Wednesday, July 27, 2011

பீகாரிலிருந்து வந்தவர்கள்

இன்னொரு அந்தி.
தெருவோர பேக்கரியில்
பத்துரூபாயை நீட்டி பன் கேட்டான் சிறுவன்.
கூட மூவர்
(அம்மா? தங்கை? குட்டித்தம்பி?)
கட்டிடத்தொழிலாளர்கள் இவர்கள்
வடக்கத்திக்காரர்கள்
(சொன்னது கடைக்காரர்)
இரவுணவுக்கா?
ஆமாம்
மொத்தக் குடும்பத்துக்கா?
ஆமாம்
தினமுமா?
ஆமாம்
குழந்தைக்குமா?
ஆமாம்
ஆமாம்
(பன்னை டீயில் தோய்த்து
குழந்தைக்கு அவள் ஊட்டும்போது
நிலாவைத் தேடுமா அவள் கண்கள்?
குறுக்காக நீண்டுயரும் தளங்களுக்கு இடையே
தென்படுமா அதன் ஒரு கீற்று?
நிலவைக் கட்டிடம் விழுங்கிவிட்டிருந்தால்
ஒரு குழல்விளக்குத் துண்டு
ஒளிருமா அருகே?)
மின் தடை இருக்குமா
இன்றைக்கு இரவு?
உரத்த கடைசிக்கேள்வி மட்டும்
உடனே கால்முளைத்து
அடுக்குமாடிக் கட்டிடங்கள்
பலவும் நீளத்தாண்டி
ஆ.....மாம்
எதிரொலித்தது நகரமெங்கும்
பல குரல்களில் பல மொழிகளில்
ஆத்திரத்தோடு.

Saturday, July 9, 2011

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துக்குமாக.
கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?