Saturday, October 2, 2010

என் கவிதைகளை எடுத்த வேசிக்கு: சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி (12)

சிலர் சொல்கிறார்கள் தனிப்பட்ட கழிவிரக்கத்தைக் கவிதையிலிருந்து தள்ளிவைக்க வேண்டும்,
நுண்மமாக இரு என்று, இதில் ஏதோ காரணம் இருக்கிறதுதான்,
ஆனால் ஜீசஸ்;
பன்னிரெண்டு கவிதைகள் போயே போயின, என்னிடம் கார்பன்காப்பிகள் இல்லை,
என்
ஓவியங்களைக்கூட நீ வைத்திருக்கிறாய்:
அவற்றில் ஆகச்சிறந்தவற்றை.
ஒடுக்குவதாக இருக்கிறது இது.
அந்த மற்றவர்களைப்போல என்னையும் நசுக்க நினைக்கிறாயா?
ஏன் நீ என் பணத்தை எடுக்கவில்லை?
குடித்துவிட்டுப் மூலையில் நோயுற்றுத் தூங்கும் கால்சராய்களிலிருந்து
அவர்கள் சாதாரணமாக எடுப்பதைப்போல.
அடுத்த முறை என் இடது கையை எடுத்துக்கொள், அல்லது ஒரு ஐம்பதை,
ஆனால் என் கவிதைகளை அல்ல;
நான் ஷேக்ஸ்பியர் அல்ல, ஆனால் சிலசமயம் யாரும்
அப்படி எளிதாக இருக்க முடியாது இனியும், நுண்மமாகவோ வேறெப்படியோ;
எப்பொழுதும் பணம் இருக்கும்
வேசிகளும் குடிகாரர்களும் இருப்பார்கள்
இங்கே கடைசி குண்டு விழும்வரை,
ஆனால், கால்மேல் கால் போட்டபடி கடவுள்
சொன்னதைப்போல:
தெரிகிறது, நான் படைத்திருக்கிற ஏராளமான கவிஞர்கள் அளவுக்கு
கவிதையைப் படைக்கவில்லை.

No comments: