Sunday, November 27, 2011

மந்தை

காதலின் பாலத்தில் ஏறி
அந்தப்பக்கம் போய்விடலாம்
என்று சொல்லித்தான்
அழைத்துவந்தேன்.
இல்லாதபாலத்திலேறி
தொலையாததூரம்போக
என்னோடு இன்னொரு
ஆட்டுக்குட்டி.

Sunday, November 20, 2011

”வால் தெருவை ஆக்கிரமிப்போம்” இயக்கம்: பெண்ணியச் சிந்தனையாளர் ஜூடித் பட்லரின் சிற்றுரை

(தமிழாக்கம்)

எல்லாருக்கும் ஹலோ. நான் ஜூடித் பட்லர். என் ஆதரவைத் தர இங்கே நான் வந்திருக்கிறேன்; முன்னெப்போதுமில்லாத வகையில் இங்கே காட்சிப்படுகிற வெகுசன மற்றும் மக்களாட்சியின் விருப்புறுதிக்கு என் ஒன்றிப்பைத் (solidarity) தர வந்திருக்கிறேன். மக்கள் கேட்கிறார்கள்: இவர்களின் கோரிக்கைகள் தாம் என்ன? கூறுகிறார்கள்: இவர்களுக்குக் கோரிக்கையேயில்லை, இது இவர்களின் விமர்சகர்களைக் குழப்பத்திலாழ்த்துகிறது; அல்லது இப்படிச் சொல்கிறார்கள்; சமூக சமத்துவம் மற்றும் பொருளியல் நீதிக்கான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள், ஆகவே இந்த இயலாத கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவையும்கூட.

ஆனால் இதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம்! நம்பிக்கை என்பது ஒரு இயலாத கோரிக்கை என்றால், இந்த இயலாத ஒன்றையே நாங்கள் கோருகிறோம். உணவுக்கும் உறைவிடத்துக்கும் வேலைக்குமான கோரிக்கைகள் இயலாத கோரிக்கைகள் என்றால் இயலாதவற்றையே நாங்கள் கோருகிறோம். பொருளியல் மந்தநிலையால் ஆதாயம்கண்டவர்கள் தங்கள் செல்வத்தை மீள்-பகிர்வு செய்யவேண்டும், தங்கள் பேராசையை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கைகள் இயலாதவை என்றால், ஆமாம், நாங்கள் இயலாதவற்றையோ கோருகிறோம்.

சரிதான், எங்கள் கோரிக்கைகளின் வரிசை நீண்டது. இவை எவற்றுக்கும் எந்த நடுவாண்மையும் செல்லுபடியாகாது. செல்வம் ஒரேயிடத்தில் குவிந்துகிடப்பதை நாங்கள் மறுக்கிறோம். வேலைசெய்யும் மக்கள்திரளை கழித்துக்கட்டக்கூடியவர்களாக ஆக்குவதை மறுக்கிறோம். கல்வியை தனியார்மயமாக்குவதை மறுக்கிறோம். கல்வியை பொதுநலமென்றும் பொதுவிழுமியமென்றும் நம்புகிறோம். பெருகிக்கொண்டேவரும் ஏழைகளின் எண்ணிக்கையை எதிர்க்கிறோம். வீடுகளிலிருந்து மக்களை வெளியேதள்ளும் வங்கிகளுக்கு எதிராகவும், ஆராயவும்முடியாத எண்ணிக்கையிலான மக்களுக்கு மருத்துவ வசதி கிட்டாததற்கு எதிராகவும் ஆத்திரப்படுகிறோம். பொருளியல் இனவெறியை மறுக்கிறோம், அதன் முடிவைக் கோருகிறோம்.

உடல்களாக நாம் பொதுக்களத்தில் வந்தடைவதால் இது முக்கியமாகிறது. உடல்களாக நாம் துயருறுகிறோம், எங்களுக்கு உணவும் உறைவிடமும் தேவைப்படுகிறது, விழைவிலும் சார்பிலும் உடல்களாக ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம். ஆக இது கூட்டுப்பொதுவுடலின் அரசியல், அவ்வுடலின் தேவைகள், அதன் இயக்கம், அதன் குரல். நமது விருப்புறுதியை ஓட்டு அரசியல் பிரதிபலிப்பதாக இல்லை என்றால் நாம் இங்கே இருந்திருக்கமாட்டோம். ஓட்டு அரசியலால் மறக்கப்பட்ட கைவிடப்பட்ட வெகுசன விருப்புறுதியாகத்தான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், நகர்கிறோம். ஆனாலும் இங்கே இருக்கிறோம், மீண்டும் மீண்டும் ”மக்களாகிய நாங்கள்” என்கிற சொற்றொடரை வலியுறுத்தியபடி, கற்பனைசெய்தபடி.

(ஆங்கில மூலம் இங்கே: http://www.autostraddle.com/and-then-judith-butler-showed-up-at-occupy-wall-street-in-solidarity-117911/ )

என் குறிப்பு: தமிழகத்தின் இன்றைய நிலையும் (அணு உலை, விலைவாசி உயர்வு) நம்முன்/நம்மில் காட்சிப்படுவதிலேயே இந்த மொழிபெயர்ப்பின் சாத்தியம் அடங்கியிருக்கிறது.

Saturday, November 19, 2011

கடைசி மேசையில் ஓர நாற்காலியில்

மற்றும் சில கவிதைகள்:

காலச்சுவடு இதழில் வெளிவந்தவை:

http://www.kalachuvadu.com/issue-138/page42.asp

Wednesday, November 16, 2011

கவிதை எழுதவேண்டுமானால்

ஒருபோதும்
கவிதைபற்றிக் கவிதை எழுதாதே
சிலகோடி கவிதைகளின் பாடுபொருளாக
நீ இருந்தாலொழிய.
ஒருபோதும்
காதலில் தோற்றதை வென்றதை அல்லது
இடையில் தின்னப்பட்டதை எழுதாதே.
சிலகோடிப் பேர்களை காதலுக்காக
நீ சாகடித்திருந்தாலொழிய அல்லது
சிலகோடி பேர்களாவது உன்னைச்
சாகடிக்கத் தேடிக்கொண்டிருந்தாலொழிய.
ஒருபோதும்
மழையை பூவை குழந்தையைப் பற்றி எழுதாதே
மொழிநடைக்கு அலங்காரமாக இருக்கக்கூடிய
அபாயத்தை அளிக்காதே அவைகளுக்கு
ஒருபோதும்
சொந்தக்கதையை எழுதாதே
உன் வாழ்க்கையை உன் கண்களிலிருந்து
நீ பார்க்கும்போதே
கண்டங்களுக்கப்பால்
அந்நியப்படுத்திவிடும் கவிதை
ஒருபோதும்
அரசியல்சரிக்காகக் கவிதை எழுதாதே
பாலுறவை வென்றெடுக்க கவிதை எழுதாதே
தினசரிக்கடமையில் ஒன்றாய்க் கவிதை எழுதாதே
கவிதையாக உருக்கொள்ளாத கவிதை
அரசியல் சரித்தன்மையைக் கோமாளித்தனமாக்கிவிடும்
வென்ற பால்துணையைப் பிசாசாக மாற்றிவிடும்
மேலும் கடமையில் ஒருநாள் தவறிவிட்டால்
மனச்சிக்கலில் தற்கொலை செய்துகொள்வாய்.
ஒருபோதும்
கவிதை எழுதாதே
கவிதை எழுதநினைத்துக்கொண்டு
அல்லது எழுதுவதாக நினைத்துக்கொண்டு.

பிடிச்சாம்பலிலிருந்து
எழும்பும் ஒரு தடம்
பிடியற்ற ஒரு கூர்
சாம்பலாகும்முன்.

Monday, November 7, 2011

நினைவுகூரத்தக்க புன்னகை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (17)

எங்களிடம் தங்கமீன்கள் இருந்தன
ஒற்றை விரிகண்ணாடிச் சன்னலை மூடிய
கனத்த சீலைகளுக்கருகே
மேசைமேல் கண்ணாடிக் கிண்ணத்தில்
சுற்றிச்சுற்றி வந்தன அவை.
என் அம்மா, எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருப்பவள்,
நாங்களனைவரும் மகிழ்ச்சியோடிருக்க விரும்பி
என்னிடம் சொன்னாள்: ஹென்றி, மகிழ்ச்சியாயிரு.
அவள் சொன்னது சரிதான்: இருக்கவேண்டியதுதான்
மகிழ்ச்சியாய் உன்னால்
முடியுமானால்.
ஆனால் என் அப்பா அவரது ஆறடி இரண்டங்குலச் சட்டகத்துள்
பொங்கியெழுந்து அவரைத் தாக்குவது
எதுவென்று புரியாமல்
என் அம்மாவையும் என்னையும்
அடிப்பதைத் தொடர்ந்தார்
வாரத்தில் பலமுறை.

என் அம்மா, ஒரு பாவப்பட்ட மீன்,
மகிழ்ச்சியாயிருக்கவேண்டி, வாரத்தில்
இரண்டுமூன்றுமுறை அடிபடுபவள்,
மகிழ்ச்சியாயிருக்கச் சொல்லிக்கொண்டிருந்தாள் என்னிடம்:
ஹென்றி, புன்னகைசெய், ஏன் எப்போதும்
புன்னகையே இல்லை உன்னிடம்?

அப்புறம் அவள் புன்னகைப்பாள், எப்படி என்று காட்ட.
நான் பார்த்ததிலேயே ஆகவருத்தமான புன்னகை அதுதான்.

ஒரு நாள் தங்கமீன் இறந்தது, எல்லா ஐந்துமீன்களும்,
அவை நீரில் மிதந்தன, பக்கவாட்டாக,
கண்கள் இன்னமும் திறந்தபடிக்கு.
என் அப்பா வீடு திரும்பியவுடன் அவற்றைப்
பூனைக்குமுன் எறிந்தார்
அங்கே சமையலறைத்தரையில்.
என் அம்மா புன்னகை செய்ய
நாங்கள் பார்த்தோம்.

Sunday, November 6, 2011

பூஞ்சை நெஞ்சம்

மரணத்துக்கு முன் உன் துரோகிகளையெல்லாம்
மன்னித்துவிடுவாய் என்கிற உன் நம்பிக்கை
நீயும் அப்படி மன்னிக்கப்படுவாய் என்கிற
பேராசைக்குமுன் ஒன்றுமேயில்லை.
கடைசிக் கதவத்தை
ஒரு இறைஞ்சல்
எல்லாக் கைகளோடும்
தட்டுகிறது.
அதிரமாட்டாமல் அதிர்கிறது
ஒரு தாளக்கொட்டோடு.
தொலைவில்தான்.

Saturday, November 5, 2011

நீலப்பறவை: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (14)

என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
ஆனால் என் முரட்டுத்தனத்துக்குமுன்
அவன் ஒன்றுமில்லை.
சொல்கிறேன், அங்கேயே இரு,
யாரும் உன்னைப்பார்க்க
விடப்போவதில்லை நான்.
என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
அவன்மீது நான் விஸ்கியை ஊற்றுகிறேன்,
புகையை உள்ளிழுக்கிறேன்.
வேசிகளுக்கும் குடியை ஊற்றிக்கொடுப்பவர்களுக்கும்
மளிகைக்கடை குமாஸ்தாக்களுக்கும்
உள்ளே அங்கே அவனிருப்பது
ஒருபோதும் தெரிவதில்லை.


என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
ஆனால் என் முரட்டுத்தனத்துக்குமுன்
அவன் ஒன்றுமில்லை.
சொல்கிறேன், அப்படியே இரு. என்னைக்
குழப்பியடிக்கப் விருப்பமா? என்
வேலைகளை வெட்டியாக்க விருப்பமா? அல்லது
ஐரோப்பாவில் என் புத்தக விற்பனையை
ஒன்றுமில்லாமலாக்கத் திட்டமா?
என் நெஞ்சுக்குள்
வெளியே போகவிரும்பும்
ஒரு நீலப்பறவை.
ஆனால் எல்லாரும் தூங்கும்
இரவில்மட்டுமே
அவனை வெளியேவிடும்
அளவுக்கு நான் மிகவும் புத்திசாலி.
சொல்கிறேன், எனக்குத் தெரியும் நீ அங்கேயிருக்கிறாய்
ஆகவே வருத்தப்படாதே.
திரும்பவும் அவனை உள்ளே வைக்கிறேன்.
ஆனால் அவன் பாடுகிறான்
உள்ளுக்குள்ளே கொஞ்சம்,
நான் அவனை சாகடிக்கவெல்லாம் செய்யவில்லை.
மேலும் அவனும் நானும்
ஒன்றாகத் தூங்குகிறோம்
எங்களின் ரகசிய ஒப்பந்தத்துடன்.
மேலும் ஒரு ஆணை
அழச்செய்வதென்பது நல்லதுதான். ஆனால்
நான் அழுவதில்லை,
நீங்கள்?