Sunday, May 30, 2010

முத்தம் கொடுங்கள் முத்தங்களாகக் கொடுங்கள்

(ஆத்மாநாம் பெருந்தேவி)


பரபரத்து இலக்கை நோக்கி

நீங்கள் மற்றவர்கள்

முன்னேறிக் கொண்டிருக்கையில் முழிபிதுங்கித் திணறுகையில்

உங்கள் நண்பி வந்தால் உங்கள் அன்பனைக் கண்டால்

எந்தத் தயக்கமும் இன்றி விழி சோர

இறுகக் கட்டித் தழுவி சொல்லும் தடுமாறி

இதமாக பின்னர் ஞாபகமும்

தொடர்ந்து முக்குளிக்க

நீண்டதாக பால்வீதியினும் நீள

முத்தம் கொடுங்கள் அமுதம் பெறுங்கள்

உங்களைப் பார்த்து பொறாது

மற்றவர்களும் பார்த்தும் பாராது

அவரவர் வழிசெல்பவரும்

நண்பிகளுக்கு முத்தம் அன்பர்களுக்கு அமுதம்

கொடுக்கட்டும் கொடுப்பர் அதேபோல்

விடுதலையின் சின்னம் முத்தம் விடுபட்டதன் சின்னம் முத்தம்

முத்தம் கொடுத்ததும் அழிவில்லை காண்

மறந்துவிட்டு பிறவாநிலையின்

சங்கமமாகிவிடுவீர்கள் ஒரே புள்ளியில்

பஸ் நிலையத்தில் வெயிலின் ல்லும் உருக

ரயிலடியில் காத்திருப்பின் காலும் பூபூக்க

நூலகத்தில் உதவாப் புத்தகங்களுக்கிடையில்

நெரிசற் பூங்காக்களில் பட்டுப்போன செடிகளின் நடுவில்

விற்பனை அங்காடிகளில் கோயில்களில்

வீடு சிறுத்து டி.வி. பெருத்த அறைகளில்

நகர் பெருத்த மனம்சிறுத்த தருணங்களில்

சந்தடி மிகுந்த தெருக்களில் தனியெனும் பாலையில்

முத்தம் ஒன்றுதான் ஒரே வழி முத்தமே அடைக்கலம்

கைவிடாதீர்கள் முத்தத்தை கைவிடப்படாதீர்கள் முத்தத்தால்

உங்கள் அன்பைத் தெரிவிக்க அன்பிலாத நோய் தீர

ஸாகஸத்தைத் தெரிவிக்க அவநம்பிக்கை சாவு காண

இருக்கும் சில நொடிகளில் தனதற்ற

உங்கள் இருப்பை நிரூபிக்க மரபான

முத்தத்தைவிட முத்தம்போலும்

சிறந்ததோர் சாதனம் தீராத தீர்வு

கிடைப்பதரிது அரிது அரிது

ஆரம்பித்து விடுங்கள் ஆரம்பத்திலேயே

முத்த அலுவலை உதட்டின் கடமையை

இன்றே நந்நாள்

இப்பொழுதே நற்பொழுது

இக்கணமே பொற்கணம்

உம் சீக்கிரம் பார்த்து நழுவ விடாதீர்கள்

உங்கள் அடுத்த காதலி அடுத்தடுத்து

காத்திருக்கிறாள் அன்பின் களப்பணியில்

முன்னேறுங்கள் காலத்தைக் கிடப்பில் போட்டு

கிறிஸ்து பிறந்து ம்

இரண்டாயிரம் வருடங்கள் கழித்து ம் தயக்கமேன்

இருபத்தியோறாம் நூற்றாண்டை பல்லாண்டு பாடுவோம்

நெருங்கிக் கொண்டிருக்கிறோம் முத்தமிட்டடைவோம்

ஆபாச உடலசைவுகளை ஒழித்து குத்துப்பாட்டுகளை மறந்து

சுத்தமாக வரமாக

முத்தம் பரமாக

முத்தத்தோடு முத்தம் முத்தங்காண முத்தம்

என்று இப்போதே

முத்த சகாப்தத்தைத் துவக்கலாம்

துவங்குங்கள் துவங்கியாயிற்று.

Friday, May 28, 2010

தனியரென்றில்லை யாரும்

சில வாரங்களாக ஆத்மாநாமின் இந்தக் கவிதை மனதில் வந்தபடி இருந்தது. கொண்டுவந்த அவர் கவிதைப்புத்தகத்தைக் காணோம். கடைசியில் கூகிள் செய்து, ரவி ஆதித்யா-வின் வலைப்பதிவில் (http://raviaditya.blogspot.com/2009/04/blog-post_08.html) இக்கவிதை மீள்பதியப்பட்டிருப்பதைக் கண்டேன்.

அழைப்பு


இரண்டாம் மாடியில்
ஓற்றைச் சன்னல் அருகில்
நான் என்னோடு
உணவருந்திக்கொண்டு
அருகில் வேப்பமரக்கிளை
மீதிருந்த காகம் அழைத்தது
பித்ருக்களோ தேவர்களோ
என எண்ணி
ஒரு சிறு கவளச் சாதத்தை
வெளியே வைத்தேன்
சாதம் சாதமாக
காகம் பறந்து விட்டது
யாருடைய பித்ருக்களோ
நானறியேன்.


*****

யாரின் அல்லது எதன் அழைப்பு? நவீனயுகத் தனிமனிதத் தனிமை “ஒற்றைச் சன்னல்,” “என்னோடு நானே உணவருந்துதல்” என்று குறிக்கப்படுகிறது. தனியாகப் படுப்பதிலும் தனியாக உணவருந்துதல் இன்னும் கொடுமை. ஆனால், தனிமை என்பதுதான் என்ன? நிகழில் யாருமற்றுப் போகலாம். ஆனால், சந்ததியாக மூதாதையரோடு ஒரு கண்ணியில் இணைக்கப்பட்டிருக்கிறோம். தன்னந்தனிமையில் மனம் குவியும் மருட்கணம், அதைச் சிதறடிக்கும்வகையில் காகத்தின் வழியாக இந்த அழைப்பு.

பித்ரு ரூபமாகத் தெரியும் காகம் ஒற்றைசன்னலருகே அமர்ந்திருப்பவரின் குடும்பத்தின் மூதாதையர் என்பதாகமட்டும் தெரியவில்லை. சாதம் சாதமாகக் காகம் பறக்க, உலகில் தெரிந்த தெரியாத யாரோ மனிதர்களின் எல்லா மூதாதையரோடும் கொள்ளும் தொடர்பின் அழைப்பாகவே தொனிக்கிறது.

உடலே அன்னமயக் கோசமாக, அன்னத்தால் ஆகியிருக்கிறதென்றால், காகத்துக்கான சாதத்தின்மூலம் நம்மையே நாம் மூதாதைகளுக்குத் தருகிறோமா? அல்லது அன்னமயமாக உருவகிக்கப்படுகிற உடல் நாம் பின்னொருநாள் வேறு யாருக்கோ பித்ருக்களாக இருக்கப்போவதன் முன்வரைவா?

(பித்ரு: வடமொழிச்சொல், ‘பிதா’வை முன்நிறுத்தி தந்தைமைக் கருத்தியலை நிறுவும் சொல். என்றாலும் கவிதையில் மூதாதையர் பலராகத் தெறிக்கும் அர்த்தங்கள் இக்கருத்தியலை கொஞ்சம் நகர்த்திவைத்துப் படிக்கவும் தூண்டுகின்றன.)

வின்னிபெக்-கில் உண்ண சாதமும் இன்றி வரக் காகமுமின்றி ஒற்றைச் சன்னலைப் பார்த்துக்கொண்டே இதை எழுதுகிறேன். என் கவிதை ஒன்றும் நினைவில்:

அண்டசராசரம்

மடிப்பில் மாமிச
வெயில் விரித்தெனைக்
கொத்தும் தனிமையோர் காகம். (தீயுறைத்தூக்கம், 1998)


சாதம்சாதமாக எழுத்துகளே இப்போது கண்முன் பறக்க ஆத்மாநாமும் மற்ற தெரிந்த தெரியாத கவிஞர்களே அன்றி வேறு யார் எனக்கு மூதாதை என்று எண்ணியபடி.

சிந்தனை

ஒளியோடிருக்கும் அம்மூலையில்

விளக்கே இல்லை

வெளியே பகலோ

இருளுண்டு கிடக்கும் இவ்வெளியில்

வெளியே இல்லை

முழுக்க மனமோ.

Wednesday, May 26, 2010

(தலைப்பில்லாதது)

ஒவ்வொரு சிறுவனின் வீட்டின் பின்புறத்திலும்
ஆகாயவிமானங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு சிறுமியின் காதுகளும்
புகழுரையின் காதணிகளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்மகனும் கலவியின் இன்பத்தில்
உயரப்பறத்தலை மனதில் கொள்கிறான்.
ஒவ்வொரு பெண்மணியும் அப்போது தன்
யோனியும் காதாகி வளரப் பிரார்த்திக்கிறாள்.

சிறுவன் ஆண்மகனாக சிறுமி பெண்மணியாக
மட்டுமே வளர்வதாக
தப்பபிப்பிராயம் கொண்டவர் அனேகம்.

சிறுமி ஆணாக வளரும்போது
விமானம் கட்டப்பெறாத
வலிய தன் துளைகண்டு எரிச்சலடைகிறான்.
சிறுவன் பெண்ணாக வளரும்போது
புகழுரையின் ஓடுதளத்தைக் கண்ட அவசரத்தில்
தன் விமானத்தை இறக்குகிறாள்.
சிறுமி சிறுவனாகவும் சிறுவன் சிறுமியாகவும்
வளர்வதுமுண்டு.
அதி
காலையாகவும்
அந்தி
மாலையாகவும்
தெரிந்த பொழுதுகளோடு கூடவும்
வேறு ரம்மியங்கள் சேர
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.
காதுகளை உடலோடு இணைத்தும்
விமானங்களை உயரத்திலிருந்து பிரித்தும்
காணத்தெரிந்தவர்களும்கூட.


(”இக்கடல் இச்சுவை”, காலச்சுவடு பதிப்பகம், 2006)

Sunday, May 16, 2010

”உரையாடல்”

--கவிதை நீக்கப்படுகிறது--

Wednesday, May 12, 2010

என் புனல்

--கவிதை நீக்கப்படுகிறது--

Friday, May 7, 2010

நேரும்

--கவிதை நீக்கப்படுகிறது--