Monday, June 29, 2009

எல்லோரோடும் தனியாய் (சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி)

சதை எலும்பை மூடுகிறது
ஒரு மனசை அவர்கள் வைக்கிறார்கள் அதில்.
சமயங்களில் ஆன்மாவையும்,
பெண்கள் ஜாடிகளை சுவர்களில் அறைந்து உடைக்கிறார்கள்
ஆண்கள் குடிக்கிறார்கள்
அதிகமாகவே.
ஒருவருக்கும் கிடைப்பதில்லை
ஒன்றும்
ஆனாலும் தேடிக்கொண்டே
படுக்கைகளின்
உள்ளூம் புறமும் ஊர்ந்தபடி
சதை எலும்பை மூடுகிறது
சதை தேடுகிறது
சதையைத் தாண்டி.

வாய்ப்பே இல்லை
ஒருமித்த விதி
ஒன்றினால் மடக்கப்பட்டிருக்கிறோம்
நாம் எல்லோரும்.

ஒருவரும் கண்டுபிடிக்கப் போவதில்லை
ஒன்றையும்.

நகரத்தில் குப்பைகள் நிரம்ப
கூளக்கிடங்குகள் நிரம்ப
பைத்திய விடுதிகள் நிரம்ப
மருத்துவமனைகள் நிரம்ப
கல்லறைகள் நிரம்ப

வேறேதும் நிரம்புவதில்லை.

2 comments:

Asadha said...

எல்லோரோடும் தனியாய்- நல்ல கவிதை. சார்லஸ் ப்யூகோவ்ஸ்கியின் புனைவெழுத்து அறிமுகம் உண்டு. இதுதான் வாசிக்கும் முதல் கவிதை.மொழிபெயர்ப்பு சரளமாக உள்ளது.தொடர்ந்து செய்யுங்கள்.

-அசதா.

Perundevi said...

அசதா எப்படி இருக்கிறீர்கள்? ப்யூகோவ்ஸ்கி=யின் இன்னொரு கவிதையும் தமிழ் செய்திருக்கிறேன். பாருங்கள்.