Wednesday, November 7, 2012

வழுக்கும் கண்ணாடிக் கோப்பை



எந்த அறையிலும்
யாரும் விருந்துக்கு வராதபோதும்
அல்லது விருந்து முடிந்துவிட்ட தருணத்திலும்
அத்தனை கவனத்துக்கிடையிலும்
நம் கையில் இல்லாவிட்டாலும்
கடைசிவரையிலும்
அல்லது அதற்குப்பிறகும்கூட
மிகமெதுவாக
மனதிலேனும்.  

Monday, January 9, 2012

தோற்கடிக்கப்படும் பெண் (பெரும்பாலும்)

தீயுறைத்தூக்கம் (விருட்சம்: 1998)தொகுப்பிலிருக்கும் தலைப்பிடப்படாத ஒரு கவிதையைப்பற்றி பத்துவருடங்களுக்குமுன்னர் எழுத்தாளர்-நாவலாசிரியர் பா.வெங்கடேசன் எழுதியிருப்பது சமீபத்தில் காணக்கிடைத்தது. (அவ்வை மண்ணில் பெண் எழுத்தாளர்கள், தொகுப்பு: பிரம்மராஜன், ஆர். சிவகுமார். மருதா: 2001), தீயுறைத்தூக்கத்துக்கு விமரிசனம் இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன். ஒரு கவிதையை முன்னிறுத்தி வெங்கடேசன் செய்திருக்கும் அணுக்கவாசிப்பை பிரதி குறித்த அவரது அணுகுமுறைக்காக இங்கே பதிவுசெய்கிறேன். முதலில் கவிதை:


தாழம்பூ வசிக்கும்
விதிதின்ற தோட்டம்
ஈடன்
முன்றிலில்
பொழுதற்ற பொழுதும்
உலரா நீர்விழிச்
செம்முகம்
புதைந்தே விழைவும்
இழந்தா போயிற்று மாட்சிமை
யுன் ஜதியென
குற்றஞ்சுட்டும்
ரகசியம் தோற்ற
தது சர்ப்பம்.

தேற்ற தூக்கிய பாதம்
பணிவபிநயித்து
அலையும் முத்துச்சுடர்
நடனம் த்வனிக்கும்
அசுரக்கால்கள்
திருச்சிற்றம்பலவொலி
பிரவகித்தோட
மிஞ்சிக்கூசும் கனி
புசித்த திருவிழி
தரித்ததே உயி
ரென்றும்
துணுக்குறுவாள்
உமாமஹேஸ்வரி.



இனி கட்டுரையில் பா. வெங்கடேசன்:

"இந்தக்கவிதை இருவேறு புராணிகங்களைச் சில ஒத்த அம்சங்களை முன்னிறுத்தி இணைப்பதன்மூலம் கவிதையில் பேசும் பெண்மொழியின் பிரதேச அடையாளங்களை அழித்து அதைப் பிரபஞ்ச அளவினதாக்குகிறது. கவிதை ஞாபகப்படுத்தும் பிரதான கதையாடல்கள்: 1. ஈடன் தோட்டத்து விலக்கப்பட்ட கனியை ஆதாமுக்குமுன் ஏவாள் பாம்பின் தூண்டுதலால் தின்றது 2. நடனப்போட்டியில் சிவனுக்கு நிகராக அடவுகளை நிகழ்த்திக்காட்ட முடியாமல் உமாமஹேஸ்வரி தோற்றுப்போனது. இரண்டு கதைகளிலுமே பெண் தோற்றுப்போகிறாள்.

விவிலியக் கதையில் சிவபுராணத்தில் காட்டப்படுவதுபோல ஆணுக்கும் பெண்ணுக்குமான நேரடி மோதல் காட்டப்படுவதில்லை. மாறாக, ஆண், பெண் இரு எதிர்வுகளுக்கு வெளியே பொதுவாகச் சுட்டப்படும் கனியை உண்டு, பாவம் செய்து, தான் தோற்பதன் மூலமாகப் பெண் ஆணின் தோல்விக்கும் காரணமாகிறாள். சிவபுராணத்தில் நடனம் என்கிற பொதுக் குறியீட்டைக்கொண்டு ஆண் பெண்ணை ஜெயிக்கிறான். அதாவது கனி ஆண், பெண் இருவருக்குமே விலக்கப்பட்டது. ஆனால் சிவன்முத்திரை பெண்ணுக்கு மட்டுமே விலக்கப்பட்டது.

இந்த வேறுபாட்டைத்தான் பெருந்தேவியின் கவிதை அழிக்கிறது. கவிதையில் கனி-நடனம் ஆகியவை ஒத்த அர்த்தத்திலும், ஏவாள்-உமாமஹேஸ்வரி இருவரும் ஒத்த அர்த்தத்திலும் பாம்பிடம் ஏமாறுவதும் நடனத்தில் தோற்பதும் ஒத்த பொருளிலும் சுட்டப்படுகின்றன. ஆனால் கவிதையின் மேல்தளத்தில் நேரடியாகத் தோன்றும் சிவன் (திருச்சிற்றம்பல வொலி) ஆண் என்ற வகையில் ஆதாமுடன் இணைக்கப்படுவதில்லை. மாறாக பாம்பு அலைகிற மற்றும் தாழம்பூ விலக்கப்பட்ட வெளி என்கிற பொதுப்பண்பை முன்னிறுத்தி (சிவனுக்கு தாழம்பூ அர்ச்சனைப் பொருளல்ல, அதுபோல ஈடன் தோட்டத்தில் தாழை வளர்வதும் கவிதைப்படி இயல்பல்ல, விதி.) ஈடன் தோட்டமும் சிவனின் உடலும் கவிதைத்தளத்தில் இணைக்கப்படுகின்றன. ஜடப்பொருளுக்கும் – உயர்திணைக்குமிடையிலான இந்த எதிர்பார்க்கமுடியாத இணைவு புராணிகக் கதையாடல்களில் ஆண்மொழியைக் கட்டும் கதையொழுங்கைச் சிதறடித்துவிடுகிறது. இப்போது ஈடன் தோட்டம் ஆண் பெண் இருவருக்குமான பொதுவெளி அல்ல, மாறாக ஈடன் தோட்டம் என்பதே ஆணுடல்தான் (சிவனுடல்) என்பதும் அதில் விலக்கப்பட்ட கனி கதைசொல்ல ஒரு சாக்கு என்பதும், அதுபோல நடனம் என்பது ஒரு சாக்கல்ல மாறாக அது பெண் தோற்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஈடன் தோட்டவெளிதான் என்பதும் கவிதையின் செய்தியாக நமக்கு அர்த்தப்படுகிறது. உமாமஹேஸ்வரி துணுக்குறுதல் அவளது விழிப்பைச் சுட்டும் குறியீடாக நின்று கவிதையில் பெண்மொழியை இயக்குகிறது."

புராணிகத்தை எதிர்கொள்ளும் இன்னொரு கவிதை இங்கே “இக்கடல் இச்சுவை” தொகுப்பிலிருந்து:

அழுகுணி

பகடையாட்டத்தில் தோற்கும் நிலை
தெரிந்தவுடனேயே
பதறி ஆட்டத்தைக் காலால்
கலைத்துவிடும் சிவன்
சாபமிட்டு விடுவான் உடனுக்குடன்
உமையொரு பாகத்துக்கு
அவ்விடம் நீங்கி
இவ்விடம் சேர.
ஈசன் அருள் பெற்ற
அசுரரைக் கொல்லும் முனைப்பில்
ஆயிரமாயிரம் ஆண்டுகளின் தபசு
அவளது
ஆயுத நீட்சிகளையும்
குருதி குடிக்கக் கன்னிப்பெண்களையும்
அடிமைத்தலைதாங்கிகளையும்
இச்செகக்
கோயில்களின் கலாகுழுமங்களாகப்
பிறப்பிக்க
அங்கே விளையாட்டுத்துணை அகன்ற துக்கத்தில்
எதிராளி மறைந்த களிப்பில்
தானே ஆடிக்கொள்வான் பித்தன்
இப்பக்கத்திலிருந்தும்
அப்பக்கத்திலிருந்தும்.

தெறித்த எண் இணைவுகள்
புழங்க வரம் பெற்ற சொற்றொடர்களாக
அவதரிக்க
இறை தாயத்தின் முதல் ஒழுங்காக
உலகம் நிறைக்க
தாயுமாகிய
விளையாட்டின்
தந்தையாட்டம் ஜெயிக்கும்
எப்பக்கம் நின்று ஆடினாலும்.

Tuesday, January 3, 2012

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 3)

(காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை இங்கே பகுதிகளாகப் பதியப்படுகிறது)

முதலில் இரண்டாம் வாழ்க்கை

WorldsAway, Alphaworld என்று சென்ற பத்தாண்டுகளில் தொடங்கிய மெய்நிகர் சமூக உலகங்களில் ஒன்று, 2003-ல் துவங்கப்பட்ட Second Life என்கிற முப்பரிமாண மெய்நிகருலகம். இவ்வுலகங்கள் வெற்றி/தோல்விக்கான வெறும் கணினி விளையாட்டல்ல. “இரண்டாம் வாழ்க்கை”-யின் முக்கியமான அம்சங்கள்: சில இங்கே உங்களின் அவதாரம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு பிற அவதாரங்களுடன் நட்பு கொள்ளலாம்; உறவு கொள்ளலாம்; திருமணம் செய்துகொள்ளலாம்; பார்ட்டிகள் நடத்தலாம். வீடுகட்டி, கார்வாங்கிக்கொள்ளலாம். சுற்றுலா செல்லலாம். நூலகம், கல்விக்கூடங்கள், கடைகள், ஓவியக்கண்காட்சிகள் போன்றவற்றுக்குச் செல்லலாம். குழந்தை பெற்றுக்கொள்ளலாம் (பய்லர் பல்கலைக்கழகம் ஒரு மெய்நிகர் மகப்பேறு அறையை இரண்டாம் வாழ்க்கையில் நிறுவியிருக்கிறது) பிற(ர்) அவதாரங்களோடு தனிப்பட்ட/குழு அரட்டை, உடனடிச்செய்தி போன்றவற்றால் தொடர்பிலிருக்கலாம். அடிப்படை உறுப்பினராவதற்கு பணம் வேண்டியதில்லை. ஆனால் இந்தவுலகத்தில் செயல்பட, உதாரணமாக சந்தித்த ஒருத்தரோடு (அவதாரத்தோடு) காப்பிக்கடைக்கு செல்ல, உங்களின் (அவதாரத்தின்) காரைச் சரிசெய்ய, வீடு வாங்க, தோட்டத்தை அழகுபடுத்த போன்றவற்றுக்கெல்லாம் பணம்வேண்டும். அதற்கு லிண்டன் டாலர் (L$) என்கிற நாணயம் புழக்கத்திலிருக்கிறது. இந்த நாணயத்தை நீங்கள் அமெரிக்க டாலர் கொண்டு வாங்கவேண்டும். அவற்றை மெய்நிகருலகத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

இங்கே நிலங்களை வீடுகளை ரியல் எஸ்டேட் மூலம் விற்கலாம். பொருட்களை, சேவைகளை வியாபாரம் செய்யலாம். லாபம் வந்தால் அதை அமெரிக்க டாலர்களுக்கு மாற்றியும்கொள்ளலாம். ஆத்திகர்கள், நாத்திகர்கள், லிபரல்கள், பெண்ணியவாதிகள் போன்ற பல குழுக்கள் உண்டு. சர்ச்சுகள், மசூதிகள் போன்றவை உண்டு. வெயிலில் வதங்காமல் வாடாமல் 7000 பேர் (இஸ்லாமியர்களும் மற்றவர்களும்) பங்குபெற்ற மெய்நிகர் ஹஜ் தலத்துக்கு மெய்நிகர் யாத்திரைகூட “இரண்டாம் வாழ்க்கையில்” நடந்தது. இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் கட்டப்பட்ட புனிதத்தலத்தில் போர்னோக்ராபி போஸ்டர்கள் ஒட்டி, இஸ்லாமியர்களை வெளியேறச்சொன்னதும் பதிலுக்கு ஹஜ் ஆதரவாளர்கள் (இஸ்லாம் ஆன்லைன் குழு) ஆக்கிரமிப்பாளர்களைத் துரத்தியதும்கூட நடந்தது. (பார்க்க: http://news.sky.com/home/technology/article/1297721). இதுவரை இங்கே அரசாங்கம் இல்லை; ஆனால், மிலிட்டரிக்குழுக்கள், அரசியல் சங்கங்கள் உண்டு. வார்னர் ப்ரதர்ஸ், டெல், அமெரிக்கன் அப்பரல், அடிடாஸ், சிஸ்கோ போன்ற நிறுவனங்களின் மெய்நிகர் இருப்பும் பங்குபெறுதலும் கடைவிரிப்புகளும் இங்கே உண்டு. ஒரு மெய்நிகர்த்தீவை வாடகைக்கு எடுத்து கருத்தரங்குகள் நடத்துகிற ஐ.பி.எம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் உண்டு. ”இரண்டாம் வாழ்க்கை உலகம்” என்பதைப்பற்றி மட்டுமே தனியாக ஒரு புத்தகம் எழுதுகிற அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன. இணையத்தில் எக்கச்சக்கமான தகவல்கள் கிடைக்கின்றன. இரண்டாம் வாழ்க்கைக்குப் பரிச்சயமில்லாத வாசகரை மனதில்கொண்டு விரிவாக இங்கே அறிமுகம் செய்யவேண்டியதாயிற்று.

அவதார் என்கிற சொல் வடமொழி அவதாரத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருப்பது. கடந்து இருக்கும் இறை ஒரு நோக்கத்தோடு அவதாரத்தின்மூலம் உலகத்துக்கு வந்து அண்மிப்பதாகச் சொல்லப்படுகிறது. “எல்லாம் வல்ல,” “தன்னிச்சை” என்கிற அர்த்தச்சுட்டுதல்களை ”அவதாரம்” தனக்குள் கொண்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இறையைப் போலவே மின்திரையில் இயங்கும் ஒருவர் தன் அவதாரத்தை அலகிலாவுலகில் விளையாட்டாக (லீலையாக) உருவாக்குகிறார், கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்று தோன்றும். ஆனால் வாழ்க்கை என்பதே மெய்நிகருலக அவதாரத்தின் ஆட்டங்களின், உணர்வுகளின் ததும்புகிற பரப்பாக மாறிவிடுவது சாதாரணமாக நடக்கிறது.

ஒரு ஜூலை சனிக்கிழமை மதியம் மிஸ்டர். ஹூக்ஸ்ட்ராட் கடற்கரைக்குப்போக முடிவெடுக்கிறார். ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி டச் என்கிற அவதாரமாக இரண்டாம் வாழ்க்கைக்குள் நுழைகிறார். அப்போது 40,000-க்கும் மேல் மக்கள் லாக்-இன் செய்திருக்கிறார்கள். அவர் உள்ளே நுழைந்தவுடனேயே அவரது இரண்டாம் வாழ்க்கையின் மனைவி தனஜ் (ஜெனத் என்பவரின் பெண் அவதாரம்) தகவல் அனுப்புகிறாள் தான் உடனே வருவதாக. அவர்களிருவரும் தங்கள் அடுக்குவீட்டில்—புல்வெளிமீது கடலை நோக்கியமைந்த நவீன மூன்றுமாடிக்கட்டடம் அது—சந்திக்கிறார்கள். கடற்கரையிலிருக்கும் கிளப்புக்கு இருவரும் தொலைப்பொருட்பெயர்வு (teleport) செய்துகொள்கிறார்கள். அங்கே ஏற்கெனவே இடுப்புகளை ஆட்டியபடியும் உடைகளைப் பாதியும் முழுதுமாகக் களைந்தும் நடனமாடிக்கொண்டிருக்கும் ஒரு டஜனுக்கும்மேலானவர்களோடு இவர்களும் இணைந்துகொள்கிறார்கள்….

ஒருமுறை கடைக்குப் போன இடத்தில் டச் தனஜைச் சந்தித்தார் இரண்டாம் வாழ்க்கையில். பின்னர் இருவரும் ”மாயத்தோற்றத் தீவு” என்ற பெயர்கொண்ட தீவில் ஒரு அடுக்குவீட்டை வாடகைக்கு எடுத்து சேர்ந்துவாழ ஆரம்பித்தார்கள். விரைவிலேயே முப்பது நண்பர்கள் வருகைதர குளமமைந்த ஒரு தோட்டத்தில் இருவருக்கும் “சம்பிரதாயமான” திருமணமும் நடந்தது. டச்-சும் தனஜும் அந்நியோன்னியமான தம்பதியென்றும் தங்களுக்குள் எந்த ஒளிவுமறைவுமில்லையென்றும் சொல்கிறார்கள். …

டச்-சுக்கு 1.5 மில்லியன் லிண்டன் டாலர் மதிப்பில் சொத்துக்களுண்டு: பீச் கிளப், நடன கிளப், ஸ்ட்ரிப் கிளப், ஒரு பெரிய கடைத்தொகுதி (mall) போன்றவையுட்பட. அவரிடத்தில் இணைய இணைவிலிருக்கும் 25 பேர் (அவதாரங்கள்) நிர்வாகி, உதவி நிர்வாகி, காவலாளி, நடனப்பெண்மணிகள் என்று வேலை செய்கிறார்கள். … ஒரு ஞாயிற்றுக்கிழமை, சட்டையணியாமல், டெனிம் ஷார்ட்-டை அணிந்துகொண்டு தனது கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் உலாத்திக்கொண்டிருந்த டச், அன்றுகாலைதான் வாடகை கொடுக்கத் தவறியதற்காக பத்து கடைக்காரர்களை துரத்திவிட்டிருந்தார். மேலும் நான்கு புதிய வியாபாரிகளோடு இட ஒப்பந்தத்தில் கையெழுத்துமிட்டார் அன்று. அதில் ஒருத்தி பெண்களுக்கான மெய்நிகர் கழுத்தணிகளையும் சப்பாத்துகளையும் விற்பவள்….

ஹூக்ஸ்ட்ராட்டும் ஜெனத்தும் நேரில் சந்தித்ததில்லை; பேசிக்கொள்வதுமில்லை. ஹூக்ஸ்ட்ராட்டின் மனைவி மிஸஸ். ஹூக்ஸ்ட்ராட் கணினியின்முன் அமர்ந்திருக்கும் அவரரருகில் காலைவுணவை வைக்கிறார். அதை ஹூக்ஸ்ட்ராட் கவனிப்பதுகூட இல்லை. மின்திரையில் கடைத்தொகுதியில் குடிவந்திருக்கும் வியாபாரியோடு பேசிக்கொண்டிருக்கிறார்; தனது (அவதார) ஆண்நண்பனைப் பிரிந்திருக்கும் (அவதாரப்) பெண்நண்பிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கிறார்; தன் கடைத்தொகுதியில் தான் கட்டியிருக்கும் புதிய காப்பிக்கடையை மனைவி தனஜ்-க்கு சுற்றிக்காட்டிக்கொண்டிருக்கிறார். …

பத்துமணி நேரமாக மின் திரையைவிட்டு ஹூக்ஸ்ட்ராட் நகரவில்லை. ”இந்த மற்ற வாழ்க்கை பிரமாதம்தான்; யாருக்கும் நரைவிழாது, யாரும் உடல்பெருத்துவிட மாட்டார்கள்; இத்தகையவர்களோடு விடப்பட்ட மனிதர்களால் போட்டிபோடவே முடியாது” என்று மிஸஸ். ஹூக்ஸ்ட்ராட் சொல்கிறார். http://online.wsj.com/public/article/SB118670164592393622.html?mod=dist_smartbrief

மற்றவரும் நானாகி


இரண்டாம் வாழ்க்கை ”முதல்” என்பதாக கருதப்படுகிற வாழ்க்கையில் பொருண்மையான பாதிப்பு செலுத்துவது பற்றி ஆய்வுக்கட்டுரைகளும் செய்தித்தொகுப்புகளும் வெளியாகியிருக்கின்றன. இங்கிலாந்தில், மின்திரையில் ஒரு ஆணின் ஆண் அவதாரம் ஒரு வேசி அவதாரத்தோடு கொஞ்சியதில் தொடங்கி, பின்னர் அந்த ஆண் அவதாரம் இன்னொரு பெண் அவதாரத்தோடு அன்புகாட்டிப் பழகியதால் ”முதல்” வாழ்க்கையில் அந்த ஆணின் மனைவி மணவிலக்குக்கு முறையிட்டார். இரண்டாம் வாழ்க்கையில், குறிப்பிட்ட அந்த ஆணின் அவதாரம் அவர் மனைவியின் அவதாரத்தையே மணந்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது மணவிலக்கு குறித்த நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருந்தபோது, அந்த ஆண் ”புதிதாகப்” பழகிய பெண் அவதாரத்தின் ”சொந்தக்காரரான” பெண்ணைச் சந்தித்து திருமண நிச்சயமும் செய்துகொண்டார் (பார்க்க: http://www.time.com/time/world/article/0,8599,1859231,00.html) இதற்கு நகைமுரணென்று கொள்ளத்தக்கதொரு நிகழ்ச்சி ஜப்பானில் நடந்தது: மேப்பிள் ஸ்டோரி என்கிற மெய்நிகருலகத்தில் சொல்லாமல் கொள்ளாமல் (தன் பெண் அவதாரத்தை) மணவிலக்குசெய்துவிட்ட ஆண் அவதாரத்தை ஒரு பெண் அந்த ஆணின் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மின்திரையில் நுழைந்து கொன்றுவிட்டார். இதற்காக “முதல்” வாழ்க்கையில் அந்தப்பெண் தண்டனை தரத்தக்க கோர்ட் வழக்கைச் சந்திக்கவேண்டி வந்தது. (பார்க்க: http://www.switched.com/2008/10/24/online-divorce-leads-to-avatar-murder-real-jail-time/ ; http://www.huffingtonpost.com/2008/10/23/online-divorcee-jailed-af_n_137211.html)

”முதல்” வாழ்க்கையெனும் பிரதேசத்தில் மெய்நிகருலகச் செயல்பாடுகளின் சில அத்துமீறிய விதிவிலக்குகள் என்று இவற்றைத் தள்ளிவிடமுடியாது. அப்படிக்கருதுவது மெய்நிகருலகத்தின் ஆற்றலையும் வசீகரத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகிவிடும். அதேபோல “முதல்” வாழ்க்கையில் திருப்தியடையாதவர்களின் வடிகால் மெய்நிகருலக வாழ்க்கையென்கிற கருத்தும் போதாமையுடையதே. அவ்வாறு நினைக்கும்போது “முதல்” வாழ்க்கையின் குறையை ஈடுகட்டும் அல்லது அத்தோடு சமன்படுத்திக்கொள்ள உதவும் தடுப்புநடவடிக்கை ஏற்பாடாக மட்டுமே மெய்நிகருலகம் புரிந்துகொள்ளப்படும். டச் என்கிற ஹூக்ஸ்ட்ராட்-டின் அவதாரம் தசைவலுவோடு கட்டமைக்கப்பட்டது; மலைவளைவுகளிலும் வேகமாக மோட்டார் பைக் ஓட்டுகிற அவதாரம் அது. நீரிழிவு மற்றும் கணைய நோயால் வீட்டில் ஹூக்ஸ்ட்ராட் ஓய்வெடுத்துக்கொண்டபோதுதான் இரண்டாம் வாழ்க்கையில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார் என்கிற தகவல், வடிகால் கருதுகோளுக்கு ஒரு நியாயத்தைத் தரலாம். ஆனால் அவரது மின்திரை வாழ்க்கை அந்தக் குறிப்பிட்ட காலச்சூழ்நிலையின் பழக்கமாக மட்டுமே தொடங்கவில்லை அல்லது நின்றுபோய்விடவில்லை என்பதை கவனத்திலெடுக்க வேண்டும்.

இந்த இடத்தில்தான் போத்ரியார் குறிப்பிடுகிற யதார்த்தத்துக்கும் பிம்பக்காட்சிக்குமான இடைவெளியழிவு முக்கியமான அவதானமாக இருக்கிறது. வாகன முன்கண்ணாடியிலிருந்து மின்திரைக்கு நகர்ந்த மாற்றத்தோடுகூட யதார்த்தவாழ்வுக்கும் அதைப் பிரதிபலிக்கும் கண்ணாடிப்பரப்புக்குமான இடைவெளியும் காணாமல் போய்விட்டது. யதார்த்தவாழ்வை பிரதிநிதித்துவப்படுத்துகிற நாடகம், திரைப்படம் போன்ற நிகழ்ச்சிகளின் களனாக இருக்கும் தொலைக்காட்சியைவிட இணையத்தின் மின்திரை ஏன் இளைஞர்களை இன்றைக்கு அதிகமாக வசீகரிக்கிறது என்பதை இங்கே யோசித்துப்பார்க்கலாம். மேலும், தொலைக்காட்சியிலும் மெய்-யதார்த்தக்காட்சிகள் (reality shows) வேகமாக இடம்பிடித்து வருவதை இத்தோடு இணைத்துப்பார்க்கலாம். இடைவெளி அழிந்திருப்பது உருவாக்கியிருக்கிற பதற்றம்தான் காயசண்டிகையின் பெருவயிறுபோல, போதாது போதாது இன்னும் கொடு யதார்த்தம் என்று மெய்-யதார்த்தக்காட்சிகளைக் கேட்கிறதோ? ஒருவேளை அவ்வாறாக இருந்தால், காயசண்டிகையின் வயிறு இனிமேல் நிறையப்போவதில்லை. அவளின் வயிறு அடிப்பகுதியற்ற ஒரு சுழல்; மின்திரையும் உருக்கொண்டிருக்கிறது அந்தச் சுழலைப்போலவே, ஆகவே ஆழம் என்கிற பரிமாணத்தை மீறியிருக்கிறது அது: எப்பேர்ப்பட்ட மெய்-யதார்த்தக்காட்சியும் இனி ஆழத்தின் பரிமாணத்தை, அதாவது யதார்த்தத்துக்கும் பிம்பக்காட்சிக்குமான இடைவெளியை மீட்டெடுக்கப்போவதில்லை என்று கூறுவது அதீதமான அவநம்பிக்கையின்பாற்படாது.

பயணத்தில் வாகன முன்கண்ணாடியின் பிம்பக்காட்சியை அனுபவிக்க, உள்வாங்க மனித சுயம் அல்லது தன்னிலை என்ற ஒன்றுக்கு இடமிருந்தது. இன்றைக்கு மின்திரையில் அனுபவத்தைப் பெறுகிற இடத்தில் தன்னிலை என்ற ஒன்று இல்லை; மாறாக மின்திரையின் ஒரு அங்கமாக, மின்திரை சாத்தியமாக்கியிருக்கும் வலைப்பின்னலின் ஒரு கண்ணியாக மாறிவிட்டிருக்கிறோம். இயைந்துப் பங்கேற்கக் கோரும் இணையத்தின் மின்திரை உடனடி நடவடிக்கைகளைக் (பின்னூட்டம், லைக் போடுதல், பதில் ட்வீட் அனுப்புதல், உடனுக்குடனே நிலைத்தகவல்களைப் பகிர்தல் போன்றவை) பொழுதும் கேட்டபடியிருக்கிறது. கைத்தொலைபேசியிலும் இணையம்வந்துவிட்டபிறகு, இந்தக் கோருதல் இன்னமும் எளிமையாகவும் இயல்பாகவும் இயக்கம்கொண்டிருக்கிறது. எங்கும் எப்போதும் நம்மோடு கூடவரும் மின்திரைக்குமுன் வீடு/பொதுவெளி, அந்தரங்கம்/விளம்பரம், தனித்திருக்கும் நேரம்/கலந்திருக்கும் நேரம் போன்ற வகைமைகள் இறந்தகாலத்தினுடையவையாகிவிட்டன.

குறிப்பாக, மெய்நிகருலக வாழ்க்கையை “முதல்” என்று கருதப்படுகிற வாழ்க்கையின் பிரதிபலிப்பென்று குறைத்து மதிப்பிடமுடியாது. மெய்நிகருலகத்தின் அவதாரத்தின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகள் (மேலே விவரித்ததுபோல) ”முதல்” வாழ்க்கையை நடத்திச்செல்வதாக, அதன் வரைபடத்தைத் தீர்மானிக்கக்கூடியவையாக, உறவுகளின் எல்லைக்கோடுகளை நெறிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன. ஆகவே மெய்நிகருலக அவதாரத்தை ”முதல் வாழ்க்கை” என்ற ஒன்றில் பங்குபெறும் தன்னிலையின் பிரதிநிதியாக அல்லது உருவகமாக நாம் நினைத்துக்கொள்ளமுடியாது. மேலும் அவதாரம் என்பது எண்ணிக்கையில் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை, அது பலவாகவும் பலமாதிரியில் இயங்கமுடியும், இயங்குகிறது என்கிறபோது தன்னிலை x மற்றமை என்கிற வேறுபாட்டை நிறுவும் சட்டகம் காணாமல்போய்விடுகிறது. “உடனடியான” பிரசன்னத்தில், மின்திரைப்பரப்பில் பலப்பலவாகப் பெருகமுடியும் நிலையை ”ஒத்த சிற்றுருக்களான நான்கள் பல்கிப்பெருகும்” ஒரு வினோதச் சுயமோகநிலை என்று விவரிக்கிறார் போத்ரியார். துளி ரத்தம் நிலத்தில் விழுந்தவுடன் ஆயிரமாயிரமாகப் பெருகும் ரக்தபீஜனைப்போலப் ஒன்றேபோல் பல்கிப்பெருகும் நான்களின் களமாக, காளியின் நாக்குக்கு எட்டாத வனப்பாக மின்திரை; காலமும் வெளியுமோ எனில் கர்ஸரின் அசைவில் கட்டுண்டிருப்பவையாக.


”கடற்கரைக்குச் சென்ற டச்-சும் தனஜ்-ம் சலிப்படைகிறார்கள்…. இருவரும் டச்-சின் அலுவலகத்துக்குத் தம்மை தொலைப்பொருட்பெயர்வு செய்துகொள்கிறார்கள். … தனஜ் தன் நாய்க்குட்டியோடு விளையாடத் தொடங்குகிறாள்….டச் ஒரு கரோனா பியரைக் குடித்தபடி—நிஜவாழ்க்கையிலும் அவர் தேர்ந்தெடுக்கும் பியர் அது—தன் மேசைமுன்னால் அமர்கிறார். கணினியின் முன் அமர்ந்திருக்கும் மிஸ்டர் ஹூக்ஸ்ட்ராட் கணினியின் முன் அமர்ந்திருக்கும் தன் அவதாரத்தை சிறிதுநேரம் வெறித்துப் பார்க்கிறார்.” (http://online.wsj.com/public/article/SB118670164592393622.html?mod=dist_smartbrief)

கணினிமுன் அமர்ந்திருக்கும் நான்களில் ஒன்று கணினிமுன் அமர்ந்திருக்கும் நான்களில் ஒன்றை வெறித்துப்பார்த்தலன்றி நான் என்கிற இருப்பை உறுதிசெய்துகொள்ள வேறென்னதான் வழி?

உதவிய ஆக்கங்கள்:

Baudrillard, Jean. “The Ecstasy of Communication.” Trans. Bernard & Caroline Schutze. Ed. Sylvere Lotringer. New York: Semiotext(e), 1988.
Nunes, Mark. “Baudrillard in Cyberspace: Internet, Virtuality, and Postmodernity.” Style 29 (1995): 314-327.
மற்றும் கட்டுரைக்குள் சுட்டப்பட்டிருக்கிற பத்திரிகை / செய்தி இணையதளங்கள்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 2)

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 1)

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 2)

(காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை இங்கே பகுதிகளாகப் பதியப்படுகிறது)

உருவகத்திலிருந்து பாவனைக்கு

பயணத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுகிறது இணையமும். பரந்த உலகத்தை இணைத்தல் என்பது பயணத்தைப் போலவே இணையத்தின் செயல்கூறாகவும் இருக்கிறது. பயணத்தைப் போலவே இணையத்தின் மின்திரையும் உலகத்தைத் துழாவியாராய்வதற்கான கருவியாகவும் இடமாகவும் இருக்கிறது (மார்க் நியூன்ஸ்). புவியியல்பயணம்சார் பிரயோகங்கள் பலவும் இணையம் சார்ந்தும் உபயோகிக்கப்படுகின்றன (“site map,” “navigation,” “explorer,” “(internet) speed,” “user address” என்பவைபோல). அதே நேரத்தில் மின்திரைப் பயணம் (screen travel) மீ-யதார்த்தச் (hyperreal) சுழலொன்றுக்கு நம்மை நகர்த்திவிடுகிறது. உதாரணத்துக்கு: “visit this (web)site,” ”jump page,” “website jumping,” “kill this page” போன்ற சொல்லாடல்கள் பௌதீகத்தோடு சேர்ந்த பருண்மையான உடலியக்கம் என்பதை மின்திரை சார்ந்த பாவனைச் செயல்களாக (acts of simulation) மாற்றி விடுகின்றன. யதார்த்தத்திலிருந்து மீ-யதார்த்தத்துக்கான நகர்வை இந்தப் பாவனைச் செயல்கள் சுட்டிவிடுகின்றன.

மின்திரைப் பயணத்தோடு தொடர்புறுத்தி யதார்த்தத்திலிருந்து மீ-யதார்த்தத்துக்கான நகர்வை போத்ரியார் முன்வைக்கும்போது ஒரு முக்கியமான அழித்தல் செயலோடு இந்த நகர்வு தொடர்புகொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறார். இணையம் உலகின் வெவ்வேறு மூலைகளுக்கிடையிலான தூரத்தை அழிக்கிறது என்பது எளிதாகப் புரிவதுபோல் இருக்கிறது. ஆனால் மின்திரையில் இன்னொரு அழித்தலும் நடக்கிறது: உருவகத்துக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளி என்பது அழிபடுவதே அது. இந்த அழித்தலைப் புரிந்துகொள்ள முயலும்போது இன்று தொழில்நுட்பத்தால் சாத்தியப்பட்டிருக்கிற ”தகவல் பெருநெடுஞ்சாலை” என்பதைப் பற்றிச் சொல்லவேண்டும். எப்படி உலகின் வெவ்வேறு பிராந்தியங்களிலும் நாடுகளிலும் கட்டப்பட்டிருக்கிற நெடுஞ்சாலைகள் மனிதர்களின் அக/புற வாழ்க்கையை ”நவீனமாக” மாற்றினவோ அதேபோல தகவல் பெருநெடுஞ்சாலைகளும் மனிதவாழ்க்கையில் வேறொரு மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. இந்த மாற்றத்தை (மோட்டார் வாகனத்தின்) முன்கண்ணாடியிலிருந்து (இணையத்தின்) மின் திரைக்கு என்பதாகக் குறிக்கிறார் போத்ரியார். ”நவீனவுலகின்” மோட்டார் வாகனத்தின் முன்கண்ணாடி, பொருண்மையான பௌதீகவுலகின் காட்சிகளை பிம்பங்களாக உருவகப்படுத்துகிறது. இந்த பிம்பங்களைக் கண்டும் கணித்தும் வாகனத்தை ஓட்டுபவருக்கு இயக்கமும் நகர்வும் தம்மைக் காட்சியனுபவங்களாகவே தருகின்றன.

பௌதீகப் புறவெளி என்கிற யதார்த்தத்தின் உருவகம் பிம்பமாகவேகூட இருக்கட்டும், ஆனாலும் “நவீன வாழ்க்கையில்” காட்சியனுபவம் என்பதற்கு ஒரு முக்கிய இடம் இருந்தது; அந்தக் காட்சியனுபவத்தைப் பெறுகிற, தன் உணர்வுகளை கனவுகளை எண்ணங்களையெல்லாம் அந்த அனுபவத்தில் இட்டுப்பார்க்கும் அடையாளப்படுத்திப்பார்க்கும் சுயம் அல்லது தன்னிலை என்பவற்றுக்கும் இடமிருந்தது. இந்தக்காட்சிகளெல்லாம் இன்றைக்கும் இருப்பதுபோலத் தோன்றினாலும், வேகமாக மறைந்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கு காட்சியின் கண்ணாடிப் பிரதிபலிப்பு என்பதை பிரதிபலிப்புத்தன்மையில்லாத மின் திரை பதிலீடுசெய்துகொண்டிருக்கிறது. ”காட்சியும் கண்ணாடியும் நகர்ந்து திரைக்கும் வலைப்பின்னல்களுக்கும் இடம்கொடுத்துவிட்டன,” எங்கும் இயல்பாக வியாபித்திருக்கும் மின்திரை-க்கு முன் யதார்த்தம் ஒரு சுட்டுப்பொருளேயில்லை, அதாவது யதார்த்தம் உருவகமாக, ஒரு காட்சிப்பிம்பமாகக்கூட இனிமேல் இல்லை; பிம்ப உருவகத்துக்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளியை அழித்துவிட்ட மின்திரையுலகில் நிகழ்த்தப்படுகிறது நம் வாழ்க்கை என்றும் போத்ரியார் குறிப்பிடுகிறார். இது எப்படி நடக்கிறதென்று கட்டுரையின் போக்கில் பார்ப்போம்.

காணல்போலும் வாழ்தல்

இணையம் தூரத்தை அழிப்பதுபோலத்தான் தெரிகிறது. அவரவர்களின் நேரத்தில் சான் பிரான்சிஸ்கோவிலும் திருத்துறைப்பூண்டியிலும் இருந்தபடி உலகின் பல இடங்களில் இருப்பவர்களோடு, இருப்பவைகளோடு இருபத்திநான்குமணி நேரமும் உடனடித்தொடர்பில் பேச்சாகவும் எழுத்தாகவும் பிம்பமாகவும் இருக்கமுடிகிறது. இடங்களின் மத்தியிலான தொலைவு என்பது அழிந்தேபோய்விட்டதுபோல. ஆனால், நேரச்செலவெடுக்காமல் பௌதீக ரீதியான பெருந்தொலைவுகளை இப்படி “உடனடி” என்கிற உள்வெடிப்பின் (implosion) மூலம் குலைத்துவிடுகிற மீ-யதார்த்தப் பரப்பின் மெய்நிகருலகம் (virtual world), தொலைவு என்பதை வேறுவகையில் உருவாக்குகிறது; முன்னெப்போதுமில்லாத வகையில், கடக்கக்கூடிய ஒன்றாகவும் அதே நேரத்தில் கடக்கவேமுடியாததாகவும் தொலைவு ஒன்றை அது வடிவமைக்கிறது. ஒருதளத்தில் இந்தத் தொலைவு எங்கெங்கிலும் ஊடுருவும் அண்மையையும் இன்னொருதளத்தில் இயலாமையையும் ஒருங்கே முன்வைக்கிறது. பௌதீக உலகின் யதார்த்த தூரங்களை தொலைத்துவிட்டாலும், மின்திரையை உடலால் கடந்துசெல்லவே முடியாது. ”மின்திரை மெய்நிகருலகம், ஆகவே இணைக்க-கடக்கமுடியாத ஒன்று” என்று இந்த நிலையை விவரிக்கிறார் போத்ரியார்.

திருவனந்தபுரத்தில் மூன்றுவருடங்களுக்கு முன்பாக வெப்காம் முன்னே நிகழ்த்தப்பட்ட தற்கொலை நினைவிருக்கலாம். டில்லியிலிருக்கும் தன் பெண்நண்பியோடு சாட்-டில் பேசிக்கொண்டிருக்கும்போதே, கணினியின் கேமராவை அறையின் கூரையை நோக்கிப் “பார்க்கும்படி” அமைத்துவிட்டு மின்விசிறியில் தூக்குமாட்டிக்கொண்டார். ஒரு இளைஞர். பிம்பமாக ”கடைசிவரையில்” தொடர்புறுத்தலில் இருக்கமுடிந்திருக்கிறது. ”கடைசிவரையில்” என்று சொல்வது தவறு; “கடைசி”க்கு மேலும், இறப்புக்குப்பிறகும் இளைஞரின் கணினி தொடர்புறுத்தலிலேயே பிணைந்திருக்கிறது. இறப்பையும் தாண்டி தொடர்புறுத்தலின் மின் திரையில் ததும்பிவழிகிற அவரது பிம்பத்தின் பிரசன்னம், இருப்பு; எதிர்முனையில், இளைஞரின் பிம்ப இருப்பை அப்படியே மறைவில்லாமல் ஊடுகாண்நிலையாக பெற்றபடியிருக்கும், ஆனால் போராடமுடியாத, செயல்படமுடியாத பெண்நண்பியின் உடல்.

மின்திரையில் முன்னால் இயலாமையோடிருக்கும் உடல் இன்றைய இணையத் தொழில்நுட்பத்தால் அந்நியப்படுத்தப்பட்ட உடல் என்று முடிவுகொள்வதுதான் எத்தனை எளிது? ஆனால் போத்ரியார் இந்நிலை அந்நியமாதல் அல்ல, பொழுதும் தொடர்புறுத்தலின் பரவசத்தில் இருக்கும் நிலை என்று அடையாளம் காண்கிறார். பொருட்களின் காட்சி வியாபித்திருந்த நுகர்வோர் சமுதாயம் என்பதில் இருந்த அந்நியமாதல் இன்று இல்லை; இன்றைக்கிருப்பது தொடர்புறுத்தலின் பெருக்கம் என்கிறார். நேரத்திலும் வெளியிலும் அந்தரங்கம்-பொது என்கிற வேறுபாட்டைக் களைந்துவிட்ட, ரகசியத்தின் வசீகரத்தைக் குலைத்துவிட்ட தொடர்புறுத்தலின் பரவசத்தை போத்ரியார் ”ஆபாசம்” என்றே தொடர்ந்து குறிப்பிடுகிறார். உடலால் மீறமுடியாத மின்திரை, ஆனாலும் இடையறாது மெய்நிகர் பரப்பில் உந்துதல்களோடும் உணர்வெழுச்சிகளோடும் மனிதர்களால் அலைய முடிகிறது, “தன்னைச் சுற்றுக்குவிட முடிகிறது” என்கிறபோது இப்படிச் சுற்றுக்குவிடப்படுவது என்ன என்கிற கேள்வி எழுகிறது. உடலைப் புறக்கணித்துவிட்ட, விலக்கிவிட்ட சுயம்தான் இப்படி பரவித் திரிகிறது என்று நாம் பதில் அளிக்கலாம். ஆனால் இப்படிச் சொல்லும்போது சுத்த சுயம்புவான மனித சுயம், இறையாண்மையோடு செயல்படும் சுயம் என்று ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். ஆனால் இப்படி சாரமான, ”தன்” செயல்பாடுகளுக்கு முந்தைய சுயம் என்ற ஒன்றைக்கொள்வதில் அர்த்தம் இருக்கிறதா என்று கேட்கும்வகையில் அமைந்திருக்கிற மெய்நிகருலகம் சார்ந்த சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.


(தொடரும்)

தொடர்புடடைய முந்தைய பதிவு:

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 1)

இணையச்சுழலில் சுய(மற்ற) அடையாளங்கள் (பகுதி 1)

(காலச்சுவடு ஜனவரி 2012 இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரை இங்கே பகுதிகளாகப் பதியப்படுகிறது)

”அந்நியமாதலின் நாடகத்தின் அங்கமாய் இனி நாம் ஒருபோதுமில்லை: நாம் தொடர்புறுத்தலின் பரவசத்தில் வாழ்கிறோம்” (ழான் போத்ரியார்)

காலமென்றே ஒரு புனைவும்
காட்சியென்றே சில நினைவும்

காலங்காலமாய் நேசிப்பதை அல்லது வேண்டியதை நோக்கிய பயணம் பேச்சிலும் எழுத்திலும் உலகம்முழுதும் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒன்று. தமிழிலக்கியத்தை எடுத்துக்கொண்டால் வீடுநோக்கித் தேரை வேகமாகச் செலுத்தும் தலைவியைப் பிரிந்திருந்த தலைவன்; மெய்யெனத் தாம் கொள்ளும் பரம்பொருளைத் தேடி, காண தலம் தலமாக யாத்திரிகர்களாக அலையும் பக்திக்கவிஞர்கள்; நவீன இலக்கியப்புனைவுகளில் ஞானம்/காதல்/உண்மை/பொருள் போன்றவை நாடி புவியியல் பரப்புகளில் பயணிப்பவர்கள்; முடிவிலா இந்த வரிசையின் பலவகைப் பயணிகளையும் பயணங்களையும் நம்மால் சந்திக்க முடியும். அதேபோல இந்தியாவின் பலபகுதிகளிலும் வழங்கிவருகிற மகாபாரத, ராமாயணக் கதைகளிலும் கதையோட்டத்தோடு கலந்திருக்கும் முக்கியமான கூறு யாத்திரை அல்லது பயணம். இலக்கியத்திலும் இலக்கியம்தாண்டியும், நோக்கம் எதுவாக இருந்தாலும் பயணத்தின் அடிப்படை உடலியக்கம், நகர்வு; இந்த உடலியக்கமும் நகர்வும் காலத்தினூடாகக் களம்கொள்ளுகிறது புறவெளியில். (கனவு அல்லது மனோரதப் பயணங்கள், சூஃபிக்களும் சித்தர்களும் முன்வைத்த அக-யாத்திரைகள் போன்றவற்றை இங்கே சற்றுத் தள்ளிவைக்கலாம்; அதேபோல யாத்திரைக்கும் பயணத்துக்குமான பொருண்மையான வேறுபாடுகளையும்கூட.) இன்று இணையத்தின் வாயிலாக மனிதர்கள் உடனடித் தொடர்பிலிருக்கக்கூடிய நிலையில் உடலியக்கப் பயணத்தின் முக்கியத்துவமும் பரிமாணமும் மாறிவிட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் உறவுகளின் பின்னணியில் மனிதசுயத்தின் அடையாளம் என்ன என்பதைப் பார்ப்போம்.

சென்றவாரம் புத்தமரபுகள் குறித்த என் வகுப்பில் சம்ஸ்கிருத நூலான திவ்யாவதனா-விலிருந்து அசோகருக்கும் பெரியவர் உபகுப்தருக்குமான பௌத்தத்தலங்களைப் பற்றிய உரையாடலை வாசித்துக்கொண்டிருந்தோம். அசோகரின் விருப்பப்படி உபகுப்தர் அவருக்கு புத்தர் வாழ்ந்த இடங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்: லும்பினிக் காடு: இங்கேதான் ஆசிர்வதிக்கப்பட்ட புத்தர் போதிசத்துவராகப் பிறந்தார்; கபிலவஸ்து மாளிகை; இங்கேதான் பிறந்தவுடன் போதிசத்துவர் கொண்டுவரப்பட்டார்; இக்கோயில் சாக்கியகுலத்தின் புராதனக் கோயில்: குழந்தை போதிசத்துவரைக் கண்டவுடன் சிலையான கடவுளர்கள் அவர் காலில் விழுந்தனர்; பெண்களின் இடமிது; இங்கேதான் மகாபிரஜாபதியால் அவர் வளர்க்கப்பட்டார்; அந்தக் வாயிலைப்பாருங்கள்; இதன் வழியாகத்தான் அவர் நள்ளிரவில் கபிலவஸ்துவைப் பிரிந்து தம்மத்தின்வழி ஏகினார். இப்படி ஒவ்வொரு இடமாகக் அறிமுகப்படுத்துகிறார் உபகுப்தர். போதிசத்துவர், ஞானத்தின் விழிப்பைப் பெற்ற இடமான கயாவின் போதிமரத்தையும் தம்மத்தைப்பற்றிய முதலுரை நிகழ்த்திய சாரநாத் ரிஷிபடானத்தையும் பிம்பிசாரருக்குத் தம்மம் போதித்த இடத்தையும் ஒன்றொன்றாகக் காட்டிக்கொண்டுவரும் உபகுப்தர் கடைசியாகக் குஷிநகரியைக் காட்டுகிறார், புத்தர் பரிநிர்வாணநிலை (உலகைப் பிரிதல்) அடைந்த இடம் இதுதான் என்று. அதுவரை ஒவ்வொரு இடத்தையும் கண்டு பிரமிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்த அசோகர் கடைசி விவரணையைக் கேட்டவுடனேயே துக்கம்தாளாமல் மயங்கிச்சாய்கிறார்.

இப்பகுதியை வகுப்பறையில் வாசித்துக் கொண்டிருந்தபோது பல்வேறு இடங்களை பயணத்தில் காணும்போது உருவாகும் மனஎழுச்சிகள் பற்றிய உரையாடலுக்கு நகர்ந்தோம். ”பாருங்கள், இதுதானே சாரநாத். இருந்த இடத்திலிருந்து நகராமல் உபகுப்தர் துணையில்லாமல் சென்றுவிட்டேன் நான்.” என்றார் ஒரு மாணவர், தன் ஐ-போட் திரையைக் காட்டியபடி. “நீ மட்டுமா? நானும் போகிறேன், ஆனால் நான் புத்தகயாவுக்கு” என்று இன்னொரு மாணவர் தன் கணினியில் புத்தகயா பற்றிய யூ-ட்யூப் காணொளிக்குச் சென்றார். ”அதெல்லாம் இருக்கட்டும், அசோகர் குஷிநகரியில் மூர்ச்சையடைந்ததைப்போல உங்களின் எந்தப் பயணத்திலாவது எந்த இடத்திலாவது உணர்ச்சிவயப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். என் மாணவர்கள் பலரும் கோடைவிடுமுறைகளில் குடும்பத்தோடோ, நண்பர்களோடோ, வெளிநாட்டுக் கல்விச்சுற்றுலாவுக்காகவோ ஆசியாவுக்கு ஐரோப்பாவுக்கும் சென்று வந்தவர்கள். ஆனாலும், என் கேள்விக்கு எதிர்மறையான பதிலே அவர்களிடமிருந்து கிடைத்தது. உரையாடலில் ஒரு மாணவர் சொன்னது கவனத்துக்குரியது: “வசந்தகாலத்தில் என் பெண்நண்பியோடு கிறீஸ் சென்றிருந்தேன். ஏதென்ஸ், டெல்பி, கொரிந்த், பல இடங்கள் பார்க்கத் திட்டம் போட்டிருந்தோம். சென்றோம். ஆனால் எனக்கும் நண்பிக்கும் மனஸ்தாபம் வந்துவிட்டது. எங்கே போனாலும் காட்சிகளை படமெடுத்து உடனுக்குடனே தன் முகநூல்பக்கத்தில் பகிர்ந்துகொள்வதற்கும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதற்குமே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. உண்மையில் நாங்கள் இருவரும் “ஒன்றாக” எதையும் நாங்கள் பார்த்து அனுபவிக்கவில்லை. போன இடங்களில் எல்லாவற்றிலும் நான் பார்த்தது எப்போதுமே திறந்திருக்கும்-முகநூல்-பக்கத்துடனான-அவளைத்தான். அதன்பின் பிரிந்துவிட்டோம்.”

மறதி--நினைவு என்ற இருமையில், காலப்போக்கின் இயல்பான மறதியை எதிர்த்து நினைவின் பக்கம் விசுவாசத்தோடு நிற்பதற்காக என்று சொல்லி நம்மால் உள்வாங்கப்பட்ட புகைப்படம், காணொளி போன்றவை இன்று இணையத்தின் ”உடனடித்தன்மை” என்பதோடு நீரும் பாலுமாக கலந்து நிற்கின்றன. ”நினைவு கொள்ளுதல்” என்கிற செயல்பாட்டின் ஆக அடிப்படையான கால அவகாசம் அர்த்தம் திரிந்துவிட்டது. ஒரு காட்சியைக் காணும்போதே புகைப்படமாக, காணொளியாக அது பகிரப்படும்போது, சொல்லப்போனால் பகிர்வது என்னும் உந்துதலே காட்சியையும் காண்பவரையும் பிணைக்கும்போது, அனுபவம்--நினைவு என்ற வகைகளின் எல்லைகள் கலைந்துவிடுகின்றன; இந்த வகைகளே செல்லாமலாகிவிடுகின்றன. கூடவே இனிமேல் நாம் பெறுப்போகிற அனுபவம் என்பதே நாம் கொள்ளப்போகின்ற நினைவாக, ஆகவே “ஏற்கெனவேயானவையாக” இருந்துவிடுமென்கிற உணர்வு மேலோங்குகிறது.

பழைய தமிழ்ப்படங்களில் மூர்ச்சை தெளிந்தபின் கதாநாயகிகள் கேட்கும் “நான் எங்கே இருக்கிறேன்?” என்ற கேள்வி இன்று இணையதளத்தில் இணைவிலிருக்கையில் (online) வேறொரு தத்துவார்த்தப் பரிமாணத்தைப் பெறுகிறது. ”இடம்” இந்தக்கேள்வியில் ”நான்” என்கிற தன்னிலையின் இடமும்கூட. வேற்றுநாட்டு அனுபவத்துக்காக தன் ஆண்நண்பனுடன் கிறீஸ் சென்ற பெண் உண்மையில் எங்கே இருந்தாள் என்று வினவினால், இந்த “எங்கே” புவியியல் பரப்பில் என்பதுமட்டுமன்றி தன்னிலையின் இடத்தையும் இருப்பையும் தன்மையையும் பற்றிக் கேட்பதாகவும் மாறுகிறது.


(இன்னும் இருக்கிறது)