Saturday, March 19, 2011

ஜப்பான் அணு உலைக் காட்சிகளின் எண்வகை மெய்ப்பாடுகள் (1)

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப (தொல்காப்பியச் சூத்திரம்)

வாழ்க்கையே அணு உலையாலே நாமெல்லாம் அதனாலே
உடலுருகிச் சாய்ந்திடுவோமே வாழ்நாளிலே (ரீ மிக்ஸ்)

மெய்ப்பாடு 8: அழுகை (இழத்தல் வகை)

மார்ச் 19, 2011. டோக்கியோ மின்சக்தி நிறுவனத்தின் (டெப்கோ) நிர்வாக இயக்குனரின் கண்ணீர்: சூடு அதிகமான அணு உலைகள், எரிபொருள்கள் மக்களுயிரைப் பறிக்கவல்லவை என்று ஜப்பான் ஒத்துக்கொண்டு, கதி்ர்வீச்சு அபாயத்தை அளவுகோலில் ஐந்துக்கு உயர்த்தியிருக்கும் வேளையில் அகியோ குமிரி அழுதார்.

பார்க்க:

http://www.dailymail.co.uk/news/article-1367684/Nuclear-plant-chief-weeps-Japanese-finally-admit-radiation-leak-kill-people.html

அழுகை மக்களுக்காகவா? டெப்கோ ஊழியர்கள் கதிரியக்கத்தைக் கட்டுக்குக் கொண்டுவராமல் உலை இடத்தைவிட்டு நீங்கக்கூடாது என்று ஜப்பானிய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டதற்கா? இப்போது மக்கள் மத்தியில் டெப்கோ போன்ற அணு உலை நிறுவனங்களைப் பற்றி அவநம்பிக்கை பெருகிக்கொண்டிருப்பதால் இழக்கப்போகும் வியாபார லாபங்களுக்கா?

வரலாற்றில் இதற்கு முன்பு அணுசக்தி மற்றும் ஜப்பான் தொடர்பாக ஒருவர் கண்ணீர் விட்டிருக்கிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் அவர். இரண்டாம் உலகப்போரின் பெரும் திருப்புமுனையாக, ஜப்பான் நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி நாசமாக்கிய போது தன் அறிவியல் கோட்பாடு இவ்வாறு கொண்ட உயிர்ப்பலிகளுக்காக ஐன்ஸ்டீன் அழுததாக சொல்லப்படுகிறது. 1905-ஆம் வருடம் அவர் எழுதிய கட்டுரை அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்புக்குப் பெருமளவில் உதவியது; அதேபோல அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்-டுக்கு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அவர் எழுதிய கடிதமே அமெரிக்காவின் அணுகுண்டு தயாரிப்புக்கு ஊக்கமளிப்பதாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மெய்ப்பாடு 7: உவகை (கேளிக்கை)

ஜப்பானியர் ஒருவரால் எடுக்கப்பட்டு கீச்சிலும் முகநூலிலும் பெருவாரியாகப் பகிரப்பட்டிருக்கும் ஒரு யூ-ட்யூப் வீடியோக்காட்சி அதன் அரசியல் சரியற்ற தன்மையோடு புலன்மயக்கத்தோடான தலைகீழ்-உவகை தருகிறது. (கீழே அதன் சுட்டி) படத்தின் கருத்து இது:

”நிலம் நடுங்கிய நாளிலிருந்து அணுவுலைப் பையனுக்கு வயிற்றுக்கோளாறு, அதனால் அவன் அவ்வப்போது நாற்றமடிக்கும் வாய்வை வெளிவிடுகிறான். மருத்துவர்கள் ஒரேயடியாக அவன் பக்கத்தில் நின்றால் அவர்களுக்கும் சுகவீனமாகிவிடும். ஆகவே ஒருவர் மாறி ஒருவர் வருகை தருகிறார்கள். அவன் நோய் குணமாக உடலைக் குளுமை செய்கிறார்கள். ஏற்கெனவே ”3 மைல் தீவு” என்ற ஒரு பையன் விட்ட வாய்வு நாற அடித்தது. அதன் பின்னர் “செர்னோபில்” பையனின் வயிற்றுப்போக்கு வகுப்பறையிலேயே நேர்ந்துவிட்டது. அப்படியெல்லாம் வயிற்றுப்போக்கு ஆகாமல் இந்தப் பையனின் வயிற்றுவலியைச் சரி செய்யவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக்கொண்டிருக்கிறது.”

http://www.youtube.com/watch?v=5sakN2hSVxA&feature=youtu.be

நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் அச்சுறுத்தப்பட்ட சிறுவர்கள் மனிதனால் ஏற்பட்டிருக்கும் இந்த மூன்றாவது அபாயத்தாலும் இன்னும் பாதிக்கப்பட வேண்டாம் என்று ஜப்பானியர் ஒருவரால் எடுக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. ஆனால், அணு உலை எனும் அ-மனித பேரழிவுசக்தியை நம் வீட்டுக் குட்டிப்பையனாக, ஆகவே நம் கட்டுக்குள் இருப்பது போல் ஒன்றாகக் காட்டுவது, மற்றும் பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகியும் அழியாது அழிவுச்சுடர் வீசும் அணுக்கழிவை உயிருக்கு உதவும் விளைச்சலுக்கு உரமாகக்கூடிய மனிதக்கழிவோடு ஒப்பிடுவது, ஆகியவற்றின் அணு உலைசார் அரசியல் மிக அபாயமானது, ஏமாற்றுச் சொல்லாடலை முன்வைப்பது. ஆகவே இந்த உவகை மெய்ப்பாடு தலைகீழ் வகையிலானாது.


(தொடரும்)

No comments: