Saturday, December 25, 2010

உலோகருசி



"உலோகருசி” கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அட்டை வடிவமைப்பு: ஸ்ரீதரன் (பயணி), பின்னுரை: ஜமாலன். இது எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு.

Saturday, December 4, 2010

வையத்துள்

இந்தப் படிகளில் ஏறித்தான்
வாழ்க்கைக்குச் செல்லவேண்டும்.
குறுகின படிகள்
வழுக்குப்பாசி
உதிர்கிற பக்கச்சுவர்
கைப்பிடியில் பாம்புகள்
ஆனாலும் இவ்வழியில்தான்
சென்றிருக்கிறார்கள் வாழ்க்கையை அடைந்தவர்கள்
பல காலைகள், மதியங்கள், இரவுகள்
இன்னும் பொழுதற்ற பொழுதுகள்
விபத்து, சந்தேகம், அவநம்பிக்கை
இன்னும் பெயரில்லா உணர்வுகள்
இப்படித்தான் செல்லவேண்டும்
வியர்க்கும் இரைக்கும் நுரை தள்ளும்
இன்னும் தெரியாதன செய்யும்
ஆனாலும் ஏறவேண்டும்
ஏனெனில் இப்படித்தான்
வாழ்க்கையை அடைந்திருக்கிறார்கள்
ஏனெனில் வாழ்க்கையின் வா
நம்மை விட வலுவானது
ஏனெனில் முதற்படியில்
கால்வைத்து விட்டோம் ஏற்கெனவே.

Saturday, October 2, 2010

என் கவிதைகளை எடுத்த வேசிக்கு: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (12)

சிலர் சொல்கிறார்கள் தனிப்பட்ட கழிவிரக்கத்தைக் கவிதையிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்,
நுண்மமாக இரு என்று, இதில் ஏதோ காரணம் இருக்கிறதுதான்,
ஆனால் ஜீசஸ்;
பன்னிரெண்டு கவிதைகள் போயே போயின, என்னிடம் கார்பன்காப்பிகள் இல்லை,
என்
ஓவியங்களைக்கூட நீ வைத்திருக்கிறாய்:
அவற்றில் ஆகச்சிறந்தவற்றை.
ஒடுக்குவதாக இருக்கிறது இது.
அந்த மற்றவர்களைப்போல என்னையும் நசுக்க நினைக்கிறாயா?
ஏன் நீ என் பணத்தை எடுக்கவில்லை?
குடித்துவிட்டுப் மூலையில் நோயுற்றுத் தூங்கும் கால்சராய்களிலிருந்து
அவர்கள் சாதாரணமாக எடுப்பதைப்போல.
அடுத்த முறை என் இடது கையை எடுத்துக்கொள், அல்லது ஒரு ஐம்பதை,
ஆனால் என் கவிதைகளை அல்ல;
நான் ஷேக்ஸ்பியர் அல்ல, ஆனால் சிலசமயம் யாரும்
அப்படி எளிதாக இருக்க முடியாது இனியும், நுண்மமாகவோ வேறெப்படியோ;
எப்பொழுதும் பணம் இருக்கும்
வேசிகளும் குடிகாரர்களும் இருப்பார்கள்
இங்கே கடைசி குண்டு விழும்வரை,
ஆனால், கால்மேல் கால் போட்டபடி கடவுள்
சொன்னதைப்போல:
தெரிகிறது, நான் படைத்திருக்கிற ஏராளமான கவிஞர்கள் அளவுக்கு
கவிதையைப் படைக்கவில்லை.

ஒன்று முப்பத்தாறு காலை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (10)

சிலசமயம் சிரித்துக்கொள்வேன் நினைக்கும்போது
உதாரணமாக
தட்டச்சுப்பொறியின் முன்னால் செலின்
அல்லது தஸ்தேய்வ்ஸ்கி
அல்லது ஹேம்சன்
கண்கள், காதுகள், பாதங்களோடு சாதாரண ஆண்கள்
தலையில் முடியிருக்கும் சாதாரண ஆண்கள்
அங்கே உட்கார்ந்து தட்டச்சுகிறார்கள்
வாழ்க்கையோடு சிக்கல்கள் இருக்கையில்
குழம்பி கிட்டத்தட்ட கிறுக்குத்தனமான நிலையில்.

தஸ்தேய்வ்ஸ்கி எழுந்திருக்கிறார்
பொறியிலிருந்து நகர்ந்து செல்கிறார் ஒன்னுக்கடிக்க.
திரும்பி வருகிறார்
ஒரு கோப்பை பாலைக் குடிக்கிறார்
சூதாட்ட விடுதியையும்
ரூலெட் சக்கரத்தையும் பற்றி நினைக்கிறார்.

செலின் நிறுத்துகிறார், எழுந்திருக்கிறார், நடக்கிறார்
சன்னலை நோக்கி, வெளியே பார்க்கிறார், நினைக்கிறார்
என் கடைசி நோயாளி இறந்துவிட்டான், இனி நான் அங்கே
ஒருதரமும் பார்க்கப் போகவேண்டியதில்லை என்று.
அவரைக் கடைசியாக நான் பார்த்தபோது
டாக்டரிடம் கட்டணம் கட்டிக்கொண்டிருந்தார்.
கட்டணங்களைக் கட்டாதவர்களே
வாழ்ந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
செலின் திரும்பி நடக்கிறார், அமர்கிறார்
பொறியின் முன்னால், ஒரு இரு நிமிடங்களுக்குச்
சிலையாகிறார்
பிறகு தட்டச்சத் துவங்குகிறார்.

ஹேம்சன் தட்டச்சுப்பொறிக்கருகே நின்றபடி நினைக்கிறார்,
நான் எழுதுபவற்றையெல்லாம் அவர்கள்
நம்புவார்களா என்ன?
அமர்கிறார், தட்டச்சத் துவங்குகிறார்,
எழுத்தாளரின் தடை என்றால் என்னவென்றே தெரியாது அவருக்கு
பிரவாகம் சும்மா பெட்டை-நாயின்-மகன்
சே! பிரம்மாண்டம்
சூரியனுக்குக் கிட்டே
அடித்துத் தள்ளுகிறார்.

நானும் சிரிக்கிறேன்
சப்தமின்றி
இச்சுவர்களுக்குள் முன்னும் பின்னும் நடந்து
இந்த மஞ்சளும் நீலமுமான அழுக்கான சுவர்கள்
என் வெள்ளைப்பூனை
வெளிச்சத்திலிருந்து தன் கண்களை மறைத்துக்கொண்டு
உறங்குகிறது மேசைமீது.

இன்றிரவு அவன் தனியாக இல்லை.
நானும்தான்.

நூலை இழுக்க அசையும் பொம்மை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (8)

ஒவ்வொருவனுக்கும் தெரியவேண்டும்
இது எல்லாமே வெகு சீக்கிரம்
மறையக்கூடிய தென்று:
பூனை, பெண், வேலை,
முன்பக்க டயர்,
படுக்கை, சுவர்கள்,
அறை; நம் எல்லாத் தேவைகளும்
காதல் உட்பட,
மணலின் அஸ்திவாரங்களில் நிற்பன –
கொடுக்கப்பட்ட எந்த காரணமும்
எப்படித் தொடர்பின்றிப் போனாலும்:
ஹாங்காங்-கில் ஒரு சிறுவனின் சாவு
அல்லது ஒமாஹாவில் ஒரு பனிப்புயல்
குலைத்துவிடக்கூடும் உன்னை.
சமையலறைத் தரைமேல்
உன் எல்லாப் பீங்கான்களும் மோதி உடைய
உன் ஆள்—அந்தப் பெண் நுழைவாள் நீ
குடிபோதையில் நிற்கும்போது,
எல்லாவற்றுக்கும் நடுவில்,
அவள் கேட்பாள்:
கடவுளே, என்ன விஷயம்?
நீ பதில் சொல்வாய்: எனக்குத் தெரியாது,
எனக்குத் தெரியாது …

உலோக ருசி

என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு அச்சில் இருக்கிறது. டிசம்பரில் வெளிவருகிறது. வலைப்பூவில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் அதில் இடம்பெறுகின்றன. கவிதைத்தொகுப்புகளை வாங்கி வாசிப்பவர் தமிழ்ச்சூழலில் குறைவு. இதில் வலைப்பூவில் கவிதைகள் விரல்நுனியில் கிடைக்கும்போது, புத்தகத்தை வாங்கி வாசிக்கும் ஆர்வம் குறைய நிறைய சாத்தியம் இருக்கிறது. ஆகவே, சிலபல கவிதைகளை வலைப்பூவிலிருந்து நீக்கியிருக்கிறேன். நண்பர்கள், குறிப்பாக பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு உரையாடியவர்கள், புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

நீக்கப்பட்ட கவிதைகளின் பின்னூட்டங்களை நீக்க மனமில்லை, அது தேவையில்லை என்றும் நினைக்கிறேன். கொஞ்ச காலத்துக்கு அந்தரத்தில் மறைந்த கவிதைப்பிரதிகளைப் பற்றிய உரைகளாக அவை நிற்கும். அதே நேரத்தில், இனி அவற்றை வாசிப்பவர்களுக்கு தொடர்புடைய கவிதையைத் தேடும் ஆர்வம் பெருகலாம். ...hide and seek.....

புதிய கவிதைகள் பதிவில் தொடரும். நண்பர்கள் தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் உற்சாகத்துக்கும் நன்றி.

பெருந்தேவி

Thursday, September 30, 2010

ஒருவேளை

கவிதை நீக்கப்படுகிறது.

Saturday, July 3, 2010

வீழ்நகரம், கொடும் இரவு, தீக்கனவு: தீபச்செல்வன் மற்றும் சித்தாந்தனின் கவிதை நூல்கள்; சிறு அறிமுகம்

(3 ஜூலை 2010 அன்று காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் பேசியதன் முழுவடிவம்)

பாழ்நகரத்தின் பொழுது (காலச்சுவடு, 2010) கவிஞர் தீபச்செல்வனின் மூன்றாவது தொகுப்பு. அவரது முந்தைய தொகுப்புகள் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை (காலச்சுவடு, 2008) மற்றும் ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் (உயிர்மை, 2009) என்ற தலைப்புகளில் வெளிவந்திருக்கின்றன. துரத்தும் நிழல்களின் யுகம் (காலச்சுவடு, 2010) கவிஞர் சித்தாந்தனின் இரண்டாவது தொகுப்பு. அவரது முந்தைய தொகுப்பு காலத்தின் புன்னகை (2000).

தீபச்செல்வனின் கவிதைகள், நகரத்தின் (அதிகம் யாழ்ப்பாணம், கொஞ்சம் கிளிநொச்சி) துயரைப் பொருளாகக் கொண்டவை, தீவிரப்போரின் இறுதிநாட்களைப் பதிபவை, போரின் பிறகான கைவிடப்பட்ட வாழ்வைக் காட்சிப்படுத்துபவை என மூன்று தளங்களில் விரிகின்றன. முள்ளிவாய்க்கால் படுகொலைகள், சிங்கள அரசு நடத்திய கிழக்கின் உதயம், முத்துக்குமாரின் தீக்குளிப்பு, விடுதலைப்புலிகளால் பலவந்தமாக கொண்டு சேர்க்கப்பட்டு பின் ராணுவத்திடம் சரணடைந்து வாழ்வற்ற புனர்வாழ்வு முகாம்களில் தங்கியிருக்கும் சிறார்கள், தன்னைச் சுற்றி வளைத்த இராணுவ விசாரணை போன்றவற்றை இத்தொகுப்பில் ஆவணப்படுத்தியிருக்கிறார் தீபச்செல்வன்.

ஒப்பாரியும் விசும்பல்களும் ஓலங்களும் தளும்பும் நகரம், வெளிவர முடியாப் பாதைகளால் மூடுண்ட நகரம் சித்தாந்தனின் பாடுபொருளாகவும் இருக்கிறது. சித்தாந்தனின் கவிதைகளிலும் ராணுவ வாகனங்களும் கறுப்புத்துணி போர்த்திய முகங்களும் மறந்த அடையாள அட்டைகளும் ஒடுக்கும் முள்ளுவேலிகளும் விரவிக்கிடக்கின்றன. கொடுமையும் துயரமும் நிறைந்த போர் குறித்த புலனுணர்வு இருவரையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறது. இருவரும் பகிர்ந்துகொள்ளும் அவலத்தின் வரலாற்றுக் கணம் இந்த இருவரின் கவிதைகளுக்கு இடையே ஒரு உரையாடலைச் சாத்தியப்படுத்துகிறது.

வன்முறை அரசியல்களோடு பின்னிப்பிணைந்திருக்கும் பாழ்பொழுதுகளையும், கவிகிற அதிகாரத்தின் நிழல்களையும் விவரிக்கும் இருவரது கவிதைகளும் சிங்கள அரசையும் ராணுவத்தையும் மட்டும் காட்டித்தருவதாக இல்லை. துவக்குகளாலும் அச்சுறுத்தலாலும் தம் மேலாண்மையை நிறுத்தி பலிகொண்ட தமிழ்ப்போராளிக்குழு பற்றிய விமரிசனமும் உள்ளீடாக வைக்கப்பட்டிருக்கிறது கவிதைகளில். உதாரணமாக, சித்தாந்தனின் கவிதையில், ”பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து” தப்பிச்செல்லும் கவிதைசொல்லி இவ்வாறு விவரிக்கிறான்:

பிடாரனின் புதல்வர்கள்
பூக்களை ரசிப்பவர்கள் எனவும்
பிடாரனே ஒவ்வொரு காலையிலும்
கோடிப்பூக்களை புலர்விப்பவனெனவும்
சனங்கள் நம்பத்தொடங்கியிருந்தனர்
எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே
ஆகச்சிறந்த கவிதையாயிருந்தது
எனது அழகிய குடிசையில்
ஒருமுறை
பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு
தீ மூண்டதை நான் சொன்னபோது
எவருமே நம்பவில்லை
பிடாரன் பற்றிய தூய கவிதையை
மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்.
….
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்.

சித்தாந்தனின் இன்னொரு கவிதை, சாகசத்தை நிறுவிய பொம்மைகள் (போராளிகள் என்று இவற்றைக் கொள்ளலாமோ?), சூரியனிலிருந்து வந்தி்றங்கிய கண்கள் கொண்ட பொம்மைகள் நடுவே, அவை சூழ வாழ்ந்து பொம்மைகளாக்கப்பட்டவர்களைக் குறித்து ஆதங்கிக்கிறது:

பொம்மையுடனான சிநேகிதம்
எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு

இப்படியாக பொம்மைகள் சூழவாழ்ந்து பழக்கத்தாலும் வேறுவழியின்றியும் பொம்மைகளாகிப் போனவர்களை, தம்மை மட்டுமே மனிதர்களாக நினைப்பவர்கள்--சிங்களப் பேரினவாதிகள் என்று கொள்ளலாம் இவர்களை--பொம்மைகள் என்றே ஒற்றையாக இனம்காண்பதை கவிதை சுட்டுகிறது. பொம்மைகளையும் பொம்மையாக ஆனவர்களையும் சிங்களப் பேரினவாத வன்முறை பிரித்துப் பார்ப்பதில்லை. எப்பாகுபாடும் பார்க்காமல் அவர்களை அழித்துச்சாய்க்கிறது அந்த வன்முறை. சித்தாந்தனின் கவிதை இப்படித் தொடர்கிறது:

பொம்மைகளுக்கிடையில்
பொம்மைகளாக வாழ்வதிலும் கொடியது
மனிதர்களுக்கிடையில் பொம்மைகளாக வாழ்வது
...

நீண்டோடிய நாட்களின் பின்
இன்று தெருவுக்கு வர நேர்ந்தது
மனிதர்கள் எம்மைச் சூழ்ந்துகொண்டு
கற்களை வீசினர்
தூசித்தனர்
உடல் கிள்ளிக் கொண்டாடினர்
எமது அழுகையை
பொம்மைகளின் அழுகை என்றனர்
எமது இரத்தத்தை
பொம்மைகளின் இரத்தம் என்றனர்
கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்து போனோம். ….


தீபச்செல்வனின் ஒரு கவிதையிலும் பொம்மைகள் வருகின்றன. ஆனால் அவை வேறு வகை: அவர் கவிதை பொம்மைகளோடான தவிர்க்கவியலா உடனிருப்பைப் பற்றியதாக, அந்த உடனிருப்பு தந்த பொம்மை உருமாற்றம் குறித்த விமரிசனமாக மட்டுமில்லை, கண்ணில்லா பொம்மைகளை கடவுள்களாக நினைத்தவர்களின் பாழ்பட்ட நம்பிக்கையை, அந்த நம்பிக்கையால் பொம்மைகளாக மாறியவர்களின் குழந்தைமையை கூடுதல் ஆதுரத்துடன் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

காணாமல்ப்போன குழந்தை
கடவுளை விளையாடக் கேட்டிருந்தது.
பொம்மைகள் தொங்கும்
திருவிழாவில்
நமது மணல்தரை சேறாகிக்கிடக்கிறது.
….
மணல்சுவர்களிற்கிடையில்
நடக்கும் திருவிழாவில்
காணாமல்போன குழந்தையை
தேடித்திரிகிற மனைவியிடம்
கண்கள் இல்லாத பொம்மைகள் இருந்தன.

கடவுளை பொம்மை என்று
குழந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.


தொலைபட்ட குழந்தையைத் தேடிய தாயின் கைகளில் இருப்பவையோ கண்ணற்ற பொம்மைகள். கையிலிருக்க வேண்டிய குழந்தைக்கு பதிலியாக இருக்கின்ற பொம்மையையே குழந்தை கடவுள் என்று ஏற்கெனவே கூறியதாக கவிதை முடிக்கிறபோது, மண்சுவரில் மோதுண்ட காணாமல் போன குழந்தை, பொம்மையாய் நின்ற கடவுளைத் தேடிச்சென்ற குழந்தை, கண்ணற்ற பொம்மையாய் மாறிவிட்டிருக்கிற குழந்தை என்கிற மூவகை அவலங்களும் நிறைகின்றன கவிதையில்.

தீபச்செல்வன், சித்தாந்தன், இருவரின் கவிதைகளிலும் பொம்மைகளோடுகூட நாம் மறுக்கப்பட்ட அல்லது தீய கனவுகளையும் அச்சுறுத்தும் இரவுகளையும் அடிக்கடி எதிர்கொள்கிறோம். கண்களைப் பிடுங்கிவிட்டு மிக நீண்டு செல்கிற இரவு தீபச்செல்வனின் ஒரு கவிதையில் வருகிறது. “திசைகளைத் தின்னுகிற இரவாக” உயிர்களைப் பிடுங்கித் தின்னும் காருண்யமற்ற இரவு தீபச்செல்வனின் எழுத்தில் பிசாசமாக உருவங்கொள்ளுகிறது; பிணமாக விறைத்துக் கிடக்கிறது. சித்தாந்தனி்ன் கவிதைகள் “குரோதத்தின் கத்தியோடு” “பகிர்ந்த இரவை” நம்மோடும் பகிர்கின்றன. "பிணக்கதைகளைப் புனைகிற” “கொடும் இரவைச்” சொல்லி எச்சரிக்கின்றன. “இந்த இரவை எப்படித் தாண்டப் போகிறேன் ஆசுவாசப்படுத்த எவருமில்லை” என்று ஆற்றமுடியாத ஆற்றாமையில் அரற்றுகின்றன.

கனவு தொழில்படும் வேலையையும், கலை உருவாக்கும் வேலையையும் நனவிலி மனம் சார்ந்த, நனவிலி மன சக்திகள் தீர்மானிக்கும் ஒருபடித்தன்மையதான வேலை என்பதாக விளக்கும் சிக்மண்ட் ப்ராய்ட், கவிஞனின் வேலை நமக்கான பகல்கனா காண்பது என்று சொல்கிறார். ஆனால் உறக்கம் பறிக்கப்பட்ட கொலை படிந்த இரவுகளில், அல்லது நித்திரைபோலும் சாக்காடு பொதுவிதி்யாக விதிக்கப்பட்ட இருத்தலில் கவிதைசொல்லியின் கனவுக்கான இடம்தான் என்ன? தீபச்செல்வனின் தொகுப்பில்: திறவுபடாத கதவின் வழியாக கரைந்து வெளியே போய்க்கொண்டிருக்கும் கனவு, பாழடைந்த தெருவில் சொருகப்பட்டவர்களின் குருதியின் மேலால்வடியும் சொற்களுடன் கலந்த இளம் கனவு, கனவின் சுடலை, மூலையில் எரிந்துகொண்டிருக்கும் கனவு என்று வெவ்வேறு வடிவங்களாலான கனவு, அச்சுறுத்தும் பாழ்பட்ட வாழ்வெனும் தீக்கனவாகவே அர்த்தம் கொள்ளுகிறது. பலிக்கிண்ணத்தின் முன்னே தனித்த ஆடாக தன்னை உணரும் தீபச்செல்வனின் கவிதைசொல்லி, மரணத்தூக்கத்தில் கொடுங்கனவு தன்னைத் தின்றுமுடித்து விட்டதைக் குறிப்பிடுகிறார்.

சித்தாந்தன் முன்வைக்கும் கனவில் துர்மணம் கொண்ட, இரட்டைநாக்குகள் கொண்ட பாம்புகள் நுழைகின்றன; அல்லது அந்தப் பாம்புகள் உறக்கத்தைக் கெடுத்து இருளில் மூழ்கடித்து பயம்காட்டுகின்றன; பின்பு, கண்கள் தன் ஒளியை இழக்கையில், பாம்புகள் கவிதைசொல்லியின் கண்ணாடி அறையின் பிம்பங்களுக்கு குடைபிடிக்கின்றன.

எதிர்காலம் பற்றிய விழைச்சின் கனவை கண்ணின் ஒளி என்று கொள்வோமானால், கனவு காணும் உந்துதலும் வேகமும் அழிபடும் போது, வெறும் பிம்பங்கள் மட்டுமே நம்மில் தேங்கிவிடுகின்றன. தனி அடையாளம் மறுக்கப்பட்ட பிம்பங்கள், துவக்குகளின் முனைகளில் ஆளப்படும் நகரத்தில் இலக்கங்களாக மாறிவிட்ட அடிமைகள், குரல்கள் ஒழிந்து வெறுமையொட்டிய ஒரேமாதிரி முகங்கள். அடையாளங்கள் பறிக்கப்பட்டவர்களைப் பற்றிய தீபச்செல்வனின் வரிகள் இவை:

வாழ்வு கூடாரத்தில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது.
...இலக்கங்களாலும் ஒலிபெருக்கிகளாலும்
நீ கட்டி வைக்கப்பட்டிருக்கிறாய்....
இனி கனவுகள்குறித்து மிக மௌனமாயிருப்போம்.
இரப்பர் கூடாரங்களால் நிரம்பியிருக்கிற
காணியில் முட்கம்பிகளில்
தொங்கிக்கொண்டிருக்கிறது போரின் பிறகான வாழ்வு.
நம்மை வென்றுவிட்டு கிடக்கிற யுத்தம்
அறிவிப்பின்றி மெல்லத் தொடருகிறது.
...
குடிக்கிற தண்ணீருக்கான வரிசை நீளுகிறது.


பிம்பமாக, இலக்கமாக, குடிதண்ணீருக்கான வரிசையாக இடம்பெயர்ந்து விட்டிருக்கிறது ஈழத்தமிழர்களின் சமூக இருத்தல். போரின் வன்மமும் நம்பிக்கைத் துரோகமும் குலைத்துப்போட்ட நிலப்பரப்பில் இன்று மனிதர்கள் இருந்த இடத்தில், கண்காணிக்கப்படும் திரள்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கூடவே எஞ்சியிருக்கிறது ஒரு கேள்வி: எப்படி எவ்விதத்தில் நாம் நம்பிக்கையோடு முன்வைக்கப்போகிறோம், கவிஞர் சேரனின் “சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக” என்ற கோரிக்கையை இனிமேல்?

Thursday, July 1, 2010

"இருத்தல் நிமித்தம்:" ஒரு கடிதம்

"இருத்தல் நிமித்தம்” கவிதை பற்றி கார்த்திக்-கிடமிருந்து வந்திருக்கிற கடிதத்திலிருந்து:

(கவிதையின் சுட்டி: http://innapira.blogspot.com/2010/06/blog-post.html )

Its like getting a "selective snapshot" of the mind ....(feelings , thoughts,moods, ideas,beliefs ,judgements,imagination,fears ,wants ,drives ,values ,views,knowledge,unconscious , subconscious ..etc) using the camera of language ....and the poet is the photographer ....what makes a good photographer ....makes a good poet .
what makes a good photo ...makes a good poem.
....
and the reader .. who makes the photo into a puzzle ..with thousand of possibilities and keeps endlessly rearranging and playing with it ...not to solve the puzzle ..but to make his own picture .. and that picture .. thats when a poem comes into being.and that little flash light of joy ..the joy or recognising,identifying something (if that happens at all ) with that pieces of puzzle ...thats the pleasure of reading a good poem.

Now for this same reason .. its easy to identify a poem one likes .. but
very difficult to talk about it or analyse it ...it gets so counter-intuitive ..
the picture .. the poet snapped ...may appear very different from the puzzle picture
what the reader has made ..in his mind.

so no wonder ... its a challenge to talk about ..things like poetry or painting ..
atleast in painting there is a permenance in the form "sameness"of the work .. which is not in poetry ...

the words ..live and breath ..and relate..and evolve and die ...even in centuries old sleeping poem.

below is an extended - reading of one of your poems

---------

இருத்தல் நிமித்தம்

வெளியே போய்விட்டான் வழக்கம்போல ---> statement ..complaint ...sigh

நேரங்கழித்துதான் வருவான் வழக்கம்போல --> judgement ,prediction ..whinging

ஆம்பிளை என்றாலே ஆயிரமிருக்கும் --> justification ...stating norm....appear to comply

ஒன்றேயானாலும் ஆயிரம்தானே --> Ah ..sarcasm (அந்த ‘ஒன்றைப்’ பற்றிய, சிலசமயம் அது கொடுக்கும் ஆண்பிள்ளைத் திமிரையும் குறித்துதான் :-))

உணவுமேசைமேல் சுடுகலனில் --> domesticity

ஆறிக்கொண்டிருக்கிறது இரவு --> undefined yearning ....understated disappointment

காத்திருந்தபடியே அசருகிறேன் --> matter of fact களைப்பு

பாத்திரங்களை ஒழித்துப் போடவேண்டும் --> guilt , driven by missing routine ..need to comply ! இன்னும் பலவற்றை ஒழித்துப் போடவேண்டும், இங்கே அவனை எதிர்பார்ப்பது உட்பட

வருகிறான் -- little bit angsty ...suspense ..expectation ....running commentary ...brett lee to harbhajan singh ...:)

வந்துவிட்டான் -- Result /Cut shot / End of over.

உணவுக்குப் பின் உண்ண -- immm ..dessert ....luxury you know ... தினசரி நியமக் காமமும்தான்

நறுக்க மறந்துவிட்டேன் ஆப்பிளை -- lazy ..not really bothered .. .no big deal ...

அவனுக்கு ரொம்பப்பிடிக்கும் -- Oh yeah big deal ...(hint of affection perhaps )?? அவனுக்குப் பிடிப்பதுதானே ரொம்ப முக்கியம் :)

இதோ -- here ..hey listen I am getting dramatic :) சிலப்பதிகாரத்தின் இங்கே சிறு நாடகீய அவலம்

சிறுகத்திதான் என்றாலும் கூர்மை ....juxatposed opposites in form and function

அறுக்கிறேன் --- c... u .....t .....t ....i.... n ....g .....nail biting action...whew ..

என் ஒருமுலை துடிக்க இன்னொன்று -- start executing an unstoppable sequence of revenge ..in thought ,in emotion ...

அதற்குச் சாட்சியாகிறது

ஏன் என்று கத்துகிறான்

கிறுக்கா என்று கதறுகிறான்

முலைகளுக்குக் கேட்கிறது ஆனால்

அவைகளுக்குக் கேள்விகள் பிடிக்காது கேள்விகள் கேட்காத முலைகள் முன்பு, இப்போது கேள்விகள் பிடிக்கவில்லை அவற்றுக்கு

குளியலறையில் முனையற்ற
முலையைக் கழுவுகிறேன் -- Done.

பாத்திரங்களைக் கழுவப் போடவேண்டு்ம் --business as usual ..(hey i am normal , everything ok )

அவன் சாப்பிட்டானா -- a question for which no one needs an answer ..do you ?

தெரியவில்லை -- dont know ( being polite and pretending ignorance or indifference )

அல்லது -- maybe ..maybe ...maybe ...

அக்கறையில்லை -- who cares ( See not so polite afterall :))

காலையில் எழுந்ததும் கத்தியை -- another day ..another drama

கைக்கெட்டாத தூரத்தில் வைக்கவேண்டும் -- start from scratch ...tomorrow is a another day ...வன்முறை, நாடகம் தவிர்க்க

அதற்குமுன் நன்றாகத் தூங்கவேண்டும் -- resloution of the day ...everything will be fine tomorrow

தூங்கிக்கொண்டிருக்கிறேன் -- pretending ...see I am already asleep ...(but maybe I am not , am I ?!) முல்லையின் திரிபு

கார்த்திக்

நல்ல கடிதம். நன்றி கார்த்திக், கவிதைக்கு உங்கள் ஆங்கிலப் பதவுரைக்கு இடையிடையே நானும் எழுதியிருக்கிறேன் சாய்வெழுத்தில். பகிர்தலுக்காக இக்கடிதத்தை பதிவில் போட்டிருக்கிறேன்.

அன்புடன்,
பெருந்தேவி

Monday, June 28, 2010

68வது பிரிவு (மீள்பதிவு)

(குறிப்பு: இக்கவிதையில் வருகிற ஒருவார்த்தை லும்பினி இணையத்தளத்தில் நடைபெறும் பார்ப்பனியம் பற்றிய விவாதத்துக்கு அடித்தளம் இட்டிருக்கிறது. ஆனால், கவிதை வாசிக்கப்பட்டிருக்கிறதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கவிதையை அதனால் மீள்பதிவு செய்கிறேன். நான் மிகவும் மதிக்கும் அ.மார்க்ஸ் அவர்களின் கருத்துகளுக்கும் எதிர்வினை செய்ய பிறகு முயற்சிக்கிறேன். நாளை கிளம்பி சென்னை வருகிறேன். பயணத்தின் இருநாட்களில் பின்னூட்டம் (ஏதும் வந்தால்) தாமதித்து வெளியாகும். கவிதையின் அதன் பின்னூட்டங்களோடான முந்தைய சுட்டி: http://innapira.blogspot.com/2010/02/68_20.html நன்றி.)


கந்தசாமிக்கும் லதாவுக்கும் இது
68வது பிரிவு.
முதல் 2 தடவை
இருவரும் தற்கொலைக்கு
முயல நினைத்தார்கள்
தனித்தனியாக;
அடுத்த 8 தடவை
வாழ்த்துகளோடு குட்பை சொல்லிக்கொண்டார்கள்.
1 முறை தன் உள்ளங்கையில்
அவன் பார்க்க பிளேடால் கீறிச்சென்றாள் லதா.
இருவருக்கும் சங்கேதமான
பாடல்காட்சி வந்த டிவியை
குத்தி உடைத்தான் கந்தசாமி 1 முறை.
கண்ணீர் நனைத்த கண்ணாடி
பிரிவின் தடயச் செல்வத்தை
லதா துடைக்கவில்லை 1 தரம்.
முதல்முத்தம் கொடுத்தபோது
அவள் ஈஷிய சட்டையை
எரித்துப்போட்டான் கந்தசாமி 1 தரம்.
4 தடவை லதாவும் 1 தடவை கந்தசாமியும்
தொலையுறவில் கதறியழுது அவரவர் முன்பிருந்த
லேப்டாப்களை நனைத்துக் கெடுத்ததும் உண்டு.
கந்தசாமி அவளைப் பார்க்காமல்
ஈமெயில் மட்டும் போட்டுக்கொண்டிருந்தான்
அது 1/2.
லதா அவனைப் பார்த்தபடியே
அவனைப் பார்க்கவேயில்லை, அது இன்னொரு 1/2.
3 முறை லதா கந்தசாமியையும்
3 முறை கந்தசாமி லதாவையும்
பரஸ்பர அன்பில் சந்தேகித்துப் பிரிந்தார்கள்.
(அவன் கனவில் அனுஷ்கா அரைகுறையாய் வந்ததும்
இவள் தன் கனவில் அதை முழுசாய்க் கண்டதும்
இதில் அடக்கம்)
சந்தேகத்தை மனதில் வைக்காமல்
லதா சொல்லித்தொலைத்ததால்
கந்தசாமிக்கு பிரிய 1 வாய்ப்பு.
அப்படி அவன் பிரிந்ததால்
லதாவுக்கும் சண்டைபோட 1 வாய்ப்பு.
சேர்ந்திருந்தபோதே லதாவோடு
7 தடவை
பிரிந்துதான் இருந்தான் கந்தசாமி.
அவ்வளவு மோசமில்லை லதா.
1 தடவை இன்னொருவன்
தன்னைக்கொஞ்சியதற்காய்
2 முறை தானாகவே பிரிந்து
கந்தசாமியைத் தண்டித்தாள் மாதர் சிரோமணி.
லதா ஒரு கவிதை எழுதியதற்காக
1,
கந்தசாமி அவள் கவிதைகளைப் படிக்காததற்காக
8,
மனதில் பிரிந்திருக்கிறார்கள்.
ஒரேவழியாக அவள் தொல்லை ஒழிய
சாமியிடம் நின்று புலம்பினான் கந்தசாமி 1 நாள்,
அன்றிரவே சாமியாடி
லதா அவனை மீட்டுக்கொண்டாள்.
ஸ்தூலத்திலிருந்து சூட்சுமமாய் உறவு பயணிக்க
யாஹூ கணக்கை (அவளுக்கென தொடங்கியது)
7 முறை கந்தசாமி மூடிப்போட்டான்
போட்டிக்கு லதாவும் 6 முறை லிஸ்டில்
அவனை டெலீட் செய்து முறித்துக்கொண்டாள்.
இன்னும் சில பிரிவுகள்
அவர்களுக்கே நினைவில்லை.
68 பிரிவுக்கு ராசியான இலக்கம்,
நவக்கிரக ராசிக்கல் சோசியர்
சொல் மட்டுமே நினைவில் இருத்தப்
பிரயத்தனப்படுகிறான் கந்தசாமி.
தூதுசெல்ல புழுபூச்சியைக்கூடத்
தேடுவதாக இல்லை லதா.

69, 77, 88
அவர்களுக்காகப்
பொறுமையாகக் காத்திருக்கின்றன.
90-ல்
நிற்கும் மரணம் மட்டும்
வரிசையில்
முந்தத்துடிக்காமல் இருக்கட்டும்.

Saturday, June 26, 2010

இன்னொரு படுக்கை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (6)

(Another Bed: Charles Bukowski)

இன்னொரு படுக்கை
இன்னொரு பெண்

இன்னும் திரைச்சீலைகள்
இன்னொரு குளியலறை
இன்னொரு சமையலறை

வேறு கண்கள்
வேறு முடி
வேறு
பாதங்கள் மற்றும் கட்டைவிரல்கள்
ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
நிரந்தரத் தேடல்.

நீ படுக்கையில் இருக்கிறாய்
அவள் வேலைக்குச் செல்ல உடையணிகிறாள்
நீ யோசிக்கிறாய் என்ன ஆயிற்றென்று
கடைசியாகச் சென்றதற்கு, அதற்கு முன்னதற்கு
இதெல்லாமே ரொம்ப வசதிதான்—
இந்தப் புணர்வு
இந்த ஒன்றாகப் படுத்துக்கொள்ளல்
இந்த மென்மையான அன்பு…

அவள் போனபிறகு நீ எழுகிறாய், அவள்
குளியலறையை உபயோகிக்கிறாய்,

இதெல்லாமே ரொம்ப அந்நியோன்னியமாக, அந்நியமாக
திரும்ப படுக்கைக்குச் செல்கிறாய்
இன்னும் ஒருமணி நேரம் தூங்குகிறாய்.

போகும்பொழுது வருத்தத்துடன் போகிறாய்
ஆனாலும் மீண்டும் பார்ப்பாய் அவளை
நடந்தாலும் நடக்காவிட்டாலும்.
கடற்கரைக்கு ஓட்டிச் செல்கிறாய், அமர்ந்திருக்கிறாய்
காருக்குள். கிட்டத்தட்ட நண்பகல் இப்போது.
-இன்னொரு படுக்கை, வேறு காதுகள், வேறு
காதணிகள், வேறு வாய்கள், வேறு செருப்புகள், வேறு
உடைகள்

வண்ணங்கள், கதவுகள், தொலைபேசி எண்கள்

தன்னந்தனியாக இருக்க வலு உனக்கு இருந்தது ஒரு காலத்தில்.
அறுபதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆண் என்பதால்
இன்னும் அறிவோடு இருக்கவேண்டும் நீ.

காரைத் துவக்குகிறாய், மாற்றுகிறாய்,
யோசித்தபடி, சென்றவுடன் ஜீனி-க்கு தொலைபேச வேண்டும்.
அவளை வெள்ளிக்கிழமையிலிருந்து பார்க்கவில்லை.


(மொழிபெயர்த்துச் செய்தவரின் குறிப்பு: இக்கவிதையில் ஆண் பெண்ணாக, பெண் ஆணாக இருந்தால் எப்படியிருக்கும்? அல்லது எல்லாமே ஆணாக அல்லது பெண்ணாக இருந்தால்.....? இருந்தாலும், “வேறு வேறுகள்” தருகிற அலுப்பு என்பதை எப்பாலினரும் எப்பாலிடத்தும் ஏதோவொரு நேரத்தில் உணரக்கூடிய யதார்த்தம் காரணமாக, இக்கவிதையைத் தேர்ந்தெடுத்தேன்)

Friday, June 25, 2010

ஹரியின் வாசிப்பும் என் கடிதமும்

ஹரி ”பெருந்தேவி: விடுதலையை மீண்டும் ஒருமுறை அனுபவித்தல்” என்கிற கட்டுரையின் சுட்டியை
http://langscape.wordpress.com/2010/06/23/on-perundavi-lgbtq/
உறுமீன் என்கிற என் கவிதையின் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறார். அதை இங்கே பகிர்கிறேன்.

அன்புள்ள ஹரி,

தகவல்கள் முதலில். “இக்கடல் இச்சுவை” (காலச்சுவடு) என் கவிதைத்தொகுப்புதான். 1999-2006 இடையே எழுதிய கவிதைகளின் தொகுப்பு அது. என் முதல் தொகுப்பு தீயுறைத்தூக்கம் 1998 விருட்சம்-சஹானா வெளியீடாக வந்தது. ஆனால், பலருக்குத் தெரியாது. இரண்டுக்கும் விமரிசனம் இதுவரை இல்லை. ”பெண்ணியக் கவிதைவெளியென அறியப்படும் ஒரு அரூபப் பரப்புக்கும், எனது அறிதலுக்கும் அப்பால்பட்டு பெருந்தேவி எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறீர்கள். சரிதான், இது எனக்கு மட்டுமல்ல, சென்ற மாதம் இலக்கியச்சூழலில் அக்கறை கொண்ட ஒரு நண்பர் ”ரிஷி கவிதை எழுதுவார் என்று எனக்கு இப்போதுதான் தெரியும்” என்று என்னிடம் சொன்னார். இத்தனைக்கும் ரிஷி 1980-களின் இறுதிகளிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். இவ்வாறு கூறியவரின் அறிதலில் நான் குறைகூற விரும்பவில்லை. பெண் எழுத்தாளர்களை விடுங்கள், பொதுவாகவே தமிழ் இலக்கியச்சூழலிலேயே எழுத்துமட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் அறியப்படுவது அபூர்வம்தான். இலக்கியம் செய்பவர்கள்கூட தடாலடி செய்கிறபோதுதான் அவர்களின் பிரதிகள் கவனிக்கப்படுகின்றன என்பது கொடுமையான உண்மை. அல்லது, ”பெயர்களை” முன்னெடுத்துச்செல்ல சகோதர வலைப்பின்னல்களோ குழுமங்களோ இருக்கவேண்டும், இல்லாவிட்டால் அறியப்படுவது கடினம்தான். சரி, புகழுடம்பு :-)) பெற்று உய்ய வேண்டிய விதி நமக்கில்லை என்று எழுதும் கடமையை மட்டும் செய்யலாம். ஆனால், "புகழ்" மட்டுமே இந்த ஆட்டத்தில் இல்லை, எழுத்து வாசிப்புக் கவனமே பெறாத போது, விளைவாக, வாசிப்பவர்களோடு உரையாடல் இல்லாது போகும் நிலைமை ஏற்படுகிறபோது எழுத உற்சாகம் குறைகிறது என்பதே ஆற்றாமை. இரு வருடங்களாக இணையத்தில் நான் எழுத ஆரம்பித்தபிறகுதான் இத்தகைய உரையாடல்கள் கொஞ்சமாவது எனக்கு வாய்த்திருக்கின்றன.

ஜூடித் பட்லரை நீங்கள் வாசித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலையில் ஒரு வருடத்தில் அவர் வகுப்பை நான் தவறவிட்டேன். அவரது ”பாலினச் சிக்கல்” என் வாழ்க்கையை, பார்வையை மாற்றியமைத்த நூல். அவர் புத்தகங்களே எனக்குப் பெண்ணியப்பன்மைகளையும் பெண்ணியக் கோட்பாட்டுச்சிக்கல்களையும் புரியவைத்தன. பால் அடையாளங்களை சமயோசித உபாயங்களாக மட்டுமாக அன்றி, சொல்லாடல்களில் அவற்றைச் சாராம்சப்படுத்தி உயர்த்தும்போது, அத்தகைய சாரம்சப்படுத்தல் இட்டுச்செல்லக்கூடிய பாசிஸத்தை பற்றி எச்சரித்தவை அவை. இதையொட்டியே நான்கு வருடங்கள் முன்பு காலச்சுவடில் பெண்ணெழுத்து குறித்த ஒரு சின்னக்கட்டுரையும் எழுதினேன்.

இந்தப்பின்னணி இருக்கட்டும், என்னை வாசிப்பவர் பட்லரின் சிந்தனை ஒளிச்சரடை ஒரு கண்ணியில் ஒரு இணைப்பில் என் பிரதியில் காணுகிறபோது, பட்லரின் நூல்களிலிருந்து எனக்குக்கிடைத்த மகிழ்வுணர்வு இன்னும் துலக்கம் பெறுகிறது. ஹரி, இதற்காக உங்களுக்கு நன்றி.

“உறுமீன்” பற்றிய உங்கள் வாசிப்பு பிரதியின் சாத்தியப்பாடுகளை ’இன்னும்’ என நினைவூட்டும் ஒரு செய்கை.

ஆத்மாநாம்-பெருந்தேவி கவிதையின் தொனியை இழுத்து வேறொரு இடையீட்டுப்பிரதியாகச் சமைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனுமதித்தால் என் பதிவில் அதை மீள்பதிவிட விருப்பம்.

அன்புடன்
பெருந்தேவி

Saturday, June 19, 2010

வேற்றவர்கள்: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (5)

நீங்கள் இதை நம்பாமலிருக்கலாம்
ஆனால் வெகுசொற்பத்
துன்ப உராய்வோடு
வாழ்க்கையைக் கடப்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் நன்றாக உடையுடுத்துவார்கள்
நன்கு தூங்குவார்கள்
அவர்கள் குடும்ப வாழ்க்கை குறித்து
அவர்களுக்கு நிம்மதியிருக்கும்.
தொந்தரவுற மாட்டார்கள்
மிகநன்றாக உணர்வார்கள் அவ்வப்போது.
அவர்கள் இறக்கும்போதும்
அது எளிய சாவாக இருக்கும், பொதுவாக அது நேரும்
தூக்கத்தில்.

நீங்கள் நம்பாமலிருக்கலாம்
இதை
ஆனால் இப்படியான மனிதர்கள்
இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால்
அவர்களில் நான் ஒருவனில்லை.
ஆ! இல்லை, நான் அவர்களில் ஒருவனில்லை,
அவர்களில் ஒருவனாக
இருக்கமுடிவதற்கு
அருகில்கூட நானில்லை.
ஆனால் அவர்கள்
அங்கே இருக்கிறார்கள்.

நானும் இங்கே.


(விசனம் தூண்டிய கவிதை இது: பெருந்தேவி)

Friday, June 18, 2010

ஆமாமாம்: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (4)

காதலைக் கடவுள் உருவாக்கியபோது
அவர் உதவவில்லை நிறையபேருக்கு
நாயைக் கடவுள் உருவாக்கியபோது
அவர் உதவவில்லை நாய்களுக்கு
செடிகளைக் கடவுள் உருவாக்கியபோது அது சராசரியே
வெறுப்பைக் கடவுள் உருவாக்கியபோது
நமக்குக் கிடைத்தது ஒரு நிரந்தர பலன்
என்னைக் கடவுள் உருவாக்கியபோது என்னை அவர் உருவாக்கினார்
குரங்கைக் கடவுள் உருவாக்கியபோது அவர் தூக்கத்திலிருந்தார்
ஒட்டகச்சிவிங்கியை அவர் உருவாக்கியபோது அவர் குடித்திருந்தார்
போதைமருந்துகளை அவர் உருவாக்கியபோது அவர் உச்சத்திலிருந்தார்
தற்கொலையை அவர் உருவாக்கியபோது அவர் நீச்சத்திலிருந்தார்

படுக்கையில் படுத்தபடி உன்னை அவர் உருவாக்கியபோது
அவர் செய்துகொண்டிருந்தது அவருக்குத் தெரிந்தது
அவர் குடித்திருந்தார் அவர் உச்சத்திலிருந்தார்
மேலும் மலைகளையும் கடலையும் நெருப்பையும் அதேநேரத்தில் உருவாக்கினார்

சிலதவறுகளை அவர் செய்தார்
ஆனால் படுக்கையில் படுத்தபடி உன்னை அவர் உருவாக்கியபோது
அவரின் ஆசிர்வதிக்கப்பட்டப் பிரபஞ்சத்தின் மேலெல்லாம்
அவருக்கு வந்துவிட்டது.

Wednesday, June 16, 2010

கூட்டத்தின் மேதை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (3)

ஒரு சராசரி மனிதப்பிறவியிடம் இருக்கும்
இரண்டகமும் வெறுப்பும் வன்முறையும் அபத்தமும்
எந்தவொரு நாளும் எந்த ராணுவத்துக்கும்
வழங்கப் போதுமானது


கொலைசெய்வதில் சிறந்தவர்கள் அதற்கெதிராக உபதேசிப்பவர்களே
வெறுப்பதில் சிறந்தவர்கள் அன்பை உபதேசிப்பவர்களே
போரில் சிறந்தவர்கள் கடைசியாக சமாதானத்தை உபதேசிப்பவர்களே
கடவுளை உபதேசிப்பவர்களுக்கே கடவுள் தேவைப்படுகிறார்
சமாதானத்தை உபதேசிப்பவர்களிடம் சமாதானம் இல்லை
சமாதானத்தை உபதேசிப்பவர்களிடம் அன்பு இல்லை


எச்சரிக்கையாக இரு உபதேசிகளிடம்
எச்சரிக்கையாக இரு அறிந்தவர்களிடம்
எச்சரிக்கையாக இரு எப்போதும் புத்தகம் படிப்பவர்களிடம்
எச்சரிக்கையாக இரு வறுமையை வெறுப்பவர்களிடம் வறுமைக்காகப் பெருமைப்படுபவர்களிடமும்
எச்சரிக்கையாக இரு உடனே புகழ்பவர்களிடம் ஏனெனில்
அவர்கள் பதிலுக்குப் புகழ்வதை எதிர்பார்ப்பார்கள்
எச்சரிக்கையாக இரு உடனே தணிக்கை செய்பவர்களிடம் ஏனெனில்
அவர்கள் தமக்குத் தெரியாததிடம் அஞ்சுபவர்கள்
எச்சரிக்கையாக இரு தொடர்ந்து கூட்டத்தைத் தேடுபவர்களிடம் ஏனெனில்
அவர்கள் ஒன்றுமேயில்லை தனியாக
எச்சரிக்கையாக இரு சராசரி ஆணிடம் சராசரி பெண்ணிடம்
எச்சரிக்கையாக இரு அவர்கள் அன்பில் ஏனெனில்
சராசரி சராசரியைத் தேடுவதே அவர்கள் அன்பு


ஆனால் அவர்களின் வெறுப்பில் மேதைமை இருக்கிறது
அவர்களின் வெறுப்பில் இருக்கும் மேதைமை
உன்னைக் கொல்லவும் போதுமானது
தனிமையை விரும்பமாட்டாதவர்களாக
தனிமையைப் புரிந்துகொள்ளவும் மாட்டாதவர்களாக
அவர்களிடமிருந்து வேறுபட்ட எதையும்
அழிக்க அவர்கள் முயல்வார்கள்
கலையை உருவாக்க முடியாதவர்களாதலால்
கலையைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் அவர்கள்
படைப்பாளிகளாகத் தங்கள் தோல்வியை
உலகத்தின் தோல்வியாகமட்டுமே பார்ப்பார்கள் அவர்கள்
முழுதாக நேசிக்க முடியாதவர்களாதலால்
உன் நேசத்தைக் குறைபட்டதாக நம்புவார்கள் அவர்கள்
மேலும் அப்போது அவர்கள் உன்னை வெறுப்பார்கள்
மேலும் அவர்களின் வெறுப்பு நேர்த்தியாக இருக்கும்

ஒரு மின்னும் வைரத்தைப்போல
ஒரு கத்தியைப்போல
ஒரு மலையைப்போல
ஒரு புலியைப்போல
விடமருந்தைப்போல

அவர்களின் ஆக அருமையான கலை.



(குறிப்பு: மொழிபெயர்த்து செய்யப்படும் கவிதைகளின் முதல்பிரதிகளே இவை, இன்னும் செம்மைசெய்ய வேண்டியிருக்கிறது)

Sunday, June 13, 2010

உன் இதயத்தை என்னோடு சுமந்து செல்கிறேன்: E.E. Cummings (9)

உன் இதயத்தை என்னோடு சுமந்து செல்கிறேன் (என் இதயத்தில்
அதைச் சுமந்து செல்கிறேன்) அது இல்லாமல் நானில்லை எப்போதும்
(எங்கே நான் சென்றாலும் நீயும் செல்கிறாய், என் அன்பே; எது
என்னால்மட்டும் செய்யப்படுகிறதோ அது உன் செயலே என் கண்ணே)
நான் அஞ்சுவதில்லை
விதிக்கு (ஏனெனில், நீ என் விதி, என் கற்கண்டே) வேண்டாமெனக்கு
எவ்வுலகமும் (ஏனெனில் அழகே நீயே என் உலகம், என் உண்மை)
ஒரு நிலவு எதையெல்லாம் எப்போதும் குறித்திருக்கிறதோ அது நீயே
ஒரு கதிர் எதையெல்லாம் எப்போதும் பாடுமோ அதுவும் நீயே

ஒருவருமறியாத ஆழ்ரகசியம் இங்குதான்
(வேரின் வேரும் இங்குதான், மொட்டின் மொட்டும்
ஆன்மா நம்பமுடிவதையும் மனம் மறைக்க முடிவதையும் தாண்டி வளரும்
வாழ்வென்று அழைக்கப்படும் மரத்துடைய வானின் வானும்)
இவ்வதிசயமே நட்சத்திரங்களைப் பிரித்துவைத்திருப்பதும்

உன் இதயத்தை நான் சுமந்துசெல்கிறேன் (என் இதயத்தில் அதைச் சுமந்து செல்கிறேன்)

Friday, June 11, 2010

2 சின்ன யார்கள்: E.E. Cummings (8)

2 சின்ன யார்கள்
(அவனும் அவளும்)
பிரமாதமான இந்த
மரத்தின் அடியில்.

சிரிக்கிறார்கள் நின்று
(எங்கே எப்போ தென்ற
ராச்சியங்களுக்கு அப்பால்)
இப்பொழுது இங்கு

(வளர்ந்துவிட்ட—நான் மற்றும் நீ—
நிறைந்த தெரிந்த
உலகங்களிலிருந்து தள்ளி)
யாரும் யாரும்

(2 சின்ன இருக்கிறேன்கள்
அவற்றின் மேலே
கனவுகளின் நம்பமுடியா
இத்தழல் இருக்க)


(குறிப்பு: கடைசிப்பத்தியில் 2 little ams என்கிற தொடரை இருக்கிறேன்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன், —கிறேன்கள் என்று போடலாமோ என்ற யோசனையோடு….)

Thursday, June 10, 2010

கற்பனை செய்வேன் வாழ்வை நான்: E.E. Cummings (7)

சாதலுக்குத் தகுதி யில்லாததென வாழ்வைக்

கற்பனை செய்வேன் நான்,

ரோஜாக்கள் அவற்றின் அழகுகள்

வீணெனப் புகார்செய்தால்(செய்யும்போது).


ஆனால் மனிதகுலம் ஒவ்வொரு களையையும்

ஒரு ரோஜாவென்று தன்னைத்தானே நயப்பிக்கும்போது

ரோஜாக்கள் புன்னகைக்கமட்டுமே செய்யும்

(நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்)

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை (2)

கவிஞர் லீனா மணிமேகலைக்கு,

முதலில் உங்கள் பதிவில் http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/06/blog-post.html என்னைத் திட்டி என் வலைப்பூவுக்கு பப்ளிசிட்டி கொடுத்ததற்கு நன்றி. எனக்கும் உங்களோடு உரையாட விருப்பமில்லைதான், இருந்தாலும் நீங்கள் என்மேல் பல புகார்கள் வைத்திருப்பதால், இதை எழுதுகிறேன்.

உங்கள் கவிதைகளை முன்னிட்டு உங்களைப்பற்றி வந்த தனிப்பட்ட தாக்குதல்கள் (வினவுத்தளத்தில் வந்தவை உட்பட) மோசமான முன்னுதாரணங்கள் என்றுதான் நினைக்கிறேன். நானும் ஜமாலனும் உங்கள் கவிதைகளைப்பற்றி எழுதிய கட்டுரையில் இதைக்குறிப்பிட்டிருக்கிறோம். எங்களை விமரிசித்த வினவின் பின்னூட்டத்தையும் தொடர்புடைய பதிவில் நீங்கள் காணலாம். http://innapira.blogspot.com/2010/04/x.html
இனி உங்கள் மற்ற புகார்களுக்கான என் பதில்கள்:

//நர்சிம் வக்கிரம் என்பதை ஒரு கேடு கெட்ட வக்கிர கும்பலின் இணையதளத்தில் சென்று தான் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமா? இதில் உங்களுக்குத் தொடர் வண்டி போல பெண்ணியம், பின்நவீனத்துவம், உடலரசியல், கோட்பாடெல்லாம் பேசும் "என்னருமை" தோழர் ஜமாலன் வேறு. அவர் "யாரெ"ன்றே எனக்கு குழப்பம் வந்துவிட்டது.//

நர்சிம்மின் பிரச்சினையின் முதல் கட்டுரையில் அவர் பற்றி வினவு வைத்த விமரிசனம் சரியென்று எனக்குத்தோன்றியது. உடனே பின்னூட்டமும் இட்டேன். (ஜமாலனுடைய பின்னூட்டத்துக்குப் பிறகுதான் என் பின்னூட்டம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது :-). நீங்கள் ஜமாலனை என் தொடர்வண்டி என்று சொன்னதற்கு அவர் வருத்தப்படுவார், பாவம்.) மேலும், எந்தத்தளத்தில் நான் பின்னூட்டமிட வேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியமில்லை. உங்கள் கவிதைகளைப் பற்றிய பதிவுகள் போன்ற சிலதில் சில அதீதமான தேவையற்ற சொற்பிரயோகங்களும் பின்னூட்டங்களும் வினவு தளத்தில் இருந்தன. ஆனால் அதற்காக அரசியல் களப்பணியைப் பொறுத்தவரை ம.க.இ.க தோழர்களின் பங்களிப்பையோ கமிட்மெண்ட்டையோ குறைத்து மதிப்பிடமுடியாது என்றே நான் கருதுகிறேன். இன்றைக்கும் ஆப்பரேஷன் க்ரீன்ஹண்ட்டை எதிர்ப்பது, சிதம்பரம் கோயில் நுழைவு உட்பட பலபோராட்டங்களில் அவர்களின் ஈடுபாட்டை, பங்களிப்பை நான் மதிக்கிறேன்.

//அறிவு மரபு பற்றிய உங்கள் பார்ப்பனீய வியாக்கியானங்களையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். விளைவுகளை மட்டுமே நம்புபவள் நான். பாசாங்குகளிலிருந்து இலக்கியத்தை காப்பாற்றுவது முக்கியம் என்பது என் தீர்மானம்.//

இவை வேறு யாருக்கோ எழுதவேண்டியதை எனக்கு எழுதிவிட்டீர்கள்போல. அறிவு மரபை பற்றி யார் எப்போது எங்கே பார்ப்பனீய வியாக்கியானம் கொடுத்தது என்று நான் அறியேன்.

//பிறப்பால் பார்ப்பனியர் என்றால் நான் எழுதுவது பார்ப்பனியப் பிரதியா என்று நீங்கள் எடுக்கும் பால பாடங்கள் ரொம்ப உளுத்துப் போனவை. கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லாமல் பார்ப்பனிய குழுவூக்குறிச் சொற்களை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்தவும் செய்துவிட்டு, அதற்கு வக்காலத்தும் வாங்கும் உங்கள் சொந்த சாதி அபிமானங்களால், இழக்கப் போவது நீங்கள் தான். வேறு யாருமல்ல.//

பார்ப்பனியம் எது என்பதைப்பற்றி சில கேள்விகள் என் முந்தைய பதிவில் வைத்தேன், என் பதிவை வாசிப்பவர்களுக்காக. இலக்கியப் பிரதிகளில் பார்ப்பனியம் பற்றிய விசாரணைக்கு பதிவை முன்னிட்ட உரையாடல்கள் உதவும் என்பதால். உங்களிடம் பதில் இல்லை என்றால் ”உளுத்துப்போனவை,” ”கூச்சநாச்சமில்லை,” ”சாதி அபிமானம்” என்றெல்லாம் திட்டுவீர்கள்போலும். நல்லது. ”வக்கில்லையா?”, “கூச்சநாச்சமில்லை” என்ற வார்த்தைகளெல்லாம் ஏதோ அரசியல் கூட்டத்தில் நாலாந்தரப் பேச்சை கேட்கிற உணர்வையே தருகிறது. உடனே இப்படி நான் சொல்வது நாகரிகப்பேச்சை ஆதரிக்கும் பார்ப்பனியம் என்று நீங்கள் குரல் கொடுக்கலாம். ஆனால் அப்படிக் குரல் கொடுப்பது, நாகரிகத்தை பார்ப்பனியத்துக்குப் பட்டா போட்டு தந்ததாகிவிடும்.

//வினவு, கீற்று இன்னும் புற்றீசல் போல பதிவுலகில் பொறுக்கித் தின்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் வைரஸ்களுக்கான உங்கள் விசுவாசத்திற்கு நீங்கள் விளக்கம் தந்தாக வேண்டும். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி, ஆனால் அவர்கள் மற்றவற்றில் நியாயமாகப் புரட்சி செய்துவிடுவார்கள் என்றெல்லாம் நியாயம் பேசினால் நீங்கள் பேசும் அரசியல், கோட்பாடு,நம்பும் எழுத்து எல்லாவற்றையும் கைவிட்டு விடுங்கள்.//

கீற்றில் இதுவரை நான் பின்னூட்டம் இட்டதில்லை. வினவைப் பொறுத்தவரை என் நிலைப்பாட்டை ஏற்கெனவே சொல்லிவிட்டேன். ஒருசில ஆதரிப்புப் பின்னூட்டம் “விசுவாசம்” என்று அறியப்படுமானால், எக்கச்சக்கமாய் இருக்கும் இத்தகைய “விசுவாசிகளால்” புரட்சி சீக்கிரமே சாத்தியப்பட்டுவிடும்.

மேலும், இதை செய்யுங்கள், அதை பண்ணுங்கள் என்கிற உங்கள் அதிகாரத்தொனியை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.

//உங்கள் புராதன வார்த்தைகளையெல்லாம் தாண்டி தமிழ் நவீனக் கவிதை வேறு இடத்திற்கு நகர்ந்துவிட்டது.நீங்கள் நலம் பேணும் சொற்களை வரிசைப்படுத்தினால் அதன் நுண்ணரசியல் உங்கள் அடையாள விடுபடலின் உண்மை நிலவரத்தை தோலுரிக்கும்.//

தாராளமாக வரிசைப்படுத்தலாம். நீங்கள் என் கவிதைகளைப் பாராட்டி எஸ். எம். எஸ் கொடுத்தபோது, முகப்புத்தகத்தில் கமெண்ட் போட்டபோது, பிறகு என், ஜமாலன் கட்டுரைக்கான உங்களின் பதிலில், ”பார்ப்பனியச் சொற்களையும்” தாண்டி என் “பெருவாரியான கவிதைகளை” நீங்கள் ”விரும்பி வாசித்ததாக” எழுதியபோது, என் கவிதைகளின் புராதன சொற்களும் நுண்ணரசியலும் உங்களுக்குத் தெரியவில்லைபோலும். நல்லது.

//தலித்திய அரசியல் எழுச்சிக்குப் பின்னால், எழுத வந்த பார்ப்பனரல்லாத பெண்ணெழுத்து மிகப் பெரிய ஒடுக்குமுறைக்கும், அதை மீறிய விவாதத்திற்கும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த கொந்தளிப்பு நீள்கிறது. தமிழ்க் கலாசார அசைவுகளில் இது மிக முக்கியமான சலனம். இதைப் புனைவு என்று நீங்கள் சொல்வதிலேயே உங்கள் ஆதிக்க கருத்தியல் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. என்னங்க ஒரு பத்து வருடமிருக்குமா? இதற்கே இப்படி காய்கிறீர்களே? ஆயிரமாயிரம் வருடமாக அறிவு மரபிலிருந்து ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்கள் எப்படி காய்ந்திருப்பார்கள்?//

நான் முந்தைய பதிவில் சொல்லியிருப்பது தமிழ் இலக்கியச்சூழலில் உடல்மொழி என்கிற ஒன்று (இது என்ன என்பதைத் தனியே ஆராய வேண்டியிருக்கிறது), கவிதைச்சூழலில் கொண்டிருக்கிற கருத்து மேலாண்மையைப்பற்றி. பார்ப்பனர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் அல்லாத பல பெண் கவிஞர்கள் (வெண்ணிலா, இளம்பிறை உட்பட) உடல்மொழி அற்ற பெண்ணியத்தளங்களில் எழுதியிருக்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கியச்சூழலில் உடல்மொழி பெறுகின்ற கவனிப்பு, இக்கவிதைகள் பெறுகிறமாதிரி எனக்குத் தெரியவில்லை. கவிஞர் ரிஷி பார்ப்பனப் பெண் கவிஞர்கள் ஒதுக்கப்படுதலைச் சொல்லியிருக்கிறார். அதைவிட, பொதுவாகவே பெண்களின் உடல்மொழி சாராத கவிதைகள் கவனப்படுத்தப்படவில்லை என்று நான் அவதானிக்கிறேன். உடல்மொழிக் கவிதைகளின் வரலாறாக மட்டுமே தமிழ் பெண்ணிய வரலாறு இலக்கியத்தில் எழுதப்படுமானால் அத்தகைய வரலாறு புனைவு என்கிறேன். இதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். ஆனால் நான் பார்ப்பனர் அல்லாதோரின் எழுத்துக்கு எதிரி என்பதுபோல நீங்கள் பொய் சொல்கிறீர்கள், திரிக்கிறீர்கள்.

சரி, உங்கள் கட்டுரைக்கு வருகிறேன். http://www.lumpini.in/a_punaivu-005.html
மஹாஸ்வேதாதேவியின் திரௌபதி கதையின் வன்புணரப்படுத்தப்பட்ட திரௌபதிபோல பாதிக்கப்பட்டவள் என்பதாக உங்களை உங்கள் கட்டுரையில் முன்நிறுத்திக்கொள்கிறீர்கள் நீங்கள். அப்படி நிறுத்திக்கொள்ளும்போது, எதை நீக்கம் செய்கிறீர்கள் என்று பார்க்கலாம். திரௌபதி (அவளின் மறுபெயர் தோப்தி) ஒரு சந்தால் ”பழங்குடி”ப்பெண், நக்ஸல்பாரி போராட்டத்தில் ஈடுபட்டவள். தலைமை தாங்கியவள், நக்ஸல்களை ஒடுக்கும் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் பிராந்திய ராணுவத்தலைமை, அவளின் அரசியல்செயல்பாட்டுக்கான தண்டனையாகவே அவளைப்பிடித்தபின் ஆட்களைவிட்டு வன்புணரச்செய்கிறது. மகாபாரத, மரபுசார்ந்த திரௌபதியின் வேறொரு நவீனவடிவமாக வருகிறாள் தோப்தி, முக்கியமாக ஐவரை மணந்த திரௌபதிக்கு நேர்மாறாக ஒரே கணவனோடு. கணவனோடு ஒத்த புரட்சிச்சிந்தனை கொண்டவளாக இருக்கிறாள் தோப்தி. ராணுவத்தால் வன்புணர்ந்து நிர்வாணமாக்கப்பட்ட அவள் உடல் பாலியல் விடுதலையைக் கோருவது அல்ல. ஏற்றுக்கொண்ட ஆட்சி-அதிகார மறுப்பு அரசியலுக்காக குரூர வன்புணர்ச்சித் தண்டனையை ஏற்ற உடல் அது, அதுவே தன் குருதிபடிந்த நிர்வாணத்தால் ராணுவத்தலைமையை அச்சுறுத்தவும் செய்கிறது.

பாலியல் விடுதலையைப் பேசும் பெண்ணியத்தை ஒருவர் பேசலாம். அது அவரது தேர்வு. ஆனால் அதே நேரத்தில், அப்படிப்பேசும்போது வேறுபிரதிகளின் படிமங்களை உபயோகிக்கும்போது நேர்மை வேண்டும். மஹாஸ்வேதா தேவியின் இந்தக் குறிப்பிட்ட பிரதியிலிருந்து, தோப்தியின் “பழங்குடி” அடையாளத்தையும் ”போராளி” அடையாளத்தையும் நீக்கிவிட்டு, உங்களை வன்புணரப்பட்ட திரௌபதியின் வடிவமாதிரியாக கட்டுரையில் உங்களைக் காட்டிக்கொள்கிறீர்கள். மஹாஸ்வேதாதேவியின் கதை தமிழ்நாட்டில் யாருக்குத் தெரியும் என்கிற அலட்சியம்தானே.

உரையாடலைச் செய்யும்போது பொய்சொல்லாத நேர்மை மட்டுமல்ல, ஐயன் திருவள்ளுவர் குறிப்பிடும் பயனில சொல்லா பண்பும் வேண்டும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லரகத்து.

இரண்டும் உங்களிடம் இல்லை. இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன். வேண்டுமானால் நீங்கள் தனிமொழியாக உங்கள் வசைபாடலைத் தொடரலாம்.

பெருந்தேவி

Tuesday, June 8, 2010

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை (1)

செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் இணையமும் மின்மடல்களும் சிலநேரம் எழுத அழைத்துவிடுகின்றன. லும்பினி இணையதளத்தில் கவிஞர் லீனா மணிமேகலை சமீபத்தில் எழுதிய ”கட்டுரை”-க்கான கவிஞர் ரிஷியின் http://www.lumpini.in/ethiraadal-008.html எதிர்வினையை வாசிக்க நேர்ந்தது. (லீனா மணிமேகலையின் ”கட்டுரை”யில் கவிஞராக என் பெயர் குறிப்பிடப்படாததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால் ரிஷி என் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு எதிராடல் செய்திருப்பதால், அந்த மகிழ்ச்சியில் மண்விழுந்து இதை எழுதவேண்டியதாகிவிட்டது. அதற்காக ரிஷிக்கு என் அன்பார்ந்த கண்டனமும் நன்றியும் :-)இதை எழுதுகிற நேரத்தில் நண்பர் ராஜன்குறையின் உள்ளுமை-இருப்பு பற்றிய உருப்படியான கட்டுரைக்கு பொறுப்பான பதில் எழுதியிருக்கலாம் என்கிற குற்றவுணர்வோடு தொடர்கிறேன்.

ஒரு எழுத்தாளராக கவிஞராக என் கவிதையை, மொழியை “விளக்குவது” அல்லது நானே அவற்றைப் பேசுவது எனக்குத் துளியும் விருப்பமில்லாத செயல். எழுதத்தொடங்கி இந்தப் பதினாறு, பதினேழு ஆண்டுகளில் இதை நான் செய்வதைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். பத்திரிகைகளில் நேர்காணல்களைத் தவிர்த்ததற்கும் இது முக்கிய காரணம். “ஈஷிக்கொண்டு” என்கிற என்கிற என் கவிதையின் வார்த்தை இப்போது விவாதச்சுற்றில் வந்துவிட்டதால், சில எண்ணங்களைப் பகிர நினைக்கிறேன். (லதா கந்தசாமியின் சட்டையில் ஈஷியதைப் பார்த்த கவிதைசொல்லி ரகசியம்காக்காமல் கவிதை எழுதியதால் வந்த சிக்கல் இது :-))

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். ஒரு பிரதியில் பார்ப்பனியமோ அல்லது சாதியாதிக்கக் கருத்தியலோ செயல்படுமானால் அது கண்டிப்பாக விமரிசிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக ஏற்றத்தாழ்வுகளின் வழி தொடர்ந்து நிறுவப்படும், இயங்கும் இந்தியச் சமுதாயக்கட்டமைப்பில் இத்தகைய விமரிசனங்களுக்கான தேவையும் இடமும் நிச்சயமுண்டு. அதே நேரத்தில் எது பார்ப்பனியம் என்பதை வரையறுக்க வேண்டியிருக்கிறது, பிறப்பால் பார்ப்பனர்களாக இருப்பவர்கள் எழுதினாலே அந்த எழுத்து பார்ப்பனியப் பிரதியா, அல்லது எழுதப்படும் பிரதி பார்ப்பனியக் கருத்தியலை விதந்தோதினால் அதைப் பார்ப்பனியம் என்று விமரிசிக்க வேண்டுமா என்பது முக்கியம். (ஈஷி என்கிற சொல் வருகிற என் 68-வது பிரிவு என்கிற கவிதையின் சுட்டி இது. http://innapira.blogspot.com/2010/02/68_20.html எந்தப் பார்ப்பன ஆதிக்கக் கருத்தியலையும் இந்தப் பிரதியோ பிரதியில் இச்சொல்லோ நிலைநிறுத்துவதாக எனக்குத் தெரியவில்லை.

இதுவன்றி, பார்ப்பனியப் பிறப்பால் நான் எழுதுவதை ஒருவர் பார்ப்பனியப் பிரதி என்று சொன்னால், எனக்கு பதில்கூற எதுவுமில்லை. பிறப்பின் அடிப்படையில் விடுபடமுடியாத அடையாளச்சிறையின் கதவுகளை நான்தட்டி திறந்துவிடமுடியாது என்று நன்றாகவே அறிவேன் (இந்த வாக்கியத்துக்கான கருத்து உபயம் நண்பர் ராஜன்குறை, நண்பர் நாகார்ஜுனன் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் அவர் இதைப் பேசியிருப்பதாக நினைவு).

மேலும் பார்ப்பனர்கள் உபயோகிக்கும் சொல்லாக ஒரு சொல் பிரதியில் இருப்பதாலேயே, பார்ப்பனக் கருத்தியல் என்று போகிறபோக்கில் சொல்லிவிடமுடியுமா? ஒரு பிரதியில் பார்ப்பனக் கருத்தியலைத் தலைகீழாக்கும்வகையில்கூட பார்ப்பன அல்லது சம்ஸ்கிருதத் சொல்லாடல்கள் இடம்பெறக்கூடும். என் சில கவிதைகளையே எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம். என் “சில ஆலோசனைகள்” கவிதை http://innapira.blogspot.com/2008/08/blog-post_08.html உதாரணத்துக்கு. பலஸ்ருதி என்கிற பார்ப்பனிய சுலோக வார்த்தை இடம்பெற்றிருக்கிறது இதில். பொதுவாக, பலஸ்ருதி என்பது இறையை நோக்கிப் பாடப்பெற்ற பாடல்களை, பாசுரங்களைப் பாடுவதால் கிடைக்கும் பலாபலன்களை (குழந்தை பிறக்கும், வேலை கிடைக்கும் என்பது போன்றவை) அட்டவணையிடுவது. பாசுரத்தொகுப்பின் அல்லது பாமாலையின் framing device அல்லது சட்டகக்கருவி இந்தப் பலஸ்ருதி. ஆனால் அதே சட்டகம் என் கவிதையில் ஒரு எள்ளலோடு அதன் மரபார்ந்த நோக்கத்தை அர்த்தத்தைக் கேள்விக்குள்ளாக்கும்வகையில் பயன்படுத்தப்படுகிறது. என்னுடைய ”கேசவா” என்று தலைப்பிடப்பட்ட கவிதையிலும் இதேபோன்ற உள்ளார்ந்த எள்ளல்தொனியை வாசிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். http://innapira.blogspot.com/2008/07/blog-post_14.html. என்னைப் பொறுத்தவரை, கவிதை என்கிற வடிவத்தின் மொழி ஆதிக்கக்கருத்தியலை அல்லது அதன் மாறுபட்ட வடிவங்களை அரிக்கும் திறன்வாய்ந்த நுண்ணுயிரியாக நோய்க்கூறாக செயல்படுவதையே நான் விரும்புவேனே அன்றி உரத்துப்பேசுவதை அல்ல. என் எழுத்து தேர்ந்தெடுத்திருக்கிற பாணி அது. உரத்த துண்டுப்பிரசுரம் நேரடியான கள அரசியலுக்கு உதவும், ஆனால் கவிதையில் அது சரிவராது என்று நான் நம்புகிறேன். அதேபோல இலக்கியவாதிகள் கவிதை என்கிற பெயரில் துண்டுப்பிரசுரத்தை எழுதுவதாலேயே அரசியல்களப்பணியாளர்களுக்கு ஈடான போராளிகளாக தம்மை முன்நிறுத்திக்கொள்ள முடியாது என்றும் நினைக்கிறேன்.

மூன்றாவதாக, ரிஷி குறிப்பிடும் பிறப்பால் பார்ப்பனர்களாக அமைந்துவிட்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள்/கவிஞர்களை ஒதுக்குவதுபற்றி: லீனா மணிமேகலைக்கு முன்பே லிஸ்ட் போடும் “விமரிசகர்கள்” என்று அறியப்படுவோரும், “விமரிசகர்கள்” அல்லாத எழுத்தாளர்களும் செய்திருப்பது இது. இந்த அரசியல் புதிதா என்ன? இந்த அரசியலைத் தெரிந்து செய்பவர்களும் இருக்கிறார்கள், பெண்ணியம் பற்றிய வாசிப்போ புரிதலோ இல்லாமல் அடுத்தவர் போடும் லிஸ்ட்டையே பிரதியெடுத்துப் போடுபவர்களும் இருக்கிறார்கள். இது தேர்ந்த வாசகர்களின் ஊரறிந்த ரகசியம்.

ஆனால், பார்ப்பனப்பிறப்பு மட்டுமே இத்தகைய ஒதுக்குதலுக்குக் காரணமா என்பது சந்தேகமே, தமிழ் இலக்கியச்சூழலில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சிந்தனைப் (?)போக்கும் இதற்குக்காரணம் என்று நினைக்கிறேன். பெண் தன்னிலையைப் பேசும், வெளிக்கொணரும் மொழியில், பெண்ணுடல்/உறுப்புகள் பற்றிப்பேசும் எழுத்து பெண்ணியமொழியின் ஒருவகை மட்டுமே. இவ்வுண்மையை மறுத்து அல்லது மறைத்து பெண்ணுடலை/உறுப்புகளைக் கூற்றுப்படுத்தும் கவிதைகளே பெண்ணியக் கவிதைகள் என்பதாக தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு “கருத்து“ வலிந்து நிறுவப்பட்டிருக்கிறது. இதனால், பெண் எழுத்தாளர்களின் மற்ற செயலூக்கமுள்ள பங்களிப்புகளும் இடையீடுகளும் பரிசோதனை முயற்சிகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. பெண்ணியம்சார் படைப்புகளிலும் பெண்ணுடல் அல்லது உறுப்புகளே அன்றி, பெண் இருப்பின் வேறுபல தளங்களின் பிரச்சனைகளைப் பேசக்கூடிய படைப்புகளோ அல்லது பெண்-ஆண் முரணைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்புகளோ தமிழ் இலக்கியச்சூழலில் கவனப்படுத்தப்படுவதில்லை. வலிந்து நிறுவப்பட்டிருக்கிற இந்த ஆதிக்கக் கருத்தின் மணல் அக்கருத்துக்கு இயைந்துவராத பெண் எழுத்துகள் தொடர்ந்து ஒதுக்கப்படுகிற அநியாயத்தை குழியிலிட்டு் மூடிவிட்டது.

இல்லாவிட்டால், பெண் தன்னிலையும் பெண்ணியமும் வேறுபல வகைகளில் செயல்படும் கவிதைகளோ, கவிஞர்களோ இங்கே கண்டுகொள்ளப்படாமல் இருப்பது எப்படி? இங்கே பெண்கவிஞர்கள் என்று போடப்போடுகிற லிஸ்ட்டில் குறிப்பிட்ட வகைமாதிரிகளில்—”உடல்மொழி” என்று தமிழ்நாட்டில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிற வகைமாதிரிகளில்--எழுதும் பெண் கவிஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்களே, அது எப்படி? தமிழ் எழுத்துச்சூழலில் பெண் எழுத்தின் வரலாறு என்பது எவ்வித கோட்பாட்டு அடிப்படையுமற்றப் புனைவொன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லி உருவாக்கப்பட்டிருப்பதே. இது கவிஞர் ரிஷியும் அறிந்ததே.

யாருடைய எழுத்தாக இருந்தாலும், சில சொற்களில் அல்லது ஒருசில வாக்கியங்களில் அதைப் புறந்தள்ளுவது விமரிசனமாகாது. சமீபத்தில் இணையத்தில் விவாதத்துக்கு உட்பட்ட லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளைப் பற்றி ஜமாலனும் நானும் எழுதிய கட்டுரையில்கூட விரிவாகவே எங்கள் நிலைப்பாட்டை வைத்தோம். அதற்கு பதிலாக தன் ”ஒட்டுமொத்த படைப்புவெளியை” கணக்கிலெடுத்துக்கொள்ளாததற்காக ஜமாலனையும் என்னையும் குற்றஞ்சாட்டிய அவரோ, தன் கட்டுரையில் ரிஷி, வெண்ணிலா, உமாமகேஸ்வரி, சுகந்தி சுப்ரமணியன், இளம்பிறை போன்ற பல கவிஞர்களின் எழுத்துகளை ஒரே வாக்கியத்தில் புறந்தள்ளியிருக்கிறார். விந்தைதான் இது!







Thursday, June 3, 2010

தீயுறைத்தூக்கம் (2 & 3)

சப்தம்

குளம்புகள் மழலைகளின்

யார் வெகுதூரம் புவிகடக்க

சுற்றமும் உற்றாரும் சாரதிக்க

யாழினித்து மரிக்கும்

தேயும் அடிகளின்

செம்மையுறும்.


வளர்ந்தோம்.



******



நிலாப்பிரகாசம் போலொரு சொல்

ஒளிரு மென் நெஞ்சில்

தூண்டா மணிவிளக்கு

தேடிய தடங்கள் உன்

கரங்கள் மணக்க

சிரிப்பாடும் கள்ள மனமுகம்



பொத்தும் கை நிற்குமோ பௌர்ணமி?

தீயுறைத்தூக்கம் (1)

நிழல்கள் வெட்டுப்பட
பினதொடர்வாரில்லை
யென்றும்
உரையாடிப்போகும் காலடிகள்

முட்டுச்சந்தில்.

Wednesday, June 2, 2010

இருத்தல் நிமித்தம்

--கவிதை நீக்கப்படுகிறது--

Sunday, May 30, 2010

முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள்

(ஆத்மாநாம் பெருந்தேவி)


பரபரத்து இலக்கை நோக்கி

நீங்கள் மற்றவர்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில் முழிபிதுங்கித் திணறுகையில்

உங்கள் நண்பி வந்தால் உங்கள் அன்பனைக் கண்டால்

எந்தத் தயக்கமும் இன்றி விழி சோர

இறுகக் கட்டித் தழுவி சொல்லும் தடுமாறி

இதமாக பின்னர் ஞாபகமும்

தொடர்ந்து முக்குளிக்க

நீண்டதாக பால்வீதியினும் நீள

முத்தம் கொடுங்கள் அமுதம் பெறுங்கள்

உங்களைப் பார்த்து பொறாது

மற்றவர்களும் பார்த்தும் பாராது

அவரவர் வழிசெல்பவரும்

நண்பிகளுக்கு முத்தம் அன்பர்களுக்கு அமுதம்

கொடுக்கட்டும் கொடுப்பர் அதேபோல்

விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும் அழிவில்லை காண்

மறந்துவிட்டு பிறவாநிலையின்

சங்கமமாகிவிடுவீர்கள் ஒரே புள்ளியில்

பஸ் நிலையத்தில் வெயிலின் ல்லும் உருக

ரயிலடியில் காத்திருப்பின் காலும் பூபூக்க

நூலகத்தில் உதவாப் புத்தகங்களுக்கிடையில்

நெரிசற் பூங்காக்களில் பட்டுப்போன செடிகளின் நடுவில்

விற்பனை அங்காடிகளில் கோயில்களில்

வீடு சிறுத்து டி.வி. பெருத்த அறைகளில்

நகர் பெருத்த மனம்சிறுத்த தருணங்களில்

சந்தடி மிகுந்த தெருக்களில் தனியெனும் பாலையில்

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி முத்தமே அடைக்கலம்

கைவிடாதீர்கள் முத்தத்தை கைவிடப்படாதீர்கள் முத்தத்தால்

உங்கள் அன்பைத் தெரிவிக்க அன்பிலாத நோய் தீர

ஸாகஸத்தைத் தெரிவிக்க அவநம்பிக்கை சாவு காண

இருக்கும் சில நொடிகளில் தனதற்ற

உங்கள் இருப்பை நிரூபிக்க மரபான

முத்தத்தைவிட முத்தம்போலும்

சிறந்ததோர் சாதனம் தீராத தீர்வு

கிடைப்பதரிது அரிது அரிது

ஆரம்பித்து விடுங்கள் ஆரம்பத்திலேயே

முத்த அலுவலை உதட்டின் கடமையை

இன்றே நந்நாள்

இப்பொழுதே நற்பொழுது

இக்கணமே பொற்கணம்

உம் சீக்கிரம் பார்த்து நழுவ விடாதீர்கள்

உங்கள் அடுத்த காதலி அடுத்தடுத்து

காத்திருக்கிறாள் அன்பின் களப்பணியில்

முன்னேறுங்கள் காலத்தைக் கிடப்பில் போட்டு

கிறிஸ்து பிறந்து ம்

இரண்டாயிரம் வருடங்கள் கழித்து ம் தயக்கமேன்

இருபத்தியோறாம் நூற்றாண்டை பல்லாண்டு பாடுவோம்

நெருங்கிக் கொண்டிருக்கிறோம் முத்தமிட்டடைவோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து குத்துப்பாட்டுகளை மறந்து

சுத்தமாக வரமாக

முத்தம் பரமாக

முத்தத்தோடு முத்தம் முத்தங்காண முத்தம்

என்று இப்போதே

முத்த சகாப்தத்தைத் துவக்கலாம்

துவங்குங்கள் துவங்கியாயிற்று.

Friday, May 28, 2010

தனியரென்றில்லை யாரும்

சில வாரங்களாக ஆத்மாநாமின் இந்தக் கவிதை மனதில் வந்தபடி இருந்தது. கொண்டுவந்த அவர் கவிதைப்புத்தகத்தைக் காணோம். கடைசியில் கூகிள் செய்து, ரவி ஆதித்யா-வின் வலைப்பதிவில் (http://raviaditya.blogspot.com/2009/04/blog-post_08.html) இக்கவிதை மீள்பதியப்பட்டிருப்பதைக் கண்டேன்.

அழைப்பு


இரண்டாம் மாடியில்
ஓற்றைச் சன்னல் அருகில்
நான் என்னோடு
உணவருந்திக்கொண்டு
அருகில் வேப்பமரக்கிளை
மீதிருந்த காகம் அழைத்தது
பித்ருக்களோ தேவர்களோ
என எண்ணி
ஒரு சிறு கவளச் சாதத்தை
வெளியே வைத்தேன்
சாதம் சாதமாக
காகம் பறந்து விட்டது
யாருடைய பித்ருக்களோ
நானறியேன்.


*****

யாரின் அல்லது எதன் அழைப்பு? நவீனயுகத் தனிமனிதத் தனிமை “ஒற்றைச் சன்னல்,” “என்னோடு நானே உணவருந்துதல்” என்று குறிக்கப்படுகிறது. தனியாகப் படுப்பதிலும் தனியாக உணவருந்துதல் இன்னும் கொடுமை. ஆனால், தனிமை என்பதுதான் என்ன? நிகழில் யாருமற்றுப் போகலாம். ஆனால், சந்ததியாக மூதாதையரோடு ஒரு கண்ணியில் இணைக்கப்பட்டிருக்கிறோம். தன்னந்தனிமையில் மனம் குவியும் மருட்கணம், அதைச் சிதறடிக்கும்வகையில் காகத்தின் வழியாக இந்த அழைப்பு.

பித்ரு ரூபமாகத் தெரியும் காகம் ஒற்றைசன்னலருகே அமர்ந்திருப்பவரின் குடும்பத்தின் மூதாதையர் என்பதாகமட்டும் தெரியவில்லை. சாதம் சாதமாகக் காகம் பறக்க, உலகில் தெரிந்த தெரியாத யாரோ மனிதர்களின் எல்லா மூதாதையரோடும் கொள்ளும் தொடர்பின் அழைப்பாகவே தொனிக்கிறது.

உடலே அன்னமயக் கோசமாக, அன்னத்தால் ஆகியிருக்கிறதென்றால், காகத்துக்கான சாதத்தின்மூலம் நம்மையே நாம் மூதாதைகளுக்குத் தருகிறோமா? அல்லது அன்னமயமாக உருவகிக்கப்படுகிற உடல் நாம் பின்னொருநாள் வேறு யாருக்கோ பித்ருக்களாக இருக்கப்போவதன் முன்வரைவா?

(பித்ரு: வடமொழிச்சொல், ‘பிதா’வை முன்நிறுத்தி தந்தைமைக் கருத்தியலை நிறுவும் சொல். என்றாலும் கவிதையில் மூதாதையர் பலராகத் தெறிக்கும் அர்த்தங்கள் இக்கருத்தியலை கொஞ்சம் நகர்த்திவைத்துப் படிக்கவும் தூண்டுகின்றன.)

வின்னிபெக்-கில் உண்ண சாதமும் இன்றி வரக் காகமுமின்றி ஒற்றைச் சன்னலைப் பார்த்துக்கொண்டே இதை எழுதுகிறேன். என் கவிதை ஒன்றும் நினைவில்:

அண்டசராசரம்

மடிப்பில் மாமிச
வெயில் விரித்தெனைக்
கொத்தும் தனிமையோர் காகம். (தீயுறைத்தூக்கம், 1998)


சாதம்சாதமாக எழுத்துகளே இப்போது கண்முன் பறக்க ஆத்மாநாமும் மற்ற தெரிந்த தெரியாத கவிஞர்களே அன்றி வேறு யார் எனக்கு மூதாதை என்று எண்ணியபடி.

சிந்தனை

ஒளியோடிருக்கும் அம்மூலையில்

விளக்கே இல்லை

வெளியே பகலோ

இருளுண்டு கிடக்கும் இவ்வெளியில்

வெளியே இல்லை

முழுக்க மனமோ.

Wednesday, May 26, 2010

(தலைப்பில்லாதது)

ஒவ்வொரு சிறுவனின் வீட்டின் பின்புறத்திலும்
ஆகாயவிமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு சிறுமியின் காதுகளும்
புகழுரையின் காதணிகளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்மகனும் கலவியின் இன்பத்தில்
உயரப்பறத்தலை மனதில் கொள்கிறான்.
ஒவ்வொரு பெண்மணியும் அப்போது தன்
யோனியும் காதாகி வளரப் பிரார்த்திக்கிறாள்.

சிறுவன் ஆண்மகனாக சிறுமி பெண்மணியாக
மட்டுமே வளர்வதாக
தப்பபிப்பிராயம் கொண்டவர் அனேகம்.

சிறுமி ஆணாக வளரும்போது
விமானம் கட்டப்பெறாத
வலிய தன் துளைகண்டு எரிச்சலடைகிறான்.
சிறுவன் பெண்ணாக வளரும்போது
புகழுரையின் ஓடுதளத்தைக் கண்ட அவசரத்தில்
தன் விமானத்தை இறக்குகிறாள்.
சிறுமி சிறுவனாகவும் சிறுவன் சிறுமியாகவும்
வளர்வதுமுண்டு.
அதி
காலையாகவும்
அந்தி
மாலையாகவும்
தெரிந்த பொழுதுகளோடு கூடவும்
வேறு ரம்மியங்கள் சேர
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
காதுகளை உடலோடு இணைத்தும்
விமானங்களை உயரத்திலிருந்து பிரித்தும்
காணத்தெரிந்தவர்களும்கூட.


(”இக்கடல் இச்சுவை”, காலச்சுவடு பதிப்பகம், 2006)

Sunday, May 16, 2010

”உரையாடல்”

--கவிதை நீக்கப்படுகிறது--

Wednesday, May 12, 2010

என் புனல்

--கவிதை நீக்கப்படுகிறது--

Friday, May 7, 2010

நேரும்

--கவிதை நீக்கப்படுகிறது--

Saturday, April 24, 2010

நான் ஆடுகிறேன்

(ஈவ் இன்ஸ்லர்)


ஆடுகிறேன் நான் இங்கே இருப்பதற்காக
ஆடுகிறேன் நான் மறைவதற்காக
ஆடுகிறேன் என்னால் முடியும் என்பதால்
ஆடுவேன் என்பதால்

ஆடுகிறேன் ஜிப்ஸிக்களோடு
சர்ச்சுகளில் இருக்கும் அவர்களோடும்
ஆடுகிறேன் சூனியக்காரிகளோடும் தேவதைகளோடும்
நிலைபுத்தி அற்றவர்களோடும்
ஆடுகிறேன் பூமியின் பச்சைவண்ண அடைவுகளுக்குள்ளே
ஆடுகிறேன் சாலையில் விட்டுச்செல்லப்பட்டவர்களோடே
ஆடுகிறேன் மேசைகள்மேலே
கூரைகள் மேலே
படிக்கட்டுகளிலே
ஆடுகிறேன் நான் அலற விரும்பும்போது
பிறாண்ட கீற குத்த விரும்பும்போது
ஆடுகிறேன் நான் கட்டுக்கடங்காதவரை கிறுக்காகும்வரை
ஆடுகிறேன் நான் தைரியமாகும்வரை முடிக்காதிருக்கும்வரை
ஆடுகிறேன் உன்மத்தத்தை
ஆடுகிறேன் அபாயத்தை
ஆடுகிறேன் சின்னப்பெண்ணை
ஆடுகிறேன் ஏனென்றால் என்னால் நிறுத்தமுடியவில்லை
ஆடுகிறேன் ஏனென்றால் அந்த அளவுக்கு உணருகிறேன்
ஆடுகிறேன் ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன்
உன்னை நேசிக்கிறேன் உன்னை நேசிக்கிறேன்
சரி கைகளைக் கட்டிக்கொண்டு
சும்மா நிற்காதே அங்கே
என் தோல் ஒரு வரைபடம்
என் தொப்பிளோ நெருப்பில்
என்னோடு வா
என்னோடு ஆடு
உன்னுடையதெல்லாமே
இன்னும் உயரத்தில்
உயரே

(இன்ஸ்லர்-ன் “தனிமொழி” ஒன்றை முந்தைய பதிவில் மொழிபெயர்த்துச் செய்திருந்தேன். இது அவருடைய இன்னொரு கவிதை/மொழி)

Friday, April 23, 2010

மேற்குக்கரையின் சுவர்

ஈவ் இன்ஸ்லர்-ன் “நானொரு உணர்வுபூர்வமான பிறவி” I am an emotional creature (2010) என்கிற புத்தகத்திலிருந்து மொழிபெயர்த்துச் செய்யப்பட்ட ஒரு “தனிமொழி” (monologue) இது. அமெரிக்க பெண்ணிய எழுத்தாளரான அவரது “The Vagina Monologues” என்ற தலைப்பிடப்பட்ட நாடகம் புகழ்பெற்றது. உலகின் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டதும்கூட.

(சமீபத்தில் வாசித்ததில் என்னை மிகவும் பாதித்த கவிதை/மொழி இது, பகிர்ந்துகொள்வதில் ஆறுதலடைகிறேன்.)



சுவர்

ஜெருசலம், இஸ்ரேல்


என் தோழி அதீனா என்னை மேற்குக்கரைச் (West Bank) சுவரின்

அந்தப்பக்கத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.

அங்கே அது இருக்கும்விதத்தைப் பார்த்து ஆச்சரியமடைகிறேன்.

உயரமாக இருக்கிறது அது இன்னும்.

தாண்ட உங்களுக்கு ஹெலிகாப்டர் வேண்டும்.

கடினமான சிறுமைகொண்ட சிமெண்ட்டின் பிரிவுச்சக்தி, வீடுகள்,

நிலம், மற்றும் நண்பர்கள்

திரும்பப் போகிறேன்

நிறைய கதைகளைக் கேட்கிறேன்.

இந்தப்பக்கத்தில் தண்ணீர் இல்லை

கிணறுகள் இல்லை

மாதுளையோ அத்தியோ இல்லை

வேலைகள் இல்லை

வெளியேபோக வழியுமில்லை.

வெள்ளிக்கிழமைகளில் பாலஸ்தீனியப் பையன்களோடு

போராட்டம் செய்கிறேன்.

ஒரு இஸ்ரேலியச் சிறுமி இங்கே என்ன செய்கிறாள்

என்பது புரியவில்லை அவர்களுக்கு.




ரகசியமாக அது.

வீட்டில் ஒருவருக்கும் தெரியாது.

மாதங்களாக தொடர்கிறது.



சுவர் என்னை மாற்றுகிறது.

நான் என் கால்களைச் சவரம் செய்வதை நிறுத்துகிறேன்.

மாமிசம் உண்ணுவதை நிறுத்துகிறேன்.

அப்படியே ராணுவத்தில் சேர மறுக்கிறேன்.

என் பாட்டனாரின் வயதேறிய மென்முகத்தில்

அவரது உடைந்த இதயத்தைக் காண்கிறேன்.

திருப்பித்தரவில்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.

உண்மையான இஸ்ரேலியள் இல்லை நீ என்று சொல்லப்படுகிறது என்னிடம்.

முன்பெல்லாம்போல என் தந்தை

என்னைப் பார்ப்பதில்லை.

அண்ணனோ உரத்துப் பேசுகிறான்

என்முகத்துக்கு முன்பாகப் பீற்றுகிறான்

இன்று ஒரு அரேபியனைக் கொன்றதாக.

இப்போதும் முடியாது என்கிறேன்.

எனக்கு உளச்சிக்கல்கள் இருக்கிறது என்று ஒத்துக்கொள்ள மறுக்கிறேன்.

துப்பாக்கிசுட நான் பழகமாட்டேன்.

சிறைக்குப் போகிறேன்.

ராணுவத்தின்/சிறையின் சீருடையை அணிய மறுக்கிறேன்.

தனிச்சிறையில் வைக்கப்படுகிறேன்

அது என்னை எந்த அளவுக்கு பயமுறுத்துகிறது என்பதைச் சொல்லவில்லை.

ஒவ்வொரு இரவும்

என் வயதொத்த ஒரு இளம்பெண், பதினெட்டுபோல வயதிருக்கும்,

என் செல்லில் உலாவுகிறாள்.

அவள்தலை மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது.

அவள் நிர்வாணமாக இருக்கிறாள். பசியோடு இருக்கிறாள்.

எனக்கு எதையோ தெரியப்படுத்த நினைக்கிறாள்.

அவளுக்குத் தொண்டை அடைக்கிறது.

எலும்பின் அவள் கைகள்

சுவரைப் பிறாண்டுகின்றன.

அவள் ஒரு கனவா, இல்லை ஒரு நினைவா,

சொல்லத் தெரியவில்லை எனக்கு.

என்னை அவள் பீடிக்கிறாள்

அல்லது

விடுவிக்கிறாள்.

Tuesday, April 20, 2010

கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’: கடிதமும் பதிலும்

எங்களின் “கவிதையின் ‘நான்’ = கவிஞரின் ‘நான்’” பதிவுக்குப் பதிலாக கவிஞர் லீனா மணிமேகலை ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதை அந்தப் பதிவின் பின்னூட்டத்தில் பகுதிகளாக பிரசுரித்து பதில் எழுதினோம். இப்போது அவரிடமிருந்து ஏப்ரல் 17ம் தேதியிட்ட இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. அதை இப்போது தனியாகவே பிரசுரிக்கிறோம், எங்கள் பதிலையும் எழுதியிருக்கிறோம்.இதற்குமேல் அவரது கவிதைகள் பற்றி எங்களுக்குக் கூற ஒன்றுமில்லை.


லீனா மணிமேகலையிடமிருந்து வந்த கடிதம் இதோ:

ஜமாலன் தோழரின் மெயில் படித்தேன்.

"பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?"

உங்கள் கட்டுரையின் இந்த கடைசி பாராவுக்கும் நம் உரையாடலுக்கான உங்கள் விழைவுக்குமான மன அமைப்பில் கடுமையான முரண் இருக்கிறது. அய்யய்யோ, வருங்காலத்தில் நம்மை விமர்சித்துவிடுவார்களே என்றெல்லாமா ஒரு பிரதியை அணுகமுடியும்? அப்புறம் ஒரு பிரதியை ஏன் எதிர்ப்பு வருகிறது என்ற கேள்வியின் வழி அணுகி விமர்சிக்கும் பாணி ஒருபுதுவித துப்பறியும் விமர்சன பாணியா என்ன?

பிரதியை யார் எதிர்த்தார்கள், ம.க.இ.கவும், இந்து மக்கள் கட்சியும்! சமூக ஒழுங்கை கட்டிக்காத்து படைப்பாளிகளை அரசாங்கத்துக்கு காட்டிக் கொடுப்பதில் ஒன்று சேர்ந்திருக்கும் இந்த அடிப்படைவாதிகள் ஏன் இந்தப் பிரதியை எதிர்க்கிறார்கள் என்பதை துப்பறிந்து புரிந்துக் கொள்ளும் மட்டத்திலா ஜமாலனும் பெருந்தேவியும் இருக்கிறீர்கள்.

ஒரு கவிதையை கவிதையே இல்லை என்று விமர்சனம் செய்வது உங்கள் உரிமை.ஆனால் அந்த புள்ளிக்கு நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் வழி என்னை தொந்தரவு செய்கிறது.

எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம். வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.

ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.
நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.

அப்புறம் கூட்டத்தில், ம.க.இ.க கூலிப்படைத் தாக்குதலெல்லாம் முடித்து வெளியேறியபின், கே.ஏ.ஜி தோழர் ஒரு அருமையான விசயம் சொன்னார்.

"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்து திருவாலவாய் அருள்
பெண்ணகத்து எழில் பேயமன் சாக்கியத்
தென்னர்க் கற்பழிக்கத் திருவுளமே"
தேவாரம், மூன்றாம் பதிகம், திருஞானசம்பந்தர், "திருவாலவாய்".
சமணப்பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ள சிவனின் அருளை வேண்டுகிறார்கள் நம்ம சைவர்கள்.

அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.

எனது பன்னிரெண்டு வயதில் சோவியத் யூனியனுக்கு யங் பயணியராக சர்வதேச குழந்தைகள் முகாமிற்கு சென்றபோது சாஷா என்ற குழந்தை கம்யூனிஸ்ட் தோழனோடு நெருக்கமான தோழியானேன். புரட்சி மட்டும் தான் அவனின் கனவு, மூச்சு எல்லாம். அப்புறம் பிரஸ்திரோய்கா வந்தது, கிளாஸ்நாஸ்ட் வந்தது, கோர்பசேவ் கதவுகளை திறந்தார், சோவியத் உடைந்தது, அவனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்காவில் ஏதோ பார்மேன் வேலையில் இருப்பதாக அறிந்தேன்.தொடர்பு கொண்டேன். புரட்சியைப் பற்றி அவனிடம் கேட்க வில்லை.

பெர்லின் திரைப்பட விழாவுக்கு என் தேவதைகள் ஆவணப்படத்தை திரையிட சென்றபோது ஒரு தோழி கிடைத்தாள்., கிழக்கிலிருந்து மேற்குக்கு சுவர் தாண்டி தன் உறவுகளைப் பார்க்க வருவதற்கு தன் கன்னிமையை ஒரு அதிகாரிக்கு பலியிட்டுவிட்டு வந்த கதையை எனக்கு சொன்ன போது உறைந்துபோனேன்.

என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.

குழந்தை தொழிலாளி ஆவண நாவலின் நாயகி சீனா போராளிக்குழுவின் பெண்கள் பற்றிய என் எல்லா பிம்பத்தையும் உடைத்தவள்.

எவன் எதற்காக வல்லுறவு கொண்டால் தான் என்ன, வல்லுறவுக்குப் பிறகான பெண்ணுடலின் சிதைவு ஒன்றுதானே? ஒன்றை ஓங்கி சொல்லும் விருப்புறுதியில் அதீதத்திற்கு கவிதை இடம்கொடுக்க வில்லையென்றால் கவிதையை கைவிட வேண்டியது தான்.

இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.

ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?

*******

எங்கள் பதில்:

அன்புள்ள லீனா மணிமேகலை,

நீரோ மற்றும் புலிகேசி பாணி இறுதி வரிகள் ஒரு நெகிழ்வான எழுத்துமுறையாக இந்த விமர்சனத்தை மாற்றும் நோக்கில் எழுதப்பட்டதே. அல்லது, வரலாறு என்கிற ரயிலை தவறவிடாமல் தொற்றிக் கொள்ளலாம் என்கிற ஆதங்கம் என்றும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். என்ன கடைசிப்பெட்டியில் ஏறிக் கொள்ளும்படி ஆகிவிட்டது. :-) எங்களை யாரும் விமர்சித்து விடுவார்கள் என்பதற்காக பிரதியை அணுகவில்லை. பிரதியை யாரும் விமர்சிக்கவில்லையே என்பதால்தான் பதிவை எழுதினோம்.

//எங்கள் ஊரில் ஒரு வழக்கம் உண்டு. எனக்கு திருவில்லிபுத்தூர் அருகில், [ஊரின் பெயரை எடிட் செய்திருக்கிறோம்: ஜமாலன், பெருந்தேவி) என்ற கிராமம் தான் பூர்வீகம். கடுங்கோபம் வந்து எதிராளியை சபிக்கும் உணர்வுநிலைக்கு வரும்போது பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கி காட்டி பழிப்பார்கள். அப்படி ஒரு பழிப்பாகக் கூட இந்த கவிதையை நான் எழுதிப் பார்த்திருக்கலாம். ஒரு ஓலமாக கூட கவிதையை எழுதிப் பார்த்திருக்கலாம்.//

இதைப் படித்தபின் வருந்தினோம். ஊரின் பெயரைப்போட்டு இதை நீங்கள் எழுதியிருக்கவேண்டிய தேவையில்லை.

பெண்கள் தங்கள் பாவாடையைத் தூக்கிக் காட்டுவது குறிப்பிட்ட சூழலில் வரும் அதீத கோபத்தில், ஆத்திரத்தில், எதிர்ப்பு உணர்ச்சியில் நடந்திருக்கலாம். அத்தகைய செயலில் அதிகாரத்தை subvert செய்கிற ஒரு தன்மை உள்ளது. அந்தச்செயலை decontexualize செய்து, உங்கள் கவிதைகளுக்கான “நியாயமாக” ஒரு குறிப்பிட்ட ஊர்ப்பெண்களின் “நடப்பாக,” அதை இணையப் பொதுவெளியில் நீங்கள் பேசியிருக்க வேண்டாம். உண்மையில், இந்த உங்களின் கருத்துக்காகவே இந்தக் கடிதத்தை எங்கள் பதிவில் வெளியிட நாங்கள் மிகவும் யோசித்தோம்.

நீங்கள் சொல்லியிருக்கிற பெண்களின் அப்படியொரு செயல் அந்தச்செயலுக்குச் சம்பந்தமான சூழலில் ஒரு உடனடித்தன்மை கொண்டது. மோசமான அனுபவத்தை (அதாவது அவள் மீதான வன்முறையை, அடக்குமுறையை) அவள் எதிர்கொள்ளும் விதமாக, எதிராளியை விரட்டுவதற்கான ஆயுதம் போன்றது. குறிப்பிட்ட சமூகச்சூழலில், அதைப் பற்றிய நேரடியான பதிவில்தான் அதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், உங்கள் முதல் கவிதை பொதுப்படையாக எல்லாப்பெண்களையும் யோனி என்கிற ஒருவார்த்தையில் அடக்கிவிடுகிறது. உங்கள் இரண்டாவது கவிதையிலோ, ”பழிப்பு காட்டுவதன், ஓலமிடுவதன்” சூழல் என்பது மார்க்சியர்களைப் பற்றி பொதுப்படையான சித்தரிப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது.

தவிர, அந்தப்பெண்களைப் போலன்றி, உங்கள் கவிதைகளில் ”யோனி,” வன்முறையை passive ஆகவே எதிர்கொள்ளுகிறது. எதிர்ப்புணர்ச்சியின் தளங்கள் உங்கள் கவிதையின் பிரதியில் தென்படவில்லை என்பது பிரச்சினை. இதை ஏற்கெனவே எழுதியிருக்கிறோம்.

//வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு, ஆசிரிய ஒழுங்கு, சொல்லுக்கான அமைதி, வடிவ அமைதி என்று கவிதைக்கான ஒழுங்கையெல்லாம் பின் பற்றுவதற்கு பெண்ணுக்கு மொழியா இருக்கிறது? இல்லை வரலாறு இருக்கிறதா? கச்சாவாகவும், துறுத்தலாகவும் மொழியை வைப்பதை அரசியலாகவே வைக்கிறேன். அதிர்ச்சி மதிப்பீடு, ஆபாசம் என்ற வார்த்தைகளெல்லாம் மதவாத வார்த்தைகள். அதை முற்றிலும் நிராகரிக்க விரும்புகிறேன்.//

பெண்ணுக்கு மொழியில்லை, வரலாறு இல்லை என்றால், சங்ககால பெண் கவிஞர்கள், ஔவையார், காரைக்கால் அம்மையார் துவங்கி ஆண்டாள், ஆவுடையக்காள் என உள்ள குரல்களை அவர்களது மொழியை என்னவென்று சொல்வது? Hermeneutics of recovery என்கிற சாத்தியங்களோடுதான் இருக்கின்றன பெண்களால் எழுதப்பட்டிருக்கிற எழுத்துகள்.

மேலும் “கச்சாவாகவும், துறுத்தலாகவும்” மொழியை முன்வைப்பது பற்றி நாங்கள் எங்குமே பேசவில்லை. உங்கள் கவிதைகளுக்கு விமரிசன வாசிப்புகளை எல்லாம் “இவர்கள் கச்சாவான வார்த்தைகளுக்கு எதிரிகள்” என்று ஒற்றைப்புள்ளியில் நீங்கள் சுருக்கி எளிமைப்படுத்துகிறீர்கள் என்றே கருதுகிறோம்.


//ஞானக்கூத்தன், ஆடுகளை உரித்து சைக்கிளில் இப்படி அப்பட்டமாக எடுத்து செல்ல வேண்டுமா? மறைத்துவைத்து செல்லலாமே? என்று சொன்னாராம். எங்களுக்கு ஆடு ஓடும்போது, அழகு, அடிபட்டால் வருத்தம், கண்ணீர் சிந்தி கட்டுக் கூட போடுவோம். ஆடுக்கு ஆபத்து வராமல் காவலுக்கு மூன்று நாய்களையும் வைப்போம். ஆனால் வெட்டினால் இறைச்சி தான்.
நான் இமோஷனல் இன்டெலிஜன்ஸில் நம்பிக்கை வைத்திருக்குமொரு முட்டாள் கவிஞர் தான். அப்படியிருக்கவே விரும்புகிறேன்.//

எதற்காக ஞானக்கூத்தனைப் பற்றிய இந்தச் ”செய்தி” இங்கே? மேலும், உங்களின் ”உணர்ச்சிவசப்பட்ட அறிவு” என்பதைப் பேசும்போது மற்றவர்களுக்கும் அதேபோன்ற “உணர்ச்சிவசப்பட்ட அறிவை” நீங்கள் மறுக்கமுடியாது.

//அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.//

நீங்கள் முன்வைத்திருக்கிற, சோவியத் கம்யுனிஸ்ட் தோழன், பெர்லின் தோழி சம்பந்தமான நிகழ்வுகள்...என்ன சொல்ல வருகிறீர்கள், சோவியத் கிளாஸ்நாஸ்ட், கோர்பச்சேவ் இவற்றுக்கும் ”புரட்சியாளர்கள்” ஒரு பெண் உடலை ஆணாதிக்க நிலையில் மட்டுமே அணுகி உங்கள் பாணியில் சொன்னால் “வல்லுறவு” கொள்வதற்கும் என்ன தொடர்பு, சோவியத்தின் சரிவிற்கும் ஒடுக்கப்பட்ட பெண்ணிய பாலியலுக்கும் என்ன தொடர்பு, இதெல்லாம் புரிபடவில்லை. இந்நிகழ்வுகளிலிருந்து நீங்கள் புரட்சிக்கான சித்தாத்தங்கள் தோற்றுவிட்டதாக எழுதினால்கூட ஒருவகையில் புரிந்துகொள்ளலாம். ஆனால் சோவியத்தின் வீழ்ச்சி, மார்க்சியம் இன்னபிற கோட்பாட்டு பிரச்சனைகளைப் பற்றியதல்ல உங்கள் கவிதைத்தளம். உடனே நான் கட்டுரை எழுதவில்லை என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறோம்.

எல்லைதாண்டும் ஒரு பெண் தனது கன்னிமையை அதிகாரியிடம் பலியிடுகிறாள் என்பது உறைந்து போகச் செய்யும் நிகழ்வுதான். இது போன்ற எண்ணற்ற கொடுமையான நிகழ்வுகள் நடந்துவருகின்றன இன்றைய உலகில். சரி, ஆனால், ஒரு பிரதியை வாசிக்கும்போது, கவிதைகளை ”எதற்காக” கவிஞர் எழுதியிருக்கிறார், அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் ”பின்னணி” என்பதெல்லாம் பிரதியை வாசிப்பவருக்கு தெரிய எந்த சாத்தியமும் இல்லை. (நீங்கள் இதைப்பற்றி கட்டுரை எழுதினாலேயொழிய அல்லது துண்டறிக்கை கொடுத்தாலேயொழிய).

//என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு.

இந்தியாவில் 90 சதவிகிதத்திற்கு மேலான குழந்தைகள் திருமணத்தின் பெயரால் நடக்கும் எஸ்டாபிளிஷ்டு வல்லுறவுகளால் பிறந்தவை தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.//

இதை எல்லாம் எதற்காக சொல்கிறீர்கள்? இதற்கும் இந்த உரையாடலுக்கும் என்ன பொறுத்தப்பாடு உள்ளது? எங்கள் விமர்சனத்தை உணர்ச்சி வசப்படாமல் வாசித்துப் பாருங்கள். பாலியல், வல்லுறவு, ஆணாதிக்கம் இவை எல்லாம் நாங்கள் எங்கும் மறுக்கவுமில்லை. அதை மறுப்பது எங்கள் அரசியலும் இல்லை. நாங்கள் ”ஒழுக்கம்” பேணும் தூய்மைவாதிகளும் இல்லை.

//இதெல்லாமும் உங்கள் மொழியும் நிலமும் நூலைப் படித்த காரணத்தினால் மட்டுமே எழுதுகிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் வரும் சமஸ்கிருதத்தையும், ஈஷிக்கொண்டு போன்ற பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் சொற்களையும் தாண்டி அவரது பெருவாரியான கவிதைகளை நான் விரும்பி வாசித்திருப்பதாலும் கூட இதை நான் எழுதியிருக்கக் கூடும்.//

ஞானக்கூத்தனை முன்பு சுட்டிக்காட்டியதிலும், பார்ப்பனியம் என்று இங்கு நீங்கள் எழுதுவதிலும், உரையாடலுக்குரிய பிரச்சனைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறீர்கள் என்றே நினைக்கத்தோன்றுகிறது. உங்கள் கவிதைகள் ஆண் பெண் என்று வலிந்து இருக்கும் இருமைக்கட்டமைப்புகளைத் தாண்டியதாக இல்லை என்றோம். இப்போதோ நீங்கள் அதன் தொடர்ச்சியாக பார்ப்பனியம்-பார்ப்பனிய எதிர்ப்பு என்பதாக வழக்கமாக சொல்லப்படும் பொதுபுத்தி சார்ந்த இருமைகளை முன்வைக்கிறீர்கள். பார்ப்பனியத்தின் கருத்தாடல்களை கேள்விக்குட்படுத்தும், எதிர்க்கும் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புத்த, சமண, தாந்திரீக நூல்கள் ஒருபுறம் இருக்கட்டும். கவிதைப் பிரதியில் சமஸ்கிருத வார்த்தைகள் பார்ப்பனியத்தை நிலைநிறுத்தும் என்றால், நீங்கள் உங்கள் கவிதைகளில் பயன்படுத்தும் காமம் துவங்கி கிரஹணம் போன்ற வார்த்தைகளை என்னவென்று சொல்வது? முக்கியமாக, உங்கள் கவிதைகளில் வருகிற “யோனி,” இது சம்ஸ்கிருத வார்த்தைதானே.

ஒரு கவிஞரின் (அவர் பெருந்தேவியாக இருக்கட்டும் அல்லது ஞானக்கூத்தனாக இருக்கட்டும்) கவிதையை, பிரதியில் கிடைக்கும், பின்னிப்பிணைந்த இன, மொழி, பால் என்கிற அடையாளக் கட்டமைப்புகளை அகழ்ந்து எடுத்து பேசுவதை ஒரு வாசிப்புப்பாணியாகக் கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பு நீங்கள் பார்ப்பனியம், தமிழன், பெண், ஆண் என்கிற அடையாளங்களை வரையறுக்க வேண்டும். அந்த வரையறைகளைச் செய்தபின்பு தான் பிரதி, அர்த்தம், அதன் செயல்பாடுகள் இவற்றைப் பேச முடியும். அதைவிட்டுவிட்டு, போகிற போக்கில் வசதி கருதி, ஓரிரு வார்த்தைகளை எடுத்துவிடுவது, விமரிசனங்களை சரியான விதத்தில் எதிர்கொள்ள உங்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதையே காட்டுகிறது.


பெருந்தேவி
ஜமாலன்

//ஜமாலன் தோழருக்கு, ஒரு குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக் கொண்டு விமர்சிக்க முயலும்போது, ஒரு படைப்பாளியின் முழு படைப்பு வெளியையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் சொல்லாடலை முன் வைக்க வேண்டும் என்பதை நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன? //

இந்தக்கட்டுரை, உங்களின் இந்த இரு கவிதைகளுக்கான இந்துமக்கள் கட்சியின் புகார், அதற்காக உங்கள்சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் சம்பந்தமானது. ஆகவே, இவை தொடர்பாக விவாதத்தில் இருந்த உங்கள் இரு கவிதைகளையும் பற்றி எழுதினோம். மேலும், ஒருவர் பல படைப்புகளை படைக்கிறார். அவரது முதல் படைப்பும் அடுத்த படைப்பும் ஒன்றுபோலவே இருக்க வேண்டியது எப்படி சாத்தியம், படைப்பாளிக்கு என்று ஒரு சாராம்சம் இருக்கிறதா என்ன, இந்த படைப்பாளி என்றால் இதைதான் படைப்பார் என்று. அப்படி ஒரே மாதிரி படைத்தால் அது படைப்பு அல்ல, சரக்கு.

அன்புடன்
ஜமாலன்

Friday, April 16, 2010

கேத்தே ஏகர்

புலனற்றவர்(வை)களின் சாம்ராச்சியம் (Empire of the Senseless)

V அல்ஜீரியர்கள் பாரிஸை எடுத்துக்கொள்ளட்டும்

(அபோர் பேசுகிறாள்)

என் அம்மா------------------------------------------------------------------

நான் ஓடிப்போனேன். திவை-யிடமிருந்து (திவை அபோரின் நண்பர்) மட்டுமல்ல, ஓடிப்போவதற்கு எந்த ஒரு இடமேனும் இருக்குமானால் அங்கே ஓடிப்போயிருப்பேன். ஆனால் அப்படியெதுவுமில்லை. வீடு என்ற ஒன்று எங்குமில்லை என்பது எனக்குத் தெரியும் என்பதும் எனக்குத் தெரிந்தது. எங்கேயுமில்லை;

புகலிடம் என்பது ஒரு நிரந்தரமான நிலைமை. ஒரு நிரந்தரமான சமூகம். உறவுகளிலும் சரி, மொழியிலும் சரி.

அடையாளத்தின் அடிப்படையில். ஆனால் எதிலிருந்து அடையாளம் புறம்தள்ளப்பட்டது?

ஒருவேளை இந்தச் சமுதாயம் தன் அழிவுகளிலிருந்து தன் சாதலை வாழ்கிறது போலும், ஆனால் எனக்கு இதைப்பற்றி அறிய எந்த வழியும் இருந்திருக்கவில்லை.

எனக்குத் தெரியாத, நான் அன்னியளாக இல்லாத இடமொன்றில் என்னை நான் கண்டேன். பாரிஸின் ஒரு பழைய பகுதி, பிற பகுதிகளைப்போல, எப்போதுமே எதுவுமே நடக்காத லண்டனைப் போலில்லாமல், ஏதாவது நடந்துகொண்டிருக்கும் இடம், மற்ற எல்லா இடங்களையும்போல.

பாரிஸில் ஏழையாக வாழ்தல் எளிது, பணம் இருந்தால். ஒரு புகைப்படக்காரரின் மாடலாக இருந்து என் ஆடம்பரத்தேவைகளுக்கான போதுமான பணத்தை சம்பாதித்தேன். என் உடலை வைத்து ஈட்டிய பணத்தில் வாங்கிய விலையுயர்ந்த உடைகளை, ஆண்கள் புகைப்படம் எடுப்பதற்காகக் கழற்றினேன்.

ஒரு நாள், யூதர்களின் குடியிருப்புக்கு அருகே ஒரு குறுகிய வளைந்த சந்தில், செங்கல்களால் கட்டப்பட்ட வீடொன்றின் அடித்தளத்தின் தொழில்நிமித்தமாக நான் இருக்கக் கண்டேன். எடைகளைத் தூக்கிக்கொண்டிருந்த ஒரு கருப்பு மனிதன் எனக்காகக் கதவைத் திறந்தான். அவனது ஸ்டூடியோ தேவையான கருவிகளோடு இருந்தது. புகைப்பட விளக்குகள், மற்ற உபகரணங்கள். சீட்டுக்கட்டு விளையாட்டின் சீட்டுகளின் பின்பக்கத்துப் படங்களுக்காக போஸ் கொடுக்க என்னை வேலைக்கு அமர்த்தியிருப்பதாகச் சொன்னான். ராசி மண்டலத்தில் இருக்கும் பன்னிரெண்டு ராசிகள் ஒவ்வொன்றுக்குமாக பன்னிரெண்டு புணர்ச்சி நிலைகளில் நான் போஸ் கொடுக்க வேண்டும். என்ன போஸ்களோ அவை.

“பொதுவாக என் ஆண் நண்பனோடுதான் வேலையைச் செய்வது வழக்கம்.” எனக்கு ஆண் நண்பன் எவனும் இல்லை என்பது வேறு.

”இல்லை, உன்னுடைய யோனி, என்னுடைய குறி.” முன் கதவை மூடுவதற்காக அவன் குறியை என்னிடமிருந்து அகற்றியபடி சென்றான். ”உன் உடைகளைக் கழற்று.” கேமராவுக்காக நீண்டது அவன் கை.

என் உடைகளைக் கழற்றிவிட்டுப் படுத்தேன். “இது சரியாக நடக்கப்போவதில்லை.” அவன் தன் ஒளிர்சாம்பல் நிறக் காலாடையை ஒருகையால் கழட்டியபடி இன்னொருகையால் கேமராவைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

“எனக்கு கொனோரியா இருக்கிறது.”

“நான் காண்டம் உபயோகிக்கிறேன்.”

சடுதியில், செத்த அல்லது சிதைக்கப்பட்ட உடலைவிடவும் ஒரு வன்புணரப்பட்ட உடலை நான் தேர்ந்தெடுத்தேன்.

பயனற்ற, அதை விடவும், வீரியமான, அழிவுசக்தியான எதிர்பாலியல் புணர்ச்சி என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த நோயை நான் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. எப்போதுமே அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின்பு நான் துறவுபற்றி யோசித்தேன். பெரும்பாலான பாலியல் செயல்பாடு உடல்நோயையும் ஏன் மரணத்தையும் கூட இப்பொழுதெல்லாம் தந்ததால், பாரிஸில் என் சில நண்பர்கள் புணர்வதை நிறுத்தியிருந்தார்கள். எதிர்பாலியல் செயல்பாட்டிலிருந்த என் ஒரே நண்பன் இப்போது துறவியாக இருந்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பு, சமூகத்தின் ஏணிப்படியில் வெகுவேகமாக ஏறிக்கொண்டிருந்த மாடல் ஒருத்தியோடு அவன் உறவில் இருந்தான். அவளோ அவனுக்குத் தெரியாமல் ஆண்களோடும் பெண்களோடும் படுத்துக்கொண்டிருந்தாள். அவனை அவள் பொதுவெளியில் அவமானப்படுத்தியதை அவன் அறிவான். அவன் முகம் பலநேரங்களில் மிதிக்கப்பட்டது. சாவின் தாங்கொணாத வலி அந்த வலிக்கான காரணத்தை, அவன் பாலியலை, துறக்கச் செய்தது. அவன் ரொமாண்டிக் ஆன ஆளாக இருந்ததால், தன்னுடைய பாலின்ப உச்சம் அல்லது தன்னுடைய பாலியல் அடையாளத்தைத் துறப்பது—இந்த இரண்டில் ஒன்றுக்கு உண்மையாக இருப்பதைத் தேர்ந்தெடுத்தான்.

ஆனால் அன்றைய நாட்களில், வலதுசாரிகள் அரசியல் திருப்புமுனை கண்ட, சாவின் அன்றைய நாட்களில், வெள்ளையாக இல்லாத ஒன்றோ ஒருவனோ தான் ரட்சகனாக இருக்கமுடியும் என்று தோன்றிய அந்த நாட்களில்……. உடல், பொருண்மை, அதுவே பொருட்படவேண்டும் என்று தோன்றியது. எனக்கு என் உடல் பொருட்படுவதாக வேண்டும். என் உடல் எனக்குப் பொருட்பட்டால், பிறகு எதுவும் எந்தப் பிரதியாகவும் இருக்கும். துறவை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

....



(ஏகர்-இன் எழுத்திலிருந்து இரு பக்கங்கள் இவை)

Wednesday, April 14, 2010

கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்

”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்

கவிஞர் லீனா மணிமேகலையின் கவிதைத்தொகுப்பை, வலைத்தளத்தை தடைசெய்யக்கூறி இந்து மக்கள் கட்சியினர் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததற்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 15-ல் ஒரு கண்டனக்கூட்டம் நடக்க இருப்பதாக அறிகிறோம். தமிழ் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களால் நடத்தப்பட இருக்கிறது இக்கூட்டம். இது சம்பந்தமாக எங்கள் கருத்துகளை இங்கே பதிவிடுகிறோம்.

லீனா மணிமேகலை இலக்கியம், கவிதை என்று ஒரு பிரதியை தமிழ் இலக்கியச்சூழலின் வாசிப்புக்கு முன்வைக்கும்போது, அப்பிரதியின் சொற்பிரயோகங்கள் பாடுபொருள்கள் ஆகியவற்றை இலக்கியம் என்கிற வகைமையில்தான் நாம் அணுகவேண்டும் என்று நம்புகிறோம். இதில் எழுத்தாளரின் நோக்கம் (அதிர்ச்சி மதிப்பீட்டை முன்வைத்து புகழ்பெற நினைப்பது என்று கருதப்படுபவை உட்பட) இலக்கியத்தைப் படைப்பதுதானா என்பதை மதிப்பிட அளவுகோல் எதுவும் கிடையாது. ஒரு படைப்பாளி எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும். தனது உள்நோக்கங்கள் வழி உருவாக்கப்படும் சில வலைப்பின்னல்கள் வழியாக ஒரு எழுத்தாளர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூக அமைப்பு ஒரு எழுத்தாளாரை மேலாக வைத்து கொண்டாடுவதும், நிராகரிப்பதும் இந்த வலைப்பின்னல் விளையாட்டில் புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால், காலம் அந்த இடத்தை கேள்விக்கு உட்படுத்தும்போது, பின்னர் ஒரு நாள் வரலாறுகளின் ஆற்றங்கரையில் படைப்பின் ஆதார ”சுருதி” கண்டடையப்படும் என்று வேண்டுமானால் நாம் ஆறுதல் அடையலாம்.

இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை நிராகரிப்பது தவறு. இதற்கு அர்த்தம், எழுத்தாளரின் வாழ்க்கையில் அவர் செய்ததாகக் கூறப்படும் அநீதிகள், ஏமாற்றல்கள் (அவை நடந்திருந்தால்) போன்றவை முக்கியமில்லை என்பதோ, அவரது பிரதியின் மேல்விழும் இலக்கிய முத்திரை இவற்றையெல்லாம் புனிதப்படுத்திவிடும் என்பதோ இல்லை. அந்த சம்பவங்களை அதற்குத் தகுந்த நடைமுறைத் தீர்வு தருகிற தளங்களில், சம்பந்தப்பட்டவர்கள் அணுகித் தீர்வுகாணுதல் நன்மை பயக்கும் என்பது எங்கள் கருத்து.

இதன்பொருள் இலக்கியமும், எழுத்தும் கண்டனத்துக்கு அப்பாற்பட்டவை என்பது அல்ல. கண்டிப்பதற்காக எழுத்தைக் குறிவைத்து காவல்துறையில் புகார் கொடுப்பது, எழுத்தாளரை தனிப்பட்ட முறையில் தாக்குவது போன்றவை மோசமான முன்னுதாரணங்கள் ஆகிவிடும். மேலும் கண்டனத்தை எதிர்கொள்வதாக செய்யப்படும் செயல்களிலும் (இக்கூட்டம் உட்பட) வேறுபிரச்சனைகள் உள்ளன என்பதையும் நாம் மறுக்கவியலாது. இச்சூழலில், இலக்கியத்துக்கு வெளியே செயல்படும் அரசியல் மதக் கட்சிகளுக்கோ நிறுவனங்களுக்கோ, இலக்கியம் என்று எழுதப்பட்டிருக்கும் பிரதியைக் குறித்து புகார் கொடுக்க தார்மீக உரிமை இல்லை என்பதைமட்டும் இங்கே பதிவு செய்கிறோம்.

நிற்க.

இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html) பற்றி சிலவார்த்தைகள்:

நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு கீழே கொண்டுவரப்படுகிறார்கள். இதன்மூலமாக இப்படி கொடுமைக்கு ஆளாகிற பெண்கள் எல்லாருக்குமான பிரதிநிதியாக லீனா என்கிற பெண் காட்டப்படுகிறார். முதல் கேள்வி, ஏன் லீனா என்கிற பெயர் மீனா என்றோ வேறொன்றாகவோ இருக்கக்கூடாது? எழுத்தாளர் தன் பெயரை கவிதைசொல்லியின் ’நானாக’ இப்படி கொண்டுவரும்போது, உலகத்தின் எல்லாக் கொடுமைப்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. கவிதைசொல்லியின் ‘நானுக்கும்’ எழுத்தாளரின் ‘நானுக்குமான’ வித்யாசத்தை கவிதை அழித்துவிட்டது. இந்த இரு நான்கள் ஒன்றா இரண்டா என்று தெரியாத அளவுக்கு—--பின்னிப்பிணைந்து கிடக்கும் இரண்டு பாம்புகள் ஒன்றா இரண்டா என்பது போல--தோற்றம் தருகிறபோது, எந்தத் தளத்திலிருந்து ‘எழுத்தைப் பாருங்கள், எழுத்தாளரைப் பார்க்காதீர்கள்’ என்று நாம் சொல்லமுடியும்? பிரதிநிதித்துவ அரசியலில் (representational politics), “நான்“ என்கிற எழுத்தாளரின் சுயம் அப்படியே தன்னடையாளத்துடன் நிற்கிறது இக்கவிதையில்.

கவிதை வன்புணர்ச்சி விஷயத்தில் அறிவாளி ரோகியிலிருந்து தொடங்கி புரட்சிவேண்டுபவன் வணிகம் செய்பவன் மாலுமி விவசாயி ஈறாக இழுத்துப் பேசுகிறது. எழுதப்பட்டிருக்கிற விதம் இவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பதாக. “எவனா இருந்தா என்ன, ஆம்பிளை தானே” என்கிற தொனியே கவிதையின் தொனி. வன்புணர்ச்சி என்கிற அபாயத்தையும் நிகழ்வையும் தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சூழல்கள், கட்டாயங்கள், உலகளாவிய முதலீட்டிய நுண் அதிகாரங்கள், அரசியல்கள் பற்றி எந்தப்புரிதலும் இல்லாமல், இவை அனைத்தையும் ’ஆம்பிளை’ என்கிற ஒரு பதத்துக்குள் இந்தத்தொனி இட்டுநிரப்புகிறது. வன்புணர்ச்சி என்பது ஆண்களின் விழைவால், விழைவு தருகிற குறிவிரைப்பால் மட்டுமே நடப்பதில்லை என்பதுதான் பாரிய உண்மை. எண்ணற்ற கொடுமைகளுக்கு பெண்களை ஆளாக்கின பல்வேறு அரசியல்களையும் போர்களையும் ஆணின் பாலியல்-விழைச்சில் அடக்கிவிட முடியுமா என்ன?

ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண் உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது. ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும். இத்தகைய பல்வேறு சூழ்நிலைகளின் பாலியல் வன்முறைகளை குடும்ப பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு சமனாக அல்லது அவை போல ஒன்றாக பார்த்துவிடமுடியாது. இக்கவிதையில் வன்புணர்ச்சி என்கிற புள்ளியில் இவ்வித்யாசங்கள் பிரித்தறியப்படவில்லை.

மேலும் கவிதையில் பெண்கள் அனைவரும் தொடைகளின் இடைவழிக்காகவே, அதை ஆக்கிரமிப்பதன் மூலம் அச்சுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசதிகாரம் பெண்ணுடலை கையாளும் அதே முறைகளைத்தான் புரட்சியாளர்களும், கலகக்காரர்களும் கையாளுகிறார்கள் என்பதும் பொதுபுத்தியின் “அறம்“ சார்ந்த பார்வைதான். அதாவது ஒரு உடலின் பாலியல் சார்ந்த இச்சை என்பது கீழானதாக, அதை செய்யும் உடல் புரட்சிபேசத் தகுதியற்றதாக சொல்லப்படுவதாகவும் இதை வாசிக்கலாம். தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன.

வன்புணர்ச்சிக்கான ஒரு களமாக பெண்ணுடல் கட்டப்பட்டுள்ளது என்றால், களத்தில் ”விளையாடுவதற்கான” ஆணுடலும் தயாரிக்கப்பட வேண்டும் அல்லவா. அப்படி தயாரிக்கப்பட்ட ஆணுடல்கள் மட்டும் என்னவித நெகிழ்வை இச்சமூகத்தில் அனுபவித்துவிடப் போகிறது? ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது.

வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக அவர்களின் உடன்பாடின்மை என்பதற்கோ இடமே கவிதையில் இல்லை. உலகெங்கும் துயருறும் வன்புணரப்படுபவர்களின் பிரதிநிதியாக “நான் லீனா” Vs. உலகின் எல்லாவகை ஆண்களும் என்பதே கவிதையின் ஒன்லைனர். பல்வாசிப்புத் தளங்களைத் தராத, தக்கையான முரணை விதந்தோதுவதாலேயே இது கவிதையா என்று கேள்வி எழுகிறது.

லீனாவின் இரண்டாவது கவிதை, சே, பிடல், பெர்லின் சுவர், சோவியத், அமெரிக்கா போன்றவை, புணருகிற ’நான்’ உடலின் மார்பகம், அல்குல் போன்ற அங்கங்களின் பெயர்கள் அல்லது உருவகங்களாகின்றன. பல இடங்களில் அங்கம், பெயர்-உருவகத்துக்கு தொடர்புறவு இல்லை அல்லது வெறும் மோனை வலிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது (உதாரணம், ”மனம்பிறழ்ந்த குழந்தைபோல மம்மு குடித்தாய்” ) கவிதையில் சொல்லப்படும் “நீ“ அல்லது எதிர் உடல், வெறும் பாலியல் புணர்ச்சி எந்திரமே. குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது.

எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும், பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது. கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் என்பது என்ன புரட்சி பேசுகிறாய், ஒரு அதி-யோனியின் புணர்ச்சிக்கு முன் இதெல்லாம் உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான். இப்படிச் சொல்வதன் வழியாக, பாலியல் செயல்பாட்டைப் பற்றி பொதுவாக சமூகமனம் கொண்டுள்ள கீழ்மை மதீப்பீடே உள்ளுரையாக உள்ளது. பாலியல் அல்லது புணர்ச்சி குறித்த இந்தக் ”கீழ்மை” மதிப்பீடு கடவுள் துவங்கி இன்னபிற பிம்பங்களின் மீது சுமத்தப்படும்போது இவற்றைத் தாங்கிப்பிடிப்பவர்களின் எரிச்சலுக்கும் காரணமாக அமைகிறது என்பதைச் சொல்ல அவசியமே இல்லை.

சரி, இந்த பிரச்சினைகள் குறித்து பெரும் பத்திரிக்கைகள் துவங்கி பதிவுலகம் வரை பல மாதங்களாகப் பேசப்பட்டுவரும் நிலையில் இப்பொழுது இதனை முன்வைப்பதன் தேவை என்ன என்கிற கேள்வி உங்களைப்போலவே எங்களுக்கும் தோன்றியதுதான். நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம் நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். அதேநேரத்தில் ஒரு கவிஞருக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக நமது குரலை பதியவைப்பதும் அவசியம் என்று கருதியே இதனை எழுதினோம்.

பின்னாளில் நீரோவாக பிடில் வாசித்தோம் என்று எழுதி இந்த பிரச்சினையை சாம்ராஜ்யம் எரிந்த பிரச்சினையாக ஆக்கி, நம்மை விமர்சித்துவிடக்கூடாது பாருங்கள் அதுவும்தான். இருந்தாலும், “வரலாறு முக்கியம் அமைச்சரே“- என்கிற இம்சை அரசனின் குரல் கேட்கத்தான் செய்கிறது நமது ஆழ்மனதில். என்ன செய்ய?

அன்புடன்

பெருந்தேவி

ஜமாலன்

Monday, April 12, 2010

கண் அல்லது கரம்

--கவிதை நீக்கப்படுகிறது--

Saturday, April 10, 2010

பெண்-உடல்-மொழி: சிரிப்பும் கண்காணிப்பும் (1)

பெண் உடல்மொழி என்றால் என்ன? அதன் தத்துவ, வரலாற்றுப் பின்னணிகள் என்ன? பெண்ணுடலை விவரிக்கும் விரிக்கும் மொழி பெண்ணுடல் மொழியா? அல்லது பெண் உடலின் சைகைகள் சமிக்ஞைகள் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவை மூலம் அவள் சொல்வதாக புரிந்துகொள்ளப்படுவது பெண்ணுடல் மொழியா? உடலும் மொழியும் ஒன்றா, வெவ்வேறா? உடலை மொழி பிரச்சினையில்லாமல் அப்படியே பிரதிநிதித்துவப்படுத்துமா? அப்படி பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? புரட்சி என்று உச்சரித்தால் புரட்சியாகி நடந்துவிடுமா? இட்லி என்று எழுதிய காகிதத்தை உண்டால் பசி தீர்ந்துவிடுமா?

நிறைய கேள்விகள் முன்னே நிற்கின்றன. சிலவற்றை கேட்டு எழுதி புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என்பதே (செம்மைசெய்யப்படாத) இப்பதிவின் நோக்கம்.

”உடலை எழுதுதல்” என்பது பெண்ணியங்களின் முன்னெடுப்பில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுத்தருணத்தில் நிகழ்கிறது. இவ்வரலாற்றுத்தருணத்துக்கும் “புத்துலகை உருவாக்குதல்” என்கிற கருத்தாக்கத்துக்கும் கனவுக்குமான தொடர்பை பெண்ணியல் ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக செசிலி லிண்ட்சே போன்றவர்கள் விவரிக்கிறார்கள். ”மாற்று உலகங்கள்,” “கடந்து முன்செல்லல்,” ”பெண்ணிய எதிர்காலங்கள்” போன்ற கற்பனைகளும் கனவுகளும் பெண்ணியப் பேச்சுகளில் எழுத்துகளில் உருவானதையும், இதில் ஒரு முக்கியமான அங்கமாக ”உடல் எழுத்து” தொடங்கியதையும் பேசுகிறார்கள். குறிப்பாக ப்ரெஞ்ச் பெண்ணியத் தத்துவச் சிந்தனைப்போக்கில் ஹெலன் சிக்ஸு, மோனிக் விட்டிக் போன்றவர்களால் எடுத்தாளப்பட்ட கருத்தாக்கம் “உடல் எழுத்து.” “உடல் எழுத்து” என்பதற்கும் புத்துலகை உருவாக்கும் கருத்தியலுக்கும் இருக்கிற தொடர்பு யோசிக்க வேண்டிய ஒன்று.

பெண்ணியப் புத்துலகம் எப்படி இருக்கவேண்டுமென்பதைப் பற்றிக் கருத்துவேறுபாடுகள் கொண்ட, விவாதித்த விட்டிக், சிக்ஸு இருவருமே ஒருவிஷயத்தில் ஒரேநிலைப்பாடு கொண்டவர்கள். அது மொழிபற்றிய அவர்கள் பார்வை. “கடந்த காலத்தைப் பெற்று அல்லது கடத்தித்தருகிற மொழியே, கலாச்சாரச் செயல்பாடுகள், கருத்தியல் வடிவங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது” என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, மொழியும் எழுத்துமே நிகழ்காலத்தைக் கேள்விகேட்கும், புத்துலகை உருவாக்குவதில் முதன்மைப்பட வேண்டும் என்றும் நம்பினார்கள்.

குறிப்பாக இங்கே ஹெலன் சிக்ஸு-வின் கோட்பாட்டை அதன் பிரச்சினைகளைப் பார்க்கலாம். பெண்தன்மையும் ஆண் தன்மையும் உடல் அடிப்படையிலிருந்து பெறப்படுவதாக சிக்ஸு வாதாடினார்: “பெண்மை சந்தேகத்துக்கிடமின்றி, உடலிலிருந்துதான் வருகிறது. உடற்கூற்றியல், உயிரியல் வித்யாசங்களிலிருந்து, பெண்களை ஆண்களிலிருந்து பெரிதாக வேறுபடுத்தும் உந்துதல்களின் கட்டமைப்புகளிலிருந்து அது பெறப்படுகிறது.” ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உறுதியான வித்யாசங்கள் என்று அவர் நம்பியதை அவருடைய Castration or Decapitation? (1981) என்ற கட்டுரையில் சீனக்கதை ஒன்றைச்சொல்லி நிறுவுகிறார். போர்வீரருக்கான உபாயங்களைக் கற்றுத்தரும் சுன் ட்ஸே (Sun Tse) கையெட்டிலிருந்து எடுத்தாளப்படுகிறது இந்தக்கதை. முன்னொருகாலத்தில் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சீன அரசன் ஒருவன் தனது ஜெனரல் சுன் ட்ஸேக்கு ஒரு கட்டளையிடுகிறான். ”போர் உபாயங்கள் தெரிந்தவன் நீ, யாருக்கும் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக மாற்றத் தெரிந்தவனும் நீ, என் மனைவிகளை (நூற்றி எண்பது) போர்வீரர்களாக மாற்றிக்காட்டு” என்கிறான். ஆணையை ஏற்ற சுன் ட்ஸே அரசனின் மனைவிகளை இருவரிசைகளாக நிறுத்துகிறான். இருவரிசைகளிலும் அரசனுக்கு மிகவும்பிடித்த இரு ராணிகளை முதலில் நிறுத்துகிறான். பின் அவர்களுக்கு முரசடிப்பதைச் சொல்லித்தருகிறான். இரண்டு அடிகள்—வலது பக்கம், மூன்று அடிகள்—இடது பக்கம், நான்கு அடிகள்—திரும்பி பின்பக்கம் முன்னேற வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்வதற்கு பதிலாக பெண்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஜெனரல் சொல்லிக்கொடுத்தபடி இருக்கிறான். பெண்களோ சிரித்தபடி இருக்கிறார்கள். பலமுறைகள் அவன் முயன்றும் பலனில்லை.

கடைசியாக தான் சொல்லிக்கொடுத்தவற்றில் ஜெனரல் தேர்வு வைக்கிறான். நியமவிதிகளின்படி, தேர்வில், போர்வீரர்களாக பயிற்சியெடுக்கும் பெண்கள் போர்வீர்ர்களாக ஆகாமல் சிரித்துக்கொண்டிருந்தால், அது கலகமாக அறியப்படும், பெண்களுக்கு அப்போது மரணதண்டனைதான் விதிக்கப்படவேண்டியிருக்கும். சிரித்துக்கொண்டிருந்த பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அரசன் உள்ளுக்குள் கொஞ்சம் கலங்குகிறான். ஒன்றா, இரண்டா, நூற்றி எண்பது ஆயிற்றே. எத்தனை இழப்பு? அரசன் இதை விரும்பவில்லை. என்றாலும் சுன் ட்ஸே கொள்கையில் குறியாய் நிற்பவன். அரசனை விடவும் அவன் ஆணை அரசமயமானது என்று தெரிந்தவன். சட்டம், முழுமொத்தமானது சட்டம். ஆணையை திருப்பிவாங்க முடியாது. அவன் மன உறுதியுடன் முன்னணியில் நிற்கும் இரண்டு ராணிகளின் கழுத்தையும் சீவுகிறான். எதுவுமே நடக்காதது போல, அடுத்த இரு பெண்கள் அவர்கள் இடங்களில் பதிலிடப் படுகிறார்கள். திரும்ப தேர்வு நடக்கிறது. இம்முறை பெண்கள் சிரிக்கவில்லை, சின்ன சப்தமும் இல்லை. சோதனை மிகச்சரியாக நடந்தேறுகிறது.

ஆண்மைக்கும் பெண்மைக்குமான சமன்பாட்டை இக்கதையிலிருந்து சிக்ஸு வடிவமைக்கிறார். ஆண்மை அல்லது ஆண்மைப் பொருளியல் என்பது நேரத்தைக் கண்காணிக்கும் விதியால்--இரண்டு அடிகள், மூன்று அடிகள், நான்கு அடிகள் என முரசால், எது எப்படி இருக்கவேண்டுமோ அப்படியிருக்க, ஒழுங்குபடுத்தப்படுகிறது. அதற்கேற்ப ஆணைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன; கற்றுக்கொடுக்கப்பட்டு பட்டு உருவேற்றப்படுகின்றன. பெண்மை அல்லது பெண்மைப் பொருளியலோ பெண்ணிலிருந்து போர்வீரனை உருவாக்கும் வலிமையால் வரலாற்றில் நிறுவப்படுகிறது. தலையைச் சீவக்கூடிய ஒட்டுமொத்த வலிமை அது. பெண்ணுக்கு வேறு தேர்வு இல்லை. வாளுக்குத் தலையைக் கொடுக்கவேண்டும். அல்லது அவள் தலை கழுத்தின் மேல் இருக்க, அவள் அவளாக இல்லாமல் இருக்கவேண்டும். முரசடிகளை கவனமாகக் கேட்காவிட்டால் தலையைக் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

சிக்ஸு-வின் சிந்தனைகளில் ஒன்றைக் கவனிக்கவேண்டும் நாம். ஒருபோதும் அவர் சதிசெய்கிற ஆண் (குழு) X பாதிக்கப்படுகிற பெண் (குழு) என்று ஒரு எளிய வாதத்தை ஆதரிக்கவில்லை. நேரத்தை ஆகவே ஒருவிதத்தில் வரலாற்றைக் கண்காணிக்கிற ஆண்களாகட்டும், தலையைக் காப்பாற்ற ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்படுகிற பெண்களாகட்டும்….இவர்கள் அனைவரையுமே சமுதாயத்தின் நியமவிதிகள் கட்டுப்படுத்துகின்றன. Code, கலாச்சாரத்திலும் சமுதாயத்திலும் நிறுவப்பட்டிருக்கிற code அவையே இங்கே முக்கியம். அவற்றுக்கே இங்கே அதிகாரம்.

(தொடரும்…)

நிஜம்

--கவிதை நீக்கப்படுகிறது--

Friday, April 9, 2010

எட்டு மறுப்புகள் பல இருக்கலாம்கள்

கவிதையை வாசிக்க வரும் நண்பர்களுக்கு,

ஒரு சின்ன மனக்கணக்குடன் தான் இக்கவிதையைப் பதிவேற்றினேன். நூறு பேர் படித்தால் போதும் என்பதே அந்தக் கணக்கு. மற்றபடிக்கு மாஸ் லெவலில் இக்கவிதையைக் கொண்டு செல்லுகிற நற்செய்தி நோக்கமோ இதனால் கவிதை சுட்டிய பெண்—நிலம்—காடு--இயற்கை—உடலிச்சை Vs. ஆண்—மழை—ஆக்கிரமிப்பு--கலாச்சாரம்--அதிகாரம் போன்ற இணைமுரண்களோ மாறிவிடும் என்கிற நம்பிக்கையோ எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்தக்கவிதை தமிழ்க் கவிதைச்சூழலில் ”பெண்மொழி” என்று நிலவும் சிலபோக்குகளைக் குறித்த ஒரு commentarial gesture. முக்கியமாக பெண் உடல், உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் தேய்ந்துபோகிற அளவுக்கு—யோனி என்ற சொல்லில் யோ என்ற எழுத்தின் கால் பாதி காணோமாம்—பயன்படுத்தப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இந்த gesture, அந்த அளவிலேயே முக்கியம். மேலும், பெண் உடல் பேசுபொருளாகியிருக்கிற அளவுக்கு ஆண் உடல் ஏன் பேசுபொருளாகவில்லை? Object பெண்ணுடலாகவே பெரும்பாலும் இருப்பதும் அதைநோக்கியே எழுத்துகளை வாசிப்பவரின் gaze செயல்படுவதும் எப்படி? இந்த யோசனையும் கூடவே இருந்தது.

கவிதை பதிவேறி இப்பொழுது வரை நூற்றி ஐம்பது ஐ.பி முகவரிகளிலிருந்து வருகைகள் பதிவாகியிருக்கின்றன. போதும். வாசித்தவர்களுக்கும் பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி.
பெண்-உடல்-மொழி பற்றிய கட்டுரை பகுதிகளில் வெளிவரும். வாசிக்க கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
பெருந்தேவி

Wednesday, March 17, 2010

உறுமீன்

--கவிதை நீக்கப்படுகிறது--

Friday, March 12, 2010

வராத செய்தி

--கவிதை நீக்கப்படுகிறது--

Wednesday, February 24, 2010

ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை

--கவிதை நீக்கப்படுகிறது--

தோன்றிய போக்கில்: இன்ன பிற, கவிதை என்பது வரியல்ல

என் பதிவை வாசித்துவரும் நண்பர்களுக்கு,

இணையத்தில் எழுத ஆரம்பித்தவுடன் தான் என் கவிதைகளுக்கான ஒரு வாசிப்புத்தளம் இருக்கிறது, ஊக்கப்படுத்தும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவந்தது. நான் 90-களிலிருந்து கவிதை எழுதிவருகிறேன். முதல் கவிதை விருட்சம் இதழில் 92-93-ல் வெளியானது என்று நினைக்கிறேன். நிகழ் இதழிலும் ஒன்று வந்தது. (சிறுகதைகள், கட்டுரைகள் பற்றி எழுதப்போவதில்லை இங்கே). பின்னர் பல. தீயுறைத்தூக்கம் 1997-98-ல் விருட்சம்-ஸஹானா வெளியீடாக வந்தது. பின்னர் 2006-ல் இக்கடல் இச்சுவை (காலச்சுவடு). நிறைய சிறு, இடைநிலைப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன் – முன்றில், கல்குதிரை, விருட்சம், உன்னதம், புனைகளம், புது எழுத்து, உயிர்மை, காலச்சுவடு, தீராநதி, திண்ணை இணையதளம் உட்பட பல. கவிதையைப் பற்றிப் பேசுகிற சிலபல எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன கவிதைகள்.

என்றாலும் நேரடியாக வாசிப்பவர்களோடு--ஏனோ வாசகர் என்கிற சொல் எனக்கு உவப்பாக இல்லை, அதில் எழுத்தாளர் என்கிற இருமையின் மேலாண்மை உள்ளீடாகக் கட்டப்பட்டு விட்டதாக உணர்கிறேன்--தொடர்புறவோடு இருத்தல் தருகிற நிச்சயமும், பாதுகாப்பும் வேறுதான். அது இணையத்தில் மட்டுமே கிடைக்கிறது. நன்றி.

சில பின்னூட்டங்களுக்கு பதில் எழுதியிருப்பேன். சிலவற்றுக்கு எழுதமுடியாததற்குக் காரணம் ஒன்று எனக்கு திரும்பக்கூற எதுவுமில்லை, அல்லது நேரமில்லை என்பதே. (வேலைதேடிக் கொண்டிருக்கிறேன், மேலும் பொழுதன்றைக்கும் முடிவுத்தேதிகளோடு ஏதோ எழுத்துவேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைப் பிரசுரத்துக்காக சில லிட்டரேச்சர் ரிவ்யூ வேலைகள், இப்போது வேறொரு பல்கலைகழகத்தின் மானுடவியல் சார்ந்த கட்டுரைத்தொகுப்புக்காக ஒரு கட்டுரை, தவிர என் வகுப்பு, செமினார் என்று என்நேரம் என் போக்கில் இல்லை, வருத்தம்தான்.) அடுத்த கவிதைத்தொகுப்பு. தமிழ்ப்புதுக்கவிதை வரலாற்றை மீள்எழுதிப்பார்க்க ஆசை..….தவிர மானசரோவர், பசித்த மானுடம், ஜீரோ டிகிரி, ஈராறு கால்கொண்டெழும் புரவி, பாபுஜியின் மரணம் போன்றவை..……இவைகளுக்கு குறிப்பெழுதிவைத்துக்கூட கட்டுரை எழுத நேரமில்லாத அவலம்….. அப்புறம் என் ஆய்வேடு (அதன் தலைப்பு: “சதையின் கதைகள்: மாரியம்மன் பற்றிய மானுடவியல், காலனீயச் சொல்லாடல்கள்”), அதைப் புத்தகமாக மாற்றவேண்டும். என் ஆசிரியரும் பேராசிரியருமான ஆல்ப் ஹில்டெபெய்டல் அவர்களோடு எழுத உத்தேசித்திருக்கிற ”திரௌபதி வழிபாட்டில் பெண்கள்” புத்தகம், கூத்து மற்றும் நாடக நடிகர்களோடு நடத்திய பலவருட உரையாடல்கள், களப்பணியை வைத்து பாதி எழுதியிருக்கும் இன்னொன்று…….

என் வேலைகளை எனக்கு ஞாபகப்படுத்திக்கொள்ள, என் பாதையிலிருந்து நான் விலகி கவனம் சிதறாமலிருக்க, என் தனிப்பட்ட வாழ்க்கையில் என்னைத் தொலைத்துவிடாமலிருக்க…….. இவ்வேலைகளை தொகுத்துக்கொள்ளும் முகமாகவே இங்கே இவற்றைச் சொல்லுகிறேன்…..மேலும் என்னை வாசிப்பவர்கள், சிலவருடங்கள் கழித்தும் இந்த வேலைகளை நான் செய்யாமலிருந்தால் எனக்கு நினைவூட்டவும் வற்புறுத்தவுமே இங்கே பதிவு செய்கிறேன்….தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மனவருத்தம் தருகிற விஷயம்….ஒருவரை இன்னொருவர் எழுத ஊக்கப்படுத்துகிற தருணங்கள் மிகவும் குறைவே. (அதுவும் பெண் எழுத்தாளராக இருந்தால் இவை அமைவது இன்னும் கடினம், என் சக பெண் எழுத்தாளத் தோழிகள் சில சமயங்களில் ’எழுதாமலேயோ,’ அல்லது எழுத்துக்கு அப்பால் ‘அழும்பு’ செய்து கவனிக்கவைப்பதாகத் தோன்றினாலும், இங்கே இலக்கியத்தளத்தில் செயல்படுகிற ஆண்சகோதரக் குழுமங்களின், வலைப்பின்னல்களின் அரசியலுக்கு முன்னால் அவற்றை விமரிசிக்க எனக்குத் தேவை இருப்பதாக தோன்றியதில்லை)

இது நம் போதாமை, துரதிர்ஷ்டம். எந்தக் சகோதரக்குழுவிலும் சேராமல், எந்த எழுத்தாளருக்கும் அடிப்பொடி ஆகாமல், எந்த அறிவுஜீவியையும் அண்ணாரப் பார்த்து வியக்காமல் எழுத்துவாழ்வைக் கொள்ளும்போது, அயராத ஊக்கத்தை, நல்ல எழுத்துகள், தனிப்பட்ட நட்புகள், முகம்தெரியாத அல்லது எந்த அஜெண்டாவும் இல்லாத வாசிக்கிறவர்கள் மூலமாக மட்டுமே பெறமுடியும்…… (சில அபூர்வமான சந்தர்ப்பங்களும் இங்கே உண்டு, தீயுறைத்தூக்கம் வந்த புதிதில், திடீரென ஒரு அதிகாலையில், முன்னே பின்னே நான் பேசியே இல்லாத, என் மதிப்புக்கும் பிரியத்துக்கும் உரிய கவிஞர் பிரம்மராஜன் வீட்டுக்கு வந்தது போன்றவை…ஆனால், தினம் பூத்தால் அது குறிஞ்சி இல்லையே….) இணையம் மூலமாக என்னைப் பார்த்தறியாமலேயே உத்சாகம் கொடுப்பவர்கள் நிறைய. நண்பர்களுக்கும் இந்த அனுபவம் இருக்கும்.

தமிழ்நாட்டு இலக்கியச் சூழலைப் பொறுத்தவரை இன்னும் சில நடப்புகளையும் சொல்லவேண்டும். குறிப்பாக, எழுத்தாளர்களை லிஸ்ட் போடுகிற தன்மை. இந்த லிஸ்டில் அந்தந்த பிராந்தியம் அல்லது சகோதரக்குழுமம் சார்ந்தவர்களுக்கே பெரிதும் இடம்கிடைக்கும், பிரதிநிதித்துவ அரசியல் சரித்தன்மையோடிருக்க, பிராந்தியம்சார் அல்லது சகோதரக்குழுமத்தோடு தொடர்பில் இருக்கிற ஓரிரண்டு பெண் எழுத்தாளர்கள் பெயரைச் சொல்லுவது உண்டு. பாராட்டில் பரஸ்பர மொய் எழுதுபவர்களைப் பார்க்கலாம். பரந்த, தற்போதைய புத்தகவாசிப்பு இல்லாமல் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டியபடி தனக்குத் தெரிந்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் பெயர்களை உதிர்ப்பதையும் பார்க்கலாம். அதைவிட மோசம், தனிப்பட்டமுறையில் பேசும்போது ஒருவருடைய எழுத்தைக் குறைசொல்லுவது, மேடையில் அவருடைய எழுத்தையே சில காரண,காரியங்களுக்காகப் புகழ்வது (’புறத்தே இன்சொல்வது’ என்று சொல்லலாமா இதை….?). இப்படியான சூழலில்தான் எழுதுகிறோம். ஆனால் இது மாறும். எழுத்தாளரைப் பேசாமல், பெயரைக்கூட ரொம்ப உரத்துச்சொல்லாமல் எழுத்தைப் பேச, விவாதிக்க நம்மால் முடியவேண்டும். முடியும்.

கவிதைகள் பொறுத்து இன்னொரு அபாயமும் உண்டு. கவிதை என்றால் குறைந்த அளவு வரிகள் என்று நினைப்பவர்கள் வாசிப்பவர்களில், ஏன் கவிஞர்களிலே கூட உண்டு. ”என்ன, ஏதோ நாலு வரி எழுதிட்டா….” போன்ற வாசகங்களை அடிக்கடி கேட்கலாம். கவிதை ஏதோ கே.ஜி. வகுப்புகள் போலவும், அப்புறம் சிறுகதை, குறுநாவல், நாவல் என்று ஏணிப்படி நாம் ஏறுவதற்காகக் காத்துக்கிடப்பதைப் போலவும். ரெண்டு தொகுப்பு வந்திடுச்சி, இனிமே சிறுகதைத்தொகுதி கொண்டுவரலாம்னு இருக்கேன் என்கிற கவிஞர்கள் உண்டு. ஏங்க, கவிதை எழுதீட்டீங்க, எப்ப நாவல் எழுதப்போறீங்க என்று என்னைக் கேட்பவர்களுக்கும் பஞ்சம் இல்லை. (எனக்கென்னவோ உளவியல் ரீதியாக தமிழருக்கு, ஆண் பெண் எல்லாருக்குமே குண்டுத்தன்மையிடம் ஒரு விழைவு இருப்பதாகவே தோன்றுகிறது. குஷ்பு இட்லியில் ஆரம்பித்து குண்டுப் புத்தகங்கள் வரை….இதனால், குண்டுப்புத்தகங்களை எழுதியிருப்பவர்களைக் குறைகூறுவதல்ல இங்கே என் நோக்கம். எழுத்துவகைமைகளை பற்றி நிலவும் கண்ணோட்டம், அனுமானம், விழைவு பற்றியே என் அவதானிப்பு,), ”என்னங்க பதிவில் கவிதையே போடறீங்க, கட்டுரை எழுதுங்க,” ”கவிதை ஏமாத்திரும் பெருந்தேவி, உரைநடையில்தான் வலிமை தெரியும்” இப்படி கூறிய பெயர்பெற்ற அல்லது வளரும் எழுத்தாளர்கள் உண்டு…….இந்த கவிதை, கதை, நாவல் ஏணிப்படியின் உச்சாணிப்படியில் கட்டுரைகள், விமரிசனங்கள் (அவை எதைப்பற்றியதாகவும் இருக்கலாம்). தமிழ் இலக்கியம் கட்டமைக்கும் அறிவுப்புலத்தில் ஏன் கவிதை இப்படிக் கடைசிப்படியில்?

எல்லோரும் கவிதை எழுதிடறாங்க அதனால் கவிதைக்கு இந்த நிலை என்பது பதிலாக இருக்கமுடியாது. எத்தனை கதைப்போலிகள், எத்தனை டவுன்லோடுக்கட்டுரைகள் உலாவுகின்றன இங்கே, இதனால் கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் இலக்கிய உலகில் மவுசு குறைந்தா போனது? என் கேள்வி: தமிழ்ச்சூழலில் எழுத்தை பண்டிதத்தன்மையிலிருந்து ஜனரஞ்சகப்படுத்திய வழிகளில், விதங்களில் எந்த இடத்தில் கவிதை இந்த ஏணிப்படி வகைப்பாட்டுக்குக் கீழ்ப்படிந்தது? வானம்பாடி, திராவிட இயக்கம் என்றெல்லாம் காரணம் சொல்வது வேலைக்கு ஆகாது. இக்கேள்வியின் புலம், இலக்கியவகைமைகள் குறித்த நம் மதிப்பீடுகளை உருவாக்கியபடி இயங்கும் இலக்கியச்சூழலைப் பரிசீலனை, சுயபரிசோதனை செய்வதில்தான் அமைகிறது.

இங்கே கவிதைகளைப் பிரசுரிப்பது குறித்தும் சொல்லவேண்டும். பக்கநிரப்பிகளாக கவிதைகள் சில பத்திரிகைகளில் உபயோகப்படுகின்றன. வாசிக்கும் நண்பர்கள் சிலராவது இதை அறிந்திருப்பார்கள். அதாவது கட்டுரைகள், கதைகள் வராதபோது, ’கவிதை பைலை’ எடுத்து தேறுவதைப் பிரசுரிப்பது. வேறுசில பத்திரிகைகளில், கவிஞர்களே, எழுத்தாளர்களே அவற்றை நடத்தினாலும், லே அவுட்களில் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆறு கவிதைகளை இரு பக்கங்களில் அடைத்து போடுவது. கவிதை என்ன வரிக்கணக்கா என்ன? வாசிப்புக்கான இடத்தை விஷுவலாகத் தரவேண்டாமா? நானூறுபக்க நாவல் கொடுக்கமுடியாத ஒரு கேள்வியை, நிறையுணர்வை, மனபூகம்பத்தை கவிதையின் மூன்றுவரிகள் உங்களுக்குத் தந்துவிடும். ஆனால், மூன்று வரிகள்தானே என இன்னும் முப்பது வரிகளோடு, அல்லது சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு விளம்பரத்தோடு பந்தி இலையை நிறைப்பது போல பக்கத்தை நிரப்ப முடியுமா, வேண்டுமா? (விதிவிலக்கான பத்திரிகைகள் உண்டு, நான் ஒரு பொதுப்போக்கைச் சொல்லுகிறேன்.)

இது ஒரு பகிர்தல் மட்டுமே. ’கட்டுரைத்தன்மையோடு’ நூல்குறிப்புகள் போட்டு எழுதப்பட்ட கட்டுரை அல்ல. இதனால் இதன் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இங்கே பெயர் எதையும் குறிப்பிடாமல் நான் எழுதியிருப்பதற்குக் காரணம், அவர்களில் பலர் நான் அறிந்தவர்கள் அல்லது நண்பர்கள் என்பதால் மட்டுமே. மேலும் நான் எழுப்பியிருக்கிற கேள்விகளின் உண்மை உறுத்தினால் போதும்.

அன்புடன்
பெருந்தேவி