Wednesday, April 6, 2016

ஜேம்ஸ் டேட்-டின் குரங்குக்குக் கவிதையெழுதக் கற்றுத்தருவதைப் பற்றிய கவிதை பற்றிய கவிதை


ஜேம்ஸ் டேட்-டின் கவிதையில்
அந்தக் குரங்குக்கு அவர்கள் கவிதையெழுத
கற்றுக்கொடுத்தபோது
பெரிய சிக்கலொன்றும் இல்லை
குரங்கை நாற்காலியில் கட்டிப்போட்டார்கள்
ஒரு பென்சிலை அவன் கையைச் சுற்றிக் கட்டினார்கள்
(காகிதம் ஏற்கெனவே வைக்கப்பட்டுவிட்டது)
டாக்டர் புளூஸ்பைர் குரங்கின் தோளின் மேல் சாய்ந்து
அவன் காதுக்குள் கிசுகிசுத்தார்
”அங்கே அமர்ந்திருக்கையில்
கடவுளைப்போலிருக்கிறாய்
ஏன் நீ ஏதாவது எழுத முயற்சிக்கக்கூடாது?”
மன்னியுங்கள் ஜேம்ஸ் டேட்
(எனக்குத் தெரிந்த)
அந்தப் பூனைக்குட்டியை
நாற்காலியில் கட்டிப்போட்டார்கள்
மடிக் கணினியை அவள்முன் வைத்தார்கள்
நாற்காலியின் பின்னால் ஏற்கெனவே
வந்துநின்றுவிட்ட வாசகர்
அவளிடம் கோரிக்கை வைத்தார்
”அங்கே அமர்ந்திருக்கையில்
அச்சுஅசலாகச் சூனியக்காரி நீ
ஏதும் செய்வினை செய்யக்கூடாதா?”
பூனைக்குட்டி தட்டச்சு செய்யுமென்பது
உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
(James Tate, "Teaching the Ape to Write Poems")

No comments: