Wednesday, April 30, 2008

வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி மூன்று)

(பகுதி இரண்டு பகுதி ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கிறது.)

பால்விழைவு கதையில் தனித்து வருவதில்லை. வாஸவேச்வரத் தலத்தின் புராணம் பால்விழைவை செழுமைப்படுத்தும் நீரோட்டமாக கூடவே வருகிறது. நாவலுடைய அங்கங்களின் தலைப்பைப் பாருங்கள்: பிரம்மதேவன் விளையாட்டு, இந்திரன் தாபம், மாண்டவர் சாபம். புராணத்தால் வார்க்கப்பட்ட, வளம்பெற்ற பால்விழைவு ஆர்ப்பரிக்கும் நாவலில், சமுதாயக்கனவுகள் தேநீர்க்கோப்பைப்புயலாகவும் கேலிச்சித்திரமாகவும் அன்றி வேறெப்படி இடம்பெறமுடியும்? புராண உரை கிளர்த்திய பால் விழைவில் தொடங்கும் கதைமொழி, அதே கிளர்ச்சியில் முடியவும் செய்கிறது. பார்க்கப்போனால், இக்கனவுகளின் விவரணைகளெனும் திரைக்குப்பின்னே கதையாடல் பால்விழைவு சார்ந்த ஊடாட்டங்களை, அலைக்குறுதல்களை நிகழ்த்துவதாகவே தெரிகிறது. கிருத்திகா என்கிற மனித ஜீவி பெண்ணாக இருப்பதாலும் 1960-களில் எழுதப்பட்ட நாவல் என்பதாலும், வாஸவேச்வரத்தாரின் "முறைகளைப்" போல, சிலபல இலக்கிய அல்லது ஜீவித "முறைகளுக்கு" உட்பட்டு இப்படியொரு எழுத்துப்பாணியை அவர் கையாண்டிருக்கலாம்.


ஆனால் இங்கே என் அக்கறைகள் திரைக்குப் பின் நடக்கும் பால்விழைவின் நுணுக்கமான சாகசங்களைப் பற்றியவை. நாவலில் ரோகிணி மாத்திரமல்ல, வேறு பெண்களும் ஆண்களை வசப்படுத்தியவர்களாக உலவுகிறார்கள். தன் கணவனை வக்கில்லாதவன் என்று தன் உடல் இறுக்கத்தினால் அறிவிக்கமுடிகிறது விச்சுவால். சமூக உற்பத்தியிலும் மறு உற்பத்தியிலும் பங்கேற்காத அவனுள் குற்ற உணர்வையும் கொலைவெறியையும் தூண்டமுடிகிறது. அதேபோல, பால்விழைவில் சின்னதொரு பொறாமையை, சந்தேகத்தை தூண்டிவிட்டு, திருமணத்துக்கான உத்தரவாதத்தை பப்புவிடமிருந்து பெறமுடிகிறது கோமுவால். மனைவி தங்கத்தின் வனப்பின் ஆட்படும் சுந்தாவின் மயக்கத்திளைப்பு அவன் மருத்துவக்கடமையை மறக்கடிக்கிறது. நாவல் முழுதும் விரவிக்கிடக்கும் இத்தகைய பால்விழைவு விளையாட்டுகளின் வழியாக, பெண்பால் தன்னிலையின் (feminine sexed-gendered subjectivity) உச்சாடனமாய் ரோகிணியின் பாத்திரம் நிறுவப்படுகிறது.


நாவலின் மற்ற பெண்களைப்போலன்றி, பால்விழைவை விளையாட்டாக மட்டுமோ உடனடியான தாயங்களுக்கோ ரோகிணி உபயோகிப்பதில்லை. தன்னழகை முன்நிறுத்தி, குடும்பக்களத்தை ஆளக்கூடிய பெண்பால் தன்னிலையாகத் தன்னை அவள் அங்கீகரிக்கக்கோருகிறாள். "உன் ஆக்ஞை என் விருப்பம்" என்று முழுக்க கணவன் தன்னை அவளிடம் "ஒப்படைத்துவிட" வேண்டும் என்று விரும்புகிறாள். ரோகிணிக்கும் அவள் கணவனுக்குமிடையே நடக்கும் பாலியல் "துவந்த யுத்தத்தில்" "அவளை அடைக்கலமென்று அடைந்தால் தான் பூரண மனச்சாந்தியுண்டு" என்று அவனுக்கும் தெரிகிறது. ஆனால், அந்த அறிவைப் புறந்தள்ளுகிறது உறவில் ஆணாக இருக்கும் அவன் இடம். சமூகத்தில் அவன் பெற்றிருக்கும் கௌரவமான இடத்தை அச்சுறுத்தி, அவன் இறுமாப்பை தகர்த்து அவள் வெற்றிகொண்ட பிறகு, அவனது பாத்திரம் கதாயாடலுக்கு தேவைப்படுவதில்லை, உடனேயே அவன் கொல்லப்படுகிறான். பெண்பால் தன்னிலையின் அதிகார மறுப்பு கதையாடலில் இவ்வாறு களையப்படுகிறது.


ரோகிணியின் கணவனின் கொலையில், பெண்பால் தன்னிலையின் ஏகபோக ஸ்தாபிதம் கதையாடலின் நாடகீய உச்சத்தோடு இயைகிறது. இந்த இயைதல் நிகழ்த்தப்படுமுன் பொதுவுடைமை உள்ளிட்ட கனவுகள் திரையாகக்காட்டப்பெற்று, பின்னர் விலக்கப்படுகின்றன. பெண்ணுடல்சார் பால்விழைவை மையப்படுத்துகிற புராணத்திலிருந்து உயிர்ச்சத்தைப்பெறுகிற நாவல், சம்பிரதாய குடும்ப-அரசியல் களத்தைச் சதுரங்கப்பலகையாக மாற்றிவிடுகிறது. பெண்பால் தன்னிலையே இந்தச் சதுரங்க ஆட்டத்தின் மையம். இப்படியொரு வாசிப்பின் அடிப்படையில், வாஸவேச்வரம் நாவல் நவீன இலக்கியமாக அடையாளம் பெற்றிருப்பதற்கு ஒரு புது அர்த்தத்தை நாம் கொடுக்கமுடியும். பால்விழைவைப் பிடிமானமாகப் பற்றி, மாற்று அதிகாரத்துக்கான உரிமைகோரும் பெண்பால் தன்னிலை தன்னை ஸ்தாபித்துக்கொள்ளும் மொழிப்பரப்பாக நாவலை இவ்வாறு வாசிக்கும்போது, நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை பெண்ணியப் பிரதியாக நம்மால் மாற்றி எழுதமுடியும். தமிழ் நவீன இலக்கிய வரலாற்றை பெண்தன்னிலைகளின் வரலாறாக மீட்டுருவாக்கம் செய்யவும் இவ்வாசிப்பு பயன்படும். சில சந்தேகங்கள் வரலாம். நாவலில் மாற்றுப்பாலியலுக்கு (heterosexuality) தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், குடும்பச் சதுரங்கத்தில் மாத்திரமே கவனம் குவிக்கும் பெண்கள் போன்றவை பெண்ணிய வாசிப்புக்குத் தடைகள்போலத் தோன்றலாம். ஐம்பது வருடங்களுக்கு முன் வெளிவந்த நாவல் இது என்பதை மனதில் கொள்ளும்போது குறைபாடுகளை ஒதுக்கிவைக்க முடியும். முதல் புள்ளிகளிலேயே முழுக்கோலம் உருவாக முடியாதுதானே?


*****

Tuesday, April 29, 2008

E.E. Cummings in Tamil (poem 1)

உணரட்டுமா என்றான் அவன்


(உணரட்டுமா என்றான் அவன்
எவ்வளவு என்றாள் அவள்
நிறைய என்றான் அவன்)
ஏன் கூடாது என்றாள் அவள்

(வாயேன் என்றான் அவன்
ரொம்ப தூரம் வேண்டாம் என்றாள் அவள்
எது ரொம்ப என்றான் அவன்
நீ இருக்குமிடம் என்றாள் அவள்)

இருக்கட்டுமா என்றான் அவன்
(எப்படி என்றாள் அவள்
இதைப்போலத்தான் என்றான் அவன்
நீ முத்தமிட்டால் என்றாள் அவள்

நகரட்டுமா என்றான் அவன்
இது காதலேதான் என்றாள் அவள்)
நீ விரும்பினால்தான் என்றான் அவன்
(ஆனால் என்னைக் கொல்கிறாய் என்றாள் அவள்

என்றாலும் இது வாழ்க்கை என்றான் அவன்
ஆனாலும் உன் மனைவி என்றாள் அவள்
இப்போதே என்றான் அவன்)
ஒ..ஓ என்றாள் அவள்

(டிப்...டாப்...இது அவன்
நின்றுவிடாதே இது அவள்
இல்லை இது அவன்)
மெதுவாக இது அவள்

(வர...வா? என்றான் அவன்
உம்...ம் என்றாள் அவள்
அருமையடி நீ என்றான் அவன்
என்னுடையவன் நீ என்றாள் அவள்)

Monday, April 28, 2008

கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலை முன்வைத்து (பகுதி ஒன்று), (பகுதி இரண்டு)

(காலச்சுவடு செவ்விய நாவல்கள் வரிசையில் வெளிவந்திருக்கும் கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலுக்கு எழுதிய முன்னுரை)

வாஸவேச்வரம்: பெண்பால் தன்னிலையின் முதல் புள்ளிகள்

கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவலின் முதல்பதிப்பு 1966-ல் டால்டன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நாவலின் இரண்டாம் பதிப்பு 1991-ல் நூல் அகம் வெளியீடாக வந்தது. காலச்சுவடு கொண்டு வரும் 2007 வருடத்தின் க்ளாசிக் வரிசையின் நாவலின் இந்தப் பதிப்பு மூன்றாவது. முதல் பதிப்புக்கும் மூன்றாம் பதிப்புக்குமான இடைபட்ட நாற்பது வருடங்களின் நவீனத் தமிழின் விவாதக்களம் மார்க்ஸியம், அமைப்பியல், பின்-நவீனத்துவம், பெண்ணியம் போன்ற பல்வேறு இலக்கியப்போக்குகளின், கோட்பாடுகளின், பயிற்சிகளின் தூண்டுதல்களாலும் மோதல்களாலும் இடையறாது உருவாகியவண்ணம் இருந்திருக்கிறது. இந்த விவாதக்களத்தில் கிருத்திகாவின் நாவல், பின்வந்த நாட்களின் மறதியால் அல்லது கருத்தியல்களின் மோதலால் அழிபட்டிருக்கக்கூடிய ஒரு கோடாகக் கூட இடம்பெறவில்லை. ஆச்சரியம் தரும் இப்பின்னணியில் நவீன இலக்கிய விவாதக்களத்தில் வாஸவேச்வரம் குறித்த சிறு கீறலொன்றை இந்த முன்னுரையின் நகம்பற்றித் தீட்ட நினைக்கிறேன்.


வாஸவேச்வரம் ஒரு கற்பனைப்புவியியல். கிருத்திகாவின் வார்த்தைகளில், "இந்தியாவின் தென்கோடியில்" அவர் "சென்றுகண்ட கிராமங்கள் பற்றிய நினைவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கற்பனைக் கிராமம்." அவர் கண்ட மூன்று கிராமங்கள் நாவலின் கச்சாப்பொருள். நாவலின் காலகட்டம் 1930-கள். இக்கிராமங்களில் சுதந்திரப்போராட்டம், பொதுவுடைமைப் புரட்சிக் கருத்தியல் போன்றவற்றின் வீச்சு கிருத்திகா சுட்டிச்செல்வதுபோல திண்ணைப்பேச்சுகளில் ஆரம்பித்து அங்கேயே முடிந்துவிடுவன. நாவல் கிராமங்கள் தந்த ஞாபகங்களிலிருந்து வடிவமைக்கப்பட்டிருப்பதால், திண்ணைப்பேச்சுகளின் பிரதிபலிப்பே போல நாவலின் கதையாடலும் காலட்சேப உரைப்புள்ளியில் தொடங்கி காலட்சேப உரைப்புள்ளியில் முடிகிறது. பிராமணக் குழுமம் பற்றி கவனம் குவிக்கத் தோதான துவக்கமும் முத்தாய்ப்பும் கொண்ட வட்டவடிவம் இது. ஆனாலும் கதையாடலில் பிராமணக்குழுமம் தனக்கு முற்றூட்டாகக் கருதிக்கொள்கிற இவ்வட்டத்தைக் கலைப்பதற்கான சிலபல முயற்சிகளும் நடைபெறுகின்றன. கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்ற நிலவுடைமைச் சமூகமுறைகளுக்கு எதிரான சில கேள்விகளும் மறுப்புகளூம் கோஷங்களும் தூண்டப்படுகின்றன, அடங்குகின்றன.


நாவல் இம்முயற்சிகளை கைகொள்ளத்துடிக்கும் கனவுகளின் நிறங்களோடு தன்னை வரைகிறது. "தூங்குமூஞ்சி ஊரை" எழுப்பி, சம்பிரதாய முறைகள் என்கிற பெயரில் நடக்கும் "புளுகுகளை" புரட்டிப்போட்டு, பொதுவுடைமைச்சமூகம் மற்றும் வாழ்க்கை நவீனத்தைக் சுவீகரிக்க விரும்பும் கனவுகள் அவை. கெட்டித்துப்போன கலாச்சார முறைகளுக்கு எதிரான திசைவேகமும் ஆற்றலும் கொண்டவை. இந்த திசைவேகத்தையும் ஆற்றலையும் கனவுகள் கதையாடலில் எப்படி பெறுகின்றன? கதையில் கனவுகள் உத்வேகத்தோடு பேசப்பட்டாலும், அவற்றிலிருந்து எழும்பும், உருக்கொள்ளூம் கேள்விகளும் மறுப்புகளும் கோஷங்களும் எழும்பியகணமே கதைப்போக்கில் அடங்கிவிடுவதை எப்படி புரிந்துகொள்ளலாம்? வாஸவேச்வரக் கோயில் தேர் இழுப்பில் சாதீய மேலாண்மைக்கு எதிராகச் சாத்தியப்பட்டிருக்கும் கலகம் கூட ஏன் ஒரு மந்தித்த தேநீர்க்கோப்பைப் புயலாக, கலகத்தின் கேலிச்சித்திரமாக, சிறு சண்டையாக மட்டுமே வடிந்து துருத்திக்கொண்டு நிற்கிறது? சமூகக்கனவுகளின் வண்ணங்கள் நிதரிசன ஓவியங்களாக உருப்பெறாது நின்றுபோவது எதனால்?


கனவுகளைப்பற்றிப் பேசும் போது நாவலின் இரண்டாம் பதிப்பில் நாகார்ஜுனனின் உயிரோட்டமான பின்னுரை பற்றிச் சொல்லவேண்டும். "கனவைக் கதைசொல்லி கட்டவிழ்க்கும்" நாவலின் பாணியைச் சுட்டும் அவர் பின்னுரை, கட்டவிழ்த்தலை "விழிப்புடன்" தொழிற்படுத்தும் சூத்ரதாரியின் குரலை அடையாளம் காட்டுகிறது. நாவலின் சூத்ரதாரிக் குரலுக்கும் கிருத்திகா என்கிற மனிதஜீவிக்குமான உறவை, "கலாச்சார ரீதியாகவும்" "அரசியல் ரீதியாகவும்" அலசுகின்ற அவர் எழுத்து, "கனவுகளைப் பாதுகாத்துக்கொண்டே" வட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் சூத்ரதாரி பேசியாக வேண்டிய கட்டாயத்தை முன்நிறுத்துகிறது, கேள்விக்குட்படுத்துகிறது.

இதற்கு மாறாக நாவலின் பரப்புள்ளேயே கனவுகளை வைத்து, முன்னர் நான் எழுப்பிய கேள்விகளின் சரடுகளைத் தொடர நான் நினைக்கிறேன். இவ்வாறு செய்வதால், வாஸவேச்வரத்தில் கனவுகளுக்கு இணையாக பங்கெடுக்கும் இன்னொன்று நமக்குப் புலப்படுகிறது. அது ஈசன் கோயிலை மையமாகவும் மாண்டவர் சாபத்தை புராண வேராகவும் கொண்டு இயங்கும் பால்விழைவு (sexual desire). நாவலின் சொல்லாடலில் பால்விழைவின் பரிமாணங்களும் பாய்ச்சலும் வலிமையானவை. வாஸவேச்வரத்தின் வாழ்வியல் சம்பிரதாயங்களை, "முறைகளை" எளிதாகக் கவிழ்த்துவிடுவனவாக, பொதுவுடைமை மற்றும் சமத்துவ சமுதாய நவீனத்தை இலக்காகக் கொண்ட கனவுகளை புரட்டிப்போடக் கூடியனவாக, கனவுகாண்பவரையும் அடக்கிவைப்பனவாக காட்டப்படுகின்றன அவை. மிக முக்கியமாக, வாஸவேச்வரக் கதைவிளையாட்டின் போக்குகளை தீர்மானிக்கக்கூடிய பெண்-பாலியல்களை வாசகர்முன் நிறுத்தவும் செய்கின்றன. பால்விழைவின் த்வனி இந்நாவலின் சிறப்பு. அதுவே இங்கு என் எழுத்தின் பொருளாகவும் அமைகிறது.

நாவலின் சிலகட்டங்களைப் பார்ப்போம். சமூகமாற்றத்தைக் கனாக்காணும் முக்கிய நாயகன் பிச்சாண்டி. டாக்டர் சுந்தாவின் பாரம்பரிய நலவாழ்வுப் பிரச்சாரத்தை எள்ளி அக்காலகட்டத்தில் புரட்சியாக அர்த்தப்படுத்தப்பட்ட புதிய குடும்பக்கட்டுப்பாட்டு முறையை முன்வைப்பவன். கண்ணியமிக்க சமதர்ம சமவாழ்வை யாவரும் பெற துடிப்பவன். சம்பிரதாய முறைகளை குலுக்கிப்போட்டுவிட பஞ்சாயத்துத் தேர்தலில் குதிப்பவன். ஆனால், கதாநாயகி ரோகிணியின் முகத்தைக் கண்டவுடன், அவன் கனவுகள் அவனுக்கே பொருட்டாவதில்லை. "உன் மனசு நோக ஒண்ணும் செய்யமாட்டேன். வேண்டாமுன்னு சொல்லு. தேர்தல் சீட்டை இப்பொவே வாபீஸ் பண்ணிப்பிட்டு எங்கேயாவது மறைஞ்சு போயிடறேன்" என்றுதான் கூறமுடிகிறது. பிடித்த பெண்ணின் ஒரு முகக்குறிப்பில் அல்லது கண்ணசைப்பில் மறைந்துபோகிறதாக நாவலின் சமுதாயக்கனவு கோடிகாட்டப்படும்போது, அக்கனவின் ஆற்றுப்போக்குகளையும் (orientations) அக்கறைகளையும் என்னவென்று நாம் மனதில்கொள்வது? பிச்சாண்டிக்கு நேரெதிர்ப்புள்ளியில், ரோகிணியின் அழகைக் கண்டு அஞ்சி, தற்காக்கும் முயற்சியில் தொடர்ந்து அவளைச் சொற்துன்புறுத்துகிறார் அவள் கணவர் சந்திரசேகரய்யர். ரோகிணியின் ஆணவம் என அவர் அர்த்தப்படுத்தும் அவள் அழகுதான், தேர்தலில் போட்டியிடுதல் உட்பட பிடிவாதங்களுக்குச் சொந்தக்காரராக, அவளோடு இணங்க மறுப்பவராக அவரை ஆக்குகிறது. கடைசியில், சந்திரசேகரய்யர் கொலைபட பிச்சாண்டி கொலைகாரனாக புரிந்துகொள்ளப்படுவதும் பெரியபாட்டா போன்ற பெரியமனிதர்களின் 'பெருந்தன்மை,' 'தீரம்', 'சமூகக்கடமை' போன்றவை கதையில் மொழியப்படுவதும்கூட, ரோகிணியின் ஆகர்ஷணத்தில் ஊரைவிட்டுப்போகுமுன் அவளைச் சந்திக்கப் பிச்சாண்டி வருவதால் நேர்பவை. கதைப்போக்கைத் தீர்மானிப்பது கனவுகளைக் காட்டிலும் பெண்ணுடல்சார் பால்விழைவு என்பதற்கு இக்காட்சிகள் சான்று.

Sunday, April 27, 2008

கொஞ்சம் பொறு

கொஞ்சம் பொறு


சுருதிகூட்டி விடுகிறேன்.
வாசிப்பு தொடங்க
குறைபொழுதுதான்.
அதற்குமுன்
அறுத்த விரல்களை
எண்ணிவைக்க வேண்டும்
ஓரம்.
இசைக்கருவி எனது
பிரத்யேகமானது.
விரல்மூட்டுகளால்
இயக்கப்படுவதும்.

Saturday, April 26, 2008

தனி-யின் பாலை

தனி-யின் பாலை


நேற்றைய நானுக்கும்
இன்றைய நானுக்குமாக
அரவுப்பாதை.
கால்கள் தப்ப
எண்ணம் கிறுகிறுக்க
இப்பக்கம் அப்பக்கம்
பரிதவித்து
நினைவு நழுவையிலே
ஆத்மாநாமின் கவிதையின்
சாதம் உண்டு
கொழுத்த பித்ருகாகம்
"இல்லை இல்லை
நான் என்ற நீ"
என்றுகதறிக் கரைந்து
அரவுப்பாதையைக்
கொத்திச்சென்றது.
மிச்சமில்லாத
இடத்தில்
நின்ற ஒரு நான்
நாளை.

கிளிக்கவிதைகள்: கிளி ஒன்று

புனைவு

கிளியொன்று மேல்நெற்றியானபோது
பச்சைவண்ணம்
என் முகம் கொண்டது.

கிளியின் மூக்கு எனதானபோது
சுவைக்காமலேயே கனிருசி அறிய
நான் கற்றேன்.

கிளியுடல் மென்மை கிட்டி
பட்டுகளின் அடுக்கானதில்
என்னில் நானே மையலுற்றேன்.

கிளியின் இறக்கைகள்
கொண்ட என் காதுகள்
காற்றுவசத்தில்
வேண்டிய திசையெல்லாம்
வரைந்து தீர்த்தன.

கிளியோடான என் பேச்சில்
நீ நீ
அல்லது
நான் நான்
தான்.
பேதமே நேராத
முதல் உரையாடலில் அகமகிழ்ந்தேன்.

கிளி நடை பயின்றபின்
ஆண் நடையை நான் மறந்தேவிட்டதாக
குற்றஞ்சாட்டினவர் பலர்.

பகுதிபகுதியாய் உடல்கள் மாறி
பின் கிளியில் என்னுயிர் தங்க
என்னுடலைத் துவேஷித்த கிளி
கிணற்றில் விழுந்து
உடல்துறந்ததாகக் கேள்வி.

கிணற்றைச் சுற்றிச் சுற்றி
"ஆயுசு உனக்கு எண்பத்தாறு"
என்று கீச்சிடுகிறது கிளி தினமும்.
சோசியக்காரன் சிறகை வெட்ட மறந்தானென்று
சொல்லிவருகின்றனர்
எங்கள் ஊரார்.