Saturday, March 19, 2011

ஜப்பான் அணு உலைக் காட்சிகளின் எண்வகை மெய்ப்பாடுகள் (2)

ரோஜாநிறப் புகைமேகம் ஒன்று நகரத்தின்மீது உலாவந்த ஒரு காலையில் விளையாட்டு வீரர்களும் அரசு அதிகாரிகளும் குழந்தைகளும் திரைப்படத்தாரகைகளும் பிச்சைக்காரர்களும் அடியாட்களும் அரசியல் தலைவர்களும் அவர்கள் கட்டிய கட்டாத பெண்களும் ஆட்டோக்காரர்களும் இன்னும் பலரும் உடனடியாக நகரத்திலிருந்து சென்றுவிட அறிவுறுத்தப்பட்டனர். சிலர் கார்களை ஆட்டோக்களை இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு குடும்பத்தோடு சென்றனர். பலர் பேருந்துகளிலும் வேன்களிலும் உள்ளேயும் மேலேயும் ஓட்டிச்செல்லப்பட்டனர். கொஞ்சம் ரோஜா நிறமேகம் அவர்களோடும் ஆசையோடு சென்றது ஒட்டி ஒட்டி. அவர்களில் குழந்தைகள்கூட அழாமல் இறுகிய முகத்தோடிருந்தனர். ”ரோஸி, மூகமூடியை நன்றாகப் பொருத்திக்கொள்.”

விரைவாகத் துறக்கப்பட்ட நகரத்தை ரோஜாநிறம் முழுக்க தன் வெளிறிய இதழ்களில் வசப்படுத்தியிருந்தது. கடலோரத்திலும் வசிப்பிடங்கள் என்று பெயர்பெற்றிருந்த இடங்களிலும் தனித்தும் ஒட்டியும் கும்பலாயும் ஊதாவண்ணம் மினுங்குகிற பிணங்கள்.

......


இருமாதங்களுக்குப் பின், பொழுதுசாய்ந்த ஒரு பொழுதில், நகரத்தின் கொஞ்சமாக சிதிலம்கண்டிருந்த மையப்பகுதி ஒன்றில் பதுங்கிப் பதுங்கி சின்னக்குழுக்களாக உருவங்கள் வெளிவந்தன. இதுவரையில் சுவர்கள் கீழே விழாத மால்களின் கடைகளிலும் தியேட்டர் காம்ப்ளெக்ஸ்களிலும் இருந்துகொண்டிருந்தன அவை. பென்சில்போல் மெலிந்த அவர்களின் பலரின் கைகளும் இருந்த மடிக்கணினிகள் அவர்கள் தள்ளாடி நடக்க அதே தள்ளாட்டத்தோடு அசைந்தன. மின்சாரம் அப்பகுதியில் மட்டும் எப்படியோ துண்டிக்கப்படாமல் இருந்தது. உப்புக்காற்றோடு பிணவீச்சடிக்கும் வீதிகள் மொத்தமும் இரும்புத் துகள்களும் கண்ணாடிகளும் செங்கல்குவியல்களும் சாம்பலும் பிளாஸ்டிக்கும் கதவுச்சட்டங்களும் அழுகின உறுப்புகளும். இக்குழுக்கள் ஒன்றையொன்று முறைத்தபடி கிட்டத்தட்ட உறுமியபடி ஒன்றின் நோக்கத்தை இன்னொன்று யூகித்தபடி ஒன்றோடு ஒன்று போட்டியிட்டபடி மெதுவாக அப்பகுதியின் சூப்பர்மார்க்கட்களை நோக்கி நடந்தன. கைவிடப்பட்ட அந்தப் பெரிய அங்காடிகளின் குளிர்பதனப் பெட்டிகளின் நாளோடிய இறைச்சித்துண்டங்களும் பூஞ்சைபிடித்த ரொட்டிகளும் சிலநாட்கள் அவற்றுக்குப் போதுமானதாக இருக்கும். அதன்பின்னும் இதே உணவைச் சேகரிக்க அலைந்துதிரிந்தவாறு சிலகாலம் செல்லும்; பின்னர் மேலும் சிலகாலம் தனியாய் அகப்படும் உருவங்களை பிடித்து உண்டு அவைகள் இருக்குமோ?

......

இக்குழுக்கள் தங்களை பின்-புவியதிர்வு சீவிகள் xe1, Pu1, Ra1, Th2, ... என்று தமக்குப் பெயரிட்டு அழைத்துக்கொள்ளும். உணவுக்கு அலையத் தேவையில்லாத நேரங்களில் மடிக்கணினிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள்— பலநாட்டுப் புல்வெளிகள், கொடை நீலமலைக்குன்று, அரபிக்கடலின் சிற்றலையின் பின்னணியில் ஒரு சிறுவன் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும். மனிதர்கள் சிரித்துப் பேசி நடக்கும் சமநிலமான பரப்புகளைக் காட்டும் படங்கள் அவற்றுக்கு வெகுவிருப்பம்.

......

வெளியேறிச் சென்றுவிட்ட மற்றவர்களுடன் எத்தொடர்பும் கொள்ள முனைவதில்லை அவை. அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதுமில்லை. பின்–புவியதிர்வு சீவிகளாக அவைகள் ஆகியிருக்கலாம், அல்லது சீக்கிரம் அவைகளாகிவிடும் என்கிற அவற்றின் நினைப்பு அல்லது நம்பிக்கை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

--நகரத்தைப் புனையும் சிதிலம்


மெய்ப்பாடு 6: இளிவரல் (பிணியும் வருத்தமும்)


டோக்கியோவின் தண்ணீரில் கதிரியக்க அயோடின், சூடுகுறையாத ஃபூகுஷிமா அணு உலைகளின் அருகே பண்ணைகளில் கீரை மற்றும் பால் உணவுப் பொருட்களில் அபாயகர அளவில் கதிரியக்க ஐசோடோப்கள்—இவைபோன்ற தெளிந்த கதிரியக்கப் பலாபலன்கள் பற்றி இங்கே எதுவும் சொல்லப்போவதில்லை. கொடுங்கனவு போன்ற பழைய நிகழ்வொன்றில் பங்கேற்ற உடல்கள் மட்டுமே பேசப்படும்.

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வீச்சில் தப்பிய ஒருவரின் கூற்றைச் சுட்டுகிறார் ஆன் லராபி என்கிற மனித அழிவுகளை ஆராயும் ஒரு அறிஞர் (பார்க்க, Larabee, Ann. Decade of Disaster, Univ. of Illinois, 2000):
“எங்கெல்லாம் நான் நடந்தேனோ அங்கெல்லாம் இந்த மனிதர்களைப் பார்த்தேன்…..அவர்களில் பலரும் ரோட்டோரத்தில் மடிந்தார்கள்—என் மனதில் இப்போதும் அவர்களைப் படமெடுக்க முடிகிறது—அவர்கள் நடக்கும் பிசாசுகளைப் போல் இருந்தார்கள். …இவ்வுலகைச் சார்ந்த மனிதர்களாகவே அவர்கள் தெரியவில்லை. அவர்களின் நடை தனித்த வகையில் இருந்தது—மிக மெதுவாக. அவர்களில் நானும் உண்டு.”

“நடக்கும் இறந்தவர்களின்” இந்த அனுபவத்தை, உணர்வை தொடர்ச்சியானதாக, தீர்க்கமுடியாததாக, முடிவற்றதாக விவரிக்கிறார் ராபர்ட் லிஃப்டன் என்கிற ஆராய்ச்சியாளர் (பார்க்க, லராபியின் Decade of Disaster)

被爆者 ஜப்பானிய மொழியில் ஹிபாகுஷா என்பது ”அணுகுண்டால்/கதிர்வீச்சால் உடல், மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள்” என்ற பொருளைத் தந்தாலுமே, அந்தப் பதம் முழுமொத்தமான அடையாளமாற்றத்துக்குள்ளானவர்களை, பொதுவெளியில் கதிர்வீச்சின் அழிவுக்குறியை உடலில் சுமப்பவர்களைக் குறிப்பது; அதுமட்டுமல்லாமல், “அணுகுண்டு நோய்” தன்னை உடற்குறிகளின் மூலம்—நிறம்மாறும் புள்ளிகள், ஓய்ச்சல், வலி போன்ற குறிகளின்மூலம் எந்நேரமும் தன்னை வெளிப்படுத்தும் (காட்டிக்கொடுக்கும்) என்கிற பயத்தைச் சுமந்தபடி இருக்கும் நிலை என்கிறார் லிப்டன். “காட்டிக்கொடுக்கும்” என்கிற பதத்தை இங்கே நான் பயன்படுத்தக் காரணம்: ஜப்பானில் ஹிபாகுஷாக்களும் அவர்கள் சந்ததியினரும் படிப்பு வேலை விஷயங்களில், இடங்களில் எதிர்கொண்ட, இன்றும் எதிர்கொள்ளும் பாரபட்ச பாகுபாடு தாம். ஹிபாகுஷாக்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் என்றால் சமூக ஒறுத்தல் நிச்சயம். இத்தகையதொரு அடையாளத்தையும் உடல்கள் காட்டிக்கொடுத்துவிடுமோ என்ற அச்சமும் நோய் பற்றிய பயத்தோடு கூட இவ்வுடல்களில் வரையப்பட்டிருக்கின்றன.

ஹிபாகுஷாக்களின் உடல்களின் பிம்பங்களில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறது இன்றைய அணு உலை/அணுகுண்டு எதிர்ப்பாளர்களின் சொல்லாடல், என்கிறார் லராபி. ஹிபாகுஷாக்களைப் பற்றிய தொடர்ந்த நேர்காணல்கள், மருத்துவ உளவியல் சோதனைகள், ஆராய்ச்சிகள், துயரங்களைப் பற்றித் தொடர்ந்துகொண்டிருக்கும் பத்திரிகைப்பதிவுகள் போன்றவற்றின் வாயிலாக ஹிபாகுஷாக்களின் உடல்களின் “மனித உண்மையை” மனிதர் அனைவருக்கும் நேரக்கூடிய ஒன்றாக உணரப்படுதல் சாத்தியமாகி இருக்கிறது; தவிர, தீவிரமாக எழுதப்படுகிற, கதிரியக்க அபாயங்களை வரிசைப்படுத்தி ஆதாரத்தோடு முன்வைக்கிற கட்டுரைவடிவங்களை விட, இத்தகைய பதிவுகள் மனிதப் பிரக்ஞையை ஏதோ ஒருவகையில் கேள்விகேட்கும், வடிவமைக்கும் திறன்கொண்டவையாக கருதப்படுவதையும் லராபி சுட்டிச் செல்கிறார்.

ஒரு நாடு அல்லது கலாச்சாரம் சார்ந்த மக்களின் இத்தகைய வலியையும் அவலத்தையும் அந்த நாடு, கலாச்சாரம் குறித்த ஸ்தூலமான குறியீட்டை ஒருவர் சற்றே தள்ளிவைத்து சிந்திக்கும்போது, அச்சிந்தனையின் ஊடாக அந்த வலியும் அவலமும் வையகத்துக்கே பொதுவானவையாக மாறும், மாறிவிடமுடியும். கூடவே இந்த மாற்றம் சிந்திப்பவரை தனிநபர்/குடும்பம்/நட்புக்குழு போன்றவற்றுக்கான நலனுக்கான விசாரணைகளிலிருந்து பெரும்போக்கோடு கூடிய வேறு சீரிய விசாரணைத்தளங்களுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கக்கூடும். ஜப்பான் காட்சிகளின் உள்ளுறையான இளிவரல் இதையும் யோசிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறது.

4 comments:

ஜமாலன் said...

மெய்ப்பாடுகளை எடுத்துக்கொண்டு ஜப்பான் அணுஉலை பற்றிய அவலங்களை புனைவாகவும் கட்டுரையாகவும் எழுதும் இந்த வடிவம் நன்றாக உள்ளது. தொடர்ந்து 8 மெய்ப்பாடுகளையும் முடியுங்கள். ஆனால் மெய்ப்பாடுகள் தமிழில் 8 வடமொழியில் 9 நவரசம் என்பார்கள். அதையும் சேர்த்து எழுதுங்கள்.

Perundevi said...

அடுத்த பகுதிகள்: எழுதும்வகையில் என் மனம் இல்லை ஜமாலன். இந்த அணுமின் விவகாரத்தால் மனம் நொந்து இருக்கிறேன். டாக்டர் புகழேந்தி, உதயகுமார் போன்ற சிலரைத் தவிர தமிழ்ச்சூழலில் எவருக்கும் இதில் பெரிய அக்கறையில்லை என்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. கிரிக்கெட், தேர்தலைத் தாண்டியும் உலகம் இருக்கிறது. முதலில் கிரிக்கெட் விளையாடவும் தேர்தலில் போட்டியிட, வாக்களிக்கவும் மக்கள் ”இருக்க” வேண்டும் ஆரோக்கியமாக.

கறுப்பி said...

Hi Perundevi

if you see this mail can you please give me your e-mail. I came to know that you are coming to toronto for the conference, I would like to organize a meeting with you if you don't mind.
you can call me

my phone # 416 838 0419

thanks
Sumathy Rupen

Perundevi said...

Thanks for your message Sumathy. Due to some circumstances here, I will not be coming to Toronto. :( I will miss the conference as well as miss meeting you and my friends over there. My email ID is: sperundevi@yahoo.com You can contact me at that ID.
anbudan
Perundevi