Saturday, March 26, 2016

ரில்கேயின் சிறுத்தையின் விழித்திரைக்குள் பிம்பமாய் நுழைந்து மீண்ட நாள்


என் விழிக்கெட்டிய தூரமெல்லாம்
புலனாகாத முள்வேலிகள்
வேலிகளுக்குப்
பின்னால்
அவையே இருக்கும்
முள்வேலிகளின் உலகத்தில்

சின்ன வட்டத்தை தன் நடையால்
சிறுத்தை அதன் கூண்டுக்குள்
வரைந்துகொண்டிருந்தபோது
அதன் விழித்திரைக்குள்
நோஞ்சானாக நுழைந்தேன்
அதன் இதயத்திலிருந்து
வெளியேவந்தபோது
இன்னும் மெலிந்திருந்தேன்

நளினம் ஓரடி வலிமை இணையடி
அதன் ஆட்டம்
குறைவற்றது கூண்டுக்குள்ளும்
என் கால்களோ வலுவிழந்த
வாழைத்தண்டுகள் எந்நேரமும்
தாக்குதல்களுக்கு ஒப்புக்கொடுப்பவை

எப்போதும் அமர இறைஞ்சுகின்ற என்
கால்களை வெறுக்கிறது மனம்
என் விழித்திரையோ
ஒரு பிம்பத்துக்காகக்
காத்துக்கிடக்கிறது
காடு மட்டுமே
நினைவான நிஜமான கனவான
சிறுத்தையின் பிம்பத்துக்கு
இமை திறந்துமூடும்
நொடிக்கும் குறைய
என் விழித்திரைக்குள்
அது நுழைந்து
என் இதயத்தை அதன்
குகையாக்கிக் கொள்ள.
  










(பதிவில் வெளிவரும் கவிதைகளையோ கருத்துகளையோ பத்திரிகைகளில் என் அனுமதியின்றி பிரசுரிக்க வேண்டாம். நன்றி.)

No comments: