Tuesday, December 6, 2011

நேற்று வெப்காமின் நீலச்சுடர் முன்னிலையில்

இருபத்தோரு வயது இளைஞன் பொறியியல் மாணவன்
ஒரு அம்மா ஒரு அப்பா
இரண்டே காதலிகள்
மற்றும் முகப்புத்தகம், மைஸ்பேஸ், ஆர்குட்
நேற்று மதியம் சரியாக ஒன்றரைக்கு
இணைய அரட்டையறைக்கு நண்பர்களுக்காக வந்தவன்
அமிலம் நிறைந்த ஒரு சின்னப் புட்டியை
கேமரா முன் முதலில் நீட்டினான்
அடுத்து நீளக்கயிறொன்றை
கழுத்தில் சுற்றி விறைத்து நாக்கை நீட்டி தலை தொங்கச்சாய்ந்து
நாற்காலியைப் பின்தள்ளி விழுந்தான்
ஒரு சீனத்தயாரிப்பு குறுங்கத்தியை
வெப்காம்முன் நீள குறுக்கே நீட்டி
அதை மார்பில் அடித்துக்கொண்டான்
வலது உள்ளங்கையில் கொஞ்சம் அதால் கீறினான்
யுவன்சங்கர் ராஜாவின் புதுப்பல்லவியை முனகியபடி
இணையப்பக்கச் சன்னலை
ரத்தத்துளிகள் ஒளிர்ந்த
கத்தியின் பகுதியால் அடைத்தான்
மாத்திரைகள் நிரம்பிய இன்னொரு புட்டியை உயர்த்தி
கவிழ்த்து மாத்திரைகளை வலக்கைக்கும் இடக்கைக்கும்
மாற்றி விளையாடி ஒவ்வொன்றாக
வாயிலிட்டு
பெப்ஸியில் விழுங்கி
(வெப்காம் தொடர்ந்து காண)
படுக்கையில் ஏறி
தலையணையைக் கழுத்துக்கும் தலைக்குமிடை சரிசெய்து
படுத்து
போர்த்தி
இறந்து
போனான்.
நிகழ்ச்சியைக்கண்ட காணாத
அவன் நண்பர்கள்
எனப்படுவோர்
அவனது முகப்புத்தகச் சுவரில் எழுதியவை:

LO: சிரிக்கிறேன்

LOL: உரக்கச் சிரிக்கிறேன்

Loser: தோற்றாங்குளி

OMG: அட என் கடவுளே

Sick: நோய்த்தன்மை

OMFG: அட என் புணரும் கடவுளே

காலத்தின் கோலம் தோழர்

உலகமயமாக்கத்தின் தீய விளைவு

ஒருவழியா சோதியில கலந்துட்டான்

எந்தசோதி, பரங்கிமலை சோதியா

டேய், கம்….(எடிட் செய்யப்படுகிறது), நண்பன் சாவை வேடிக்கை பாத்த நாயிங்களா

நீ பாக்கலியாடா

Sucks and sucks: கெட்ட வார்த்தைகள்

அரசியல் சரித்தன்மையற்ற இந்த வார்த்தைகளை கண்டிக்கிறேன்.

செகண்ட் ரேட்

எல்லா மதங்களும் தற்கொலையைக் கண்டிக்கின்றன. அது சாவுக்குப்பின்னும் தண்டனை கிடைக்கச்செய்யும்.

எல்லாக் கடவுளும்?

அவன் கிடக்கான், தே….(எடிட் செய்யப்படுகிறது)

1DR: வியக்கிறேன்

இந்தப்பசங்களை நம்பி வீட்ல எவ்வளவு செய்திருப்பாங்க

என்ன செய்திருப்பாங்க

இப்ப அதுவா முக்கியம்

பட்சி ஏமாத்தியிருக்கும்

யாரு உன் தங்கச்சியா

2MI: மேலதிகச் செய்தி

வாழ்க்கைக்கு சன்னல்கள் ஆயிரம், கதவேயில்லாதபோதும் அவை திறக்கும்: இப்படிக்கு ஒரு கவிஞர்

நேத்தி அவன் ஆட்டத்தைப் பாக்கறப்ப சொல்லியிருக்க வேண்டியதுதானேடா

ஒண்ணுமே புரியல உலகத்தில

ஆகமொத்தம் ஆட்டம் குளோஸ்

மாபெரும் தேசியசக்தியாக இளைஞர்கள் உருவாகாமல் இப்படி வீணாகப் போவது ஏன் என்று நாம் யோசிக்கவேண்டும்

A3: எங்கேயும் எந்நேரமும் எவ்விடத்திலும்

வாழ்தல் ஒரு மாளாவரம், வரமிடையே தடைப்படுதல் விதியின் சாபம்: இப்படிக்கு இன்னொரு கவிஞர்

சாவின் தொட்டில் இளைஞர்களை எப்போதுதான் காவு கேட்கவில்லை?

கவிஞனுங்கள கட்டிவச்சி (எடிட் செய்யப்படுகிறது)

இவனுங்களோட (எடிட் செய்யப்படுகிறது) கூட அர்த்தம் இல்ல

என்னென்னவோ நடக்குது எடிட்டிங்-கில்

காவல்துறை பார்த்தவர்களையும் கைது செய்திருக்கவேண்டும்

ஏண்டா வெண்ண நீ பாக்கலியா அதான்

சரிடி தொன்ன

மேலே இரு கமெண்ட் போட்டவர்கள் படிப்பில் வல்லவர்கள் அல்லர், ஆனாலும் நல்லவர்கள், தங்கள் காசில் அடுத்தவர்களுக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருபவர்கள் என்பதைப் பதிவுசெய்கிறேன்.

ஆமாமாம், நானும்தான்

LTOD: சாவின் மடிக்கணினி

என்ன சாகப்போகிறாயா, ஒரு சனிக்கிழமை எல்லாச்சானல்களிலும் விஜய் படங்களைப் போடும் நாளாகப் பார்த்து

செத்துத்தொலை

கடவுளோடு மனிதனும் அவன் பெண்பாலும் சேர்ந்து இறந்துவிட்டனர்

மேலே காணும் குறிப்புகள் பதிவேற்றிய அதே ஒழுங்கில்
கத்தரித்து ஒட்டப்பட்டிருக்கின்றன (ஸ்மைலிகளைத் தவிர்த்து)
அவன் முகப்புத்தகக் கணக்கு இப்போதைக்கு மூடப்படாது
உங்கள் நண்பனாயிருந்தால் ஒரு வேளை
நீங்களும் ஒரு குறிப்பு எழுதமுடியும் விரும்பினால்
அவன் சுவரை இன்னும் வண்ணமயமாக்கவும்.



****

(உலோகருசி தொகுப்பிலிருந்து, காலச்சுவடு வெளியீடு, 2010)

இக்கவிதை வலைப்பூவில் முதலில் வெளியானபோது நடந்த உரையாடல் இங்கே.

No comments: