Wednesday, August 20, 2008

ஒரு முத்தம் ஒரு பரம்

மிகமிக நேசிப்பவன் முத்தம் கொடுக்கப்போவது அவளுக்குத் தெரிந்திருந்தால் முந்தைய நாள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை ஏன் முழுங்கியிருக்கப்போகிறாள்?/ முத்தத்தின் முடிவில் நாக்கின் வெள்ளைப்படிவு நினைவுப்பரிசாகஅவனிதழில் ஒட்டிக்கொண்டுவிட்டது/ கசப்பின் அவ்வசீகரத்தை செருகிய அவன் விழியின் அந்திமாலைச் சிகப்பு காட்டிக்கொடுக்காதிருக்கட்டும் பிறகு/ பேராபத்து, யாரும் நுழைந்துவிடக்கூடும் எந்நேரமும் என்ற அறையில் சாகசத்தின் நிறங்கொண்டுவிட்டது ஏக்கம்/ஓட்டையடைக்க வேண்டிய தன் பற்களுக்குள்ளே துழாவும் அவன் நாக்கை வழிகாட்டி நிரப்புகிறாள் அவளும்/ திரைச்சீலைகள் வினவுகின்றன, தம் அசைவுகளின் மீது வைத்திருந்த கண்களை அவர்கள் மூடிக்கொண்டது எப்போது எப்போது/ வீட்டிற்குள்ளே அவள் நுழைய அவன் களிப்பின் ஜொலிப்பால் அவை கூசியதே அப்போது அப்போது/ ஏதோ மூங்கில்கள் நெஞ்சில் நின்று எழும்புகின்றன அவர்களின் பிந்நேரம் கடந்த புல்லாங்குழல் கச்சேரிக்கு/இசையாக மாறியிருக்கும் அவள் நோய் அந்நேரம்.

Monday, August 18, 2008

பர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நபர்கள்பெயர்கள்நப##############

சமீபத்தில் நான் வாசித்ததில் பிடித்த சிறுகதை எஸ். செந்தில்குமாரின் "என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்." கதையின் சுட்டி:
http://www.kalachuvadu.com/issue-104/page18.asp

"சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை" என்று தொடங்குகிறது கதை. யார் சிகாமணி? தேனியில் வாரச்சந்தையில் கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த்தாள்களையும் தேடி எடுப்பவன். அவனோடு கூட இன்னொருவனும் இவற்றைத் தேடி எடுக்கிறான். கார்க்கோடன் என்ற பெயரால் அழைக்கப்படும் வேறொரு பெயர் கொண்டவன் அவன். சிகாமணிக்கு எதிரிணை கார்க்கோடன். சிகாமணி போலன்றி நம்பகத்தன்மை இல்லாதவன். (திருநள்ளாறு தலபுராணத்தின்படி, கார்க்கோடகன் என்கிற பாம்பு, சனியின் தூண்டுதலால் நளனைக் கடித்தபின் விஷமேறிய நளன் உடல்வண்ணம் மாறியதாக வரலாறு. நளனோடு சேர்ந்த எதிர்மறையான விஷம் போல சிகாமணியோடு சேர்ந்த கார்க்கோடன் இக்கதையில்.) கார்க்கோடன் பிக்பாக்கட். அதனால் போலிஸால் பிடிக்கப்படுகிறான். அப்போதும்கூட எப்போதும்போல சிகாமணிக்கு அவன் இல்லாமல் அவனோடு இல்லாமல் இருப்பது பிடிக்கவில்லை. லட்சுமி தியேட்டரில் படம்பார்த்துக்கொண்டிருந்தபோது சிகாமணி கார்க்கோடனிடம் சொல்கிறான்: "நான் இறந்ததும் நீயும் இறந்திடனும், நான் இல்லாத ஊரில் நீ உயிரோடு இருக்கக்கூடாது" (நிச்சயமாக அப்போது உயிரையும் கொடுக்கும் நட்பை அல்லது உறவை விதந்தோதும் படம் திரையில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என நினைக்கிறேன்)

சிகாமணியின் தாயையும் தந்தையையும் பற்றிய குறிப்பு கதையில் வருகிறது. ஆனால் கார்க்கோடன்? அவன் யாரோ, அவன் நிஜப்பெயர் என்னவோ. யாராயிருந்தால் தானென்ன? சிகாமணியை தேனியிலேயே விட்டுவிட்டு, மூணாறு செல்லும் கார்க்கோடனுக்கும் சிகாமணியின் வாழ்க்கையில் நடப்பவையே நடக்கின்றன. தேனியில் கீழே விழுந்து அடிபட்டுக்கொண்ட ஹக்கீம் என்கிற மரக்கடை முதலாளிக்கு இடுப்பில் போட்ட கட்டுக்கு எண்ணெய் ஊற்றவும் மூத்திரம் மலம் எடுத்துப்போடவும் நியமிக்கப்பட்டிருக்கிறான் சிகாமணி. "அவராக வெளிக்குப் போக ஒரு வருஷமாவது ஆகும். அதுவரைக்குக் கூட இருக்கச் சொல்லியிருக்காங்க." சிகாமணியைப்போலவே கார்க்கோடனும் மூணாறில் கீழே விழுந்து தொடையை முறித்துக்கொண்ட தேயிலைத் தோட்ட முதலாளிக்கு சரீரக்கழிவுகளை எடுத்துப்போடுகிறான். மரக்கடை முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின் மேல் சிகாமணிக்கு ஈர்ப்பு ஏற்படுவதைப்போலவே, கார்க்கோடனுக்கும் அவன் முதலாளிக்கு நர்ஸாக வரும் நிஷாவின்மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது. நிஷாவை திருமணம் செய்வது போல சிகாமணி இரவின் கனவொன்றைக் காண்கிறான்; அதே கனவை கார்க்கோடனும். இரண்டு நிஷாக்களும் அழகாக, இடது கால்களில் தலா ஆறு விரல்களோடு இருக்கின்றனர். இரண்டு நிஷாக்களும் இவர்கள் இருவரையும் ஒறுக்கின்றனர்.

கண்ணாடி பிம்பங்களாக இருவரின் வாழ்க்கை நிகழ்வுகளும் இயக்கம் கொள்கின்றன. ஆனால் வலது இடதாக மாறும் உத்தியை கவனமாக விலக்கும் கண்ணாடி இந்தக்கதை. சிகாமணி, கார்க்கோடன்: இருவரும் ஒருவரே போன்ற இருவரா, இல்லை ஒருவர் தானா?

"கார்க்கோடன் கடைசியாக "டேய் சிகா எப்படிறா மூத்திரம் பீ எடுத்துப்போட்ட நீ! எங்க முதலாளிக்கு எடுத்துப்போட்டபோது உன்னைதாண்டா நினைச்சுப் பார்த்தேன். உவ்வே வாந்தி வருதுடா" என்றான்.
சிகாமணி 'அடப்பாவி' என்று சொல்லிவிட்டு நிறுத்திக்கொண்டான். அடுத்து ஏதும் பதில் பேசமுடியவில்லை. கார்க்கோடனும் போனை வைத்துவிட்டான். சிகாமணின்னு பேர் வைச்சவங்களுக்கு எல்லாம் அப்படித்தான் வரும் என்று அவன் நினைத்துக்கொண்டான். கார்க்கோடனைத் தான் அப்போதுவரை அவனது உண்மையான பெயரைச்சொல்லி அழைத்திருக்கவில்லை என்பதும் கூடவே நி னைவில் வந்தது. தனது பெயரும் கார்க்கோடனின் பெயரும் ஒன்றுதானே என்று நினைத்துக்கொண்டான் சிகாமணி."

தேனியில் இருந்தால் என்ன, அல்லது தேனியை விட்டுவிட்டு மூணாறுக்குச் சென்றான் என்ன? மேலும் பெயர் தான் சிகாமணியாக இருந்தால் என்ன? கார்க்கோடனாக இருந்தால் என்ன? சந்தையில் ரூபாய் பொறுக்குதலும் மலமும் மூத்திரமும் அள்ளிப்போடுதலும் வாழ வழியாக இருக்கும்போது பெயர் என்பதின் மதிப்பு என்ன? எந்த வித்தியாசமும் இல்லாத(அ)வர்களின் விளிம்புவாழ்க்கைக்களங்களில் பெயர் என்கிற இடுகுறி கொள்ளும் பொருள் (அல்லது அந்த இடுகுறியின் பொருளற்ற தன்மை) கேள்வியாக நம்முன் விரிகிறது.

பெயர் என்பது arbitrary ஆக இடப்படுவது. ஆனால் நடைமுறையில் ஒரு பெயருக்கும் அந்தப் பெயர் சுட்டும் நபரின் பிம்பத்துக்குமான ஒரு பிணைப்பு, ஒரு தொடர்பு பார்ப்பவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. ஆனால் இக்கதையிலோ இந்த பெயர்-பிம்பம் பிணைப்பும் தொடர்பும்கூடத் தீர்மானமாக இல்லை. ஒரே பெயர் கொண்ட இரு நபர்களா, அல்லது ஒரே பெயர் கொண்ட ஒருவரே தானா என்கிற ரகசியத்தைப் பிரதி தனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறது.

"சிகாமணி இறப்பதற்குமுன் யாரிடமோ சொல்வதுபோல 'நான் இறந்ததும் சிகாமணியும் இறந்துபோவான்' எனச் சொன்னான்."

இறந்தது சிகாமணியா, சிகாமணிகளா, தெரிவதில்லை நமக்கு. யார் யாருக்கு, எத்தனை பேருக்கு இழவுத்துக்கம் காக்கவேண்டும் என்பதை அறியாமலேயே வாசித்த கதையிலிருந்து விடைபெறுகிற துயரத்தை இக்கதை வாசகருக்குத் தன் வெகுமதியாக அளிக்கிறது.

(எஸ். செந்தில்குமாரின் இக்கதை ஆகஸ்ட் 2008 காலச்சுவடு இதழ் 104-ல் வெளியாகியிருக்கிறது. இந்த என் பதிவு பின்னர் விரித்து எழுதப்படும்)

Sunday, August 17, 2008

ஆடியற்ற ஆடியில்

தூரத்தே
கோக்காகோலா பாட்டில்
தன் விளம்பரப்பலகை
க்குள்ளேயே ஆடிக்
கொட்டிவிட்டது.
மோனித்த வெளியில்
ஆளற்ற
ஒற்றைக்கட்டில்
காற்றைக்
கேட்கிறது.

பிறகு இல்லை நேற்று

--கவிதை நீக்கப்படுகிறது--

Sunday, August 10, 2008

இப்படி பலரும்

அலைச்சலாகவே ஆனவன்
தன் அறையில் நடக்கும்போதும்
உலகத்தைச் சுற்றிவிடுகிறான் பலமுறை.
அமர்ந்து அவன் கணினியின் திரையில்
ஒரு சுட்டியைச் சொடுக்கும்போதும்
ஓராயிரம் சுட்டிகளாய் நிரம்பி
மேசைமீது வழிந்துவிடுகின்றன.
அவசரமாய் அவற்றை அள்ளிவைக்கும்
அவன் கைகளிலும் சக்கரங்கள்.
துயிலறியாத அவன் விழிகளின்
கங்கிலிருந்து
நேற்று ஒருத்தி
தன் சிகரெட்டுக்காக
நெருப்பு எடுத்துக்கொண்டாள்
என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

Friday, August 8, 2008

ஜீவனோ அற்ப உபாயம்

கவிதை நீக்கப்படுகிறது.

சில ஆலோசனைகள்

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

நீ அவ்வப்போது பொய் சொல்லவேண்டும்
அந்தப் பொய்களுக்காக அவனிடம் (மட்டுமே)
கண்ணீர் விடவேண்டும்
ஒருபோதும் உண்மையை (அப்படி ஒன்று இருந்தால்) நேசிப்பவளாகக்
காட்டிக்கொள்ள வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

ஒரு கண்ணில் அமிர்தத்துடனும்
இன்னொன்றில் விஷத்துடனும்
பார்வையில் ஒன்றுசேர விழுங்கவேண்டும் அவனை
ஒருபோதும் அமிர்தத்துக்கும் விஷத்துக்குமான வேறுபாட்டை
அவன் உணரச்செய்ய வேண்டாம்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

திரும்பவும் உன் சிறுபிராயத்தை நோக்கிச் செல்.
சிறுபிராயத்தையும் அவன் ரசிக்கத் தரவேண்டும்
அவன் இல்லாத உனக்கேயான பிராயமென்று
உன் முதுமை அமையலாம் ஒருவேளை.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

திரைப்படக் காமக்காட்சியில் வீணையைப்போல்
அறிவுஜீவிகள் மத்தியில் பிரதியைப்போல்
வாசிக்கப்படுபவளாகக் உன்னைக் காட்டித்தர வேண்டும்
(ஆற்றைவிடவும் ஆழமாக)
வீணைகள் பிரதிகள் பெண்களை வாசிக்க
ஆண்களுக்கு விருப்பமென்பதை மனதில்கொள்.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

அறிவில் அவனில் நீ பாதிக்குக் கீழ் எனவும்
அன்பு தருவதில் நிரம்பித்ததும்பியும்
உன்னை அறிவித்துவிடவேண்டும்.
அன்பு கொஞ்சம் குறையும்பட்சத்தில்
கார்ப்பரேஷன் தண்ணீரை இட்டு நிரப்பு பாதகமில்லை.

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

மழையை குழந்தைகளை நேசிப்பதாக
அவன் முத்தம்கொடுக்கும்முன் சொல்லப்பழகு
அப்போது உன் கூரிய பற்களை
உதடுகளுக்குள்ளே அடக்கிவைத்துக்கொள்
அவன் நெஞ்சில் படரும்போது
கனவுகளைக் காண்பவளாக உன்னைக்காட்டிக்கொள்
அல்லது அச்சமயம் கண்ணையாவது மூடிக்கொள்

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

லக்கானோ புரந்தரதாசரோ பெரியாரோ
இந்திய அரசியல் சட்டமோ, விளக்குபவனிடம்
குளிர்இமைகளை சற்றே உயர்த்திக்கேள் "அப்படி..
யா?" அதற்குமுன் உன் புருவங்களைச் செம்மை செய்ய
மறக்காதே எழுத்தாள நண்பனுக்கும் திருத்தப்பட்ட பெண்புருவம்
பிடிக்கும்
என்றாலும் அழகுநிலையத்தில் அவ்வப்போது
வண்டியில் விட அவனை அழைக்க வேண்டாம்.

பலஸ்ருதி

ஒரு ஆண் (அவன் பெண்வேடமிட்டிருந்தாலும்)
உன்னை விரும்பவேண்டுமென்றால்

ஆலோசனைகளை வாசித்ததாகத்
தெரியப்படுத்த வேண்டாம் அல்லது இவற்றை
நிராகரித்ததாகச் சொல்லிக் கண்ணடித்துவிடு
அல்லது (மிகப்பணிந்து) ஏதோ ஒன்றை.
விரும்பப்படாவிட்டாலும் அவனோடு
ஆகப்பெருவாழ்வு வாழ உதவும் இவை.

Thursday, August 7, 2008

பகல்போல் இல்லை இரவு

--கவிதை நீக்கப்படுகிறது--

Saturday, August 2, 2008

"தாமரை இலைமீது ததும்பும் சொற்களை" முன்வைத்து கொஞ்சம் ஜெயகாந்தன்

(ஜனவரி 2006 சென்னை புத்தக விழாவில் அரவிந்தனின் "தாமரை இலைமீது ததும்பும் சொற்கள்" நூலை வெளியிட்டுப் பேசியது.)

தாமரை இலை மீது ததும்பும் சொற்கள்--நண்பர் அரவிந்தன் அவர்களின் நான்காவது நூல் இது. அவரது இரண்டு சிறுகதை தொகுப்புகளுக்குப் பிறகு, சிறாருக்கான மகாபாரதம் நூலுக்குப் பிறகு வெளிவந்திருக்கிறது. தொகுப்பில் பதினான்கு கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 90-களின் இறுதிகளிலிருந்து சென்றவருடம் வரை காலச்சுவடு, இந்தியா டுடே, தமிழ்க்கொடி 2006 இலக்கியத் தொகுப்பு நூல், திண்ணை.com போன்றவற்றில் பிரசுரமாகியிருக்கும் அரவிந்தனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம், க.நா.சுவின் பொய்த்தேவு, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே, ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம், நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை, போன்ற குறிப்பிட்ட நாவல்பரப்புகளில் மையம் கொள்ளூம் கட்டுரைகள், விழி. பா. இதயவேந்தனின் வதைபடும் வாழ்வு, அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி, கதா-காலச்சுவடு நிகழ்த்திய போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு ஆகியன பற்றி மூன்று கட்டுரைகள், அசோகமித்திரன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி ஆகியோரது சிறுகதைகளின் உலகத்தை எட்டிப்பார்க்கும் நான்கு கட்டுரைகள், ஜெயகாந்தனின் சிறுகதைகள் குறித்த அரவிந்தனின் எழுத்துக்கு வந்த எதிர்வினைகள் பற்றிய விவாதம், இளம்படைப்பாளிகள் என்று அரவிந்தன் வகைமைப்படுத்துகிற படைப்பாளிகளுக்கு முன்நிற்கும் சவால்கள், அவர்களின் பலங்கள் பலவீனங்கள் குறித்த அவதானிப்பு என்பதாகத் தன்னை விரிக்கிறது இந்நூல்.

சிலநாட்களுக்கு முன் என் கையில் கிடைத்த இத்தொகுப்பில் சில கட்டுரைகளை என்னால் கவனத்தோடு வாசிக்கமுடிந்தது. சிலவற்றைப் புரட்டிப்பார்க்க மாத்திரமே எனக்கு நேரம் கிடைத்தது என்று சொல்லவேண்டும். என்றாலும் வாசித்தவரையில் என் கவனத்தை ஈர்த்தது அரவிந்தனின் உரைநடையின் தெளிவு. ambiguity இல்லாமல் முன்வைக்கப்படுகிற கருத்துகள். கட்டுரைக்கு இது முக்கியம் என்றும் ambiguity இருந்தால் கூட அது உத்தேசித்த நோக்கத்தோடு அமையப்பெற்றதாக இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். தன்னுடைய கருத்துகளை தன் அபிப்பிராயம் என்று அரவிந்தன் வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறார் தன் முன்னுரையில். தான் எந்தத் தளத்தில் இயங்குகிறோம் என்பதையும் அதன் போதாமைகளையும் அறிந்திருப்பது, போதாமைகளை நியாயப்படுத்தாமல் அறிவிக்கவும் செய்வது, இவை தன் செயல்பாட்டை தானே அலசக்கூடிய மனத்தின் அடையாளங்கள். இந்த மனப்பாங்கு பெற்றிருப்பதற்காக அரவிந்தனுக்கு என் வாழ்த்துகள்.

அரவிந்தனின் கருத்துகள் பலவற்றிலிருந்து என் வாசிப்பு வேறுபடுகிறது. உதாரணத்துக்கு, ஜெயகாந்தன் எழுத்துகளில் காணக்கிடைக்கும் 'மிகை வெளிப்பாடுகள்' பற்றி அரவிந்தனின் விமரிசனம். ஜெயகாந்தன் எழுத்துகளில் மிகையுணர்ச்சியுடைய பங்கை நான் வேறுவிதமாக, அவர் எழுத்துக்கு அது வலிமை சேர்ப்பதாக நான் பார்க்கிறேன். ஜெயகாந்தனின் பல கதைகளில் இந்த மிகையுணர்ச்சி வெளிப்பாடு நாடகீயமாக மாறுகிறது. கதைகளில் வரும் உரையாடல்களுக்கு stylized பாணி ஒன்றை இந்த நாடகீயம் தருகிறது. ஜெயகாந்தன் கதைகளில்--குறிப்பாக, குருபீடம், எங்கே யாரோ யாருக்காகவோ, போன்ற கதைகள்-- நிறைய இடங்களில் உரையாடல்கள் வலிமை பெற்றிருப்பதற்கு மிகை சேர்ந்திருப்பதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.

புதுமைப்பித்தனின் 'சாப விமோசனத்தையும்' ஜெயகாந்தனின் 'அக்னிப்பிரவேசத்தையும்' அரவிந்தன் ஒப்பிட்டு ஆராய்வது முக்கியமானது. (94). ராவணன் இடத்திலிருந்து வந்த சீதையின் தூய்மையைச் சந்தேகித்த ராமன் சீதையைத் தீக்குளிக்கச் செய்ததை அறிந்து, கல்லாகிப் போன அகலிகை புதுமைப்பித்தனில். ஜெயகாந்தனிலோ, கற்பு என்று காலங்காலமாக கட்டப்பட்டிருக்குமொன்று கலைந்துவிட்டதால் தன் மகளை நீரில் குளிப்பாட்டி உள்ளே சேர்த்த தாய். அரவிந்தன் புதுமைப்பித்தன் எழுப்பும் கேள்விகள் சலனங்கள் ஆழமானவை என்றும் ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் கதை எழுப்பும் சலனமோ புரட்சித்தாயின் கையிலிருக்கும் குடத்தின் அடிமட்டத்தைத் தாண்டாதவை என்று வாதிடுகிறார் (94). அரவிந்தனுடைய இந்த விமரிசனம் யோசிக்கச் செய்தது. இந்த இரு கதையாடல்களையும் பார்க்கலாம்: புதுமைப்பித்தனின் கதையில், கல்லாவதற்கு முன் அகலிகை சீதையிடம் தீக்குளிக்கச்சொல்லி ராமன் கேட்டானா என்று வினவுகிறாள். அதற்கு சீதை "உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா?" என்று சொல்லிச் சிரிக்கிறாள். "நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப்போகிறதா? உள்ளத்தைத் தொடவில்லையென்றால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்று பதில் தருகிறாள் அகலிகை. ஆனால், புதுமைப்பித்தனின் இக்கதைமாந்தரைப் போலன்றி ஜெயகாந்தன் கதைமாந்தருக்கு சுற்றியிருக்கும் உலகம், அதன் மதிப்பீடுகள் எல்லாமே முக்கியமாகப் படுகின்றன. ஆனால், கூடவே அந்த மதிப்பீடுகளுடைய உள்ளீடற்ற தன்மை கூடவே சுட்டப்படுகிறது. உடலுக்கும் உள்ளத்துக்குமான, உள்ளத்தூய்மைக்கும் உடல் தூய்மைக்குமான வித்தியாசப்புள்ளிகள் காட்டப்பட்டு, 'கெட்டுப்போனது உடல் தானே, குளிச்சாச் சரியாகிப் போயிடும்,' என்று வேறொரு சொல்லாடலாகக் கற்பெனும் சுத்தம் விரிகிறது. புனித நீரில் குளிப்பது, அல்லது சில விசேஷ காலங்களில் நம் வீட்டிலிருக்கும் நீரையே புனித நீராகப் பாவித்துக் குளிப்பது போன்றவை நிலவும் நம் கலாச்சாரச் சூழலில், ஜெயகாந்தனின் கதையாடலில் மீள்புனையப்படுகிற 'நீரில் குளிக்கும் சடங்கு' கற்பெனும் கலாச்சார விகாரத்தை எடுத்துப்பார்த்து 'இவ்வளவுதானே இது' என்று விசிறி அடிக்கிறது. இதன்மூலமாகக் கதையாடல் கற்பை ஸ்தூலமான உடலுக்கு மட்டுமானதாக மாற்றிவிடுகிறது. அந்த விதத்தில் ஜெயகாந்தனின் இக்கதையின் நவீனம் தனித்து நிற்கிறது.

நிறைய உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இந்தக் களம் புத்தக அறிமுகத்துக்கானது. விமரிசனத்துக்கானது அல்ல. காலை மாலை போன்ற பொழுதுகளுடைய அழகெல்லாம் நாம் அப்பொழுதுகளை அவ்வாறு உணர்வதே. இந்த மாலையை நான் ரம்மியமாக உணர்கிறேன். புத்தகத்தை வெளியிட என்னை அழைத்த அரவிந்தனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் என் நன்றி.

Friday, August 1, 2008

பூமி போலும் வலிய

கவிதை நீக்கப்படுகிறது.