது
(நேற்றை, சென்ற வருடத்தை, போன ஜென்மத்தை
நினைவுகூறும்போது,
நினைவு நினைவைக்
கோரும்போது)
ஒரு பொருள் உனக்கும் அவளுக்கும்
ஒரே அர்த்தத்தை வேறு அர்த்தங்களில் தரும்போது
(பூங்காவில் அழுத அந்தக்குழந்தையைக் கண்ட நீ
ஓடோடி அதை தூக்கிக்கொண்டதும்
அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டதும்
இப்படித்தான்)
பொருள் தன்மேல் போட்டுக்கொண்ட முக்காட்டை
அதிகப்பிரசங்கியாய் அழைப்பில்லாதவர்
நீக்கமுயலும்போது
(நாளை நண்பர்கள் குழுமத்தில்
ஐந்து க்ளாஸ் வாட்காவுக்குப் பிறகு
ராமனும் கந்தனும் மாலாவும்
தமக்குள் கண்ணடித்துக் கொண்டால்,
நம் கண்ணில் அதுபட்டால்,
நம்மை வாளாவிருக்கச் சொல்லுகிறது பொருள்
அவர்களுக்கானது அதன் சொல்)
சம்பந்தமற்ற தருணத்தில்
சொல் பொருளை
பாவனைசெய்ய முயலும்போது
(அந்தரங்க உறவில் உன் முனகலை
அடுத்த நாள் உன்னவன்
சொல்லிக்காட்டும்போது;
அல்லது இல்லாத பொருளைச் சுட்ட
அந்நேரம் நீ முனகுவாயே அப்போது.)

வேண்டாத நிழலைத் தவிர்க்கும் பொருள்
மௌனத்தின் பதுங்குகுழியில் புதைந்துகொள்கிறது
வேண்டாத நிழலிடமிருந்து தப்பிக்கும் பொருள்
தானும் மற்றொரு சொல்லாகிவிடுகிறது
குகையென அசப்பில் தோன்றும்
வெறுங்கதவுக்குப் பின்னே
நீளும் வெட்டவெளி போல.

Friday, November 20, 2009

Thursday, November 19, 2009

அரண்

வெகுநாள் கழித்து என் அம்மாவை ஆதுரத்தோடும் கண்ணீரோடும் இன்று நினைத்துக்கொள்கிறேன். என் சிறுவயதில் இலக்கியத்தில் என்னைக் கவனம் கொள்ளச் செய்தவள் அவள். நா. பார்த்தசாரதி, அகிலன், ஜெயகாந்தன், கல்கி போன்றவர்களை அறிமுகப்படுத்தியவள். ஜெயகாந்தனைப் பிரேமித்த (அக்காலப் பெண்கள் பலரையும் போல்) வாசகி. கல்கியும் அவளுக்குப் பிடிக்கும். நான்காம், ஐந்தாம் வகுப்புகளில் படிக்கும்போது கல்கியின் பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும் ஏழெட்டு பெண்டிர் கொண்ட ‘சபையில்’ வாரம் சில அத்தியாயங்கள் என்று உரக்க வாசிக்க வைக்கப்பட்டிருக்கிறேன். “வெற்றிவேல் வீரவேல்” என்று கனவில் கூச்சலிட்டு கட்டிலிலிருந்து தரையில் படுத்துக்கொண்டிருந்த அவள்மேல் ஒருமுறை விழுந்துமிருக்கிறேன். மு. மேத்தாவின் கண்ணீர்ப் பூக்களைப் படித்துவிட்டு வரிகளை மடித்து மடித்து கவிதை எழுத முயற்சித்த பள்ளிநாட்களின் என் கிறுக்கல்களின் அபத்தத்தைக் கண்டு சிரித்த முதல்தோழியும் அவள்தான். நான் பார்த்த பல திரைப்படங்கள் (கடைசியாக ஜானி வீடியோ டெக்கில்,  1989-இல் அவள் இறக்கும் முன்பு) அவளோடுதான்.

ஆனால் பெற்றோரோடு விலகிவிடும் சந்தர்ப்பம் துரதிர்ஷ்டவசமாக சிலருக்கு நேர்ந்துவிடும். சில காரணங்களால் எனக்கும் என் தாய்க்கும் விலகல் நேர்ந்தது. அதில் ஒன்று, என் இலக்கிய உலகப் பிரவேசத்துக்கு முன்பு, அப்போது நான் கொண்டிருந்த ஒரு நெருங்கிய நட்பு (இனக்கவர்ச்சி?). எதையும் மறைத்ததில்லை அவளிடம், அதையும் கூட. என்னை அந்த உறவிடமிருந்து விலகச்சொல்லி தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தாள். சென்னைக்கு வேலைக்காக வந்தபோது, அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்த உணர்வுக்குமுன் அவளை விட்டுப் பிரிந்தது கூட எனக்கு உறைக்கவில்லை. அந்த உறவின் அபத்தம் தெரிந்து நான் விலகியபின்னரும்கூட பலவருடங்களுக்கு என் அம்மாவின் மேல் எனக்குக் கோபம் இருந்தது.அவள் இறந்தபின்கூட …. “ஏன் அவள் என்னைப் புரிந்துகொள்ள மறுத்தாள்?” அவளது இலக்கிய ஈடுபாடு, மனித உறவுகளில் அவள் காட்டிய பக்குவம் இவற்றின் மீதான மரியாதையும் நழுவிப்போன தருணம் அது.

எந்த ஒரு உறவோடும் சாவோடும் எதுவும் நிற்பதில்லையே. வேறுபல அபிமானங்கள், ஏமாற்றங்கள், அபிலாஷை ஈடேற்றங்கள் எனப் பலசக்கரத்தில் சுழன்றாடியபடிதான் காலமும் செல்கிறது. ஆனால், தலையில் ஆணி இறங்கியதுபோல எதிர்பாராதபடிக்கு ஒரு தகவல் என்னை அடைந்தது சமீபத்தில். அந்த உறவு தொடர்ந்திருந்தால் என் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட இருள்குகையில் முடிந்திருக்கும் என்பது தீர்மானமாகத் தெரிந்தவேளை அது. ராட்சதர்களின் குகையில் கதவு ஒரு கணம் நம்மை உட்கொண்டு வெளிவிட்டதை நாமே அறியாமல் பலகாலம் சென்று அறிந்தோமானால் எப்படி இருக்கும்? அதுவும் நாளேடுபோன்ற ஒன்றிலிருந்து அதைத் தெரிந்துகொண்டால்? பயங்கரத்திலிருந்து தப்பிக்கவைத்த ஏதோ ஒரு கருணையின் செயல் காலம்சென்று அர்த்தமாவதுகூட அந்தக் கருணையின் அதீதமாகத்தான் இருக்கமுடியும் என்று நினைக்கிறேன். என் அம்மா அவள் அறிந்தோ அறியாமலோ கருணையின் ஒளிக்கீற்றை எனக்கு ஈந்திருக்கிறாள். பலவருடங்களாக என்னில் உறைந்த ஆதங்கம் காயத்தின் வடு அல்ல, பாதுகாப்பின் முத்திரை என இப்போது புரிகிறது. என் அம்மாவோடு முழுக்கச் சமாதானமாகிவிட்டேன். இதைவிட வேறென்ன எனக்கு வேண்டும்?

Friday, October 23, 2009

எப்படி இருக்கீங்க?

--கவிதை நீக்கப்படுகிறது--

வேறு பயணங்கள்

இன்று ரயில் நிலையத்தில் மின்படிக்கட்டில் ஒரு அ
ழகன் ஏறப் பார்த்தேன்.
வெளிவந்தான்.
தொடர்ந்தேன்
இருடாலர்கள் கொடு என்றான் கொடுத்தேன்
அப்போது கவனித்தேன்
அவன் மூக்காக
ஒரு பிளாஸ்டிக்
மடிந்து இருந்ததை.
இன்று ரயில் நிலையத்தில் மின்படிக்கட்டில் ஒரு அ
ழகன் ஏறப் பார்த்தேன்.
வெளிவந்தான்.
தொடர்ந்தேன்.
இரு டாலர்கள் கொடு என்றேன்.
அப்போது கவனித்தான்
என் பிளாஸ்டிக்
ஒரு மூக்காக
மடிந்து இருந்ததை.

Monday, September 21, 2009

ஞாபகம் சிலபல

வாயில் மேலண்ணத்தில்

ஒட்டிக்கிடக்கும்

சாரமற்ற சுயிங்கம்.

எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது நாக்கு.

Tuesday, July 7, 2009

நிலைக்கண்ணாடி (ஸில்வியா ப்ளாத்)

நான் வெள்ளியும் துல்லியமும். முன்முடிவுகள் எனக்கில்லை.
விழுங்குவேன் உடனே காண்பது எதையும்.
அவ்வப்படியே, அன்பின் பிடித்தமின்மையின் படலமின்றி.
கொடூரசாலி அல்ல நான், வாய்மையோடு மட்டுமே—
ஒரு சிறுதெய்வத்தின் கண், மூலைகள் நான்குடன்.
எதிர்சுவரை தியானிப்பேன் பொழுதுபெரும்பாலும்.
அது இளஞ்சிகப்பாய், புள்ளிகளோடு. நெடுங்காலமாய் பார்த்திருப்பதாலேயே
இதயத்தின் ஒரு பகுதியாய் அதை நினைக்கிறேன். எனினும் படபடக்கிறது.
முகங்களும் இருளும் பிரிக்கின்றன எங்களை மீண்டும் மீண்டும்.
இப்போது நான் ஓர் ஏரி. மங்கையொருத்தி சாய்கிறாள் என்மேலே,
நிஜத்தில் அவள் யாரென என் எட்டுந்தொலைவுகளில் தேடியவண்ணம்.
பின்னர் அந்தப் பொய்யர்களை, மெழுகுவர்த்திகளை, நிலவை நோக்கித் திரும்புகிறாள்.
அவளின் பின்பக்கத்தைக் காண்கிறேன். பிரதிபலிக்கிறேன் விசுவாசத்துடன்.
தன் கண்ணீரை, கரங்களில் ஒரு கலவரத்தை எனக்கு வெகுமானமாக அளிக்கிறாள்.
அவளுக்கு முக்கியம் நான். வருகிறாள், போகிறாள்.
புலரும் ஒவ்வொரு பொழுதிலும் அவள் முகமே இருளுக்குப் பதிலியாகிறது.
என்னில் ஒரு சிறுமியை அவள் மூழ்கடித்தாள், என்னில் முதியவள் ஒருத்தி
அவளை நோக்கி எழும்புகிறாள் நாள் பின் நாளாய், பயங்கர மீன் ஒன்றைப்போல.

Thursday, July 2, 2009

விண்ணப்பம்

--கவிதை நீக்கப்படுகிறது--

Monday, June 29, 2009

எல்லோரோடும் தனியாய் (சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி)

சதை எலும்பை மூடுகிறது
ஒரு மனசை அவர்கள் வைக்கிறார்கள் அதில்.
சமயங்களில் ஆன்மாவையும்,
பெண்கள் ஜாடிகளை சுவர்களில் அறைந்து உடைக்கிறார்கள்
ஆண்கள் குடிக்கிறார்கள்
அதிகமாகவே.
ஒருவருக்கும் கிடைப்பதில்லை
ஒன்றும்
ஆனாலும் தேடிக்கொண்டே
படுக்கைகளின்
உள்ளூம் புறமும் ஊர்ந்தபடி
சதை எலும்பை மூடுகிறது
சதை தேடுகிறது
சதையைத் தாண்டி.

வாய்ப்பே இல்லை
ஒருமித்த விதி
ஒன்றினால் மடக்கப்பட்டிருக்கிறோம்
நாம் எல்லோரும்.

ஒருவரும் கண்டுபிடிக்கப் போவதில்லை
ஒன்றையும்.

நகரத்தில் குப்பைகள் நிரம்ப
கூளக்கிடங்குகள் நிரம்ப
பைத்திய விடுதிகள் நிரம்ப
மருத்துவமனைகள் நிரம்ப
கல்லறைகள் நிரம்ப

வேறேதும் நிரம்புவதில்லை.

Sunday, June 14, 2009

எப்படி எப்படியோ

மதிய உணவுக்கு அவள் ரொட்டிகள் சுடுவதில்லை
இரவுக்கு நெய்ப்பாயாசமும் வைப்பதில்லை
இரண்டாவது பொய் பொய் என்கிறான்
சூரியனின் துளி சிலிர்த்துச் சிரிக்கும்
ஆண் நண்பன்.
(இது வேறு நெய்ப்பாயாசக்கதை. சரிதான் ஐயா.
கவிதையும் கத்திரிக்காயும்
உண்மைகளைச் சுட்டுவதற்கா என்ன?)
அவனுக்கும் தமிழுக்கும் காததூரம் என்றாலும்
அவன் அவளுக்கு அமிர்தம்
ஹெடிரோ பாலியல் அரசியல் சரித்தன்மை ஆகாதுதான்.
அவனைப் பெண் ஆக மாற்றுவது பற்றி
கவிதைசொல்லி எத்துணை சிந்தித்தும் பயனில்லை.
இதேபோலத்தான்
ஏன் எழுதுபவர்கள் மழையையும் குழந்தைகளையும் பிடிக்கும்
என்று அறிவிக்கிறார்கள்
எப்படி கவிதைகளில் கொண்டாடப்படும் மாதவிலக்கு
நிஜத்தில் நாறுகிறது என்றெல்லாம் சிந்தித்தும்.
ரொட்டிகள் சுடாமல் நெய்ப்பாயாசம் வைக்காமல்
குழந்தைகளைப் பேசாமல் மழையை நேசிக்காமல்
மாதவிலக்கைச் சகித்துக்கொண்டு
பெண்ணாக
ஆமாம் பெண்ணாக
பாதி எழுதுவதும்
சன்னலுக்கு மேலே சுவர்
பாதிமறைக்க அறையில் பிய்ந்து
தொங்கும் குறைநில
வைப்போல்
மீதி ‘வாழ்’வதாக வயதேறுவதும்.

Saturday, June 13, 2009

அவற்றுக்கு என்ன வேண்டும்? (சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி)

உன் மூளையின் உள்ளிருக்கும் அந்தக்கண்கள்
உன்னைத் உற்றுத்திரும்பி நோக்கும்
நேரங்கள் உண்டு.
அது திடீரென நிகழ்வது.
நீ உள்ளேவந்து
படுக்கையில் படுக்கும்போது
சிலசமயம் நேரும் அது.
2 கண்கள் உன்னோடு சம்பந்தமில்லாதவை
உன்மூளையின் உள்ளிருந்து
உன்னை உற்றுத்திரும்பி நோக்கும்.
எழுந்து உட்காருவாய்
அவை போகும்வரை.

அல்லது நீ ஒரு குழந்தையை அதட்டும்போது
ஒரு பெண்ணை அறையும்போது—
நீ சமையலறையில் நுழைகையில்
உன் மூளையின் பின்பகுதியில்
அக்கண்கள் தோன்றும், தொங்கும் அங்கே
நீ தண்ணீர் குடிக்கையில்.

அல்லது சிலசமயம் பூங்காவின்
பெஞ்ச் ஒன்றில் ஒரு செய்தித்தாளை
வாசித்தபடி அமையும் ஒரு அமைதிப்போதில்—
வரும் அங்கே கண்கள்:
பருத்த சிவந்த தங்கநிறமான கண்கள்,
ஒரு ஜோடி.
நீ எழுந்து நகர்ந்துவிடுவாய்.

அல்லது தொலைபேசி ஒலித்து நீ பதில் அளிக்கையில்
கண்கள் மீண்டும் வரும்—
“ஆமாம். நிச்சயமாக. இல்லை. நான் எதுவும்
செய்யவில்லை, ஆம். நான் நன்றாக இருக்கிறேன்.”
வைத்துவிட்டு, குளியலறைக்குச் சென்று
நீரை உன்முகத்தின் மேல் நீ அறைகையில்.

இந்தக்கண்களை
கண்ணற்றவருக்கோ அல்லது இவற்றை எடுத்துக்கொள்ளும் எவருக்கோ
சந்தோஷமாக அளித்துவிடுவேன்.

ஓஓ, மீண்டும் அவை இங்கே.
புரியவில்லை எனக்கு.
அவற்றுக்கு என்ன வேண்டும்?

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் இங்கே)

Sunday, April 19, 2009

விருந்து: ஆனந்த்-தின் கவிதை

வித்யாசமான கவிதை. நன்றி: சாரு ஆன்லைன்.

இக்கவிதையில் அப்பாக்களும் மனைவிகளும் பிள்ளைகளும் தனித்தனியாகப் பேசிக்கொள்கையில், அலைந்து திரிபவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் சிறைக்காவலர்களாகவும் மற்றவர்கள் இருப்பது நிஜத்திலா, இல்லை பேச்சிலா? இந்த ஊடாட்டத்தில் கவிதை சிறக்கிறது.

சாரு-வுக்கு (மலாவி) ஆனந்த் எழுதியிருக்கிற ஒரு கடிதம் "சப்பாத்துகளும் ஒரு கோப்பை சாராயமும்” வாசித்தேன். கொஞ்சம் எடிட் செய்திருந்தால் நல்ல கதையாக இருந்திருக்கும். காப்காவை நினைவூட்டியது அக்கடிதம்.


விருந்து


இரண்டு அப்பாக்கள்

பேசிக் கொண்டனர்

இரண்டு மனைவிகள்

இரண்டு பிள்ளைகள்

பிசாசுகளாய் அலைந்து திரிந்தனர்


இரண்டு அம்மாக்கள்

பேசிக் கொண்டனர்

இரண்டு கணவர்கள்

இரண்டு பிள்ளைகள்

பைத்தியக்காரர்களாய் நின்றிருந்தனர்


இரண்டு பிள்ளைகள்

பேசிக் கொண்டனர்

இரண்டு அப்பாக்கள்

இரண்டு அம்மாக்கள்

சிறைக் காவலராய் ரோந்து வந்தனர்


பின்

ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு பிள்ளை

கிளம்பிச் சென்றனர்

ஒரு அப்பா ஒரு அம்மா ஒரு பிள்ளை

உறங்கச் சென்றனர்


நான்கு பிசாசுகள், நான்கு பைத்தியக்காரர்கள்

நான்கு காவலர்கள்

ஒருவருடன் ஒருவர் பேச விருப்பமின்றி

அமர்ந்திருக்கின்றனர்

Thursday, March 5, 2009

அறத்தையும் அரசியலையும் பேசுதல்: நிகழோடு/நிகழ்வோடு இடதுசாரி ஈடுபாடு

காத்ரி இஸ்மாயில் மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர். இலங்கை பற்றிய அவருடைய புத்தகம் ஒன்று, “Abiding by Sri Lanka: On Peace, Place, and Postcoloniality,” மினசோட்டா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. தன் புத்தகத்தில் அவர், சிறுபான்மையினரின் ”எண்ணிக்கை குறைந்த” தன்னிலைக்கு இடம்தருவதாகமட்டும் ஜனநாயகம் என்பதைக் கருதாமல், ஆதிக்கமின்றி ஆனால் அதே நேரத்தில் வேறுபாடுகளையும் அமைதியையும் தக்கவைக்கக்கூடிய இடமாக அதை மறுவாசிப்புக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறுகிறார்.

அரசியலோடு அறத்தை இணைக்கும் தேவையைப் பேசும் அவரது இந்தக் கட்டுரை “Transcurrents”-இல் பெப்ரவரி 28, 2009 அன்று வெளியானது. இதன் தமிழாக்கம் இரு பகுதிகளில் வெளிவரும். முதல் பகுதி இதோ. (கட்டுரையைக் கடிதத்தில் சுட்டிய நண்பர் கவிஞர் வாசுதேவனுக்கு நன்றி)

இலங்கையின் இடதுசாரிகளை மனதில் வைத்து இக்கட்டுரையை காத்ரி இஸ்மாயில் எழுதியிருக்கிறார். அவர் எழுப்புகிற கேள்விகளும் எடுத்துவைக்கிற வாதங்களும் இலங்கையைப் பொறுத்து இன்றைய தமிழகச்சூழலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேசுவதில் ஒரு சிக்கல் இருப்பதைத் தொடர்ந்து உணர்கிறேன். யாரை யார் எப்படி பிரதிநிதித்துவம் செய்து பேச முடியும் என்பது ஒரு அடிப்படையான கேள்வி. கூடவே நான் எனக்காக மட்டுமே பேச முடியும், பேசுவேன் என்றால் சுயபிரதிநிதித்துவம் என்பதைத் தாண்டிய அறம் என்று எதுவும் கிடையாதா என்பது கூடவே வரும் இன்னொரு கேள்வி. பிரதிநிதித்துவம் என்பதை கொஞ்சம் இடம்நகர்த்தி அறம்சார் சிந்தனை ஒன்றைப் பகிர்ந்துகொள்ள முடியும் என நினைப்பது ஒரு அபார நம்பிக்கைதான், இல்லையா?

பிரதிநிதித்துவத்தோடு கூடவே வரும் மற்றொரு பிரச்சினை: பேச அர்த்தம்தோய்ந்த மொழியை இழந்துவிட்டோம் என்று தோன்றுவதும்தான். இரண்டு பக்கமும் தொடர்ந்து அடிவாங்கும் ஈழத்தமிழ் மக்களைப் பற்றிய எந்த மொழிதலும், அர்த்தத்தளத்தில் வழுக்குத்தரையில் வைத்த கால் போல இலக்காக நாம் கொள்ளாத இடம் நோக்கி ஓடிவிடுகிறது. நாமே அறியாத நம் ஓட்டம் அதுவாகவே தேங்கி நிற்பது துரதிர்ஷ்டவசமாக இரண்டு இடங்களில்தாம்: ஒன்று அடிவாங்கும் தமிழர்களைப் பற்றி எதைப்பேசினாலும் அது விடுதலைப்புலிகளுக்குப் பரிந்து பேசுவதாகக் கருதப்படுவது அல்லது அவர்களின் ஆதரவாக போய்முடிவது. மற்றொன்று, விடுதலைப்புலிகளைப் பற்றிய நியாயமான விமரிசனங்கள் ஈழத்தமிழர்களை நசுக்கும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டால் சுவீகரித்துக்கொள்ளப்படுவது. நோம் சோம்ஸ்கி-யின் ”லங்கா கார்டியன்” நேர்காணலுக்கு எதிர்வினையாக நண்பர்கள் கூட்டாக வரைந்த அறிக்கைக்கு சோம்ஸ்கி அளித்திருக்கிற பதில் இந்த வழுக்குதலை இன்னும் பொருண்மையாக எடுத்துக்காட்டியது.

மொழிதலில் இந்த வழுக்கு விளையாட்டை புரிந்துகொண்டு மௌனமாக இருக்கும் என் நண்பர்கள் சிலரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உண்மையில், இந்தக்கட்டுரை கூட இப்படியான ஒரு விளையாட்டில் வழுக்கிக்கொண்டு போகும். என்ன செய்ய முடியும்? கைவிரித்தல் போல, எழுதுதலும் இன்னொரு செயல் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்று சொல்லும்படியாகத் தானே இருக்கிறது சூழ்நிலை?

அறத்தையும் அரசியலையும் பேசுதல்: நிகழோடு/நிகழ்வோடு இடதுசாரி ஈடுபாடு

தமிழீழ விடுதலைப் புலிகளை முடிந்துவிட்டதாகக் கருதுவது உண்மைபோல் வேஷமிட்டுவரும் அதிகற்பனையே.”


காத்ரி இஸ்மாயில்


சே குவெரா ஒரு முறை சொன்னார்: “ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ நடுங்குவாயானால், நீ என் தோழர்.”

போராட்டமும் குறுக்கீடு செய்தலும் சுயபரிசோதனையும் நிரம்பிய வாழ்க்கையை வடித்தெடுத்துத் தரும், அதிரடி மொழிதலுக்கு நேர் எதிரான, இந்தக் கூற்று அறத்தை அரசியலோடு பொருள் பொதிந்து எடுத்துரைக்கிறது. அறமும் அரசியலும் பிரிக்கமுடியாது பிணைந்திருப்பவை, ஆனால் வெவ்வேறானவை என்று அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்தாவது நமக்குத் தெரியும்.

ஒரு முன்மாதிரியாகக் கொள்ளத் தகுந்த இடதுசாரிப் பாணியில் சே இவ்விரண்டையும் இணைக்கிறார். அறம் என்பதை லெவினாஸ் சொல்வதைச் சற்றே தளர்த்தி அடுத்தவருக்கான மரியாதை என்றும், அதேபோல தெர்ரிதா சொல்வதைச் சற்றே தளர்த்தி (நம்மால்) இயன்றதைப் பற்றியதான நுண்கணிதம் என்றும் புரிந்துகொள்வோம். அப்போது சே-யின் கருத்தாக்கம் வலியுறுத்துவது என்னவென்றால், ஒரு இடதுசாரி ஒவ்வொரு அநீதியின் நிமித்தமும் செயல்படாது, அல்லது அவளால் செயல்பட முடியாது போனாலும், அநீதியால் அவள் அசைக்கப்பட வேண்டும் என்பதே. சுயமோகத்தோடு கூடிய அறச்சீற்றம் அடையாள அரசியலாகவே அழைக்கப்படும்.

ஒரு இடதுசாரி செயல்படும்போது, கடினம் என்றும் இயலும்/இயலாது என்றும் கருதப்படும் எதனாலும் அவளைக் கட்டுப்படுத்த முடியாது. இவை எல்லாவற்றையும், அநீதியை, அடுத்தவர் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற அறத்தின் ஏவல், ஒரு சப்பையான தேவை, அதி-நிர்ணயம் (overdetermine) செய்துவிடும். தடுத்து நிற்பது பலனளிக்குமா என்கிற அரசியல் கணக்குக்கு இடமில்லை. தேர்வு என்பதைவிட தேவை என்பதே இடதுசாரி செயல்பாட்டின் குணாம்சம்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், இடதுசாரி என்பவள் யதார்த்தவாதி இல்லை, அப்படி இருக்கவும் முடியாது. புரட்சிகளோ, தேசிய விடுதலைப் போராட்டங்களோ, ஆணாதிக்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களோ சந்தர்ப்பவாதிகளால் உந்தப்பட்டவை அல்ல. இலங்கையில் அநீதிக்கு எதிரான தமிழர்களின் போராட்டமும் அப்படியானது அல்ல. அந்தப் போராட்டத்தின் நியாயதருமம் என்பது தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் செயல்பதிவுகளால்-- தீயவை, அதலபாதாளத்தைத் தொடுபவை அவை-- நிற்பதில்லை அல்லது விழுவதில்லை.

ஆனாலும், இதை ஒருவர் எழுதும்போது, இடதுசாரிகளில் பலர், புலிகளை இறந்தகாலத்தினராகக் கொண்டு, தமிழர்களை ஒரு “யதார்த்த” நிலைப்பாட்டை எடுக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்: அதாவது, ராஜபக்சே அரசிடம் பிச்சை எடுக்கச் சொல்லுகிறார்கள்: திணற அடிக்கும் அதிகாரத்தின் நிஜத்தோடு சமாதானமாகப் போகச் சொல்லுகிறார்கள். எது கிடைக்குமோ அதைப் பெற்றுக்கொள், மொத்தத்தில் சரணடை.

இதை ஒருவர் எழுதும்போது, அதே ஆட்சி ஆகாயத்திலிருந்தும் தரையிலிருந்தும் தொடர்ந்து குண்டுபோடுகிறது, விடுதலைப் புலிகளின் கையில் சின்னதொரு நிலப்பகுதி இருக்கிறது. சாதாரணத் தமிழ்க் குடிமக்கள் பத்திலிருந்து இருபது வரை தினம்தினம் கொன்றுபோடுகிறது. இன்னும் பலரை ஊனமாக்குகிறது. பல சின்னஞ்சிறு குழந்தைகள் கைகால் இழந்து நிற்கிறார்கள். அவர்கள் பத்திரமாக இருக்கலாம், விடுதலைப்புலிகள் மனசாட்சியின்றி அவர்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தாதிருந்தால்; அல்லது, இன்னும் மோசமாக, தப்பிக்க முயற்சிப்பவர்களை அவர்கள் சுடாதிருந்தால். ஆனால், அதை இந்த அரசின் கொடுமைக்குச் சாக்குப்போக்காகக் கொள்ள முடியாது.

ஆனாலும், இதை ஒருவர் வாசிக்கும்போது, இடதுசாரிகளின் பிரிவினரிடமிருந்து அறச்சீற்றத்தையோ, கொந்தளிப்பையோ பார்க்கமுடிவதில்லை. சாதாரண மக்களின் சாவைக்குறித்து விதிக்குட்பட்ட, மேற்கோட்குறிகளுக்குள்—அவலமான—அக்கறையின் சைகை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், குறிப்பிடத் தகுந்த அளவுக்கு, இந்த அரசின் கொடுமை அதற்கான நம் எதிர்வினையை வடிவமைக்கக்கூடாது, இந்த அரசு கருதிக்கொண்டிருக்கும் வெற்றியின் ”நிஜமே” வடிவமைக்க வேண்டும் என்பதாகத் தோன்றுகிறது.

உதாரணத்துக்கு இப்படியொரு கூறு காணப்படும் சுமனசிரி லியநாகேயின் கட்டுரையை எடுத்துக்கொள்வோம். ”தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்குப் பிறகான சகாப்தம்” பற்றிப் பலரும் கொண்டிருக்கும் நிலைப்பாடு ஒன்றை அது தெளிவுடன் வெளிக்காட்டுகிறது. ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை முடிந்துவிட்டதெனக் கருதுவது உண்மைபோல் வலம்வரும் ஒரு அதி-கற்பனையே (fantasy). அதன் வரலாறு மறதியை அல்ல, வளைந்துகொடுக்கும் தன்மையையே காட்டுகிறது. வலுவிழக்கச் செய்யப்பட்ட, உடைந்துபோன கொரில்லாக்கள்—இப்போதைப்போல எப்போதுமே அவர்கள் தங்களிடையே கூட புகழைத் தொலைத்ததில்லை— என்றபோதிலும், அரசியல்-ராணுவப் பரப்பிலிருந்து அவர்களின் மறைவு தவிர்க்க இயலாதது என்று சொல்லமுடியாது. இதைத் தவிர்த்துப் பார்த்தாலும், தமிழர் போராட்டத்தின் நீதி குறித்ததான இடதுசாரிகளின் கடப்பாடு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவிதியோடு இணைந்திருப்பது அல்ல.

நீதியோடு கூடிய அமைதிக்கான தன் கடப்பாட்டை லியநாகே பல ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைத்திருக்கிறார். குறிப்பாக சென்ற இரண்டு வருடங்களில் அவரது பல சிந்தனாபூர்வமான குறுக்கீடுகளை நான் பாராட்டியிருக்கிறேன். ஆனால், அவர் இப்போது இந்த ஆட்சிக்கு வெள்ளை அடிக்கும் வேலையைச் செய்கிறார். இதை நான் இழப்புற்ற உணர்வோடு சொல்லுகிறேன், கோபத்தில் அல்ல. ”புரட்சிகரமான” அரசியல் சட்ட மாற்றம் ”சாத்தியமில்லை” (unlikely)---இந்த வார்த்தை அவர் கட்டுரை முழுதும் குப்பையாக இறைகிறது—-என்று வாதிடும் அவர் யதார்த்தமான ”சீரமைப்பு” ஒன்றை நாம் எல்லோரும் ஏற்கவேண்டும் என்று பரிந்துரைக்கிறார். பதிலுக்கு ஒருவர் கேட்கலாம்: அமெரிக்க நாட்டின் அடிமைகள் தங்கள் அடிமைத்தனம் முடிவுக்கு வரும் சாத்தியம் பற்றி யோசித்துக் கொண்டிருந்திருந்தால், தங்களை மூழ்கடிக்கும் வெள்ளை ஸ்தாபனங்களின் அதிகாரத்துக்கு எதிரான வாய்ப்புகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்திருந்தால், அவர்கள் கலகம் செய்திருப்பார்களா? செய்திருக்க வாய்ப்பில்லை.

நம்மால் நம்ப இயலாதபடி, இலங்கையின் மிகமோசமான இன்றைய நிலைமையின் ஒரு பகுதிக்குக் கூட பொறுப்பானதாக ராஜபக்சே-யின் ஆட்சியை ஒரு முறைகூட அடையாளப்படுத்துவதில்லை லியநாகே. மற்றவரை ஒறுத்துக் கட்டப்படும் தேசியத்தின் “முக்கிய ஆதரவாளர்கள் JVP-யும் ஹேலா உருமயா-வுமே.” SLFP இந்தக் கருத்தியலைப் பகிரவில்லை, எந்தப் பழிபாவமும் அது அறியாதது என்பதுபோல.
இதை ஒருவர் எழுதும்போது, ராஜபக்சே-யின் ஆட்சி வன்னித்தமிழர்களை மூன்று வருடம்வரை தங்கவைக்கக்கூடிய தடுப்பு முகாம்களைக் கட்டுவதைப் பற்றி அறிவித்திருக்கிறது. பள்ளிகளும் மருத்துவமனைகளும் வங்கிகளும் இந்த தடுப்பு முகாம்களுக்குள் உண்டு. சித்திரவதை முகாம்களை ஒத்த இந்த முகாம்களுக்காக நிதி உதவி கேட்டு ராஜபக்சே-க்கள் துணிச்சலோடு ஐ.நாவையும் அரசுசாரா நிறுவனங்களையும் (இதே நிறுவனங்கள்தாம் இவர்களின் பேச்சாளர்களால் களங்கப்படுத்தப்படுபவை) அணுகியிருக்கிறார்கள்.

இந்த அரசின் குறுகிய, ஆனால் மாறாது மற்றவர்களைத் தொடர்ந்து ஒறுக்கும், ஜீவனத்தை மனதில் கொண்டால், திட்டத்தின் அடுத்த கட்டம் என்ன என்பதை முன்கூட்டியே காண ஒருவர் ஜோசியராகவோ சமூக அறிவியலாளராகவோ இருக்கத் தேவையில்லை. இந்த ஆட்சி, கடந்த இரு வருடங்களாக, JHU-(ஜதிக ஹேல உருமய)-வின் சம்பிக ரணவக, பசில் ராஜபக்சே ஆகியோரின் தலைமையில் கிழக்கின் முஸ்லீம்களின் நிலங்களை திட்டம்போட்டு அபகரித்துவருகிறது. சிங்களக் குடியேற்றமும் தொலைவில் இல்லை.

தமிழர்கள் அகற்றப்பட்ட வன்னி நிலத்திலும் பின்னர் சிங்களர்களின் குடியேற்றம் நிகழும் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை. இதுதான் தேசியக் கேள்விக்கு முன் ராஜபக்சே-க்கள் வைக்கும் “கடைசித் தீர்வு:” அரசியல் ரீதியாக, தமிழர்களை முக்கியமில்லாதவர்களாக ஆக்கிவிடு, எந்தத் தடையையும், அது அஹிம்சை வடிவத்தில் இருந்தாலும், உடல்ரீதியாக அப்புறப்படுத்தி விடு, எஞ்சியிருப்பவர்களை முகாம்களில் அடைத்துவிடு.

இதில் விவாதிக்க வேண்டிய கேள்வி ஒன்றுதான்: 1940-களின் பின்பகுதிகளின் டி.எஸ். சேனநாயகே முதற்கொண்டு இப்படியான தந்திரங்களை முறையாகக் கையாண்டுவரும் சிங்களத் தேசியம் இதை ஜியோனிஸத்திடமிருந்து (Zionism, யூதர் தாய்நாடு இயக்கம்) கற்றுக்கொண்டதா, அல்லது இஸ்ரேலியர்கள் இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டார்களா? 1980-களின் மத்தியிலிருந்து இந்த இரண்டு அரசுகளும் வெளிப்படையாகக் கூட்டாகச் செயல்படுகின்றன என்பது தற்செயல் அல்ல. 1980-களின் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த மகிந்த ராஜபக்சே, பாலஸ்தீனியரின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த முற்போக்குவாதியாக இருந்திருக்கலாம்; ஆனால், அவர் ஆட்சி இஸ்ரேலிய அரசோடு ஒப்புநோக்கும் வகையில் இருக்கிறது.

இப்படியொரு சூழலில், சீரமைப்பு என்று ஒன்றை முன்வைப்பது, வடக்கில் எத்தனை சிங்களர்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கலாம் என்பதற்கான விவாதமாகவே இருக்கும். அன்றி, இப்படியான குடியேற்ற ஆதிக்கம் முதலில் நடக்கலாமா என்பதைப் பற்றியதாக இருக்காது.

ஆனால், ”சீரமைப்பு,” “புரட்சிகர மாற்றம்” போன்றவை மட்டுமே மாற்றுவழிகள் அல்ல. எதிர்ப்பு—நீதியோடு கூடிய அமைதிக்கான தளராத கோரிக்கை—மற்றொரு வழி. என்றபோதிலும், லியநாகே தன் நிலைப்பாட்டை தந்திரமான இத்தகைய பேச்சுப்பாணிக்குள்ளேயே வைக்கிறார். என்ன, சீரமைப்பு யதார்த்தமாகவும் இயலக்கூடியதாகவும் காரணம் சொல்லக்கூடியதாகவும் இருக்கிறது. அதற்கு மாற்றான புரட்சிகர மாற்றம் நியாயமானதல்ல. ஏனென்றால், லியநாகே ஒருவேளை அறியாமலேயே மறு உற்பத்தி செய்யும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் புனைந்து உருவாக்கிய உலகநோக்கில், புரட்சியாளர் என்பதன் அர்த்தம் பயங்கரவாதி தான்.

ஆம், விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று குற்றஞ்சாட்டமுடியும், அந்தச் சொல்லை ஒருவர் பயனுள்ளதாக எண்ணினால். தேசிய விடுதலை இயக்கங்களிலேயே அதன் கொடுமையை வேறு எந்த இயக்கத்தோடும் ஒப்பிடமுடியாது. மிக நன்றாகவே அறியப்பட்ட அதன் வரலாற்றை இங்கே திருப்பிச்சொல்ல தேவையில்லை. விடுதலைப்புலிகளும் அதன் தலைமையும் போர்க்குற்றங்களுக்கான விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்ற வாதத்தை பலமாகவே வைக்கமுடியும். ஆனால், நிச்சயமாக, அதே அளவுக்கு, சமமான, பலமான வாதத்தை இந்த அரசை நடத்திச் செல்லுபவர்கள் பற்றியும் வைக்கமுடியும்.

அதே நேரத்தில், ஆட்சியோடு உரையாடல் வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒருவர் வாதிடும்போது, ஏன் அவர் அதை விடுதலைப்புலிகளோடும் செய்யவேண்டும் என்று வாதிடக்கூடாது? கருத்தியல்ரீதியாக இரண்டுமே அடுத்தவரை விலக்கும், ”வரம்பற்ற” என்று சொல்லமுடியாவிட்டாலும், தீவிர தேசியத்தை தம் உருவமாகக் கொண்டிருக்கின்றன. இரண்டுமே மாற்றுக்கருத்தைத் துரோகமாகப் பார்க்கின்றன. லசந்த விக்ரமதுங்கே-யின் கொலைக்குப்பின் கோதபாய ராஜபக்சே உண்மையிலேயே இதை BBC தொலைக்காட்சிக்குச் சொல்லியிருக்கிறார். கே.பத்மநாபா, ரஜினி திரநகாமா உட்பட எதிர்ப்பை முன்வைத்தவர்களை விடுதலைப்புலிகள் அமைப்பு திட்டமிட்டுக் கொலைசெய்து வந்திருக்கிறது. என்ன வித்தியாசம், விடுதலைப்புலிகளின் கொடுமை பத்தாண்டுகள் கணக்காகத் தொடர்ந்து நீண்டுகொண்டிருக்கிறது என்பதுதான். எளிமையாகச் சொன்னால், இன்னும் அதிகமானோரை அது கொன்றிருக்கிறது, மிரட்டியிருக்கிறது, அழித்திருக்கிறது. ஆனால் எண்களின் கணிப்பு இடதுசாரி அறத்தைத் தீர்மானிக்கக்கூடாது.

லியநாகே-வுக்கு இது தெரியும். அவர் தமிழர்களையும் முஸ்லீம்களையும் “சிறுபான்மையினர்” என்று அழைக்க விரும்பாமல் “எண்ணிக்கையில் குறைந்த தேசத்தினர்” என்று குறிப்பிடுகிறார். ஆனாலும் அவரால் தன் நிலைப்பாட்டை எண்களின் தர்க்கத்துக்கு வெளியே வைக்க முடியவில்லை. தெர்ரிதாவுக்குப் பிறகு ஒருவர் கேட்க முடியும்: எந்த எண்ணிக்கையில் ஒரு தேசம் சிறியதாகிறது அல்லது பெரியதாகிறது? இடைப்பட்ட அளவுக்கும் நமக்கொரு கூண்டு தேவையா? சீனர்கள் என்பது மிக-அதிக அளவா? சமூக அறிவியலாளர்களுக்கே கிடைக்கிறமாதிரி இவற்றுக்கான சரியான விதிகளையும் பதில்களையும் கொண்ட ரகசியப் புத்தகம் ஏதும் இருக்கிறதா?

மிக முக்கியமாக, இது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றா? தமிழர்களின் (ஏன் அதேபோல பாலஸ்தீனியர்களின்) ஒடுக்குமுறையால் நாம் அசைக்கப்படுகிறோம், கோபப்படுகிறோம், மலைக்கிறோம் என்கிற உண்மைக்கு இந்த எண்ணிக்கையோடு என்ன தொடர்பு இருக்கிறது? அறச்சீற்றம் என்பது நம் எதிர்வினைக்கான ஏவுகளமாக இருக்கக்கூடாதா?
(இரண்டாம் பகுதி பின்னர் வெளிவரும். தவிர்க்கமுடியாத வேலைப்பளுவால் மொழிபெயர்ப்பை இப்போதைக்குத் தொடர முடியவில்லை.)

Monday, March 2, 2009

நோம் சோம்ஸ்கியின் பதில், உங்கள் தகவலுக்கு

Dear friends,

We sent our response to Professor Noam Chomsky on Tuesday, 02/24/09, incorporating your signatures that we received in our online petition and in the response2chomsky@gmail.com account as on Tuesday evening. The number of signatories is 193. Professor Chomsky replied to us immediately 02/24/09. This was our covering letter:


Dear Professor Chomsky,

Greetings. We have come across your recent interview on “Sri Lanka And American Affairs” with the Sri Lanka Guardian's Washington correspondent Eric Bailey (Sri Lanka Guardian, 11 February 2009). The interview surprised as well as disappointed us, precisely because we are quite aware of your sustained involvement in anti-war activism and commitment to oppressed peoples. We think that the interview sidesteps the crucial issue of the suffering and casualties of Tamil civilians during the on-going war in Wanni, Sri Lanka. Please find below and in the attachment our joint letter in response to the interview. We are sending this response after a thorough discussion on this issue and after circulating it among those who are concerned with the suffering of Tamil civilians in Sri Lanka. We believe that our response would urge you to revisit the views that you expressed at the interview.
Thanks for your time.

Sincerely

A group of artists, writers, and intellectuals concerned with the suffering of Tamil civilians in Sri Lanka


Professor Chomsky's response is as below:


"Thanks for your letter. You are correct that I did not discuss the topics you mention, nor did I discuss atrocities committed by the Tamil Tigers. The reasons are those I stated. I do not discuss topics unless I know enough about them to voice a confident opinion.

Noam Chomsky"

This is for your information. We thank Professor Chomsky for his quick response. We also thank you for your support in this issue.

Regards

For response2chomsky@gmail.com

Sunday, March 1, 2009

கிருத்திகா: ஒரு கடிதமும் பதிலும்

”கிருத்திகா: அஞ்சலி” என்கிற தலைப்பில் ஜெயமோகன் கட்டுரை ஒன்றை தன் வலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார். கட்டுரையில் சில விஷயங்களைச் சுட்டி நான் எழுதிய கடிதத்தையும் அவர் பதிலையும் இங்கே காணலாம். ஜெயமோகனைப் பொறுத்தவரை அவரது நல்ல குணம் ஒன்றைச் சொல்ல வேண்டும். அவர் தான் மேற்கொண்டிருக்கும் பல்வேறு எழுத்துவேலைகளுக்கு நடுவிலும் கடிதங்களுக்கு உடனே பதில்போடக்கூடியவர். இக்கடிதத்துக்கும் பதில் உடனே வந்தது.

பெண்ணியர்கள் நிறைய எழுத வேண்டும், பெண்ணிய வாசிப்பை பரவலாக்க வேண்டும் என்ற கருத்தோடு எனக்கு உடன்பாடே. பெண்ணிய வாசிப்பைத் தவிர்த்துப்பார்த்தாலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் பொதுவாகவே தமிழில் காத்திரமான கட்டுரைகளை எழுதும் பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. இதைக்குறித்த வருத்தம் எனக்கும் உண்டு.

ஆனால், என் கேள்வி என்னவென்றால், கிருத்திகா போன்ற எழுத்தாளர்களைப் பற்றி ஏன் பெண்கள் அல்லது பெண்ணியர்கள் மட்டுமே எழுதவேண்டும்? கிருத்திகாவின் எழுத்து “பெண்” என்கிற பிரதிநிதித்துவ தொகுதியைத் (representative constituency) தாண்டியது என்றே நினைக்கிறேன். தி. ஜானகிராமனையும், மௌனியையும், சுந்தரராமசாமியையும், நகுலனையும் பற்றி கட்டுரைகள் எழுதப்படும்போது கிருத்திகா ஏன் விவாதிக்காமல் விடப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. இதற்கான காரணமாகத்தான் இலக்கிய ஆண்மையச் சூழலை நான் குறிப்பிட்டேன். அடிப்படையில், ஆண்குழுக்களின் வலைப்பின்னல்களும் அவற்றுக்கிடையேயான தொடர்புறவுமே “சிறந்தது” என்று ஒரு படைப்பை நிறுவி அதை canonize செய்து இலக்கிய அங்கீகாரத்தைப் ”பெற்றுத்” தருகின்றன. மேலும் Canonization நடக்காதவரை ஒரு படைப்பை எழுத்தாளரின் குடும்பத்தினரே எடுத்து மீள்-பதிப்பித்தாலும்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது? இலக்கியத்தை தொடர்ந்து பிரசுரித்துவரும் ஒரு நிறுவனமோ அமைப்போ மீள்-பிரசுரம் செய்வதற்கும் எழுத்தாளரின் குடும்பத்தினர் அதைச் செய்வதற்கும் எத்தனை வேறுபாடு? இரண்டும் ஒன்றா என்ன?

பெண்கள் தமக்கான வலைப்பின்னல்களை நிறுவி பெண் எழுத்தாளர்களை முன்னெடுத்துச் செய்யலாமே என்று ஒருவேளை ஜெயமோகன் கேட்கலாம். அதற்கு என் பதில் இதுதான்: அதற்கு காத்திரமான எழுத்துகளில் தொடர்ந்து ஈடுபடும் உற்சாகமும் முனைப்பும் பயிற்சியும் கொண்ட நிறைய பெண் எழுத்தாளர்கள்/கட்டுரையாளர்கள் தேவை. மேலும் அவர்கள் இந்த ஆண்-வலைப்பின்னல்களூடே செயல்படும் காரிய, காரணார்த்த அரசியல்களை விளையாட்டாகத் தாண்டிச்செல்லும் பக்குவமும் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என்றுதான் தோன்றுகிறது.

அதேநேரத்தில் எழுத்தாளர்கள் பெண்களாக இருக்கும்போது அவர்களின் எழுத்துகளைப்பற்றி மற்ற பெண் எழுத்தாளர்களோ பெண்ணியம் பேசுபவர்களோதான் எழுத வேண்டும், அவற்றைப் பரிந்துரைக்க வேண்டும் என்பதில்லை என்றே கருதுகிறேன். அதேபோல, இலக்கியத்தைப் பொறுத்தவரை பெண்ணிய வாசிப்பு என்பது மார்க்ஸிய வாசிப்பு, அமைப்பியல் வாசிப்பு, பிறகான/பின் நவீனத்துவ வாசிப்பு போன்ற ஒரு சிந்தனைப்போக்கு. இலக்கிய எழுத்தை பலவிதங்களில்--பெண்ணியத்தை சுவீகரித்தோ அல்லது அதைக் கொஞ்சம் தள்ளிவைத்தோ-- பெண்களும் சரி, ஆண்களும் சரி வாசிக்கலாம், எழுதலாம். அந்தவகையில் கிருத்திகாவின் எழுத்தும் பிற பெண் முன்னோடிகளின் எழுத்தோ இருபாலினரின் பல்வகைப்பட்ட பார்வைக்கும் ஆய்வுக்கும் உகந்தவையே.

என் கடிதமும் ஜெயமோகனின் பதிலும் இதோ:

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் "கிருத்திகா: அஞ்சலி" கட்டுரையை வாசித்து ஆச்சரியமும் வருத்தமும் அடைந்தேன். அந்தக்கட்டுரையில் இருக்கும் தகவல் பிழைகளை உங்கள் பார்வைக்கு கொண்டுவர விரும்புகிறேன். "பெண்ணியம் வந்தபின் கிருத்திகா மறுவாசிப்புக்கு ஆளாகியிருக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறீர்கள். "வாசிக்கும் பழக்கம் கொண்ட பெண்ணியர்கள் நானறிந்தவரை தமிழில் யாருமில்லை" என்றும் நிதானமின்றிக் கூறியிருக்கிறீர்கள். கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலில் இயல்மொழி செயல்படும் விதம்பற்றி பத்துவருடங்களுக்கு முன்பே காலக்குறி (மார்ச் 1999) இதழில் வெளிவந்த "கதையுலகில் தமிழின் இயல்மொழி" என்கிற கட்டுரையில் நான் எழுதியிருக்கிறேன். எனினும் கிருத்திகாவின் நாவல் தமிழில் பரவலாக விவாதிக்கப்படாததாலும் பெண்ணிய வாசிப்பை முன்வைக்க வேண்டும் என்று கருதியதாலும் இந்நாவலைப் பற்றி மீண்டும் ஒரு விரிவான கட்டுரையை எழுதினேன். வாஸவேச்வரம் நாவலில் மூன்றாம் பதிப்பின் (காலச்சுவடு, செவ்விய நாவல்கள் வரிசை, 2007) முன்னுரையாக அக்கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. என் பதிவிலும் www.innapira.blogspot.com நவில்தொறும் நூல்நயம் பகுதியில் சென்ற ஆண்டில் அது பதிக்கப்பட்டிருக்கிறது. பொதுப்படையாக ஒரு காட்டமான விமரிசனத்தை வைக்கும்போது தகவல்களை உறுதிசெய்துகொண்டு நீங்கள் எழுதியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும், "கிருத்திகாவின் மகளுக்கும் அவர்களின் மாபெரும் அமைப்புக்கும் தமிழின்மீது பெரிய மதிப்பு இல்லாத காரணத்தால் அவர்கள் கிருத்திகாவை ஒரு தமிழ் எழுத்தாளராக முன்னிறுத்தவில்லை. ஆகவே அவரது நூல்கள் இன்று கிடைக்கவே இல்லை. எவராவது ஆர்வம் எடுத்து அவற்றை வெளியிடலாம்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் அறிந்தவரை, கிருத்திகாவின் மகள் மீனா அவர்கள் தமிழில், நவீன இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். பணிகளுக்கு இடையிலும் புதிய கவிதைநூல்களை, புதினங்களை வாங்கி வாசிக்கக்கூடியவர். வெண்ணிலா மற்றும் சுகிர்தராணியின் கவிதைகளை, கோணங்கியின் எழுத்துகளை அவர் என்னோடு விவாதித்தது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. அதேபோல, காலச்சுவடு பதிப்பகம் வாஸவேச்வரம் நாவலை பிரசுரிக்க நினைத்து மீனாவை அணுகியபோது உடனே தன் தாயிடம் பேசி--அப்போது கிருத்திகா நினைவையும் மறதியையும் மாறிமாறிக் கொண்டிருந்த நேரம்--நாவல் பதிப்பு பெற உதவி செய்தார். இது உங்கள் தகவலுக்கு.

கிருத்திகா முன்னணித் தமிழ் எழுத்தாளராக இதுவரை அறியப்படவில்லை என்றால், அவரது புத்தகங்களின் பதிப்புகள் வெளிவரவில்லை என்றால், அதற்கான பழியை தமிழ் நவீன இலக்கியச் சூழலில் நின்று நிலைபெற்றிருக்கும் ஆண்மையச் சூழல் தான் ஏற்கவேண்டுமே தவிர அவர் குடும்பமல்ல. இது கிருத்திகாவுக்காக மட்டும் நான் சொல்லவில்லை. எந்த எழுத்துமே இலக்கியச் சூழலால்தான், அதில் தீவிரமாக இயங்குபவர்களால்தான் அவர்களிடையே நேரும் விவாதங்கள், உரையாடல்களின் வாயிலாகத்தான் canonize செய்யப்படுகிறது, நல்ல எழுத்தாக வகைமைப்படுத்தப்படுகிறது, வாசகர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது, வாசகர்கள் விரும்பினால் பதிப்புகள் காண்கிறது. கிருத்திகாவின் எழுத்து ஏன் இத்தகைய கவனம் பெறவில்லை என்ற கேள்வியை இலக்கியத்தில் இயங்குபவர்கள், இயங்கியவர்கள் தங்களிடமேதான் கேட்டுக்கொள்ளவேண்டும், இந்தக்கேள்வியின் பதில் எழுத்துலகின் அரசியலை நாம் விரும்பாவண்ணம் நமக்கே காட்டித்தந்தாலும்.
அன்புடன்
பெருந்தேவி

*****

அன்புள்ள பெருந்தேவி,

மன்னிக்கவும். உங்கள் கட்டுரைகள் என் கவனத்துக்கு வரவில்லை. என்னுடைய கூற்று சற்று பொத்தாம்பொதுவாக அமைந்துவிட்டது குறித்து வருத்தமே. அது ஒரு பொதுவான மனப்பதிவே. நான் பழகிய பெரும்பாலான பெண்ணியர்கள் முன்னோடிகளின் நூல்களை போதுமான அளவுக்கு வாசித்தது இல்லை என்பதுடன் சிலர் அவ்வாறு வாசிக்கதேவையில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று நமக்கு எப்படிபபர்த்தாலும் ஒரு ஆயிரம் பக்க பென்ணிய எழுத்துக்கள் கிடைக்கின்றன. அவற்றில் மேலைநாட்டுப்பெண்ணிய எழுத்தாளர்கள் - எடித் வார்ட்டன், வெர்ஜீனியா உல்ப், சீமோங் த பூவா முதல் இன்றுள்ளவர்கள் வரை-- பற்றிய எத்தனை பக்கங்கள் உள்ளன என்று எவரும் பார்க்கலாம். வை.மு.கோதைநாயகி ஆர்.சூடாமணி முதல் இன்றுவரையிலான எழுத்தாளர்களைப்பற்றி புதிய கோணத்தில் தமிழ்ப்பெண்ணியர் எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்? அந்த ஏமாற்றத்தின் பதிவே அது.

நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்-- மேலும்எழுதுவீர்கள் என்றால் அது மகிழ்ச்சிகரமானதே. ஆனால் அப்படி பெண்ணியர்கள் ஏதும் எழுதாதற்கும் ஆணியவாதிகள்தான் காரணம் என்றால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ஆணியவாதிகள் ஆணியவாதிகளாக இருப்பதனால் பெண்ணெழுத்துக்களைப் பற்றி எழுதவில்லை. சரி, ஏன் பெண்கள் அவர்களைப்பற்றி விரிவாக எழுதி ஒரு மாற்றத்தை உருவாக்கக் கூடாது என்பதே என் கேள்வி. அதுதானே இயல்பானது?

மீனா சாமிநாதனைப்பற்றிய உங்கள் தகவல் புதிய செய்தி எனக்கு. அவரது இடத்தில் இருந்திருந்தால் நான் கிருத்திகாவின் படைப்புகளை அனைத்தையும் சிறந்த பதிப்புகளாகக் கொண்டு வந்திருப்பேன். அதுவே எனக்கு தமிழ் மீதான பற்றின் மதிப்பின் ஆதாரமாக இருந்திருக்கும்

ஜெ

Wednesday, February 25, 2009

நம்மைப் பிரியவில்லை கிருத்திகா

தமிழில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவரான கிருத்திகாவின் மறைவுச் செய்தி என்னை அடைந்தபோது ஒரு கணம் நிரந்தர இழப்பின் கையறுநிலை என்மேல் கவிந்தது. கிருத்திகாவை அவர் எழுத்தின் மூலமே நான் அறிவேன். அவர் மகள் மீனா சுவாமிநாதன் அவர்களை எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் கிருத்திகாவை நான் சந்தித்ததில்லை. பொதுவாகவே எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தின், கலையின் மூலமாகவே அணுக்கம்கொள்ளும் குணம் எனது. மேலும் எழுத்துக்கும் கலைக்கும் பின்னால் படைப்பாளியாக நிற்கும் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள், அவர்களின் நேரடி உறவு, நட்பு இவற்றைவிட, எழுத்தும் கலையும் நமக்கு அறிமுகப்படுத்தும், சாத்தியப்படுத்தும் உலகங்கள் இன்னும் பெரிதாகவும் செழுமையானதாகவும் அமைந்துவிடுவதால் எழுத்தாளர்களை, கலைஞர்களைத் தேடிப்போகும் தேவையை நான் உணர்ந்ததில்லை.


கிருத்திகாவின் நாவல் வாஸவேச்வரத்தை 1990-களின் தொடக்கத்தில் நான் வாசித்தபோது, அவரது கதை சொல்லும் நேர்த்தியும் கதைக்கு அடித்தளமாக பெண்களை நிறுவும் அவர் பார்வையும் முதல்வாசிப்பிலேயே என்னைக் கவர்ந்தன. அதன்பின்னர் அவரது "புதிய கோணங்கி," "புகை நடுவில்" போன்ற மற்ற நாவல்களைத் தேடி வாசித்தேன். தமிழின் இயல்மொழி வடிவம் நவீன சிறுகதை, நாவல்களில் செயல்படும் விதம் குறித்த என் கட்டுரை ஒன்று காலக்குறி இதழில் 1999-ல் பிரசுரமானது. சிறுகதையில், நாவலில் நமக்கு ஸ்தூலமாகத் தரப்படும் மொழிக்குறிகள் (language signs) தருகிற உடனடி அர்த்தம், எவ்வாறு கதையாடலோடு தொடர்பு கொள்ளுகிறது என்பதைப் பேசுகிற அந்தக் கட்டுரையை வாஸவேச்வரத்தையும் புதுமைப்பித்தனின் சில சிறுகதைகளையும் முன்வைத்தே எழுதினேன். பின்னர் 2007-ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் செவ்வியல் வரிசையில் வாஸவேச்வரத்தில் மூன்றாம் பதிப்பை வெளியிட்டபோது, நாவலுக்கு முன்னுரை எழுத என்னைக் கேட்டார்கள். மகிழ்ச்சி அடைந்தேன். இரண்டு காரணங்கள்: ஒன்று, தமிழில் மிகவும் பிடித்த நாவல்களில் ஒன்றுக்கு முன்னுரை எழுதப்போகிறேன் என்பது, மற்றொன்று இந்த வாய்ப்பினால் இன்னும் சிலதடவைகள் அந்த நாவலை வாசிக்கும் அனுபவம் கிடைக்கப்போகிறது என்பது.


ஆனால் என் முன்னுரையை சம்பிரதாயமானதொரு முன்னுரையாக எழுதக்கூடாது எனத் தீர்மானித்தேன். நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில் கிருத்திகாவின் எழுத்து அது பெற்றிருக்கவேண்டிய பரவலான கவனிப்பையும் அங்கீகாரத்தையும் பெறவில்லை என்பது எனக்குப் பெரும் ஆதங்கமாக இருந்தது. பொதுவாகவே தமிழ் நவீன இலக்கியச்சூழல் ஆண்களின் குழுக்களின் வலைப்பின்னல்களால் உருவாகியபடி இருப்பதே. இந்தக்குழுக்கள் ஓருசில பெண்களின் எழுத்துகளை முன்வந்து அங்கீகரித்தாலும் அது அந்தப் பெண்கள் வலைப்பின்னல்களோடு தொடர்புற்றிருக்கும் இடத்தைப் பொறுத்தோ, அல்லது ஒரு தவிர்க்கமுடியாத வெற்றுப் பிரதிநிதித்துவ அங்கீகாரமாகவோதான் அமைகிறது என்பதும் இலக்கியச்சூழலை அவதானிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். கிருத்திகா பரவலாகப் பேசப்படாமல் போனதையும் இத்தோடு இணைத்துப் பார்க்கலாம்.


வாஸவேச்வரம் நாவலையே எடுத்துக்கொள்வோம். நாவலின் முதல்பதிப்பு 1966-இல் டால்டன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது; மூன்றாம் பதிப்பு காலச்சுவடால் 2007-இல் வெளியிடப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட நாற்பது வருடங்களில் மார்க்ஸியம், இருத்தலியல், அமைப்பியல், பின் - நவீனத்துவம், பெண்ணியம் எனப் பல்வேறு இலக்கியப் போக்குகள், சிந்தனைகள், இவற்றுக்கிடையே தொடர்ந்த உரையாடல்களின் வாயிலாக நவீனத்தமிழ் விமரிசனக்களம் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விமரிசனக்களத்தில் கிருத்திகாவின் இந்த நாவலாகட்டும், இதர எழுத்துகளாகட்டும், விரிவாகப் விவாதிக்கப்படவேயில்லை. நூல் அகம் பதிப்பகம் 1991-இல் கொண்டுவந்த வாஸவேச்வரத்தின் இரண்டாம் பதிப்புக்கு நாகார்ஜுனன் எழுதிய பின்னுரை ஒரு விதிவிலக்கு.


நவீனத் தமிழ் இலக்கியச்சூழல் குறித்த என்னுடைய ஆதங்கத்தை சமனப்படுத்த வேண்டி, முன்னுரையற்ற முன்னுரையாக, விரிவான கட்டுரையாகவே வாஸவேச்வரம் நாவலின் காலச்சுவடு பதிப்புக்கான முன்னுரையை நான் எழுதினேன். ஆண்-அதிகாரத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் குடும்ப அமைப்பை, அந்த அமைப்புக்குள்ளிருந்தே பால் விழைவுகளின் ஊடாட்டத்தின்வழி நாவலின் பெண்பால் பாத்திரங்கள் எதிர்கொள்ளுவதை விவரிக்கிறது அந்த முன்னுரை. இங்கே ஒன்றைக் குறிப்பிடுவது முக்கியம்: கிருத்திகா இந்நாவலில் குடும்ப அமைப்பை கேள்விகேட்கும் பெண்ணியத்தை கோஷங்களாகவோ கருத்துகளாகவோ உயர்த்திப் பிடிப்பதில்லை. கதையை நகர்த்திச் செல்லும் முக்கியமான உணர்வெழுச்சிமிகு கட்டங்களில் ஆண்-அதிகாரத்துக்கான சவால் கதைப்போக்கிலேயே பெண் கதாபாத்திரங்களால் தீர்மானிக்கப்படுகிறது; சில இடங்களில் இந்தச் சவால்தான் இத்தகையக் கட்டங்களையே கதைப்போக்கில் நிர்மாணிக்கிறது. ஒரு சிறந்த நாவலாசிரியராக கிருத்திகா வெற்றிபெறுவது இப்படியொரு நுட்பமான எழுத்துப்பாணியை கையாண்டிருப்பதாலேயே என்று நினைக்கிறேன்.


ஒரு குறிப்பிட்ட வகைசார் பெண்ணிய வாசிப்புக்கு வாஸவேச்வரத்தை நான் உட்படுத்தியிருந்தாலும் கிருத்திகாவின் நாவல்கள் இவ்வாசிப்பைத் தாண்டிய பரிமாணங்கள் கொண்டவை. நவீன வாழ்க்கை தரும் தனிமனிதத் துயரும் அலைக்குறுதலும் முரண்பாடுகளும், இவற்றை தாண்டத் துடிக்கும் மனிதர்கள் சாரமற்ற சடங்கு சம்பிரதாயங்களைப் பிடித்துத் தொங்கும் வேடிக்கையும் இந்நாவலில் மட்டுமல்ல, "சத்ய மேவ" போன்ற கிருத்திகாவின் மற்ற நாவல்களிலும் பேசுபொருட்களாக இருக்கின்றன; கூர்மையான எள்ளல்தொனியோடு விவாதிக்கப்படுகின்றன. மரபின் அம்சமாக கலாச்சாரத்தைப் போற்றிக் கொண்டாடுவதையும் தூற்றி எறிவதையும் தாண்டி, "விளையாட்டு வடிவமாக" அதை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை அவர் தொடர்ந்து தன் எழுத்துகளில் முன்வைத்திருக்கிறார். "வாழ்க்கையையும் சடங்குகளையும் இணைக்கமுடியாமல் போய்விட்டால் நம் இளைஞர்கள் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் சுயகௌரவத்தையும் தேடி எங்கேதான் போக முடியும்? அழகியல் ரீதியான அர்த்தத்தளம் ஒன்றை சமுதாயம் வளர்த்தெடுக்காமல் போய்விடுமானால், மனித ஆத்மாவானது அதைத் தேடி எங்கேதான் போகமுடியும்?” என்பவை இலக்கியத்தை நம்முன் நிறுத்தி அவர் கேட்கும் கேள்விகள்."சுயகௌரவம்," "அழகியல்," "ஆத்மா" போன்றவற்றுக்கான வரையறைகள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம்; கேள்விகளுக்கான பதில்களும் வித்தியாசப்படலாம். ஆனால் இந்தக் கேள்விகளும் இவை நம்முள்ளே எழுப்பும் சிந்தனைகளின் கண்ணிகளும் மிக முக்கியமானவை.


இன்று நம்மிடமிருந்து மறைந்தாலும் எழுத்துருவாக என்றுமே கிருத்திகா நம்மோடு இருப்பார், வலிமையோடு ஒளிரும் ஒரு நட்சத்திரம் போல, தூரத்தில் இருந்தாலும் நமக்கொரு வழிகாட்டியாக.

Thursday, February 19, 2009

இலங்கையில் நடக்கும் போர் குறித்து நோம் சோம்ஸ்கி கூறியிருக்கிற கருத்துகளுக்கான நம் பதில்


நண்பர்கள் அனைவருக்கும்,

கீழே பதிக்கப்பட்டிருக்கிற அறிக்கையை வாசிக்கவும். உலகின் சிறந்த மொழியியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வரிசையில் முக்கிய இடம்பெறும் நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) இலங்கையிலிருந்து வெளிவரும் “லங்கா கார்டியன்” பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அவரது பேட்டி பற்றிய விமரிசனமாகவும் அந்த பேட்டியில் சோம்ஸ்கியை சாதுர்யமாக தனது இனவாதத்திற்கு பயன்படுத்த முனையும் பேட்டியாளரின் நோக்கத்தை சோம்ஸ்கிக்கு அறிவுறுத்தும் வகையிலும் ஈழத்தில் நடக்கும் உண்மை நிலைகளை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடும் எழுதப்பட்ட அறிக்கையே இது.

சோம்ஸ்கி தொடர்ந்து உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களுக்கு அதரவு அளிப்பதுடன் அமேரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்து விமரிச்சித்து வருபவர். ஏற்கனவே சென்னையில் வளைகுடா யுத்தம் பற்றிய ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர். உலகளவில் நன்கு அறியப்பட்ட ஒரு செயல்பாடுமிக்க அறிவுஜீ்வி. மொழியியல் குறித்து உலக அளவில் வளமிக்க புதிய கண்டுபிடிப்புகளையும், பங்களிப்புகளையும் செய்தவர். கிழக்குத் திமூர் துவங்கி காஸாவரை தொடர்ந்து போராட்டங்களை கவனித்து தனது கருத்தக்களை உலக அறிவஜீவிகள், அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்பவர். அவரது கவனத்திற்கு ஈழப்பிரச்சனையின் பரிமாணங்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு சிறு முயற்சியாக உருவானதே இந்த அறிக்கை.

ஈழம் குறித்து நமக்குள் பல்வேறு அரசியல் மாறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம். அவைகள் அப்படியே இருக்கட்டும். ஆனால் ஈழம் பற்றி உருவாக்கப்படும் கருத்துப் பரவலில் அதன் உண்மை நிலையை கொண்டு செல்வதில் நமக்கு அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வரையப்பட்டிருக்கிறது, உங்கள் பார்வைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையை நம்மால் முடிந்த இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இணையத்தில் எழுதும் நண்பர்கள் என அனைவரிடமும் கையெழுத்து பெற்று இதனை சோம்ஸ்கி கவனத்திற்கு ஒரு கூட்டுக்குரலாக கொண்டு செல்வதே நமது நோக்கம்.

சோம்ஸ்கி-யின் நேர்காணலை இந்த இணையத்தளங்களில் நீங்கள் வாசிக்கலாம்:

Z-net
Sri Lanka Guardian
Countercurrents

நீங்கள் செய்யவேண்டியது:

1. "'I AGREE WITH THIS RESPONSE" என்று "SUBJECT" -ல் உங்கள் சம்மதத்தை அறிவித்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்: response2chomsky@gmail.com

மின்கடிதத்தில், உங்களைப்பற்றி-- உங்கள் துறை, பணியாற்றும் களம் (அதாவது எழுத்தாளர், அரசியல் களப்பணியாளர் என்பது போல-- ஒரு சிறு குறிப்பையும் எழுதுங்கள். இது அறிக்கையை அதிகக்கவனம் பெறச்செய்யும்.
2. சோம்ஸ்கி-யின் நேர்காணலையும் அறிக்கையையும் வாசித்த பின்னரே உங்கள் ஒப்புதலை, கையெழுத்தை அனுப்புங்கள்.
3. வாய்ப்புள்ள நண்பர்கள் தங்களுக்கு அறிமுகமான நண்பர்கள் மற்றும் ஈழப்பிரச்சனையில் அக்கறை உள்ளவர்களிடம் இந்த நிலைப்பாட்டை விளக்கி ஒரே அச்சுப்பிரதியில் கையெழுத்து பெற்று அதனை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்கவும். கையெழுத்துடன், இடுபவர்கள் பற்றி மேற்சொன்னது போல சிறு குறிப்புகளையும் அனுப்புங்கள்.
4. வரும் திங்கள் 23 பிப்ரவரி, நேரம் 0630 GMT or 1230 IST or 0100 US Eastern Standard Time-க்குள் நீங்கள் உங்கள் கையெழுத்து மின்கடிதமும் நண்பர்களிடம் கையெழுத்துப் பெற்ற அச்சுப்பிரதியின் ஸ்கேன் செய்யப்பட்ட பக்கமும் அனுப்பி வைக்கவும்.

இவற்றை தொகுத்து நாங்கள் நோம் சோம்ஸ்கியின் முகவரிக்கு அனுப்பிவிட்டு உங்களுக்கும் அதை தெரியப்படுத்துகிறோம்.

அன்புடன்
response2chomsky@gmail.com -க்காக ஜமாலன், பெருந்தேவி


The interview, as can be seen below, sidesteps the crucial issue of suffering of the Tamil people during the war in Wanni. Hence, the following response has been circulated by friends after a thorough discussion (Please see Nagarjunan's blog entry) to focus on this issue and urging him to have a relook at his own interview.

Response to Noam Chomsky’s comments on the ongoing war in Sri Lanka


We (the undersigned), who have immense respect for Professor Noam Chomsky’s work for peace on a global scale, are nevertheless dismayed by his recent comments on the ongoing war in Sri Lanka, made in a telephonic interview to a military analyst working for a journal known to be close to the Sri Lankan government (1).

The interviewer describes Professor Chomsky as a “a self-described anarchist… probably most famous for his strong stances in support of suffering peoples, such as those in Palestine and Somalia” and hopes to “apply his years of experience and insight to Sri Lanka to help the nation make the transition from a house divided to a united and peaceful country.”

Ignoring loss of lives
The interviewer and, more unfortunately, Professor Chomsky clearly sidestep the key issue of the suffering of the ordinary Tamil people in the Wanni region facing the artillery and aerial onslaughts of the Sri Lankan armed forces in its drive against the Tamil Tiger guerrillas fighting for a separate Tamil State.

Professor Chomsky does state, right at the outset of the interview, that “I don't feel that I have a profound enough knowledge of the details to offer a confident opinion”, but “it is clear that.. the military aspect of the conflict seems to be coming to an end.” But the interview totally ignores that this war is increasingly fought away from the eyes of the world, with enormous cost of lives.


A war without witnesses

Professor Chomsky should have been aware that the Sri Lankan government, on 16 September 2008, ordered all international relief organizations out of the Wanni region which was under the control of the Tamil Tiger guerrillas. The Sri Lankan armed forces have repeatedly charged the Tamil Tiger guerrillas, probably numbering around 5,000, of holding around 150,000 to 200,000 civilians at ransom in an ever-shrinking patch, now around 50 sq. km in the coastal Mullaitivu district; something denied by the Tamil Tiger guerrillas.

No journalist, domestic or foreign, is allowed to go beyond Vavuniya town to independently verify information emanating from the battlefields; all journalists travelling to these areas are embedded with the armed forces; unofficial censorship on news from the front including those of casualties of armed forces has been in force in Sri Lanka. One Colombo-based journalist who tried to verify such information, Chris Morris of the British Broadcasting Corporation (BBC), received an open threat from Sri Lanka’s Defence Secretary, Gothabaya Rajapakse, who also happens to be the President’s brother and a US citizen, that he would be chased from Sri Lanka. In a few days, Mr. Morris left the country. (2)

Enduring suffering
Reports from the battlefields nevertheless indicate that more than 1,000 civilians, all of whom ordinary Tamil people, have been killed; a far higher number of people injured, as the Sri Lankan armed forces have shelled homes, roads, makeshift hospitals and even homes for the aged and bombed civilians, which if proved, could amount to war crimes. The suffering endured by the people is in addition to the lack of food, shelter, water, transport, essential drugs and medical care. Some of the targets lay in designated safe zones by the Sri Lankan armed forces where people had taken shelter. The International Red Cross alone has a thin presence of medical personnel in the region and they have recently managed to ship 1,150 injured persons to Trincomalee port for emergency medical treatment.

The armed sources estimate that around 25,000 people have made it from the battlefields to the areas now fully controlled by the armed forces; we understand that they are being held in several makeshift detention camps after a screening process. Some reports say the Tamil Tigers have attacked civilians fleeing the war. Very few independent journalists or political leaders have met with those who had fled the battlefields or had been evacuated from there (3). We also learn that plans are afoot to detain the fleeing population a period of three years in five “model villages”, which is in gross violation of international norms for taking care of internally displaced persons (4).

World aids the war
More importantly, the Sri Lankan government conducts this war with various levels of military assistance from governments around the world - the United States, the United Kingdom, some European nations, India, Pakistan, China and Iran. Thus, the Sri Lankan government is emboldened to ignore calls from international humanitarian agencies including those of the United Nations, to ensure safety of civilians caught in war; it has also ignored calls from prominent human rights organizations including the Amnesty International and Human Rights Watch, for a truce and a humanitarian corridor to provide relief for the suffering people; the only exception so far has been the ships which have evacuated 650 injured persons to Trincomalee.

Procuring consent for war
We can well understand the interviewer’s motive in suppressing the above information. But we wonder why Professor Chomsky, having been eloquentl on the US administration and media’s attempts to manufacture consent for war efforts in Afghanistan and Iraq, fails to question this (Ironically, the interviewer later asks Professor Chomsky about such strategies of the US administration!). Professor Chomsky appears to be unaware of the Sri Lankan government’s tactics of intimidating and bulldozing sections of the media which have refused to be part of the machinery manufacturing consent for this war. Several journalists who have questioned the cost of this war, in terms of lives of civilians and soldiers which are unreported or deliberately underreported, have faced intimidation and even murder.

Indeed, the most well-known case has been that of Lasantha Wickramatunga, editor of the Sunday Leader, a prominent critic of the government who was gunned down last month in Colombo while he was on his way to work (5). Following his murder, at least five journalists who have criticised the Sri Lankan government have fled the country so far (6). Earlier this month, the BBC World Service suspended the flow of its Sinhala and Tamil language services to the state-owned Sri Lanka Broadcasting Corporation after the latter censored selective programmes since November last (7). These indicate that Sri Lanka continues to be one of the most dangerous places for journalists; paramilitary organizations widely perceived to be supported by the authorities stand accused of suppressing media and killing journalists, something which the Tamil Tigers earlier stood accused of (8).

No to truce, yes to war
The interviewer continues to attempt to procure Professor Chomsky’s consent for the Sri Lankan government’s stand of ignoring the demands for a truce and resumption of peace talks with the Tamil Tiger guerrillas. He advocates a bitter fight to the end and asks Professor Chomsky: “Might it be that more lives will be saved if conflicts are allowed to see themselves out and decisive military victories and defeats are allowed to be determined instead of stopping a war before it can be really resolved?” Professor Chomsky’s reply to this, advocating a peaceful resolution of the conflict, is most welcome (9).

The interviewer is keen to ask Professor Chomsky about the fate of the Tamil Tiger guerrillas, whether those charged with atrocities and war crimes should be tried in tribunals; however, when he deals with those committed by the Sri Lankan armed forces, he slips in the word “people”: “what do you think should be the fate of the tens of thousands of people who have fought with the LTTE (Tamil tigers) over the decades, including lower level soldiers all the way up to leading officers?” The interviewer, as seen above, does not even acknowledge the suffering of the Tamil people in the ongoing war, tries to equate members of the armed forces who are fighting on behalf of a majoritarian government, with “people”, revealing a clear bias (10).

Federalism denied
At the political level, the interviewer tries to lead Professor Chomsky to the point that “it is in the best interests of the island to remain as one independent nation, or one united nation, rather.” Professor Chomsky, while replying to this issue, puts forth a “federal arrangement,” listing the Basque, Catalina, Wales and Scotland questions, all in Europe. Strangely, he does not cite the more intractable Irish national question. It is also important to point out that for both Basque and Catalonia regions of Spain, federal systems were reached after a prolonged civil war which also was part of the Second World War. These issues continue to be raised in some manner. Thus, Europe appears to have arrived at this “federal arrangement” after two world wars, but the recent Balkan experience belies this as well.

Professor Chomsky does not cite the post-USSR experience where countries were able to secede without much violence. Also, more crucially, Professor Chomsky does not discuss longstanding similar issues in Asia and Africa, much of which are fallouts from the colonial era and have been characterised by violence. He also does not cite the fact that colonial powers divided regions and incited discourses based on rivalry, identity and ethnicity.

Knowledge is must
As for Sri Lanka, Professor Chomsky says “without a really deep knowledge of these matters would be just too presumptuous for an outsider to offer opinions.” Nevertheless, it will not be difficult for him to recognize that:

• the country’s majoritarian political establishment remained averse to any federal arrangement, provoking the Tamil youth to take up arms in the seventies; thus, when the democratic rights of the Tamil people have been violated by successive governments, a violent form of resistance grew.
• Sri Lanka continues to have a unitary constitution giving preferential treatment to the majority in terms of ethnicity and religion (Sinhala-Buddhism) and its cavalier treatment of the minorities has a long history;
• time and again, Sri Lanka’s major political parties have missed opportunities to amend the constitution towards a secular, federal framework and failed to ensure equal rights to minorities and nationalities in the country.
• Sri Lanka has long failed to punish those responsible for carrying out attacks and pogroms against the Tamil minorities; its independent institutions including the judiciary have shown no signs of ensuring justice for the victims of such attacks. The armed forces and the police continue to be majoritarian in their constitution and outlook.
• the Sri Lankan government appears wanting to force its current solution framework of provincial councils, under the 13th amendment, on a population which has suffered war, forced internal displacement, detention in camps, displacement to several countries including India (The Tamil chief minister of the newly-formed eastern provincial council, a former guerrilla leader, is already out complaining that he does not even have powers to appoint clerks and schoolteachers. ). And it is not at all clear whether, in the long run, this will satisfy Tamil political demands.

Peace with honour
We wish to remind Professor Chomsky that it that it is necessary to go further than depending on information received from media establishments in Sri Lanka and India which have not risen to the occasion to cover this war independently and courageously. We also urge him to independently check all information, including all that we have said above, and get fully equipped to make any further comments on the ongoing war in Sri Lanka.

Given the above background and context, it is necessary to be sensitive to the suffering of a minority population during their struggle for their legitimate civil and political rights towards a solution which genuinely satisfies them. The ordinary Tamil people of Wanni are facing the despair of a brutal war of aggression unleashed by a majoritarian government aided by governments across the world. What they seek is peace with honour. And we urge Professor Chomsky to recognize this.

References
1. Professor Chomsky on Sri Lanka And American Affairs, Interview by Sri Lanka Guardian's Washington correspondent Eric Bailey, Sri Lanka Guardian, 12 February 2009.

2. Paranjoy Guha Thakurta, Sri Lanka: government targets media under civil war cover, Inter Press Service, 9 February 2009. For more on authorities’ bid to suppress information, see below.

3. One journalist, Emily Wax in Vavuniya town met with fleeing refugees who were critical of the Tamil Tigers and praised the Sri Lankan armed forces. It was also evident that these people were scared and dependent on the mercy of the armed forces after the interviewer departs from the scene. See: Sri Lanka Debates Fate of War Refugees in Government Camps, The Washington Post, 15 February 2009; In Sri Lanka, Tales Of Jungle Terror: Civilians Fleeing War Describe Forbidding Terrain, The Washington Post, 13 February 2009.

4. Jeremy Page, Barbed wire villages raise fears of refugee concentration camps, The Times UK, 14 February 2009. International humanitarian and human rights organizations have already protested against this and have taken this up with governments which have promised aid to Sri Lanka.

5. Amnesty International, Outspoken Journalist Killed in Sri Lanka, 9 January 2009. This was followed by an attack on a private television channel.

6. Melani Manel Perera, Sri Lanka government behind murder of journalist, Speronews, 21 January 2009. Also, BBC services rebroadcast suspended, Journalists at risk in Sri Lanka: BBC
7. In its Press Freedom Index for 2008, Reporters sans Frontiers ranked Sri Lanka in 165th place out of a total of 173 countries. Earlier this week, Reporters sans Frontiers expressed revulsion at the death of a Tamil journalist, Satyamoorthy, in the ongoing bombardment as a “war crime.”

8. Professor Chomsky states: “There's a terrible burden of proof to bear for those who would advise violence as a solution, and I think the resort to violence has almost always been harmful, almost bitterly so, so I think the first assumption should be that international peacekeepers and diplomacy would be a far preferred outcome and only if it is simply impossible to execute should the situation be allowed to deteriorate into violence, which is usually very harmful for everyone.”

9. Professor Chomsky goes on to caution the interviewer that war crimes are usually committed by both sides and that all of them need to be investigated if a tribunal were to sit on judgment; instead, he recommends that the society decide on the issue of amnesty and suggests a truth or reconciliation commission without punitive powers on the lines of South Africa, El Salvador or Guatemala. Professor Chomsky’s recommendation is a welcome step which can be part of a peaceful resolution.

10. Ravi Nessman, Sri Lanka war near end, but ethnic tension remains, Associated Press, 5 February 2009.

*********

(For Chomsky's image at this page, thanks to www.changeany1thing.com/.../03/noam_chomsky.jpg)

Sunday, February 15, 2009

அடைக்கலமற்ற காதை

--கவிதை நீக்கப்படுகிறது--