Sunday, January 16, 2011

”கவிதை வாசிப்பு என்பது ஒரு பறத்தலாகவும் அதே சமயம் ஒரு புதைவாகவும் இருக்க வேண்டும்:” உலோகருசி வெளியீட்டு நிகழ்வில் திலீப் குமார்

(புத்தகக் கண்காட்சியில் 10 ஜனவரி 2011 அன்று உலோகருசி கவிதைத் தொகுப்பை வெளியிட்டு எழுத்தாளர் திலீப் குமார் பேசியதன் உரைவடிவம்)


உலோக ருசி: ஓரு சிறு குறிப்பு

பெருந்தேவியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். சொல்லப்போனால் அவர் கவிஞராக உருவாகிக்கொண்டிருந்தை நான் கூட இருந்தே பார்த்து வந்துள்ளேன். இன்று அவருடைய ”உலோக ருசி” என்கிற மூன்றாவது தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அவரது முதல் தொகுப்பான தீயுறைத்தூக்கத்திலிருந்து தொடர்ந்து பார்த்து வரும் போது அவரது கவிதைக்ளின் உருவத்திலும் உருவாக்கத்திலும் படிப்படியான என்றாலும் ஒரு சீரான செறிவு தென்படுகிறது. முந்தைய கவிதைகளில் காணப்பட்ட இறுக்கம் குறைந்து ஒரு வித நீர்மையும் பெருக்கும் மிளிர்வதைப் பார்க்க முடியும். பெருந்தேவியின் கவிதைகளின் இன்னும் ஓரிரு முக்கிய அம்சங்கள்:
* பெருந்தேவி ஒரு நவீனக் கவிஞராக இருந்தாலும் துவக்கம் முதலே தமிழ் செவ்வியல் கவிதையின் எதாவதொரு அம்சத்தை தன் கவிதைகளில் மிக இயல்பாகக் கலந்து எழுதக் கூடியவராக இருந்திருக்கிறார். அதே போல உலகக் கவிதைகளில் அவருக்கு உள்ள வாசிப்பின் காரணமாக அவற்றின் கூறுகளையும் தன் கவிதைகளில் அவரால் பிணைக்க முடிந்துள்ளது.
* பொதுவாக, கவிதை என்பது சொல்லில் பிறந்து பொருளை அடைகிறது. இங்கு பொருள் என்று சொல்லப்படுவது அதன் சம்பிரதாயமான பொருளில் அல்ல. கவிதையில் பொருள் என்பது பாடுபொருளின் எல்லைகளுக்கப்பால் பல திறப்புகள் கொண்ட பொருளாகச் செயல்படுகின்றது. ஒரு உரைநடைப் படைப்பில் சொல்லின் பொருள் என்பது அப்படைப்பின் மற்ற விவரங்களின் சேர்க்கையால் அது ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயமான நிலையில் கூட சிறைபட்டுவிடக்கூடியது. ஆனால் கவிதையில் வரும் சொல்லுக்கு ஏராளமான சிறகுகள் உண்டு. அதற்கென்று ஒரு பரந்த வானம் உண்டு. பெருந்தேவியின் கவிதைகளில் இக்கூற்று மிக சிறப்பாகத் துலக்கம் கொள்கிறது.

சமீப வருடங்களில் தமிழில் ஏராளமான பெண் கவிஞர்கள் எழுதி வருகிறார்கள். அவர்களின் கவிதைகளை வகைப்படுத்துவதற்கென்றே சில முறைமைகளும் உருவாகிவிட்டிருக்கின்றன. (இத்தகைய வகைப்பாட்டிற்கு அந்தக் கவிஞர்களே ஒத்துக்கொள்ளாவிட்டாலும் கூட இது எப்படியோ நிகழ்ந்து விடுகின்றது). இதற்கு ஒரு வரலாற்றுத் தேவையும் பொருத்தப்பாடும் இருந்தாலும், இவை காலப்போக்கில் தமிழ்க்கவிதையின் ஆதார நீரோட்டத்தோடு இணைந்துகொள்ளக்கூடிய இலக்கியச் சிறப்புகளை கொண்டிருக்கவேண்டும். பொதுவாக, தரப்புகள், சார்புகள், நிலைப்பாடுகள் இவற்றின் அடிப்படையில் உருவாகும், உருவாக்கப்படும் இலக்கியப் படைப்புகளுக்கு ஆயுள் குறைவு. பெருந்தேவியைப் பொறுத்தவரை, அவரது உடனடியான பறிமாறல்களுக்கும் / உரையாடல்களுக்கும் தேவையான அரசியலும் நிலைப்பாடும் காணப்பட்டாலும் கூட, கூடவே இந்த தற்காலிக வரம்புகளைக் கடந்து செல்லும் பண்புகளைக் கொண்டவையாக உள்ளன. இது மிக முக்கியமான விஷயமென்று நான் கருதுகிறேன். எந்த ஒரு எழுத்தும் நிரந்தரமானதல்ல. ஆனால், நிரந்தரத் தன்மையை நோக்கிய பாய்ச்சல்களும் அவற்றில் இல்லாமல் இருக்க முடியாது.

பெருந்தேவியின் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைத் தனித்தனியாகக் குறிப்பிட்டு பேசுவதை விட, தொகுப்பாக இவை தரும் நிறைவுக்கான தர்க்கத்தையே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். ஒரு கவிதையின் வாசிப்புப் பயணத்தில் அது நாம் ஆழ்மனதுக்குள் மூழ்கி எழ வசதியான பல தருணங்களையும் பல வழிகளையும் கொண்டிருக்க வேண்டும். கவிதை வாசிப்பு என்பது ஒரு பறத்தலாகவும் அதே சமயம் ஒரு புதைவாகவும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பெருந்தேவியின் கவிதைகளில் இந்த அம்சங்கள் மிக அலாதியான ஒரு வீச்சோடு உருக்கொண்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை வெளியிட வாய்ப்பு தந்த பெருந்தேவிக்கும், காலச்சுவடு கண்ணனுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழத்துகளும்.

திலீப்குமார்
சென்னை.





(புகைப்படத்தில் இடமிருந்து வலம்: கண்ணன், திலீப் குமார், அம்பை, பெருந்தேவி. கவிதைத் தொகுப்பைப் பிரசுரம் செய்த காலச்சுவடு பதிப்பகத்தார், வெளியிட்ட திலீப், முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட அம்பை மற்றும் வருகை தந்திருந்த நண்பர்களுக்கு என் நன்றியும் அன்பும். அதேபோல, கவிதைகளுக்கு விரிவான பின்னுரையொன்றை நல்கியிருக்கும் ஜமாலனுக்கும் அட்டையை வித்யாசமாக வடிவமைத்துக் கொடுத்திருக்கும் பயணிக்கும் என் அன்பு கலந்த நன்றி: பெருந்தேவி)

3 comments:

anujanya said...

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. சென்னையில் இப்போது இல்லை என்னும் சோகமும். நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். வாழ்த்துகள்.

நீங்கள் அனுமதித்தால் Buzz இல் பகிர்ந்து கொள்வேன்.

அனுஜன்யா

Perundevi said...

வாழ்த்துகளுக்கு நன்றி, அனுஜன்யா. பதிவைத் தாராளமாக பகிர்ந்துகொள்ளுங்கள்.

அப்புறம், உலோகருசி-யை வாசித்துவிட்டு (நேரமிருக்கும்போது) எனக்கு எழுதுங்கள்.
மிக்க அன்புடன்
பெருந்தேவி

hai said...

The graphic design for your book was interesting and intriguing. Still the design was not correctly done. I think the name of the book and author's name should always appear always on top half of the book. Otherwise they get obscured when stacked on the shelves or arranged on a table.
Seetharaman